யாழிலிருந்து தமிழகத்திற்கு பயணிகள் படகு சேவைக்கான கேள்வி மனு கோரிக்கை

யாழ்.காங்கேசன்துறை – தமிழகம் காரைக்கால் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க போக்குவரத்துக்கான கப்பல் சேவை வழங்குனர்களிடமிருந்து கேள்வி மனு இந்தியாவில் கோரப்பட்டுள்ளது.

குறித்த கப்பல் சேவை வழங்குனர்களிடமிருந்து வாரத்தில் மூன்று நாட்கள் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் இருந்து இந்தியாவின் காரைக்கால் துறைமுகம் வரை குறித்த சேவை வழங்கப்பட வேண்டும்.

இதன் மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகம் போக்குவரத்து தொழில்நுட்பம் ஆகியவற்றை பரிமாறி கொள்ளும் ஒரு நடவடிக்கையின் செயற்திட்டம் இடம் பெறவுள்ளது.

இதற்காக இந்திய மத்திய அரசின் சம்மதத்தை இந்தியாவின் பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மணிப்பூர் ஆளுநருமான இல.கணேசன் முன்னெடுத்து வருகிறார்.

மேலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி அரச பிரதிநிதிகள் மற்றும் சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சிதானந்தன் ஆகியோர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.