இன நலத்திற்காக விட்டுக்கொடுப்போடு பயணிப்பதற்கு ரெலோ எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்

மதிப்பிற்குரிய சீ.வீ.கே. சிவஞானம்
தலைவர்
தமிழ் அரசுக் கட்சி
05-03-2025

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தல் சம்பந்தமான தங்களுடைய கடிதம் கிடைக்கப்பெற்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் இணைந்து செயலாற்றுவது சம்பந்தமாக தங்களுடைய விருப்பத்தை அதில் வெளிப்படுத்தியிருந்தீர்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆரம்ப கர்த்தாக்களில் ஒன்றான எமது கட்சி பல்வேறு விதமான சவால்கள் விமர்சனங்கள் இடையூறுகள் எல்லாவற்றையும் தாண்டி எமது மக்களின் இன நலன் சார்ந்து ஒற்றுமையாகவும் பலமாகவும் அரசியல் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்பதில் பல விட்டுக் கொடுப்புக்களோடும் சகிப்புத்தன்மையோடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக தொடர்ந்தும் பயணித்து வருகிறது.

2023இல் அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக தங்களுடைய மத்திய குழு, வவுனியாவிலும் பின்னர் இறுதியாக மட்டக்களப்பிலும் எடுத்த ஏகோபித்த முடிவிற்கமைய தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது.

எமது கட்சியும், புளட் அமைப்பும் அந்த நேரத்தில், தேர்தல் நலன்கள், வெற்றி தோல்விகள், அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளல் என்பவற்றைத் தாண்டி இன நலன் சார்ந்து ஒருமித்து பயணிக்க வேண்டிய கட்டாயத்தை தங்கள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்திய போதும் தங்களது கட்சி மத்தியகுழுவின் முடிவே இறுதியானது, என உறுதியாக தனித்துப் போட்டியிடுவதென்ற முடிவை அறிவித்தீர்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நலிவடையாமல் தொடர்ந்தும் பாதுகாப்பதன் நோக்கத்தோடு தமிழ் தேசிய பரப்பில் இருந்த கட்சிகளோடு ஒன்றிணைந்து கூட்டணியாக நாம் பயணித்துக் கொண்டிருப்பதையும் தாங்கள் அறிவீர்கள்.

இனப்பிரச்சினை தீர்வுக்கு முகம் கொடுத்திருக்கும் நமது இனம் தேர்தல் நலன்களை மாத்திரம் முக்கியப் படுத்தும் இந்தப் பிரிவின் மூலம் எதிர்காலத்தில் பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தீர்க்கமாக நாம் எதிர்வு கூறி இருந்தோம். இன்று அந்த நிலைக்கு எங்களுடைய இனம் தள்ளப்பட்டிருப்பதை நன்கு உணர்ந்து, இணைந்து செயல்படுவதன் அவசியத்தை வலியுறுத்தி தாங்கள் முன் வைத்துள்ள அழைப்பை நாங்கள் வரவேற்கிறோம். இன நலத்திற்காக விட்டுக்கொடுப்போடு பயணிப்பதற்கு நாம் எப்பொழுதும் தயாராக இருக்கிறோம்.

விடுதலைப் போராட்ட காலத்தில் இருந்தே அனைவரும் ஒன்றிணைந்து பயணிப்பது எமது இனத்துக்கு நலன் பயக்கும் என்ற கொள்கையோடு ரெலோ, ஈபி ஆர் எல் எப், ஈரோஸ் ஆகியோருடன் விடுதலைப் புலிகளையும் இணைத்து ஈழத் தேசிய விடுதலை முன்னணி (ஈ. என். எல். எப் ) என்ற அமைப்பை உருவாக்குவதில் முன்னின்று உழைத்தவர்கள் நாங்கள்.

மேலும் கடந்த 2024 இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் நாம் மக்கள் நலன் சார்ந்து ஒன்றிணைந்து விட்டுக் கொடுப்போடு வெற்றி தோல்விகளை கருத்தில் கொள்ளாது பயணித்தமையையும், அம்பாறை மாவட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாடு தங்கள் கட்சியின் நிலைப்பாட்டால் தொடரமுடியாமல் போன துரதிர்ஷ்டமான சூழலையும் கவலையுடன் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தங்கள் அழைப்பை ஏற்று எமது கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளோடும் கலந்தாலோசித்து ஒன்றிணைந்து பயணிப்பது சம்பந்தமான தீர்க்கமான ஒரு முடிவை நாம் எட்ட நாம் தயாராக உள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ

Posted in Uncategorized

எமது தாயகத்தில் முப்படைகள் குவிக்கப்பட்டு ,அவர்களுக்கான நிதி எதற்காக கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது

எதற்காக எமது தாயகத்தில் முப்படைகள் குவிக்கப்பட்டு ,அவர்களுக்கான நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் 28/2/2025 வெள்ளிக்கிழமை இன்றைய தினம் நடைபெற்ற பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை.

