பதவி விலக மறுக்கும் ஆளுனர்களுக்கு எதிராக விரைவில் முறைகேடு விசாரணை?

ஜனாதிபதி செயலகத்தினால் பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள நான்கு மாகாண ஆளுநர்களும் தமது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்ய மறுத்தால், அவர்களை ஜனாதிபதியின் பிரதிநிதிகளாக கருத வேண்டாம் என அரச அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுமட்டுமல்லாமல், இந்த ஆளுநர்களின் முறைகேடுகள் தொடர்பாக நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்து, குற்றச்சாட்டுகளில் ஆளுநர்களைக் குற்றவாளிகள் என்று பெயரிட்டு அவர்களை நீக்கவும், ஆளுநர் பதவிக்கு வேறு நபர்களை நியமிப்பது மற்றும் பதவி விலகுமாறு அறிவிக்கப்பட்ட ஆளுநர்களுக்கு பணம் வழங்காமல் இருப்பது குறித்தும் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளது.

பதவிவிலகுமாறு அறிவிக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ஆளுநர்கள் பதவி விலகத் தயாரில்லை, எனவே எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக ஜனாதிபதி அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி பதவி விலகி புதிய ஜனாதிபதி நியமிக்கப்படும் போது ஆளுநர்கள் பதவி விலகுவது வழமையான மரபு எனவும், பிரதமர் பதவி விலகும் போது அமைச்சரவையை கலைப்பது போன்றது எனவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின்னர் மேற்படி சம்பிரதாயத்திற்கு அமைவாக ஆளுநர்கள் பதவி விலகாததால், அவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவதற்கு ஜனாதிபதி சிறிது காலம் காத்திருந்ததாக ஜனாதிபதி அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உள்ளூராட்சிசபை தேர்தலை தள்ளிவைக்க வேண்டுமென்ற ஜனாதிபதியின் விருப்பத்துக்கு சாதகமாக செயற்பட்ட முன்னாள் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.சாள்ஸூம் புதிய ஆளுனராக நியமிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது.