பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணத்தை மீளாய்வு செய்ய வேண்டும் – இலங்கை மனித உரிமை ஆணைக்குழு

அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தில் பயங்கரவாததத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் என்ற பிரிவில் பயங்கரவாதத்திற்கு கொடுத்துள்ள வரைவிலக்கணத்தை அரசாங்கம் மீளாய்வு செய்யவேண்டும் என மனித உரிமை ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய விடயமாக இருந்து வந்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு இந்த வரைவிலணக்கத்தின் பரந்துபட்ட நோக்கம் இந்த விடயத்தை சிக்கலாக்குகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

இந்த சட்டமூலத்தில் பயங்கரவாதத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் அபிப்பிராயபேதத்தினை வெளிப்படுத்தும் நியாயபூர்வமான செயற்பாடுகளிற்கும் பயங்கரவாத செயற்பாடுகளிற்கும் இடையில் வித்தியாசம் காண்பதை கடினமானதாக்கியுள்ளது எனவும் இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இணங்காதிருப்பவர்கள் சிவில் சமூகத்தினரை இலக்குவைப்பதற்காக அரசாங்கம் பயங்கரவாதம் குறித்த பரந்துபட்ட வரைவிலக்கணத்தை பயன்படுத்தக்கூடும் என மனித உரிமை ஆணைக்குழு கரிசனை வெளியிட்டுள்ளது.

இது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமையை மீறுகின்றது எனவும் தெரிவித்துள்ள இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு சுதந்திரமான பேச்சிற்கான உரிமையும் மீறப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளது.

பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணம் பேச்சுசுதந்திரம் நடமாட்ட சுதந்திரம் ஆகியவற்றின் மீது கடும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் எனவும் தெரிவித்துள்ள மனித உரிமை ஆணைக்குழு பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படலாம் என்ற அச்சம்காரணமாக பொதுநலன்கள் குறித்த விடயங்களில் மக்கள் வெளிப்படையாக கருத்து கூற தயங்குவார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.