தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – ஹர்ஷ டி சில்வா

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளோம்.தற்போதைய முன்னேற்றம் நிலையானதாக அமையாவிடின் எதிர்மறையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்.சந்தைப்படுத்தல் பொருளாதாரம் குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.வெகு விரைவில் சிறந்த திட்டங்களை வெளியிடுவோம் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (9) இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாட்டின் நிதி நிலைமை ஸ்திரமடைந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தலுக்காக அமுல்படுத்தப்பட்ட தவறான தீர்மானங்களினால் தேசிய பொருளாதாரம் ஒடுக்கப்பட்டுள்ளது.தொழிலின்மை தீவிரமடைந்துள்ளதுடன் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதாரத்தின் இயந்திரம் செயலிழந்துள்ளது.

பொருளாதார பாதிப்புக்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள தீர்மானங்களினால் பொருளாதாரம் ஸ்திரமடைந்திருந்தாலும் ஏழ்மை இரட்டிப்படைந்துள்ளது.எதிர்பாராத வீழ்ச்சிக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். போராடுகிறார்கள். தற்போதைய ஸ்திரப்படுத்தல் தற்காலிகமானதாக உள்ளது.நிலையான பொருளாதார செயற்திட்டங்களை உறுதியாக அமுல்படுத்தாவிட்டால் இந்த ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலை என்பன மீண்டும் பலவீனமடையும், சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெறும்.

நிலையான பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைய வேண்டுமாயின் போட்டித்தன்மையான சமூக சந்தைப்படுத்தல் பொருளாதாரத்தை அமுல்படுத்த வேண்டும். பொருளாதார விவகாரத்தில் தனிப்பட்ட சுதந்திரம் இன்றியமையாததாகும். தொழிற்றுறை மற்றும் முயற்சியாளர்களை ஊக்குவிக்க வேண்டுமாயின் பொருளாதார தனிமனித சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

பணவீக்கம் நிலையான தன்மையில் பேணப்பட வேண்டும்.பணவீக்கத்தில் நிலையற்ற தன்மை காணப்படும் போது பொருளாதார மீட்சிக்கான துறைசார் திட்டங்களைச் செயற்படுத்த முடியாது. மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்பட்டமை பொருளாதார வீழ்ச்சிக்கான பிரதான காரணியாகும். வட்டி வீதம்,பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பன நிதி கொள்கையுடன் தொடர்புடையது,நிதி கொள்கை பிரச்சினைக்குரியதாகக் காணப்படும் போது வட்டி வீதம், பணவீக்கம், ரூபாவின் பெறுமதி என்பனவற்றை நிலையானதாகப் பேண முடியாது. மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய தற்போது எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்களினால் நிதி ஒழுக்கம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

பொருளாதார ரீதியில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் வெற்றி பெற வேண்டுமாயின் சந்தை பொருளாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொருளாதார மீட்சிக்கான 20 திட்டங்களை முன்வைத்துள்ளார். 2022.ஆகஸ்ட் மாதமும்,2023 பெப்ரவரி மாதமும் பொருளாதார ஸ்திரப்படுத்தலுக்கான திட்டங்களை முன்வைத்தோம்.ஆனால் அரசியல் நிலைப்பாட்டுக்குள் இருந்துக் கொண்டு அரசாங்கம் எமது யோசனைகளைக் கவனத்திற் கொள்ளவில்லை.

பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் எடுக்கும் சிறந்த முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு ஆரம்பத்திலிருந்து நாங்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளோம்.பாரம்பரியமான எதிர்க்கட்சியாகச் செயற்படவில்லை.சந்தை பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்திய சிறந்த திட்டங்களை வெகுவிரைவில் வெளிப்படுத்துவோம் என்றார்.