முப்படைகளால் அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் விடுவிக்கப்பட வேண்டும், பாராளுமன்றில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

முன்னாள் ஜனாதிபதிகளை விசாரணைகளுக்கு அழைக்கும் நடவடிக்கைகள் தொடரவேண்டும்.
“தூய்மையான இலக்கை நோக்கி இலங்கை”- பாராளுமன்ற இரண்டு நாள் விவாதத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 23/1/2025  தினம் ஆற்றிய உரை.

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய றாஜபக்ஸ்ச அவர்கள் உட்பட பலரை தூய்மையான இலக்கை நோக்கி இலங்கை என்ற திட்டத்தின் கீழ் விசாரனைக்காக அழைத்தது வரவேற்கத்தக்கது. இருப்பினும் நடைபெற உள்ள பிரதேச சபை, மாகாண சபை தேர்தலை முன்னிட்ட யுத்தியாக அமையாமல் தொடர்ந்தும் இது போன்ற விசாரனைகள் தொடரவேண்டும்.

முப்படைகள் எமது தாயக நிலங்களை, பொது மக்களுடைய பூர்வீக நிலங்களை அபகரித்துள்ளார்கள். ஆலயங்கள் கோவில்கள், விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல்வேறுபட்ட நிலங்களை எமது வடகிழக்கு பிரதேசத்தில் முப்படைகள் அபகரித்துள்ளார்கள்.இந்த நிலை மாற்றம் பெற்று பொதுமக்களின் பூர்வீக நிலங்களும் பொது காணிகளும்,விவசாய நிலங்களும் பொதுமக்களிடத்தில் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

காணிகள் அற்று சொந்த வீடுகள் அற்று எமது மக்கள் வாழும் நிலை நிறுத்தபபடவேண்டும், குறிப்பாக தனி அரசாங்கங்கள் போல் அத்துமீறும் வனலாக திணைக்களம், தொல்பொருள் அகழ்வு திணைக்களம், போன்ற திணைக்களங்கள் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் நிலங்களை, விவசாய பொதுமக்களுக்கு வழங்கவேண்டும்.

இயற்கை அனர்த்தத்தால் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டுவரும் விவசாயிகள், கடற்றொழிளார்கள் எமது பகுதியில் அதிகளவு காணப்படுகிறார்கள். குறிப்பாக தம்மிடம் உள்ளதை அடகு வைத்து மேற்கொள்ளும் விவசாய உற்பத்திகள் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்படும் நிலை காணப்படுவதுடன் உற்பத்தி பொருட்கள் குறிப்பாக நெல்லுக்கான விலை நிர்ணயம் என்பது இல்லாத பிரச்சனை தொடர்கிறது. வங்கிகளில் கடனை பெற்று ,மாநியங்களை பெற்று விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகளது நலன்களில் ,விவசாய உற்பத்தி பொருட்களின் விலை நிர்ணயத்தில் அரசாங்கம் அக்கறை செலுத்த வேண்டும்

அரசியல்வாதிகளின் ஊழலை வெளிக்கொணரும் அதே சந்தர்ப்பத்தில் அரச திணைக்களங்களில் காணப்படும் ஊழலையும் ,ஊழல்வாதிகளையும் அரசாங்கம் வெளிக்கொணரவேண்டும்.

மன்னார் நகரில் நீதிமன்றத்திற்கு முன்பாக நடந்தேறிய கொலைகளுக்கான கொலையாளிகளையும், அதன் காரணிகளையும் துரிதமாக பொலிசார் விசாரனைகளை கையாண்டு கண்டறியவேண்டும். முப்படைகளின் மெத்தனப்போக்கே இவ்வாறான கொலைகள் மன்னாரில் அதிகரிக்க காரணமாக இருக்கிறது. பலிக்கு பலி வாங்கும் படலம் தொடர்கின்றது இவ்வாறான குற்ற செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும்.

மாந்தை கிழக்கிலே அமைந்துள்ள சிவபுல பாலத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட வேண்டும், அத்தோடு முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்படுவது சட்டத்தால் நிறுத்தப்பட வேண்டும். ஊழல் வாதிகள் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் ஆனால் நிரூபிக்க முடியாத, பொய் குற்றங்களை சமூக வலைத்தளங்களில் பகிரப்படல் சட்டத்தால் நிறுத்தப்பட வேண்டும்.

