ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்

தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று கோரிவருவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் ஒரேயொரு தெரிவுதான் இருக்கின்றது. இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதுதான அதனையே நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம் எனவும் தெரிவித்தார்.

இன்று (27) மட்டு. ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தமிழ் அரசியலில் வரப்போகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கின்ற கதை ஒன்று ஒரு சிலரால் பரப்பப்படுகின்றது அந்த விடயம் தொடர்பாக ஒரு சில தரப்புகள் பெயர்களை கூட முன்மொழிந்திருக்கின்றார்கள் குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரனுடைய பெயர் தானாகவே வந்து முன்மொழிந்திருக்கின்றார்.

அனைத்துக் கட்சிகளும் இணங்கினால் தான் ஒரு வேட்பாளராக வர தயார் என்று ஏனையவர்கள் ஒரு வேட்பாளர் கட்டாயம் நிறுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.

முக்கியமாக நான் நினைக்கின்றேன் ஈ பி ஆர் எல் தரப்பின் தலைவர் அந்த அணியை சார்ந்தவர்கள் மற்றும் இன்னுமொரு அணி மனோகணேசனை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணியில் ஊடகங்கள் எம்மிடம் தொடர்ச்சியாக எங்களுடைய நிலைப்பாட்டை கேட்டிருக்கின்ற நிலையில் நாங்கள் இது தொடர்பாக ஒரு சில கருத்துக்களை பகிரங்கப்படுத்த விரும்புகின்றோம்.

முதலாவதாக இந்த ஜனாதிபதி தேர்தல் போட்டியிட்டு வெல்லக்கூடிய தரப்பு சிங்கள தரப்பு. அதில் நான் நினைக்கின்றேன் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது.

அந்த சிங்கள தரப்பு யாராக இருந்தாலும் கடந்த காலங்களில் தமிழ் மக்களினுடைய அரசியல் தீர்வு சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் பொறுப்பு கூற சம்பந்தப்பட்ட விடயமாக இருக்கலாம் ஏன் தமிழ் மக்களுடைய பாதுகாப்பு சம்பந்தப்பட்ட அல்லது பாதுகாப்பு சம்பந்தமின்மை தொடர்பான இன்று இருக்கக்கூடிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் ஊடாக வரக்கூடிய மோசமாக நிலையாக இருக்கலாம் அரசியல் கைதிகளினுடைய நிலையாக இருக்கலாம் எங்களுடைய சொந்த காணிகளை பறிக்கின்ற விடயங்களாக இருக்கலாம் தாயகத்தில் தொடர்ச்சியாக சிங்களமைப்படுத்துகின்ற வேலை திட்டங்களாக இருக்கலாம் இது அனைத்து சம்பந்தமாக அந்த சிங்கள தரப்பினரால் நிறுத்தக்கூடிய அனைத்து தரப்புகளும் தமிழ் மக்களின் பக்கமாக இருந்தது கிடையாது.

தீர்வு சம்பந்தப்பட்ட விடயத்தில் அனைவரும் ஒற்றைய ஆட்சியை வலியுறுத்துகின்ற நிலைப்பாட்டிலே தொடர்ச்சியாக இருக்கின்றனர். வெளிப்படையாகவே வந்து 13 ஆவது திருத்தத்தை வலியுறுத்துவதாக இருப்பதாக இருந்தாலும் சரி அல்லது ஒற்றைய ஆட்சிக்குள் மட்டும் தான் தீர்வு அல்லது இருக்கும் 13 ஆம் திருத்தத்தின் பெயரில் இருக்கின்ற விடயங்களில் கழித்து சொல்லுகின்ற விடயம் மட்டும்தான் இருக்கின்றது.

இவ்வாறான ஒரு சூழலில் தமிழ் மக்களினுடைய வாக்குகள் இந்த தரப்புக்கு போக முடியாது என்கின்ற ஒரு முடிவில் தமிழ் மக்கள் இருக்கின்றார்கள் என்பது மிகத் தெளிவு.

சிங்கள தரப்பில் இனிமேலும் தொடர்ச்சியாக வாக்களித்து நாங்கள் ஏமாறக்கூடாது என்கின்ற ஒரு தெளிவான செய்தியை இந்த தேர்தலில் தமிழ் மக்கள் உலகத்திற்கு காட்ட வேண்டும் என்கின்ற உறுதியான நிலைப்பாட்டோடு இருக்கின்றனர்.

அந்த ஒரு பின்னணியில் தான் இன்று இந்த ஜனாதிபதி தேர்தலில் ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்துகின்ற கதை ஒன்று திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

இதனுடைய உண்மையான நோக்கத்தினை நான் தெளிவாக பதிவு செய்ய விரும்புகின்றேன். அதில் ஒரு சிலர் மிகத் தெளிவாக வெளிப்படையாகவும் கூறி இருக்கின்றனர்.

ஒரு தமிழ் வேட்பாளரை நிறுத்தினால் முதல் வட்டத்தில் ஒரு சிங்கள வேட்பாளர் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பு இல்லாமல் போகும். இரண்டாம் வாக்கெடுப்பில் வேட்பாளர் தெரிவு செய்யலாம். அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்கள் பேரம் பேசுவதற்கு முன் வருவர். அப்போது நாங்கள் பேரம் பேசி ஒரு தரப்பினை ஆதரிப்பதற்கான நிலைப்பாட்டை எடுக்கலாம் என தெரிவித்தார்.