ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிர்வாக கட்டமைப்பு விஸ்தரிப்பு

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் நிர்வாக கட்டமைப்பை மாவட்ட ரீதியாக விஸ்தரிக்கும் முதற்கட்ட செயற்பாடாக ஜந்து கட்சியின் யாழ் மாவட்ட இணைப்பாளர்கள் தெரிவு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வானது நேற்றைய தினம் (02) யாழ்,இணுவிலில் நடைபெற்றது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் (D.T.N.A) அங்கம் வகிக்கும் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றின் கட்சித் தலைவர்கள், கூட்டணியின் இணைத் தலைவர்களாகவும், கட்சிக்கு ஓர் செயலாளரும், பேச்சாளரும், பொருளாளரும்,தேசிய அமைப்பாளரும், துணைத் தேசிய அமைப்பாளரும் நியமிக்கப்பட்டு பதினைந்து பேர்கள் கொண்ட கட்சிக்கான உயர் பீடம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனை விஸ்தரிக்கும் பொருட்டே இந் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வானது ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின், இணைத் தலைவர்களின் ஒருவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளர் ஆர்.ராகவன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் துணைத் தேசிய அமைப்பாளர் கு.சுரேந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பொருளாளர் துளசி ஆகியோரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

அந்த வகையில் சி.சிவகுமார்,கே.என். கமலாகரன் (குகன்), பா.கஜதீபன், என்.விந்தன் கனகரட்ணம்,சபா குகதாஸ், தி.நிரோஷ், சு.நிஷாந்தன், ரா.இரட்ணலிங்கம், இ.பகீதரன், செ.மயூரன், கி.மரியறோசறி, கி.கணைச்செல்வன்,ஆ.சுரேஷ்குமார், ஜெ.ஜனார்த்தனன்,த.கோகுலன் போன்றோர் ஐந்து கட்சி சார்ந்த மாவட்ட இணைப்பாளர்களாகவும் குறித்த இணைப்பாளர்களுக்கு தலைமை தாங்கும் ஒருங்கிணைப்பாளராக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினருமான என்.விந்தன் கனகரட்ணம் நியமிக்கப்பட்டார்.

மேலும் கூட்டத்தில் தீர்மானங்களாக, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை மாவட்ட ரீதியில், அரசியல்,பொருளாதார,நிர்வாக ரீதியாக கட்சியை வலுப்படுத்த வேண்டும்.

கட்சியின் வேலை திட்டங்கள்

,அரசின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்ட நிகழ்வுகளை, இணைந்து முனனெடுப்பதென்றும், குறிப்பாக சிங்களக் குடியேற்றம், பௌத்த மயமாக்கல், ஆக்கிரமிப்பு போன்றவற்றிற்கு எதிராக இணைந்து போராடுவது என்றும், மாவட்டத்திற்கு ஓர் அரசியல் பணிமனை திறக்கப்பட வேண்டும்.

நலிவுற்ற மக்களுக்கு உதவி திட்டங்களை முன்னெடுப்பது என்றும், கல்வி, கலாசார கட்டமைப்புகளை ஊக்குவிப்பதற்கு உழைப்பதென்றும்,மாவட்டத்தில் தொகுதி கிளை,கிராம மட்டத்திலான கட்சியின் கிளைகளை கட்டமைப்பது என்றும்,மகளிர் அணியை உருவாக்குவதென்றும் முதல் கட்டமாக இணைப்பாளர்களால் தீர்மானிக்கப்பட்டது.

கட்சியின் வேலை திட்டங்கள் தொடர்பான ஊடகத் தொடர்புகளையும் சமூக வலைத்தளங்களின் கட்டமைப்புகளையும் இயக்குபவராக, இணைப்பாளரும் சட்ட பீட மாணவருமான ஜெ.ஜனார்த்தனன் மேற்கொள்வார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கட்சிகளின் இணைப்பாளர்கள் அனைவரும் கட்சியின் செயலாளர், கட்சியின் தேசிய அமைப்பாளர்,கட்சியின் துணை தேசிய அமைப்பாளர் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து கட்சியின் நிர்வாக, அரசியல்,பொருளாதார மற்றும் கல்வி கலாசார புனரமைப்பு உதவி திட்ட,செயற்றிட்டங்களை முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.