வவுனியா நைனாமடுப் பகுதியில் ஆக்கிரமிப்பிற்கு தயாராகும் தொல் பொருள் திணைக்களம்

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நைனாமடு கிராமசேவகர் பிரிவின் கோடாலிபறிச்சான் காட்டுப்பகுதியில் விகாரையுடன் தொடர்புடைய இடிபாடுகள் இருப்பதாக தெரிவித்து வவுனியா பிராந்திய தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நைனாமடுவில் அமைந்துள்ள ஒதுக்கப்பட்ட காட்டுப்பகுதியில் சுமார் 8 பாறைக்கோபுரங்களைக் கொண்ட ஒரு கட்டிட அமைப்பு, பாறைத்துருவ அடித்தளத்தைக் கொண்ட அமைப்புகள், 5 மீட்டர் உயரமுள்ள தூண் ஆகிய இடிபாடுகளை பார்வையிட்ட இராணுவத்தினர் இது தொடர்பாக தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அதற்கமைய வவுனியா மாவட்ட தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளால் குறித்த பகுதி அண்மையில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக குறித்த பகுதியின் கிராமசேவகருக்கோ,அல்லது கிராம மக்களிற்கோ எந்த தகவலும் தெரியப்படுத்தப்படவில்லை.

அங்கு பௌத்தவிகாரையுடன் தொடர்புடைய தொல்பொருள் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தொல்பொருட் திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளதுடன், குறித்த பகுதி வர்த்தமானி அறிவுப்புச்செய்யப்பட்டு, தொல்பொருள் அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் ஆக்கிரமிப்பை ஏற்ப்படுத்தியுள்ள தொல்பொருட் திணைக்களம் தமிழ்மக்களின் பூர்வீக பிரதேசமான நைனாமடுவில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பினை முன்னெடுப்பதற்கு தயாராகிவருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்ப்படுத்தியுள்ளது