பிரித்தானியாவில் பெருமளவானோர் பங்கேற்புடன் முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தாயகம் உட்பட பல்வேறு புலம்பெயர் நாடுகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில், உலகத்தமிழர் வரலாற்று மைய “முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் “பெருமளவானோர் மனமுருகி வணக்கம் செலுத்தியுள்ளனர்.

இருபத்தொரம் நூற்றாண்டில் உலகமே பார்திருக்க ஓர் இனம் இனப்படுகொலை செய்யப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளான அடையாளங்கள் அனைத்தும் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தி வல்லாதிக்க சக்திகளின் கொடும் கரம் கொண்டு வஞ்சம் தீர்க்கப்பட்டு இன்றோடு 14ஆண்டுகள் கடந்தும், எம்மின உறவுகளின் உள்ளங்களில் என்றும் துயர்நிறைந்த அந்த கொடூர நாட்களின் வடுக்கள் என்றும் நெருப்பாக பற்றி எரிந்துகொண்டே இருக்கிறது அது, ஓர் நாள் அவர்களின் இழப்பிற்கெல்லாம் நிச்சயமாக விடிவைப்பெற்றுத்தரும்.

முள்ளிவாய்கக்காலின் இறுதி நாட்களில் கொத்துக்கொத்தாக தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவு நாள் வழமை போல் இந்த ஆண்டும் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாயக்கால் நினைவு முற்றத்தில் பெருமளவான பொதுமக்கள் கலந்துகொள்ள உணர்வெழிச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் பொது ஈகைச்சுடரினை அற்புதவிநாயகர் ஆலய பூசகரான குருக்கள் பிரம்மச்சிறிசதீஸ்வர சர்மா அவர்களும், நாடு கடந்த அரசாங்க பிரதிநிதி சாமினி இராமநாதன் அவர்களும் , இளையோர்களான செல்வன் சோதிதாஸ் மதி,மற்றும் பேரின்பநாதன் சஞ்சிகா அவர்களும் , முள்ளிவாய்க்கால் இறுதிச்சமரில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் ஜெயம் அவர்களின் மகன் செல்வன் ஆரகன் அவர்களும் ஏற்றிவைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பிரித்தானியா கொடியினை உலகத்தமிழர் வரலாற்று மையத்தின் ஆலோசகர் பாலகிருஸ்ணன் (பாலா மாஸ்ரர்) ஏற்றிவைத்துள்ளார்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் செங்குருதியால் தமிழர்களின் அடையாளமாக பட்டொளி வீசிப்பறந்த தமிழீழ தேசியக்கொடியினை முன்னாள் போராளி கபில் ஏற்றிவைத்துள்ளார்.

இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, அகவணக்கம் செலுத்த, முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை என அடையாளப்படுத்தப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டமை நினைவாக ஏற்றிவைக்கப்படும் “இனப்படுகொலையின் பிரதானச்சுடரினை” இன அழிப்பினை அடையாளப்படுத்தும் இசை ஒலிக்க, பிரிகேடியர் ஆதவனின் துணைவியார் சுதா ஏற்றிவைத்துள்ளார்.

மேலும் இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தமது உறவுகளை நினைவில் நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்ட சுடர்களை மனமுருகி கண்களில் கண்ணீர் சொரிய ஏற்றி வைத்து ஆத்மார்த்தமாக வணக்கம் செலுத்தியுள்ளனர்.

மேலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுத்ததூபிக்கு சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்து ஆரம்பித்து வைக்க,நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் சுடர்களை ஏற்றி,மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து முள்ளிவாயக்காலில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்கான இறையாசி வேண்டிய உரையினை ஒக்ஸ்பேட் அற்புத விநாயகர் ஆலய குருக்கள் பிரம்மசிறி சதீஸ்வரசர்மா நிகழ்த்தியுள்ளார்.

மேலும்,வளாகத்தில அமைந்துள்ள ஆலயங்களில் ஆத்ம சாந்தி பூசை வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன

மேற்படி அனைத்து நிகழ்வுகளையும், தமிழர் கலைபண்பாட்டு நடுவமும், தமிழீழ மாவீரர் பணிமனையும் இணைந்து “வீழ்ந்தது அவமானமல்ல, வீழ்ந்து கிடப்பதே அவமானம், மீண்டெழ முயற்சிப்போம்” என ஒழுங்கு செய்துள்ளனர்.