கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி வீதியின் ஊடாகச் செல்லும் சாத்தியக்கூறுகள் – சட்ட வைத்திய அதிகாரி

கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. என முல்லைத்தீவு மாவட்ட விஷேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது ஐந்தாவது நாளாக இன்றையதினம் (24.11.2023) இடம்பெற்று இன்றையஅகழ்வு பணியானது நிறைவடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஐந்தாவது நாளாக தொடரும் கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வின்போது நான்கு மனித எலும்புக்கூடுகளின் எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் துப்பாக்கி சன்னங்களும் குண்டு சிதறல்களும் மீட்கப்பட்டுள்ளது. அத்துடன் பேனா மாக்கர் ஒன்றும் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் ஸ்கானர் மூலம் இந்த புதைகுழியானது எவ்வளவு தூரம் பரந்து வியாபித்துள்ளது என பரிசோதனை செய்யப்பட்டது இதன் முடிவுகள் நாளையதினம் அகழ்வு பரிசோதனை பணி நிறைவுற்றதன் பிற்பாடே கிடைக்கப்பெறும்.

இவ் புதைகுழியானது வீதியின் ஊடாகவும் மற்றைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனினும் நாளைய பரிசோதனையின் பின்னரே இறுதி முடிவுகள் என்னால் உறுதியாக கூறமுடியும் என மேலும் தெரிவித்தார்.