தமிழ் அரசியல் கைதிகளுக்கு அமைச்சர் டக்ளசின் சிபாரிசில் மன்னிப்பு வழங்க முடியாதா? – ரெலோ செயலாளர் நாயகம் கோவிந்தன் கருணாகரம் கேள்வி

யாழ். மாநகர முதல்வரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசின் பேரில் விடுவிக்க முடியுமாக இருந்தால், தமிழ் அரசியல் கைதிகளை ஏன் அவ்வாறு விடுவிக்க முடியாது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், “யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், யாழ். முதல்வர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சிபாரிசில் முதல் தடவை மன்னிப்பாக ஜனாதிபதியால் விடுவிக்கப்படுகிறார் என செய்திகள் வெளியாகியிருந்தன.

அவ்வாறு, மீன்பிடித்துறை அமைச்சரின் சிபாரிசில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டிருந்த யாழ். மாநகர முதல்வரை விடுதலை செய்ய முடியுமாக இருந்தால், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை அவ்வாறான சிபாரிசில் மன்னித்து ஏன் விடுதலை செய்ய முடியாது” என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.