 

 

 

வடக்கு மீனவ சங்க பிரதிநிதிகளும் தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களும்  ரெலோ ஏற்பாட்டில் சந்திப்பு 

வடக்கு எமது மீனவ சமூகத்தினுடைய முக்கிய பிரதிநிதிகளை, அவர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாராளுமன்றத்திலே வடக்கு கிழக்கு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைவாக இன்றைய தினம் 24/1/2025 வெள்ளிக்கிழமை காலை அந்த ஏற்பாட்டை நான் செய்திருந்தேன்.

அந்த ரீதியிலே மீனவ சமூகத்தின் சார்பாக சுமார் 12 உறுப்பினர்களுக்கு அதிகமாகவும் எமது தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கெளரவ மனோகணேசன் அவர்களும், கெளரவ றிசாட் பதியுதீன் அவர்களும், கெளரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் , கெளரவ சிறிதரன் அவர்களும், கெளரவ ரவிகரன் அவர்களும், கெளரவ குகதாஸ் அவர்களும், கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த கலந்தரையாடலில் பங்கேற்று இருந்தனர்.

மேற்படி இந்த சந்திப்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்திய இழுவை படகுகளினுடைய அத்துமீறிய வருகையினால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி நாங்கள் கலந்துரையாடினோம். அதே போல தென்னிலங்கையில் இருந்து அத்துமீறி வரும் இழுவை படகுகளின், அதன் மீனவர்களது செயற்பாடுகள் பற்றியும் நாங்கள் கலந்தூரையாடினோம்.

அந்த ரீதியிலே இன்னும் எங்களுடைய மீனவ சமூகம் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளை அதில் கலந்துரையாடி இறுதி முடிவு எட்டப்பட்டது. அந்த இறுதி முடிவிலே நாங்கள் ஒரு குழுவை நியமித்துள்ளோம். அந்த குழுவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களும், எங்களுடைய மீனவ சமூகம் சார்ந்த உறுப்பினர்களும் உள்ளடக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையிலே வருகிற வாரம் யாழ்ப்பாணத்தில் இவ் விடயம் சம்பந்தமான முதலாவது கூட்டம் நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதிலே கலந்துகொள்ள இருக்கிறோம். இந்த குழுவிலே நாடாளுமன்ற உறுப்பினர்களும் எமது மீனவ சமூக முக்கிய பிரதிநிதிகளும் கலந்துகொண்டு இந்த இழுவை படகுகளின் நடவடிக்கைகளை நிறுத்துவதற்கான எவ்வாறான வழிமுறைகளை கையாள்வது சம்மந்தமாகவும், நாடாளுமன்றத்தலே இது சம்பந்தமான எமது நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் ஆராயவுள்ளோம்.

அந்த வகையிலே இன்றைய தினம் காலை நடைபெற்ற கலந்துரையாடல் மகிழ்ச்சியானதும், ஆக்கபூர்வமானதும், நிறைய விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுமாகவும் இருந்தது. இந்த குழுவின் ஊடாக எமது மீன்வ சமூகத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நாடாளுமன்றத்திலும், வெளியிலும் எவ்வாறு செயற்படுவது என்பதை ஆராய்ந்து அதற்கான செயற்பாடுகளை செய்ய இருக்கிறோம் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அந்த வகையிலே இன்றைய கூட்டத்தில் நன்றி சொல்ல வேண்டும் எமது தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பாக கெளரவ மனோ கணேசன் அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். அதே போல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கெளரவ றவூப் ஹக்கீம் அவர்களுக்கும் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும். மற்றும் ஏனைய வடக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எல்லோருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

அந்த அடிப்படையிலே எனிவரும் காலங்களிலே நாங்கள் ஒற்றுமையாக, எங்களுடைய சமூகம் ,நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமையாக செயற்படுகின்ற ஒரு வாய்ப்பாக அமையும் என்று நம்புகிறேன். இன்றைய சந்திப்பானது திருப்திகரமானதாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

 

15 வருட வழக்கு கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் கட்டளை

கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் நேற்று (21) நீதிமன்றத்திற்கு சென்று வந்த பின்னரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில்

மேலும் தெரிவிக்கையில், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்க்காலில் நடந்த அனர்த்தங்களையும், இராணுவம் செய்த கொடூரமான செயற்பாடுகளையும் பொது வெளியில் பேசியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு சதி செய்தேன் என்ற அடிப்படையில் என்னைக் கைது செய்தார்கள்.

வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் இது பற்றிய வழக்குகள் 15 வருடங்களுக்கு மேலாகத் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.

கடந்த 16ஆம் திகதி வழக்கு நடைபெற்ற போது நான் அதற்கு சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

15 வருட வழக்கு

நேற்று (21) அந்த பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக நான் எனது வழக்கறிஞர் உடன் நீதிமன்றம் சென்றிருந்தேன்.

அங்கு சென்று முன்னிலையாகிய போது 25 ஆயிரம ரூபாய் ஆட்பிணையும், எனது கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது.

என்னோடு மரியசீலன் என்பவர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் சமூகமளித்துக் கொண்டிருக்கிறார். அவர் 8 வருடம் சிறையில் இருந்தவர்.

மேலும், கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி விட்டுச்செல்லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த வழக்கு 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ்ப் பௌத்த வரலாற்றை மறைக்க மேர்வின் போன்ற இனவாதிகள் முயற்சி! அரசின் நடவடிக்கை என்ன? சபா குகதாஸ் கேள்வி

அநுர அரசின் ஆட்சியில் இனவாதத்திற்கு இடமில்லை என பல தடவைகள் பிரதமர் ஹருணி கூறியுள்ளார். ஆனால் மேர்வின் சில்வா, சீல தேரர், சுமண ரத்தின தேரர் போன்றோர் இனவாதத்தை தாம் நினைத்தவாறு அள்ளி வீசுகின்றனர் அவர்களை கண்டிக்காமல் அரசாங்கம் வேடிக்கை பார்க்கிறது என்றால் அநுர அரசின் கைக்கூலிகளாக இந்த இனவாதிகள் இறக்கப்பட்டுள்ளனரா? என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

மேர்வின் சில்வா இந்த நாடு சிங்கள பௌத்த நாடு மற்றும் ஒரே நாடு ஒரே ஆட்சி என்ற இனவாதத்தை கையில் எடுத்தது மாத்திரமல்ல, பண்டுகாபய மன்னன் காலத்தில் சிங்கள தேரவாத பௌத்தம் பரவியதாகவும் வரலாற்றுத் திரிபு ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளார்.

மகாவம்சம் கூறும் வரலாற்று செய்தியின் ஊடாக உண்மையை மறைக்கும் மேர்வின் சில்வா ஒரு மனநோய் பிடித்தவரா? அல்லது அரச பின்புலத்தின் இனவாதியா? இத்தகைய இனவாதிகளுக்கு அநுர அரசின் நடவடிக்கை என்ன?

அநுராதபுர இராசதானி காலத்தில் மூத்த சிவனின் மகன் தீசன் காலத்தில் இந்தியாவில் இருந்து அசோகசக்கர வர்ததியின் மகன் மகிந்ததேரரால் கொண்டு வரப்பட்டதே தேரவாத பௌத்தம்.

இது பிற்காலத்தில் இலங்கையில் தமிழ்த் தேரவாத பௌத்தமாக பரவியதை பல வரலாற்று ஆதாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன,

உதாரணமாக சுன்னாகம் கந்தரோடைப் பகுதியில் உள்ள சமாதிகள் தமிழ்ப் பௌத்தருடையது என பல தொல்பொருட் சான்றுகள் கூறுகின்றன.

இந்த உண்மையை மேர்வின் சில்வா போன்ற இனவாதிகள் பொய்யாக மாற்றி, இலங்கைத் தீவை சிங்கள பௌத்த நாடாக இனவாதப் போக்கில் சித்தரிக்கின்றனர் என தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் எந்தவொரு சிறையிலும் இல்லை என்ற நீதி அமைச்சரின் கருத்து கண்டனத்துக்கு உரியது -ரெலோ

நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்ற நீதி அமைச்சருடைய அறிக்கை முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய றாஜபக்ஸ்ச அரசாங்கத்தை ஒத்த கதையாகவே இருக்கிறது இதனை நான் நிராகரிப்பதுடன் எனது வன்மையான கண்டணத்தையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன் .

