நினைவு நாட்களுக்கு உரிமை கோருவது ?

நிலாந்தன்
நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பை குறித்த உரையாடல்கள் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.ஆனால் ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கும் விடயத்தில் தமிழ்ப்பரப்பில் இருக்கும் அரசியல் செயற்பாட்டாளர்கள் பொருத்தமான வெற்றிகளை இதுவரை பெற்றிருக்கவில்லை.அனைத்து நினைவு கூர்தல்களுக்குமான ஒரு பொதுக் கட்டமைப்பை ஏன் உருவாக்க முடியவில்லை?

ஏனென்றால் ஒரு பொதுவான தியாகிகள் நினைவு தினம் தமிழ்மக்கள் மத்தியில் இல்லை.ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொரு அமைப்பும் தனக்கென்று தனியாக தியாகிகள் தினங்களை வைத்திருக்கின்றது. நினைவு நாட்களை வைத்திருக்கின்றது.இதில் ஒரு இயக்கம் தியாகி என்று கூறுபவரை மற்றொரு இயக்கம் துரோகி என்று கூறும் நிலைமையும் உண்டு.ஒரு இயக்கத்தால் தியாகியாக கொண்டாடப்படுகிறவர் மற்றொரு இயக்கத்தால் கொலைகாரராக பார்க்கப்படுகிறார்.எனவே இயக்கங்களுக்கிடையிலான ஒரு பொதுவான தியாகிகள் நாளை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை.அதை என்றோ ஒரு நாள் கண்டுபிடிக்கும் பொழுதுதான் தமிழ்த் தேசியத்தின் ஜனநாயக இதயம் அதன் முழுமையான செழிப்பை அடையும்.

தியாகிகள் நாள் மட்டுமல்ல, இனப்படுகொலை நாளில் கூட சர்ச்சைகள் உண்டு.மே 18 எனப்படுவது தமிழ்மக்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நாள்.எனவே அந்த நாளை இனப்படுகொலை நாளாக அனுஷ்டிக்க வேண்டும் என்று தமிழ் மக்களில் ஒரு பகுதியினர் கருதுகிறார்கள். ஒரு குறுகிய காலகட்டத்தில் ஒரு குறுகிய நிலப்பரப்புக்குள் அதிக தொகையினர் கொல்லப்பட்டதன்மூலம் ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்ட ஒரு நாள் என்ற அடிப்படையில் அந்த நாளை இனப்படுகொலை நினைவு நாளாக அனுஷ்டிக்கலாம் என்று கருதுபவர்கள் உண்டு.ஆனால் அங்கேயும் சர்ச்சைகள் உண்டு.அந்த நாளில் புலிகள் இயக்கத்தின் பிரதானிகள் பலர் தம் உயிர்களை துறந்தனர் என்ற அடிப்படையில் அதுவும்கூட புலிகள் இயக்கத்தின் நினைவு நாட்களில் ஒன்றுதான் என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது.

இந்த அடிப்படையில் பார்த்தால் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள எல்லாத் தரப்புகளினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பொதுவான நினைவு நாளை கண்டுபிடிப்பது இப்போதைக்குச் சாத்தியமில்லை.அவ்வாறு ஒரு பொதுவான நினைவு நாள் இல்லாத ஒரு சமூகத்தில், நினைவு கூர்தலுக்காக ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதும் சாத்தியமில்லை.பதிலாக அவரவர் அவரவருடைய தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது என்ற அடிப்படையில் நினைவு கூர்தலில் பல்வகைமையை ஏற்றுக் கொள்வதுதான் உடனடிக்கு சாத்தியமான ஒன்று.

மேலும்,கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் யாவும் விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்கள்தான்.விடுதலைப்புலிகள் அல்லாத இயக்கங்களின் நினைவு நாட்கள் பொறுத்து பெரியளவில் சர்ச்சைகள் இல்லை.

இது எதை காட்டுகின்றது என்றால்,புலிகள் இயக்கத்தின் மெய்யான வாரிசு யார் என்ற ஒரு போட்டிதான்.அல்லது அந்த இயக்கத்தின் வீரத்துக்கும் தியாகங்களுக்கும் யார் உரிமை கோரலாம் என்ற ஒரு போட்டிதான்.இந்தப் போட்டி காரணமாகத்தான் கடந்த 13ஆண்டுகளாக நினைவுகூர்தல் தொடர்பாக சர்ச்சைகள் எழுகின்றன.

இதில் பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் முயற்சிகளில் பெரும்பாலானவை விடுதலைப்புலிகள் இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட நினைவு நாட்களை அனுஷ்டிப்பதற்கானவைதான்.அவ்வாறான ஒரு பொதுக் கட்டமைப்பு இல்லாத ஒரு பின்னணியில்தான் இப்பொழுது மறுபடியும் திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு அரசியல்வாதிகள் தங்களுக்கிடையே பிடுங்குப்படத் தொடங்கியிருக்கிறார்கள்.

