2006 ஆம் ஆண்டு திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக சுட்டுக்கொல்லப்பட்ட 5 மாணவர்களின் 16 வது நினைவஞ்சலி தினம் நேற்று (02) மாலை அனுஷ்டிக்கப்பட்டது.
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக காந்தி சிலை சுற்று வட்டத்தில் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்ட மாணவர்களின் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட உணர்வாளர்களின் பங்களிப்புடன் அமைதியான முறையில் விளக்கேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் 5 மாணவர்கள் உள்ளடங்களாக 7 மாணவர்கள் சுடப்பட்டு 5 மாணவர்கள் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் 2 மாணவர்கள் உயிர் தப்பியிருந்தனர்.
அன்றைய நாள் திருகோணமலை மண்ணில் கருப்பு தினமாக அனுஷ்டிக்கபட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த 5 மாணவர்களும் 2005 ஆம் ஆண்டு உயர்தரத்தில் பரீட்சை எழுதி பெறுபேறுக்காக காத்திருந்த வேளையில் திருகோணமலை நகரை அண்டிய கடற்கரைக்கு முன்னால் இவ்வாறு சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு மனிதாபிமானமற்று படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களினால் வழக்கு தொடரப்பட்டு சந்தேகத்தின் பேரில் இலங்கை பாதுகாப்புப்படையின் படை வீரர்கள் கைது செய்யப்பட்டு போதிய சாட்சியங்கள் இல்லை என விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களில் ஒருவரின் தந்தையான வைத்தியர் மனோகரன் என்பவரினால் ஐக்கிய நாடுகள் சபை வரை கொண்டு செல்லப்பட்ட போதிலும் 16 வருடங்கள் கடந்த நிலையில் இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கான சரியான நீதி கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.