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார அவர்களுடைய ஊடக அறிக்கையில் நாட்டில் உள்ள எந்தவொரு சிறைகளிலும் அரசியல் கைதிகள் என்று யாரும் இல்லை என்ற கருத்தை தாம் வன்மையாக கண்டிப்பதாகவும் ,அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இலங்கையில் ஆட்சிப்பீடம் ஏறும் பேரினவாத அரசியல்வாதிகளின் மனங்கள் ஒன்று தான் ஆனால் அவர்களுடைய முகங்கள் தான் வேறுபட்டிருக்கிறது என்றும் ,

காலம் காலமாக புரையோடி போயுள்ள இனப்பிரச்சனை காரணமாக எமது தமிழர் தாயகத்தில் அவசர கால சட்டம், பயங்கரவாத தடைச்சட்டம் போன்ற சட்டங்களை முன்னிலைப்படுத்தி கைதுசெய்யப்பட்டவர்கள் , குறிப்பாக காரணமின்றி கடந்த 25 வருடங்களுக்கு மேலாக அரசியல் கைதிகளாக கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள்,இறுதி யுத்தத்தின் போது கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவர்கள், என பல்வேறுபட்ட நிலையில் அரசியல் கைதிகளாக சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் எமது தமிழ் அரசியல் கைதிகள் எந்தவொரு சிறையிலும் இல்லை என்ற நீதி அமைச்சரின் கருத்து கண்டனத்துக்கு உரியது நீதி அமைச்சரின் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

Posted in Uncategorized

மன்னார் துப்பாக்கிச் சூடு: முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்! -செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு

“மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கான முழுப்பொறுப்பையும் பொலிஸாரே ஏற்க வேண்டும்” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுக்கான முழுப்பொறுப்பையும் மன்னார் பொலிஸார் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் கண்டிக்கத்தக்க வேண்டிய ஒரு விடயம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸாரே முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள் என்றும் நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு தான் தெரியப்படுத்தியதாகவும் செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மன்னாரில் தலைத்தூக்கியுள்ள துப்பாக்கிக் கலாசாரம் நொச்சிக்குளம் வாழ் மக்களையே அதிகம் பாதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் குறித்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் நிலையிலும் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்றும் இந்த விசாரணைக்காக கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிசார் வரவழைக்கப்பட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

தமிழ் நாடு அரசினால் நடைபெறும் உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025 செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அழைப்பு

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு குடியுரிமை பெறாத தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அவர்களின் அழைப்பு.

உலக தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் 2025

இம் மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் தமிழ் நாடு அரசினால் சென்னையில் நடைபெறும் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்திற்கு பங்குபற்றுவதற்கான அழைப்பிதழை குடியுரிமை பெறாதா தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆணையர் அவர்கள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் பங்களிப்பைக் கொண்டாடவும், அங்கீகரிக்கவும், பாராட்டவும் மற்றும் அவர்களின் கலாச்சார அடையாளத்தை நிலைநிறுத்தவும் தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 12 ஆம் திகதி “உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினத்தை” பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களின் ஒத்துழைப்புடன் கொண்டாட முடிவு செய்துள்ளது.

அந்த வகையில் முதலாவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் கடந்த 2022 ம் ஆண்டு நடத்தப்பட்டது. அவ்வாறே இம்முறையும் நான்காவது உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தினம் இம்மாதம் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் “எத்திசையும் தமிழணங்கே!” என்ற தொனிப்பொருளில் தமிழ்நாடு சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது.

இவ்விரு நாட்களிலும் 60 நாடுகள் மற்றும் 17 மாநிலங்களில் இருந்து அதன் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதுடன் மேலும் இவ் உலகத் தமிழ் புலம்பெயர்ந்தோர் தின 2025 ம் ஆண்டிற்கான கூட்டத்தில் இணையுமாறு தமிழ்நாடு அரசு கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களை அன்புடன் அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் ;ரெலோ தலைவர் செல்வம்

வவுனியா பல்கலைக்கழக வளாகத்தை மன்னாரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான நிதியை வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்க வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கினால் புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடு செய்வார்கள் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07-1-25) நடைபெற்ற மத்திய ஆண்டு நிதிநிலை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டும் . அப்போதுதான் வெளிநாட்டிலுள்ள இலங்கை தமிழர்கள் இங்கு முதலீடு செய்வார்கள்.

கடந்த காலங்களில் முதலீடுகளை செய்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்தும் சூழலே காணப்படுகிறது.

ஆகவே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

மன்னார் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களில் வவுனியா பல்கலைக்கழக வளாகத்தினை மன்னாரில் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது.

இது தொடர்பில் ஏற்கனவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. எனவே இந்த வளாகத்தினை அமைக்க வரவு செலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

முப்படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மக்களின் நிலங்களை விடுவிப்பதாக ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார்.