இப்படி ஒரு சர்ச்சை வரும் என்பதனை ஏற்கனவே எதிர்பார்த்த அரசியற் செயற்பாட்டாளர்கள் சிலர் இதில் சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளையும் அணுகினார்கள்.குறிப்பாக இந்த சர்ச்சைகளின் மையமாகக் காணப்படும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு அணிகளையும் அணுகினார்கள். புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினரான பஷீர் காக்கா இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனோடு உரையாடினார்.தான் மட்டக்களப்புக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் தமது அமைப்பின் பேச்சாளர் சுகாசுடன் உரையாடும்படியும் கஜேந்திரன் சொன்னார்.எனினும்,இது தொடர்பாக அக்கட்சியின் உறுப்பினரும் திலீபனோடு நேரடியாகப் பழகியவருமான பொன் மாஸ்ரரோடு உரையாடுவது அதிகம் பொருத்தமாக இருக்கும் என்று பஷீர் காக்கா கருதினார் போலும். எனவே அவர் பொன் மாஸ்டரிடம் இது தொடர்பாக உரையாடியிருக்கிறார். எனினும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட உடைவு நினைவு கூர்தலில் பிரதிபலிப்பதை அவரைப் போன்ற செயல்பாட்டாளர்களால் தடுக்க முடியவில்லை.மாறாக அரசியல்வாதிகள் பஷீர் காக்காவை போன்ற மூத்த செயற்பாட்டாளர்களை அவமதிக்கும் ஒரு நிலைமைதான் உருவாகியது.

முரண்பாடு பொதுவெளியில் வந்த பின்னர்தான் மணிவண்ணன் ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்கினார். முரண்பாட்டின் பின் உருவாக்கப்பட்டபடியால் அது முரண்பாட்டின் ஒரு விளைவாகவே பார்க்கப்படும். மாநகர முதல்வர் என்று அடிப்படையில் மணிவண்ணன் அதனை உருவாக்கிய போதிலும், அப்பொதுக் கட்டமைப்பு சுயாதீனமானது என்று அதைச் சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள்.அது திலீபன் நினைவு நாட்களை சுயாதீனமாக நினைவுகூரும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் கஜேந்திரகுமார் அணியைச் சேர்ந்த பொன் மாஸ்டர் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்களை வைத்துப்பார்த்தால்,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்குள் ஏற்பட்ட பிளவு திலீபனின் நினைவு நாட்களில் பிரதிபலிக்கிறது என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்மக்கள் ஒரு பொதுவான நினைவுகூரும் கட்டமைப்பை உருவாக்குவது எத்துணை சவால்கள் மிகுந்தது என்பதனை நிரூபிப்பதாகவும் அது காணப்படுகிறது.ஆயுத மோதல்களுக்கு பின்னரான கடந்த 13 ஆண்டுகளில் தமிழ்ச் சமூகமும் அதன் அரசியலும் பண்புருமாற்றம் – transformation – ஒன்றுக்கு போகமுடியாது தியங்குவதையும் அது காட்டுகிறது.

தமிழ்மக்கள் முழு உலகத்தையும் திரும்பி பார்க்க வைக்கும் ஓர் ஆயுதப் போராட்டத்தை நடாத்திய மக்கள்.ஆயுதப் போராட்டம் என்று சொன்னால் சம்பந்தப்பட்ட எல்லாருடைய கைகளிலும் ரத்தம் இருக்கும்.ஆயுதம் ஏந்தியவர்கள் மட்டுமல்ல,அந்தப் போராட்டத்தை ஏதோ ஒரு விதத்தில் ஆதரித்தவர்கள் எல்லாருக்கும் அதில் கூட்டுப்பொறுப்பு உண்டு.இதில் என்னுடைய கை சுத்தம், உன்னுடைய கையில் இருப்பது ரத்தம் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.தியாகி – துரோகி என்ற அளவுகோள்கள் ஊடாக அரசியலைத் தொடர்ந்தும் அணுக முடியாது.நான் தியாகி,நீ துரோகி என்று வகிடுபிரிக்க வெளிக்கிட்டால் சமூகம் என்றைக்குமே ஒரு திரட்சியாக இருக்கமுடியாது.அதாவது தமிழ்மக்களை ஒரு தேசமாக கட்டியெழுப்பவே முடியாது.

இதில் தங்களை தியாகிகளாக காட்டிக் கொள்பவர்கள் அல்லது கடந்த காலத் தியாகங்களுக்கும் வீரத்திற்கும் உரித்து கொண்டாடுபவர்கள் முதலில் அந்த வீரத்தின் தொடர்ச்சியும் தியாகத்தின் தொடர்ச்சியும் தாங்களே என்பதனை நிரூபித்துக் காட்டவேண்டும்.அதை நிரூபிக்கும் இடம் நினைவு கூர்தல் அல்ல. மாறாக கடந்த 13 ஆண்டு கால அரசியலில் தமது சொத்துக்களை இழப்பதற்கும் ரிஸ்க் எடுப்பதற்கும் எத்தனை பேர் தயாராக இருந்தார்கள் என்பதிலிருந்துதான் அதை மதிப்பிடலாம். திலீபனை நினைவு கூர்வது என்பது நல்லூரில் இருக்கும் நினைவுத்தூபியில் சிவப்பு மஞ்சள் கொடியை கட்டுவது மட்டுமல்ல, விளக்குகளை ஏற்றுவது மட்டும் அல்ல,அது அதைவிட ஆழமானது. திலீபனைப்போல தமது அரசியல் இலக்கை அடைவதற்காக உயிரைத் துறக்கத் தயாரான எத்தனை அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஒருவர் முன்வரட்டும் பார்க்கலாம்?

