’வேலையில்லா பிரச்சினையாலேயே வன்முறைகள் அதிகரிப்பு’

வடக்கில் வேலையில்லாப் பிரச்சினை காரணமாகவே வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக, பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார் என்று, யாழ். மறைமாவட்ட ஆயர் கூறினார்.

வடமாகாணத்துக்கு இன்று (13), விஜயம் மேற்கொண்ட பொலிஸ்மா அதிபர், யாழ். மறைமாவட்ட ஆயரை இன்று மாலை ஆயர் இல்லத்தில்  சந்தித்து கலந்துரையாடிபேர்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களிடம்  ஆயர் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர்,  பொலிஸ்மா அதிபர், யாழ்ப்பாணம் மாவட்டத்தின் மீது நல்ல விருப்பம் கொண்டவர் எனவும்  இங்கே உள்ள பிரச்சினை தொடர்பில் ஆராயவே, யாழ். மாவட்டத்துக்கு வருகை தந்துள்ளார் எனவும் கூறினார்.

“இளைஞர்களிடையே காணப்படும் வேலைவாய்ப்பில்லாத விரக்தி நிலை காரணமாகவே,  போதைப் பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது. அதேபோல, பொலிஸார் மக்களுடன் கூடுதலாக பழகவேண்டும்.

“முன்னைய காலத்தில்,  வீதி போக்குவரத்து விதிமுறைகள் பாடசாலைகளில் கற்பிக்கப்பட்டது. அதனை மீண்டும் பாடசாலைகளில் ஆரம்பிக்குமாறு, அவரிடம் கூறி இருக்கின்றேன்” என்றார்.

இளைஞர் – யுவதிகளுக்கு வேலைவாய்ப்பின்மை காரணமாகவே, வடக்கில் வாள்வெட்டு சம்பவங்கள், திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன. வேலையில்லாது சும்மா இருப்போருக்கு காசு தேவைப்படும் போது தான், அவர்கள் திருடுவதற்கு தூண்டுகின்றார்கள் என பொலிஸ்மா எடுத்துரைத்திருந்தார் எனவும் ஆயர் தெரிவித்தார்.

‘அத்துடன், போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிப்பதை விடுத்து, அவர்களை ஒரு  மணிநேரம் தடுத்து நிறுத்தி, அவர்களுக்கு விளக்கம் அளிப்பதன் மூலம் தான் எமது மக்களுக்கு அதன் அர்த்தம் புரியும். அதனை செயற்படுத்துவதன் மூலம், பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் தொடர்பில் விழிப்புணர்வினை ஏற்படுத்த முடியும் எனவும் பொலிஸ்மா அதிபர் கூறினார்.

“தமிழ் பொலிஸார் எமக்கு கடமைக்கு தேவையாக உள்ளது. ஏற்கெனவே 500 பேர் மாத்திரமே கடமையாற்றிவருகிறார்கள். மேலதிகமாக தமிழ் பொலிஸார் நமக்கு தேவையாக உள்ளார்கள். அவர்களுக்கு உரிய பயிற்சிகள் வடக்கு மாகாணத்தில் பயிற்றுவிக்கப்படும். ஏனெனில், வடக்கில் இருந்து வெளி மாவட்டங்களில் சென்று பயிற்சி பெறுவதற்கு பலர் விரும்பவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வடக்கிலிருந்து பொலிஸ் தொழிற்றுறைக்கு விண்ணப்பிப்போருக்கு, இங்கேயே பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களுக்கு மொழி பயிற்சியும் வழங்கப்படும் என பொலிஸ்மா அதிபர் கூறினார்” என ஆயர் மேலும் தெரிவித்தார்.