வன்னியில்தான் கூடுதலான மக்களின் நிலங்கள் முப்படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ளன. அவற்றை உடனடியாக விடுவிக்க வேண்டும். இதுதொடர்பில் அபிவிருத்திக்குக்குள்க் கூட்டத்தில் பேசியுள்ளோம்.

மன்னாரை எடுத்துக்கொண்டால் முள்ளிக்குளம், தலைமன்னார் பியர், மன்னார் போன்ற இடங்களை உதாரணமாக கூற முடியும்.

கிழக்கில் வாழைச்சேனையில் மக்களின் விவசாய காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன . இதனை பாராட்டுகின்றேன்

வன வளத் திணைக்களம், தொல்லியல் திணைக்களம் போன்றவையே மக்களின் காணிகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இவர்களினால் தொடர்ந்தும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன . இந்தியாவிலுள்ள ஈழத்தமிழர்கள் இலங்கை திரும்ப விரும்பும் நிலையில் அவர்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதில் சிக்கல் உள்ளது. எனவே அவர்களை கப்பலில் அழைத்து வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

இனப்பிரச்சினை தீர்க்க அரசாங்கம் செயல்பட வேண்டும் நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம் -ரெலோ

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று (01) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புலம்பெயர்ந்துள்ள எம் உறவுகள், எம் நாட்டை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் வேண்டும்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம்

இதனை ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் 13ஆவது திருத்தச் சட்டம், இந்திய – இலங்கை ஒப்பந்தம் இவை அனைத்தையும் நடைமுறைப்படுத்தக் கூடிய வகையில், செயற்பாடுகள் அமைய வேண்டும்.

எனவே, இந்த புதிய ஆண்டில் எமது கிராம மக்கள் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது என்று கூறக்கூடிய வகையில் இந்த அரசாங்கம் செயல்பட வேண்டும். அதற்காக நாங்களும் ஒத்துழைப்பு வழங்க தயாராக இருக்கிறோம்.

இந்த வருடத்தில் பின்தங்கிய கிராமங்கள் முழுமையாக வளர்ச்சி பெற வேண்டும். அதற்கான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும். பிரிந்து செயல்படுகின்ற தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

நாங்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் நம் மண்ணையும் மக்களையும் உதாசீனம் செய்யும் கட்சிகளாகவே நாம் இருப்போம். எதிர்வரும் காலங்களில் நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்றால் தேசியக்கட்சிகள் இல்லாது போகின்ற துர்பாக்கிய நிலை காணப்படும்.

எனவே, எதிர்வருகின்ற தேர்தல்களில் நாங்கள் ஒற்றுமையாக செயல்படவில்லை என்றால் தென்பகுதியில் ஏற்பட்டுள்ள அநுரவின் அழை வடக்கு கிழக்கிலும் ஏற்படும். இதனால் பாதிப்புகள் எமக்கு ஏற்படுத்தும் என்பது உண்மை.

மக்களின் எதிர்பார்ப்பு தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக செயல் படுங்கள் என்பதே. அந்த ஒற்றுமை இல்லை என்றால் நாங்கள் காணாமல் போய் விடுவோம்” என கூறியுள்ளார்.

முன்னாள் இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் -ரெலோ

முன்னை நாள் இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் அவர்கள் 26/12/2024 வியாழக்கிழமை அன்று தனது 92 வது வயதில் காலமானார்.

அமரர் மன்மோகசிங் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்திருந்தமை மறக்கமுடியாததாகும்.

கடந்த 2011 ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடனான அறிறிக்கையில் 13 ம் திருத்தத்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கும் அதில் இருந்தவாறே தொடர்ந்து அதனை கட்டியெழுப்பி எமது தாயகத்தில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு முறமையும் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குறுதியைப் பெற்றிருந்தவராவார்.

அமரர் மன்மோகசிங் அவர்கள் கடந்த காலங்களில் ஆட்சியில் பிரதமராக இல்லாத சந்தர்ப்பத்திலும் தற்போதைய இந்திய பிரதமர் மோடியைச் சந்திக்கச் சென்ற போது நாம் தமிழ்தேசியம் சார்ந்த கட்சிகளின் சார்பில் மன்மோகன் சிங் அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து நன்றி கூறி உரையாடியிருந்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பாக பொருளாதாரத்தில் இந்தியா அடைந்த வளர்ச்சிக்கு காரணகர்த்தாவாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகசிங் அவர்களது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.