மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதே இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் – இரா. துரைரெட்ணம்

மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்ற ஜனாதிபதி கோட்டபாய ராஜபஷவின்  தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும். எனவே இந்த  சிங்கள குடியேற்ற நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற தலைவருமான இரா. துரைரெட்ணம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி,ஆர்.எல்.எப் பத்மநாபா மன்ற காரியலத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாங்கேணி கிழக்கு பகுதியின் மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லை கிராமமான புனானை காரமுனை பகுதியில் 200 சிங்கள குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 6 ஏக்கர் வீதம் சிங்கள மக்களுக்கு வழங்க திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கின்றது

இந்த சிங்கள குடியேற்றத்தை செய்வதற்காக இலங்கையின் பௌத்த ஆலோசனைக்குழுவின் நடவடிக்கையின் பயனாக ஜனாதிபதியின் துணையுடன் கொழும்பு காணி ஆணையாளரது வழிகாட்டலின் பெயரில் இன்று இந்த பகுதியில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை நடாத்துவதற்காக பௌத்த தலைமையிலான குழுவினருடன் பார்வையிட்டது என்பது மட்டக்களப்பில் தமிழ் மக்கள் வாழக்கூடாது என்பதை மத்திய அரசின் செயற்பாடு முன்நிறுத்துகின்றது.

இது தொடர்பாக அந்தபகுதியில்; மக்கள் பிரதிநிதிகளும் அந்தபகுதிமக்களும் ஒரு வெகுஜன ரீதியான எதிர்ப்பு போராட்டம் செய்து எதிர்ப்பை தெரிவித்த இன்றைய தினத்தில் இந்த காணிகளை பாக்கச் சென்றவர்களுக்கு இதில் எதிர்ப்பு இருக்கின்றது என தெரியப்படுத்தியுள்ளது.

1983 ம் ஆண்டு 1985 ம் ஆண்டு கலவரங்களின் ஊடாக அந்த பகுதியில் குறிப்பிட்ட சில 4 அல்லது 5 சிங்கள குடும்பங்களும் தமிழ் குடும்பங்களும்  முஸ்லீம் குடும்பங்களும் இடம்பெயர்ந்தது என்பது வரலாறு இதற்கு 1982 ம் ஆண்டு வருடாந்த அனுமதிப்பத்திரம் இந்த பகுதியில் ஒரு குடும்பத்துக்கு 6 ஏக்கர் வீதம் 198 குடும்பங்களுக்கு இருந்ததாக பொய்யான வருடாந்த அனுமதிப்பத்திரத்தை தயாரித்து சம்மந்தப்பட்டோருக்கு வழங்கியிருக்கின்றார்கள்.

இந்த வருடாந்த அனுமதிப்பத்திரத்தில் கையொழுத்து வைத்த உத்தியோகத்தவர் என்பவர் எங்கள் அறிவுக்கு எட்டியவரை அப்படி ஒரு உத்தியோகத்தர் வேலை செய்யவில்லை. ஆகவே காணி ஆணையாளா இந்த வருடாந்த அனுமதிப்பத்திரம் பொய்யா உண்மையா என இந்த விடயத்தை முதலில் விசாரணை செய்யவேண்டும்.

வருடாந்த அனுமதிப்பத்திரம் அந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படாவிட்டால் அது இரத்து செய்யப்படும். ஆகவே ஒரு பொய்யான ஆவணத்தை தயாரித்ததாக ஒரு குற்றச்சாட்டடை நான் முன்வைக்கின்றேன் அது மட்டுமல்ல கடந்த பதினைந்து இருவது வருடமாக கிழக்கு மாகாண சபையில் இந்த விடையத்தை 4 வது தடவையாக நான் இங்கு இன்று பேசுகின்றேன்.

இந்த குடியேற்றம் தொடர்பாக கடந்த வருடம் அதற்கு முந்தியவருடம் பல முயற்சிகள் செய்யப்பட்டு கிழக்கு மாகாண காணி ஆணையாளர் கிழக்குமாகாணசபை மக்கள் பிரதிநிதிகள் வாகரை பிரதேசத்திற்குட்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள் பல ஆட்சேபனையை தெரிவித்து வந்தோம்.

ஆனால் மீண்டும் மீண்டும் மத்திய அரசாங்கமும்  பௌத்த ஆலோசனைக் குழு சிங்கள மக்களை நாங்கள் குடியேற்றி ஆகவேண்டும் என இன்று இதனை கையில் எடுத்திருக்கின்றது என்பது இலங்கை அரசாங்கத்தின் ஒரு கேவலம் கெட்ட ஜனாதிபதிட்டபாய ராஜபஷவின்  தலைமையில் செயற்படும் பௌத்த ஆதிக்கத்தின் வெளிப்பாடாகும.

எனவே  இந்த திட்டமிட்ட  குடியேற்றத்தை வன்மையாக கண்டித்து இன்று இந்த நிலைமையில் அந்த இடத்திற்கு சென்று மக்கள் பிரதிநிதிகள் ஆர்பாட்டம் நடாத்துவது என்பது வரவேற்கதக்க விடையம் இதை உணர்ந்து மத்திய அரசு இதனை நிறுத்துவதற்கான செயற்பாடுகளை செய்யவேண்டும்” என அவர் தெரிவித்தார்.