ஜனாதிபதியுடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பேச்சு

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடனான ஆரம்பகட்ட கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

இலங்கை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியின் தற்போதைய நிலைமை குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்த கலந்துரையாடலில் மற்றொரு சுற்றுக்கலந்துரையாடலை நடத்துவதற்கும், எதிர்காலத்தில் மத்திய வங்கி அதிகாரிகளுடன் தொழிநுட்ப விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சுக்குழுவின் தலைவர் பீட்டர் புரூபர், பிரதித் தலைவர் ஒசைரோ கொசையிகோ, சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதி டுபாகன்ஸ் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உட்பட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.