விமான தாமதங்களால் தென்கொரியாவிற்கு இலங்கையர்களை வேலைகளுக்காக அனுப்புவது பாரிய பிரச்சினையாகவுள்ளது – மனுஷ

தொடர்ச்சியான விமான தாமதங்கள் காரணமாக இலங்கையர்களை தென் கொரியாவிற்கு வேலைகளுக்கு அனுப்புவது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

52 இலங்கையர்கள் கொண்ட குழுவொன்று நேற்று தென்கொரியாவிற்குச் செல்லவிருந்ததாகவும், ஆனால் UL470 விமானம் சுமார் 12 மணித்தியாலங்கள் தாமதமானதால், அவர்கள் இன்னும் நாட்டில் தங்கியிருப்பதாக அமைச்சர் நாணயக்கார கடுமையான வார்த்தைகளுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்குச் செல்லவுள்ள 800ஆவது குழு இதுவாகும் என்றும், இக்குழுவினரை தென்கொரியாவுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLFEB) தயார் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதற்காக இந்தக் குழுவினர் செல்லவிருந்தனர்.

விமானம் தாமதமானதால் அவர்களை தென்கொரியாவுக்கு அனுப்ப வேண்டாம் என கொரிய மனிதவள திணைக்களம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு நேற்று அறிவித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோன்ற சம்பவம் மே மாதம் 23 ஆம் திகதி பதிவாகியிருந்ததுடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டின் காரணமாக ஜூன் மாதம் 4 ஆம் திகதி தென்கொரியாவிற்கு சென்று பணியை ஆரம்பிக்க முடிந்தது.

இந்த விமான தாமதங்கள் தென் கொரியாவிற்கு அதிகமான இலங்கையர்களை அனுப்புவதற்கான அவர்களின் முயற்சிகளுக்கு இடையூறாக இருப்பதாகவும், எனவே இந்த விவகாரத்தை உடனடியாக கவனிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் அமைச்சர் எடுத்துக்காட்டியுள்ளார்.