நிமல் புஞ்சிஹேவா மீண்டும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு விண்ணப்பம்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் அங்கத்துவம் பெறுவதற்கான விண்ணப்பம் அரசியலமைப்பு பேரவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டம் தொடர்பாக தாம் உள்ளிட்ட தற்போதைய ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்ட பல சட்டமூலங்களை நிறைவேற்றும் நடவடிக்கைக்காக குறித்த விண்ணப்பம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா நியூஸ்பெஸ்ட்டுக்கு கூறினார்.

அத்துடன், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பிக்குமாறு பல சிவில் அமைப்புகள் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் நியூஸ்பெஸ்ட்டுக்கு தெரிவித்திருந்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அங்கத்துவத்திற்காகவும் தாம் விண்ணப்பித்துள்ளதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டிருந்தார்.