முல்லைத்தீவு நீதிபதி தொடர்பில் விசாரணை செய்ய அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ அதிகாரம் இல்லை

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பொறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம்.

நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை.

அது தொடர்பான விசாரணை நடத்தும் அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்காகும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட கூற்றொன்றை முன்வைத்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதியின் பதவி விலகல் பாரியவிடயம். அதேபோன்று நீதிமன்றத்தின் சுயாதீனம் தொடர்பான பயங்கரவிடயமாகும்.

நீதிபதி வழங்கிய உத்தரவுகள் காரணமாக அவருக்கு மரண அச்சுறுத்தல் உட்பட பல்வேறு அழுத்தங்கள் தொடர்பாக மிகவும் பயங்கரமான அறிவிப்போன்றை அவர் விடுத்திருக்கிறார்.

அதனால் அவரின் அறிவிப்பு தொடர்பாக சுயாதீன விசாரணை மேற்கொண்டு இதன் பின்னணியில் இருக்கும் மறைமுக சக்திகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

அமைச்சர் தாெடர்ந்து பதிலளிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி வெளிநாடொன்றுக்கு சென்ற பின்னரே அவரிடமிருந்து நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்று கிடைக்கிறது.

அதில் அவருக்கு ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக தான் பதவி விலகுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு மன அழுத்தம், அச்சுறுத்தல் இருக்குமானால் அவர் வெளிநாடொன்றுக்கு சென்று கடிதம் அனுப்பவேண்டியதில்லை.

அத்துடன் நீதிபதி ஒருவருக்கு அச்சுறுத்தல் இருக்குமானால் அவ்வாறு அச்சுறுத்தல் விடுத்தவர் யாராக இருந்தாலும் அவரை நீதிமன்றத்துக்கு அழைப்பு விடுக்கலாம், பிடியாணை கட்டளை விடுக்கும் அதிகாரம் அவருக்கு இருக்கிறது.

அதேபோன்று குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கும் அதிகாரம் நீதிபதிக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தை அவர் பயன்படுத்தாவிட்டால் அதன் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

மேலும் நீதிபதியின் பதவி விலகல் தொடர்பிலான எந்த பாெறுப்பையும் அரசாங்கத்தின் மீது சுமத்த வேண்டாம். ஏனெனில் நீதிவான் நீதிபதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரம், நியமன அதிகாரம் என அனைத்தும் நிர்வகிக்கப்படுவது நீதிச்சேவை ஆணைக்குழுவினாலாகும். நீதிச்சேவை ஆணைக்குழு அரசியலமைப்பின் பிரகாரம் அமைக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவாகும்.

அதனால் முல்லைத்தீவு நீதிவான் தொடர்பான பிரச்சினையை விசாரணை நடத்துவதற்கு அரசாங்கத்துகோ ஜனாதிபதிக்கோ எந்த அதிகாரமும் இல்லை. அந்த அதிகாரம் இருப்பது நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு மாத்திரமாகும்.

எனவே யாருக்காவது இது தொடர்பில் பிரச்சினை இருக்குமானால் அவர்கள் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்து, அது தொடர்பில் பதில் ஒள்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பிரதம நீதியரசர் தலைமையிலான அந்த ஆணைக்குழுவுக்கு உத்தரவிடவோ அதில் தலையிடவோ அரசாங்கத்துக்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆணைக்குழு தேவையெனில் அது தொடர்பில் விசாரணை நடத்தி பதில் ஒன்றை வழங்கும் என்றார்.