இதுதான் பிரச்சினை.தியாகத்துக்கும் வீரத்துக்கும் உரிமை கோரும் அரசியல்வாதிகள் கடந்த 13ஆண்டுகளாக எத்தனை தியாகங்களைச் செய்திருக்கிறார்கள்?எத்தனை பேர் சட்ட மறுப்பாகப் போராடி சிறை சென்றிருக்கிறார்கள்? எத்தனை பேர் சொத்துக்களை துறந்திருக்கிறார்கள்?

கடந்த 13ஆண்டுகளில் காணாமல் போனவர்களின் அம்மாக்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள்.ஆனால் அவர்களை அரசியல் செயற்பாட்டாளர்கள் சாக விடவில்லை.இவைதவிர அரசியல்வாதிகள் என்று பார்த்தால் யாருமே அந்தளவுக்கு துணியவில்லை.

அதற்காக அரசியல்வாதிகள் சாக வேண்டும் என்று இக்கட்டுரை கேட்கவில்லை.உயிரைக் கொடுத்தது போதும்.இனி உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய காலம்.எனவே ஆயுதப் போராட்டத்திற்கு பின்னரான ஒரு அரசியலுக்குரிய பண்புருமாற்றத்திற்கு தமிழ்மக்கள் தயாராக வேண்டும்.நான் வண்ணாத்து பூச்சி,நீ மசுக்குட்டி என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது.ஏனென்றால் எல்லா வண்ணாத்துப் பூச்சிகளும் ஒரு காலம் மயிர்க்கொட்டிகளாக இருந்தவைதான்.

இந்த விடயத்தில் தமிழ்மக்கள் தென்னாபிரிக்காவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.தென்னாபிரிக்காவில் வெவ்வேறு ஆயுத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாறி மாறி ஒருவர் மற்றவரை கொன்றிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் பழிவாங்கும் உணர்ச்சியோடு ஒருவர் மற்றவரைத் தண்டிக்க முற்பட்டிருந்திருந்தால் தென்னாபிரிக்கா தொடர்ந்தும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியிருந்திருக்கும்.ஒரு புதிய காலத்துக்கு வந்திருக்கவே முடியாது.இதுவிடயத்தில் தென்னாபிரிக்காவை இறந்த காலத்திலிருந்து புதிய காலத்துக்கு அழைத்து வரத் தேவையான பண்புருமாற்றத்திற்கு மண்டேலா தலைமை தாங்கினார்.

ஈழத்தமிழ் அரசியலிலும் இறந்த காலத்தில் இருந்து ஒரு புதிய காலத்தை நோக்கி செல்வதற்கான பண்புருமாற்றம் தேவை.தனது அரசியல் எதிரியை துரோகி ஆக்குவதால் யாரும் தியாகி ஆகிவிட முடியாது.தியாகம் செய்தால்தான் தியாகியாகலாம்.தனது அரசியல் எதிரியைத் துரோகியாக்குவது என்பது தமிழ்ச் சமூகம் பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்பதைத்தான் காட்டுகின்றது. பண்புருமாற்றத்துக்கு தயாரில்லை என்று சொன்னால் கூட்டுக் காயங்களோடும் பிணங்களோடும் இறந்த காலத்திலேயே வாழ வேண்டியதுதான்.பழிவாங்கும் உணர்ச்சியால் பிளவுண்டு ஒரு தேசமாக திரட்சியுறாமல் சிதறிப் போவதுதான்.

சில மாதங்களுக்கு முன் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய கஜேந்திரகுமார் சிங்கள பௌத்த அரசியலானது பண்புருமாற்றத்துக்குப் போகதவறியதன் விளைவே அதுவென்று கூறியிருந்தார்.உண்மை. அதுபோல தமிழ் அரசியலும் பண்புருமாற்றத்துக்குப் போக வேண்டும்.

கடந்த 13 ஆண்டுகளில் ஒரு பொதுவான நினைவு நாளையோ அல்லது நினைவு கூர்தலுக்கான ஒரு பொதுக் கட்டமைப்பையோ ஈழத்தமிழர்களால் உருவாக்க முடியவில்லை என்பது தமிழ் அரசியல் தொடர்ந்து பண்புருமாற்றத்திற்கு தயாராக இல்லை என்பதைத்தான் காட்டுகின்றது.இப்பொழுது திலீபனின் நினைவு நாளை முன்னிட்டு உருவாக்கப்பட்டிருக்கும் பொதுக் கட்டமைப்பானது ஒரு கட்சிக்குள் ஏற்பட்ட உடைவைப் பிரதிபதிக்குமா? அல்லது ஒரு புதிய காலத்தை நோக்கிய பண்புருமாற்றத்தைப் பிரதிபலிக்குமா?