போயா தினத்தில் யாழ் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த ஆக்கிரமிப்பு புத்தர்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், நேற்று போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

வழமைக்கு மாறாக அதிகளவான பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை பார்ப்பதற்கு கலைப்பீட தமிழ் மாணவர்கள் அங்கு சென்றவேளை, அங்கு வந்த ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா மாணவர்களை அங்கு செல்ல வேண்டாம் என தடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விஞ்ஞான பீடத்தின் பின்புறத்தினூடாக புத்தர் சிலை எடுத்து வரப்பட்டது.

இதன்போது ஒரு கறுப்பு நிற மர்ம வாகனமும் பல்கலையினுள் நுழைந்தது.

இதன்போது அங்கு சென்ற கலைப்பீட தமிழ் மாணவர்களை அவ்விடத்திற்கு வந்த பிக்கு ஒருவர் காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் புத்தர் சிலையை எடுத்து வந்த பெரும்பான்மையின மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பெற்ற அனுமதி கடிதத்தை காண்பித்து, “நாங்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி பெற்றுத்தான் புத்தர் சிலையை கொண்டு வருகின்றோம்” என்றனர்.

ஆனால் அந்த மர்மம வாகனத்தில் வந்தது யார்? எதற்காக அந்த மர்ம வாகனம் பல்கலைக்கழகத்தினுள் வந்தது? என்ற எந்தவிதமான தகவல்களும் தெரியவரவில்லை.

இந்நிலையில் இன்றையதினம் சட்ட நிறைவேற்று அதிகாரி வெங்கட் ரமணன் மற்றும் ஒழுக்காற்று விசாரணை அதிகாரி விஜயேந்திரா ஆகியோர், கலைப்பீட தமிழ் மாணவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

தமிழர்களது நிலங்கள் பறிபோகின்ற சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழகத்தையும் பறி கொடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முயல்கிறதா என சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.