மின் விநியோகம் துண்டிக்கப்படலாம் – அமைச்சர் காமினி லொகுகே

மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

மின்சாரத்துறை அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அனல் மின்நிலையத்தில் 300 மெகாவாட் மின் உற்பத்தி இழக்கப்பட்டுள்ளதால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அனல் மின்நிலையததில் ஏற்பட்டுள்ள தொழினுட்ப கோளாறினை எதிர்வரும் 24 ஆம் திகதி சீர் செய்ய முடியும் என மின்சாரசபை பொறியியலாளர் சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் சபுகஸ்கந்த,களனிதிஸ்ஸ மற்றும் கொழும்பு துறைமுகத்தை அண்மித்த பகுதியில் உள்ள மிதக்கும் மின் நிலையத்திற்கு டீசல் மற்றும் உராய்வு எண்ணெயை விநியோகிப்பதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த மின்நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு மாத்திரம் 1500 மெற்றிக் தொன் உராய்வு எரிபொருள் அவசியமாகவுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் வழங்கிய 3000 ஆயிரம் மெற்றிக்தொன் உராய்வு எண்ணெய் இன்று மாலையுடன் நிறைடைந்தது.

இந்தியாவின் ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து தற்காலிகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றிப்பெறவில்லை.

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள எரிபொருள் கப்பலை விடுவிப்பதற்கு தேவையான டொலரை வழங்குமாறு மத்திய வங்கியிடமும், நிதியமைச்சிடமும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

மின்விநியோகத்தை துண்டிக்காமலிருக்கவே எதிர்பார்த்துள்ளோம். மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது ஒன்றரை மணித்தியாலங்கள் மின்விநியோகம் துண்டிக்கப்படும்.

மின்விநியோகத்தை துண்டிப்பது தொடர்பில் மின்பாவனையாளர்களுக்கு முன்கூட்டியதாக அறிவிக்கும் வகையில் மின்துண்டிப்பு செய்யப்படும் நேரம் குறித்து அட்டவணை தயாரிக்குமாறு மின்சார சபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.