நாணய நிதியத்தின் இலங்கைக்கான உதவி குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை பிரதிநிதிகள் இன்று ஆராய்வு

இலங்கைக்கான சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி குறித்த விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக சர்வதேச மன்னிப்புச்சபையின் பிரதிநிதிகள் இன்று சர்வதேச நாணயநிதியத்தின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளனர்.

இலங்கைக்கு எந்த நிபந்தனைகளின் அடிப்படையில் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணயநிதியம் இணங்கியது என்பது குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக சர்வதேச நாணயநிதியத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் யாமினி மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது சர்வதேச மன்னிப்புச்சபையின் இலக்குகளை தெளிவுபடுத்தும் அதேவேளை இலங்கை அரசாங்கத்துடனான சர்வதேச நாணயநிதியத்தின் இணக்கப்பாடு குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் சிறந்த விதத்தில் அறிந்துகொள்ள விரும்புகின்றது எனவும் அவர் தெரிவித்துள்;ளார்.

நெருக்கடியான தருணங்களில் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து உதவிகளை பெற்ற நாடுகள் மனித உரிமைகளை பாதுகாக்கும் விதம் குறித்து சர்வதேச மன்னிப்புச்சபை எப்போதும் கரிசனை வெளியிட்டு வந்துள்ளது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா இலங்கையுடனான பேச்சுவார்த்தைகளின் போது பொருளாதார சமூக அரசியல் உரிமைகள் உட்பட மனித உரிமைகளிற்கு முன்னுரிமை வழங்குமாறு சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறான உடன்படிக்கை குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் அவை சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் உத்தரவாதம் செய்யப்பட்ட பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவதாக காணப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணயநிதியத்துடனான உடன்பாட்டில் இலங்கை மக்களிற்கான தனது நலன்புரிசேவைகளை குறைக்கவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்படக்கூடாது என தெரிவித்துள்ள யாமினி மிஸ்ரா கடன் வழங்கிய அனைவரும் மனித உரிமை கடப்பாட்டினை பின்பற்றவேண்டும்,அனைத்து செயற்பாடுகளும் வெளிப்படை தன்மை மிக்கவையாகவும் பொதுமக்களிற்கு தெரியப்படுத்தப்படுபவையாகவும் காணப்படவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.