3 ஆவது நாளாக தொடரும் இரணை தீவு மக்களின் போராட்டம்

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணைதீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து கடந்த புதன்கிழமை (3) இரணை மாதா நகர் பகுதியில் மக்கள் மற்றும் பங்குத் தந்தையர்கள் இணைந்து போராட்டம் மேற்கொண்ட போதிலும் தொடர்சியாக இரணை தீவு பகுதியில் உடல்களை புதைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (5) இரணைதீவு பகுதியில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இரணை தீவு பிரதான இறங்கு துறை மற்றும் உடல்களை அடக்கம் செய்வதற்கு குழிகள் தோண்டப்பட்ட இடம் ஆகிய பகுதிகளில் மக்கள் இன்றைய தினம் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு மற்றும் மீன்பிடி நீர்வள அபிவிருத்தி அமைச்சர் உட்பட பல தரப்பட்ட தரப்பினர்களுக்கு இரணைதீவு மக்களால் நேரடியாக சென்று எதிர்ப்பு மகஜர் வழங்கி வைக்கப்பட்ட போதிலும் இரணைதீவு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சடலங்களை அடக்கம் செய்யும் பணிகளோ நிறுத்தப்படவில்லை என இரணை தீவு மக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் நடவடிக்கை இன்று மாலை ஓட்டமாவடியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.