தேர்தல் முறைமை தொடர்பான விசேட தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு

தேர்தல் முறைமை தொடர்பான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் உள்வாங்கப்படாமை தொடர்பில் கல்முனையில் நேற்று (13) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் தெரிவுக்குழுவில் உள்வாங்கப்படாமை தமக்கு கவலையளிப்பதாக அக்கட்சியின் உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆரிஃப் சம்சுதீன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது.

இந்த விடயம் தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாகவும் தமது கட்சியின் உறுப்பினரை உள்ளடக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தேர்தல், வாக்கெடுப்பு முறை மற்றும் சட்டதிட்டங்களில் ஏற்படுத்த வேண்டிய மறுசீரமைப்பை அடையாளம் காண்பதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் தலைவராக சபை முதல்வர் அமைச்சர் தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் G.L.பீரிஸ், பவித்ராதேவி வன்னியாராச்சி, டக்ளஸ் தேவானந்தா, விமல் வீரவன்ச, M.U.M. அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், அநுர திசாநாயக்க, கபீர் ஹசிம், R.M.மத்தும பண்டார, மனோ கணேசன், M.A.சுமந்திரன், மதுர விதானகே மற்றும் சாகர சாரியவசம் ஆகியோர் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.