இன்றைக்கு பாதுகாப்பு சம்மந்தமான விவாதத்திலே பல விடையங்களை எடுத்துச்சொல்லாம் என நினைக்கிறேன்.
உண்மையிலேயே ஒவ்வொரு அரசாங்கமும் வருகின்றபோது இந்த முப்படைகளுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்குவது வழமையானதொன்றாகிவிட்டது. இப்பொழுது இருக்கின்ற புதிய அரசாங்கம் கூட இந்த இராணுவத்திற்கும், முப்படைகளுக்கும் கூடுதலான நிதியை ஒதுக்கியிருக்கிறார்கள் என்றால் அது தேசியப்பாதுகாப்பு சம்மந்தமான விடையங்களை கையாளுவதற்காக ஒதுக்கப்பட்டதா? என்ற கேள்வியை நான் கேட்கவிரும்புகிறேன்.

உண்மையிலே போர் காலங்களிலே இராணூவங்கள் வடக்கு, கிழக்கிலே இந்த முப்படைகளும் குவிக்கப்பட்டார்கள். ஆனால் இந்த முப்படைகளும் இந்த போர் இல்லாத சூழலிலே, துப்பாக்கி சத்தங்கள் இல்லை, இன்றைக்கு இந்த முப்படைகளும் என்ன செய்கிறார்கள் எனறால் எங்களுடைய பொது மக்களுடைய காணிகளை அபகரித்து நான் நினைக்கின்றேன் உலக நாடுகளிலே எங்கேயும் இல்லாத ஒரு விடயத்தை அவர்கள் பொது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்கிறார்கள். பொது மக்களுடைய கால்நடைகளில் பால் கறக்கிறார்கள். அதன் பொருட்களை வெளியிலே விற்கிறார்கள்., இங்கே A 9 பாதையால் போகின்றபோது அல்லது வடக்கு கிழக்கிலே எங்கு போனாலும் இராணுவத்தினுடைய உணவு அந்த Canteen இல்லாத இடங்கள் இல்லை என்பதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

எங்களுடைய தேசத்திலே, எங்களுடைய பிரதேசத்திலே ஏன் இராணுவம் , முப்படைகளும் குவிக்கப்பட்டிருக்கிறது. ஏன் அந்த இராணூவமும் முப்படைகளும் எங்களுடைய காணிகளை ,பொது மக்களுடைய காணிகளை, பிடித்திருக்கிறார்கள் என்ற கேள்வியை இந்த அரசாங்கம் கேட்க வேண்டும். ஜனாதிபதி அவர்கள் சொன்னார்கள் இந்த இராணுவம் பிடித்திருக்கிற காணிகளை, பொது மக்களுடைய காணிகளை விடுதலை செய்வதாக சொன்னார்கள். ஆனால் இற்றவரைக்கும் அது நடைபெறவில்லை.

மக்கள் இன்றைக்கு உங்கள் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். என்னைப் பொறுத்தமட்டிலே இந்த வரவு செலவு திட்டத்திற்கு நான் ஆதரித்து வாக்களித்ததன் நோக்கம் என்னவென்றால் எங்களுடைய வன்னி மாவட்டத்திலே இன்றைக்கும் வடுக்களை மனதில் சுமந்து திரிகின்ற எங்களுடைய மக்களுடைய வாழ்வாதாரத்தை, எங்களுடைய மக்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கின்ற அந்த குடும்பங்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வகையிலே நிதி ஒதுக்கப்பட்டுள்ள அந்த அடிப்படையிலேதான் வாக்களித்தேன்.

