வட்டுவாகல் காணி சுவீகரிப்பினை தடுக்க போராட்டம்-போக்குவரத்து தடை- அமைதியின்மை!

முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அரசாங்கம் சுவீகரிக்கும் நடவடிக்கைக்காக இன்று 29.07.21அளவீடு செய்யப்படவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வட்டுவாகல் கடற்படைதளம் அமைக்கப்பட்டுள்ள காணியினை விடுவிக்க காணியின் உரிமையாளர்கள் மக்கள் பிரதிநிதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.
காணி அளவீட்டுப்பணிகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் வட்டுவாகல் கடற்படைத்தளம் முன்பாக ஒன்று கூடிய மக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல் தங்கள் எதிர்பினை வெளிப்படுத்தி காணி அளவீட்டினை எதிர்த்துள்ளார்கள்.

போராட்டக்காரர்களின் எதிர்ப்பு நடவடிக்கையால் முல்லைத்தீவு-புதுக்குடியிருப்பு முதன்மை சுமார் நான்கு மணிநேரம் பயணம் தடைப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலீசார்,கடற்படையின் கலகம் அடக்கும் படையினர் சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட காரர்களிடம் கருத்து தெரிவித்த நில அளவைத்திணைக்கள அதிகாரிகள் மக்கள் எதிர்பினை வெளிப்படுத்துவதால் நில அளவையினைகைவிட்டு காணி உரிமையாளர்களுடன் மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடி அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்து ஒரு முடிவிற்கு வரவேண்டும் என சொல்லியுள்ளார்கள்.

இவ்வாறு சொல்லிய நில அளவைத்திணைக்களத்தினர்போராட்ட காரர்களை திசைதிருப்பிவிட்டு கடற்படையினரின் வாகனத்தில் ஏறி கடற்படை முகாமிற்குள் சென்று காணி அளவீட்டினை முன்னெடுத்துள்ளார்கள்.மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் அரச திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதுடன் காணிசுவீகரிப்பிற்கு மக்கள் கருத்தறியாமல் காணியினை அளவீடு செய்யும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்ட காரர்கள் வட்டுவாகல் முதன்மை வீதியில் குறுக்கே அமர்ந்து போராட்டத்தினை மேற்கொண்டுள்ளார்கள்.இன்று நண்பகள் 1.00 மணிவரைக்கும் வீதியனை மறித்து போராட்டத்தினை மேற்கொண்டுவருவதால் குறித்த வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.

இன்னிலையில் மாவட்ட செயலக அதிகாரியான மேலதிக அரசாங்க அதிபர் சம்பவ இடத்திற்க வருகை தந்து போராட்ட கரர்களுடன் கலந்துரையாடியும் முடிவு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்துவருகின்றது.

வட்டுவாகல் கடற்படை தளம் அமைந்துள்ள காணி தமிழ்மக்களுக்கு சொந்தமான காணியுடன் இரண்டு சிங்கள மக்களுக்கும் சொந்தமான காணியாகும் காணியின் உரிமையாளர்களான சிங்கள மக்களும் இன்று காலை குறித்த பகுதிக்கு வந்து தங்கள் காணியினை அளவீடுசெய்து அரசாங்கத்திற்கு கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இந்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான தமிழரசுக் கட்சி சாள்ஸ்நிர்மலநாதன்,ரெலோ வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம்,தமிழ் தேசிய முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,கஜேந்திரன்,மற்றும் முன்னால் மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன்,சிவாஜிலிங்கம், உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டுள்ளார்கள்.