மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – உதய கம்மன்பில

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் தான் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார். மத்திய வங்கியின் பணியாளர்கள் மாத்திரமல்ல ஒட்டுமொத்த மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் அவ்வாறாயின் அனைவருக்கும் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.முறையற்ற வகையில் செயற்படும் மத்திய வங்கி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட அதன் பணியாளர்களின் சம்பளம் 70 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளன.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவில் அதிகரிக்கப்படாத நிலையில் மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பளம் இலட்சக்கணக்கில் அதிகரிக்கப்பட்டுள்ளன.பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டு மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என்று உபதேசம் வழங்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை மத்திய வங்கியின் நிதி சபைக்கு முன்வைத்துள்ளார்.

மத்திய வங்கியின் அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காகச் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடும் நியாயப்படுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது.பொருளாதார நெருக்கடியால் மத்திய வங்கியின் பணியாளர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை மத்திய வங்கியின் ஆளுநர் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பார்த்தால் ஒட்டுமொத்த மக்களுக்கும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

மக்களின் வரிப்பணத்தில் சம்பளத்தை அதிகரித்துக் கொள்ளவில்லை தமது இலாபத்தில் தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி குறிப்பிடுகிறது.மத்திய வங்கி ஏனைய வணிக வங்கிகளை போல் போட்டித்தன்மையுடன் செயற்படும் நிறுவனமல்ல, கூட்டிணைந்த நிறுவனம்.நாணயம் அச்சிடல் தொடர்பில் தீர்மானம் எடுக்கும் உரிமை மத்திய வங்கிக்கு உண்டு.ஆகவே தமது நிதியிலிருந்து தான் சம்பளம் அதிகரிக்கப்பட்டது என்று குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமது வளர்ச்சிக்காக மக்கள் மீதே வரி சுமத்தப்படுகிறது.ஆகவே மத்திய வங்கியின் பணியாளர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு உடனடியாக இடைநிறுத்த வேண்டும்.நாட்டு மக்களிடம் ஒன்றைக் குறிப்பிட்டு பிறிதொன்றை செயற்படுத்துதற்கு மத்திய வங்கி மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

புதிய மத்திய வங்கி சட்டத்தின் ஊடாக மத்திய வங்கி சுயாதீனப்படுத்தப்பட்டுள்ளதால் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் தலையிட முடியாது என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இதனையே நாங்கள் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம்.அப்போது ஆளும் தரப்பும்,எதிர்தரப்பும் எம்மை விமர்சித்தார்கள். மத்திய வங்கி எவருக்கும் பொறுப்புக் கூற கடமைப்படவில்லை. இதனால் எதிர்காலத்தில் பாரிய நெருக்கடிகள் தோற்றம் பெறும் என்றார்.