ஆனால் என்னைப்பொறுத்தமட்டிலே பாதுகாப்பு விடயத்திலே என்னுடைய வாக்கு எதிராகத்தான் இருக்கும் என்று சொல்லிக்கொள்ள விருமகபுகின்றேன். இன்றைக்கு எத்தனை காணிகளை இந்த முப்படைகளும் அபகரித்திருக்கிறார்கள். வன்னியிலே வவுனியாவை எடுத்துக்கொண்டால் ஈச்சங்குளம் இராணுவ முகாம் அது பொதுமக்களுடைய காணி. தேயடி கூழாங்குளம் இராணுவ முகாம் அது பொதுமக்களுடைய காணி.வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்ஸசகர் இருக்கின்ற காணி உட்பட சுமார் 200 ஏக்கர் காணியை A9 வீதியிலே பிடித்துள்ளார்கள் அதுவும் பொதுமக்களுடைய காணி.

அதைவிட தலைவர் அவர்களே மன்னாரை எடுத்துக்கொண்டு பார்த்தீர்கள் என்றால் தேவாலயங்கள், கோவில்கள் இவை அனைத்தும் இராணுவத்தினதும்,முப்படைகளினதும் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பொது மக்கள் வழிபடுவதற்காக நேரங்களை ஒதுக்கி அவர்கள், பரிசோதனை செய்யப்பட்டுத்தான் வழிபட அனுப்பப்படுகிறார்கள். உதாரணமாக நான் சொல்வது மன்னார் பியர் கிராமத்தில் இருக்கிற ஒரு தேவாலயம் அது கடற்படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மக்கள் வழிபடுவதற்கு அந்த திருவிழா காலங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

முள்ளிக்குளம் அது ஏற்கனவே விவசாய நிலங்கள் உட்பட அது விடுவிக்கப்பட்டதாக நிலங்களாக சொல்லப்பட்டாலும் அது இன்றைக்கும் விடுவிக்கப்படவில்லை. அது கடற்படையின் கண்காணிப்பிலே இருக்கிறது. இப்படி மன்னாரிலே சன்னார் கிராமம் போன்ற இடங்களிலே பல ஏக்கர் கணக்கிலே இராணுவம் பயிற்சி முகாம் என்று பிடித்திருக்கிறார்கள். இவை அனைத்தம் பொதுமக்களுடைய காணிகள்.

முல்லைத்தீவை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட படையினரும், பொலிசாரும் பிடித்திருக்கிற காணியின் அளவு 1494 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்திருக்கிறார்கள். ஆகவே ஜனாதிபதி அவர்கள் தேர்தல் காலத்திலும் அதன் பின்பும் இந்த இராணுவம்,முப்படைளும் பிடித்திருக்கிற காணிகளை விடுவிப்பதாக சொன்னதை நடைமறைப்படுத்த வேண்டும் என்பதை நான் இந்த சபையிலே கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

ஏன் வடக்கிலே கூடுதலான முப்படைகளும், இராணுவமும் போடப்பட்டிருக்கிறார்கள். எனக்கு முன் பேசிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரவிகரன் அவர்கள் சொன்னது போல இந்த குவிக்கப்பட்ட இராணுவம், இந்த குவிக்கப்பட்ட முப்படைகளும் இருந்துகொண்டு போதைவஸ்துக்கான வழிகளை, அந்த எங்களுடைய வடக்கிலே திறந்திருக்கப்படாடிருக்கிறது என்றால் அது என்ன காரணம்? என்று நான் கேட்டுக்கொள்ள விரூம்புகிறேன்.

ஆகவே இவர்களும் உடந்தையா?என்ற கேள்வியை நான் எழுப்பிக்கொள்ள விரும்புகிறேன். இந்த விடயத்திலே அரசாங்கம் இந்த சரியான ஒரு கவனத்தை எடுக்கவேண்டும். கடல் மார்க்கமாக கடற்படை இருக்கிறது. இராணுவம் பல ஏக்கர்களை பிடித்திருக்கிறார்கள். பரிசோதனை சாவடிகள், முகாங்கள் இருக்கின்றது. எப்படி இந்த மாற்றத்திற்கான நிலை உண்டுபண்ணப்பட்டிருக்கிறது. இந்த போதைவஸ்துகள் எப்படி கடத்தப்படுகின்றன? கடற்படை அதில் கவனத்தை செலுத்தவில்லையா? ஆகவே இந்த முப்படைகளும் வடக்கிலே கூடுதலாக ஏன் அவர்கள் காணிகளை பிடித்து கூடுதலாக அங்கே முகாமிட்டிருப்பது இந்தியாவிற்கு எதிராக இலங்கை போர் தொடுக்கும் என்ற அச்சமா? அல்லது மீள் உருவாக்கம் என்று செல்லுகின்ற வகையிலே உங்களுடைய சிந்தனையிலே இருக்கின்ற அந்த மீள் உருவாக்கம் என்பது என்னைப்பொறுத்த மட்டிலே அந்த விடயங்களில் எங்களுடைய மக்கள் நிதானமாக இருக்கிறார்கள்.

