யாழில் 58 பேர் உள்ளடங்கலாக வட மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேர் உள்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 74 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை (மே 13) கண்டறியப்பட்டுள்ளது என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக ஆய்வுகூடம் என்பவற்றில் 853 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 58 பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் 8 பேரும் வவுனியா மாவட்டத்தில் 2 பேரும் மன்னாரில் இருவரும் என வடக்கு மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களிலும் 74 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் பிரிவில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சுகாதார உத்தியோகத்தர் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மாங்குளம் வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 3 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தருமபுரம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 4 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்கள் நால்வரும் வீதி சீரமைப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள்.

வவுனியா மாவட்ட வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் சுகாதார உத்தியோகத்தர்கள்.

வவுனியா சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சேர்க்கப்பட்ட இருவருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 18 பேருக்கும் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் 39 பேருக்கும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும் என 58 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 6 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட 5 பேருக்கும் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கும் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒரு குழந்தையும் அடங்குகின்றார். இந்தியாவிலிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் வந்த நால்வர் குருநகரில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களில் ஒரு குழந்தைக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 11 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் நெல்லியடி வெதுப்பகத்தின் ஊழியர்கள்.

தெல்லிப்பழை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் தையிட்டி கிராமத்தில் திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டவர்கள். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் திருமண நிகழ்வுக்கு தடை என அறிவிக்கப்பட்ட பின் இரகசியமாக இந்த திருமண நிகழ்வை நடத்தியுள்ளனர்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.