நௌபர் மௌலவியே பிரதான சூத்திரதாரி, அமெரிக்க புலனாய்வு பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது – சரத் வீரசேகர

ஏப்ரல் 21 தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவியே என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ புலனாய்வு பிரிவும் உறுதிப்படுத்தி இருப்பதாக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
இன்று -19- நாடாளுமன்றில் வைத்து அவர் இதனைக் கூறினார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைகள் நிறைவடையாதுள்ள நிலையில், தமது பதவிக்காலத்திற்குள் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரங்களை தாக்கல் செய்ய முடியாது போனதாக சட்ட மா அதிபர் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்து நாடாளுமன்றில் சரத் வீரசேகர உரையாற்றியபோது இதனைக் கூறினார்.

குற்றவாளிகளை அடையாளம் கண்டு குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு காலம் எடுக்கும் என்றும், இதற்கு முந்திய பல சம்பவங்கள் தொடர்பிலும் இந்த காலதாமதம் ஏற்பட்டிருந்தது என்றும் அவர் கூறினார்.

இதன்போது உரையாற்றிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், பலர் போலியான குற்றச்சாட்டுகளின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

தடுப்பில் உள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் அஹமட்டுக்கு எதிராக சிறுவர்கள் பலவந்தப்படுத்தப்பட்டு சாட்சியமளிக்கச் செய்யப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் சுட்டிக்காட்டினார்.