பொன் சிவகுமாரனின் அர்ப்பணிப்பினாலேயே தமிழ் மக்கள் போராட்டம் சர்வதேசம் கவனம் பெற்றது – சிவாஜிலிங்கம்

தியாகி பொன் சிவகுமாரனின் அர்ப்பணிப்பினாலேயே தமிழ் மக்களின் போராட்டம் மிக வேகமாக முன்னேறி சர்வதேசம் கண்காணிக்குமளவிற்கு மாற்றப்பட்டது என முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்றையதினம் யாழ் உரும்பிராயில் இடம்பெற்ற தியாகி பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களிட்ம் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழினத்திற்கெதிரான அடக்குமுறைகள் கட்டங்கட்டமாக முன்னேறிக்கொண்டிருந்த காலப்பகுதியில் தமிழ் மக்களின் உயர் கல்வியைப் பறிக்கின்ற தரப்படுத்தலு்கெதிராக போராட முற்பட்ட மாணவரணியில் முன்னணியி்ல் செயற்பட்டவர் தான் தியாகி பொன் சிவகுமாரன்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் 9 பேர் பொலிசாரால் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அவரது மனதில் காயத்தை ஏற்படுத்திய காரணத்தினால் அவர் வன்முறையைதன தவிர வேறு வழியில்லை எனப் பல தாக்குதல்களைத் தொடுத்திருந்தார்.

அந்த காப்பகுதியில் பணத்தேவைக்காக வங்கியைக் கொள்ளையிட முயன்ற போது பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் சயனைட் அருந்தி வீரமரணத்தைத் தழுவி்க்கொண்டார்.

வீர மரணத்தைத் தழுவிய மறுநாள் ஒரு சிலரே இறுதிக்கிரியைகளில் பங்கெடுத்திருந்த நிலையில் மறுநாள் இறுதிக்கிரியைகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் பல்லாயிரக்கணக்கில் தமிழ்த் தலைவர்கள் மற்றும் மக்கள் திரண்டிருந்தனர்.

உரும்பிராய் வேம்பன் மயானத்திலே பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த வேளையிலே அவரது உடல் வைக்கப்பட்ட.பெட்டியை செங்குத்தாக மக்களுக்கு காண்பிக்கக்கூடிய நிலைகூடத் தோன்றியது.

முதலாவது போராளியாக தன்னை ஈகம் செய்த இழப்பு பேரிழப்பாகும். அதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கூட நாங்கள் சந்தித்துப் பேசியிருந்தோம். அவ்வாறு அர்ப்பணிப்பற்ற முறையிலே அவர் செய்த ஈகம் தான் போராட்டத்திற்கான வீச்சை வழங்கியது. அது பின்னாளியே நடைமுறை அரசாங்கமாக கட்டியெழுப்பப்படுவதற்கு வழிவகுத்தது.

அவரது தியாகம் பலரது கண்களை விழிக்க வைத்ததுடன் தமிழீழப் போராட்டத்தின் திருப்பு முனையாக இருந்தது. அதன் பின்னே இளைஞர்கள் இயக்கங்களில் இணைந்து போராட்டம் மிக வேகமாக முன்னேறி சர்வதேசம் கண்காணிக்குமளவிற்கு மற்றப்பட்டதும் சிவகுமாரனின் அர்ப்பணிப்பே காரணம்.

அண்மையிலும் லண்டனில் இவர்களுடன் செயற்பட்ட பல தலைவர்களைச் சந்தித்த போது தியாகி சிவகுமாரன் பற்றிய பல விடயங்களை உரையாடியிருந்தனர்.

இவரது திருவுருவச் சிலை பல சந்தர்ப்பங்களில் உடைக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு 1 வது நினைவேந்தலிலே கவிஞர் காசியானந்தன் தலைமையில் இடம்பெற்ற சிலை திறப்பு விழாவிற்கு தந்தை செல்வா கூட பிரசன்னமாயிருந்தார்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் இதயத்திலிருக்கும் தலைவராக சிவகுமாரன் விளங்கினார் என்றால் மிகையாகாது. தமிழீழ இலட்சியத்திற்காக தன்னுயிரை ஈந்த அவரின் தியாகம் போற்றப்பட வேண்டும். – என்றார்