புலம் பெயர்ந்தவர்களிடத்தில் காணப்படும் கலைகள் மீதான ஈடுபாடு இனத்தின் அடிப்படைகளை வலுப்படுத்துகின்றது கனடாவில் ரெலோ யாழ் மாவட்ட தலைவர் நிரோஷ்

புலம்பெயர் தேசத்தில் கூட இனத்தின் அடையாளங்களைப் பேணுவதிலும் பாதுகாப்பதிலும் எமது மக்கள் மிகுந்த ஆர்வமுடையவர்களாக இருக்கின்றமை வரவேற்கத்தக்கது என ரெலோ யாழ் மாவட்ட தலைவரும் வலிகிழக்கு பிரதேச சபை தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கனடா ஸ்காபரோ கந்தசாமி ஆலய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற கிறிபின் கல்லூரி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், இலங்கையில் இனவாத ரீதியில் நாம் அடக்குமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டமையினால் நாம் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களாகவும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்தவர்களாகவும் வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறாகப் புலம்பெயந்த நிலையிலும் எமது தலைமுறைகள் கல்வி ரீதியிலும் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் நிபுணத்துவ ரீதியிலும் சிறந்து விளங்குகின்றது. நாங்கள் வசிக்கும் நாடுகளில் பல்கலாசாரத்தன்மையை மதிப்பவர்களாக மிளிர்கின்றோம்.

அடிப்படையில் ஓர் இனத்தின் இருப்பு என்பது அரசியலில் மாத்திரம் கட்டமைக்கப்பட்டதல்ல. இனத்தினுடைய அரசியல், சமூக, பொருளாதார கலாசாரத்தினை ஸ்திரமாகக் கொண்டு வாழ்வதில் தங்கியுள்ளது. இந்த இடத்தில் கனடாவில் புலம்பெயர்ந்து வாழக்கூடிய மாணவர்களின் கலை நிகழ்வுகளை இரசிக்கக் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதில் தாய் மொழி மீதும் தாயகத்தின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் பற்றை பறை சாற்றியிருந்தீர்கள்.

அடிப்படையில் தாயகத்தில் இருக்கும் நம்வர்கள் கொண்டிருக்கும் கலை ஆற்றல்களை ஒத்ததாக அதன் நீட்சியாக உங்கள் கலை ஆர்வம் உள்ளது. புலம்பெயர்ந்து வாழக்கூடிய புதிய தலைமுறைக்கும் தாயகத்தில் வாழக்கூடிய புதிய தலைமுறையினருக்கும் இடையில் உறவினை வலுப்படுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. இன்று உங்கள் தாய் தந்தையர் எவ்வளவு தூரம் தயாகத்தில் வாழும் தமது உறவினர்களுடன் உறவினைக் கொண்டிருக்கின்றார்களோ அதை வலுப்படுத்தும் முகமாக புலம் பெயர் தேசத்திலேயே பிறந்து வாழக்கூடிய புதிய தலைமுறைகளிடத்தில் ஆக்கபூர்வமான வழிகாட்டுதல்களையும் ஒழுங்குபடுத்தல்களையும் நாம் மேற்கொள்ள வேண்டியவர்களாக இருக்கின்றோம்.

எமது கலைகள் இன ஒடுக்கு முறை ரீதியிலும் உலக மயமாக்கத்தின் ஆதிகரித்த தாக்கங்களினாலும் கேள்விக்கு உள்ளாகக் கூடிய ஓர் சூழ்நிலையில் உங்கள் பற்றுறுதி தமிழ்க் கலைகள் என்றும் வாழும் என்ற உத்தரiவாதத்தினைத் தருகின்றது. இவ்வாறு வலிகாணம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.