முடக்கப்பட்ட யாழ் நகரை திறக்க அனுமதி ; கொவிட் 19 தெற்றுள்ளவர்களுக்கு அனுமதியில்லை

யாழ் நகர வர்த்தகர்களிடம் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று வியாழக்கிழமை திறக்க அனுமதிப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

கடந்த 26 ஆம் திகதி முதல் யாழ் நகரத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோர் தனிமைப்படுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் கடந்த 14 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இனங்காணப்பட்டோரின் கடைகள் தவிர்ந்த ஏனைய கடைகளை இன்று காலை முதல் திறப்பதற்கு அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் அவசரமாக கூடிய யாழ் மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவித்த அவர் வர்த்தகர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டோர் தவிர்ந்த ஏனையோரின் கடைகளை இன்று முதல் திறப்பதற்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்

மேலும் தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வழமை போன்று ஒன்று கூடல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை தவிர்க்கவேண்டும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டதுடன்

யாழ் நகரப் பகுதிகளில் வீதித் தடைகளை ஏற்படுத்தி பொதுமக்களை ஒன்று கூடாத வண்ணம் செயற்படவும் தீர்மானிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மேலும் தற்போது அபாய நிலை இன்னும் நீங்கவில்லை எனவே தற்போதைய நிலையில் பொது மக்களை ஒன்று கூடலை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.