தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் சட்டம், உள்ளூராட்சி மன்ற வாக்களிப்பு கட்டளைச் சட்டம், ஜனாதிபதித் தேர்தலுக்கான விசேட ஏற்பாடுகள் சட்டம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அமைச்சரவை தீர்மானித்தது.

எவ்வாறாயினும், சட்டங்களை தனித்தனியாக திருத்துவதற்கு பதிலாக, புதிய தேர்தல் சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.