துமிந்தவை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவு!

பாராத லக்‌ஷ்மன் பிரேமசந்திர வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்பை சவாலுக்கு உட்படுத்தி, ஹிருணிகா பிரேமசந்திரவினால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த மேன்முறையீடு மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட்ட போது, துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பை இடைநிறுத்துவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

துமிந்த சில்வாவுக்கு 2021 ஜுன் 24 ஆம் திகதி ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து விடுதலையான அவர், வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக பதவியேற்றிருந்தார்.

இந்நிலையில் இவரின் விடுதலையை இடைநிறுத்தி நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து துமிந்த சில்வா மீண்டும் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.