வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தீச்சட்டி ஏந்தி போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை ஒன்பது மணிக்கு தீச் சட்டி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கறுத்த ஆடைகளை அணிந்து சர்வதேசமே இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்து என்ற பிரதான கோசமாக முன் வைத்து போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இப்போராட்டமானது கிளிநொச்சி பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமாகி ஏ -9 வீதி வழியாக கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் வரை சென்றடைந்தது.

வடக்கு கிழக்கு விலந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர் கவன ஈர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து இன்றுடன் (20.02.2021) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தீச்சட்டி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்

உண்மைக்கு நீதிக்குமான குறித்த போராட்டம் சர்வதேசத்தின் ஊடாக நீதியை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டத்தை ஆரம்பித்திருந்தோம். எங்களுடைய உறவுகள் எமக்கு கிடைக்கும்வரையும், அவர்களிற்கான நீதி கிடைக்கும்வரையிலும் நாம் எமது போராட்டத்தை கைவிடப்போதில்லை என சங்கத்தின் தலைவி கனகரஞ்சினி தெரிவித்தார்.