ஆகவே அதை வைத்துக்கொண்டு இந்த முப்படைகளையும் நீங்கள் குவித்திருப்பது தவறு என்று நான் செல்லுகின்றேன். இங்கே பார்த்தோம் என்றால் தென்னிலங்கையிலே பல துப்பாக்கி சூடுகள் நடக்கின்றது. ஆகவே அவர்களை நீங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துக்கொண்டு நான் முழுமையாக இராணுவத்தையோ முப்படைகளையோ எடுக்கவேண்டும் என்று சொல்ல வரவில்லை .ஆனால் தென்னிலங்கையிலே பல பிரட்சனைகள் நடக்கின்றது. அங்கே இருக்கின்ற படைகளை குறையுங்கள்.உங்களால் முடியவில்லை என்றால் இந்த போதைவஸ்துகளை தடுக்க முடியவில்லை என்றால் ஏன் அங்கே குவிக்கப்பட்ட இராணுவம் இருக்கிறது.பயங்கரவாத தடைச்சட்டத்திலே நீங்கள் செய்வது என்னவென்றால் அப்பாவி பத்திரிகையாளர்களை கைது செய்வதும், விடுதலை போராட்டத்திலே படங்களை கைபேசிகளிலும், கணணிகளிலும் வைத்திருக்கும் போது அவர்களை கைதுசெய்கிறீர்கள்.

ஆனால் இன்றைக்கு துப்பாக்கி பிரயோகம் தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆகவே இந்த தேசிய பாதுகாப்பு என்பது அப்பாவி தமிழ் மக்களையும், போராட்ட வீரர்களை தங்களுடைய மனங்களில் சுமந்திருக்கிற அதை தங்களுடைய கைகளில் வைத்திருக்கிறவர்களிடம் தான் உங்களுக்கு எதிரியாக தெரிகிறார்களா?. இதற்காகத்தான் நீங்கள் வடக்கிலே கூடுதலான முப்படைகளையும் போட்டிருக்கிறீர்களா?இதற்காகத்தான் கூடுதலான நிதியை நீங்கள் ஒதுக்கியிருக்கிறீர்களா? என்ற கேள்வியை நான் கேட்கின்றேன்.

எங்களுடைய மக்கள் அச்சப்பட்டிருக்கிறார்கள். இன்றைக்கு உங்களை நம்பி வாக்களித்திருக்கிற்ர்கள். வடக்கிலே கூடுதலான வாக்குகள் NPPக்கு அளிக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களும் சில நேரங்களில் தவறாக அந்த உணர்வுகளை மறந்து பேசுகின்ற வாய்ப்பை இந்த அரசாங்கத்திற்கு பயத்திலேயோ தெரியவில்லை. ஆனால் எங்களை பொறுத்த மட்டிலே இந்த இராணுவத்தினுடைய, முப்படைகளுடைய அவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது நிதி குறைக்கப்பட வேண்டும்.

அவர்களுடைய நிதி குறைக்கப்படும்போதுதான் உண்மையான ஒரு நல்லிணக்கத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியும். இந்த பாதுகாப்பு என்ற போர்வையிலே எங்களுடைய பத்திரிகையாளர்கள், இளைஞர்களை கைதுசெய்வது மட்டும் தேசிய பாதுகாப்பாக இருக்காது என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது.

மன்னார் மாவட்டத்தில் விளையாட்டு அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது.
28/2/2025 வெள்ளிக்கிழமை இன்றைய பாராளுமன்ற உரையில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

மன்னார் மாவட்டத்திலே மூன்று கிராமங்கள் விளையாட்டு மைதானம் உருவாக்குதல் சம்மந்தமாக நிதி ஒதுக்கப்பட்டது.
பள்ளிமுனை, எமில்நகர் மற்றும் நறுவிலிக்குளம் போன்ற கிராமங்களிலே நிதி ஒதுக்கப்பட்டாலும் அந்தந்த மைதானத்தின் வேலைகள் நடைபெறவில்லை.

என்னைப்பொறுத்தமட்டில் அது ஊழல் நடைபெற்றதாகத்தான் சந்தேகப்படுகிறோம். பள்ளிமுனை புனித லூசியா விளையாட்டு மைதான பணிகள் வடமாகாண நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் 2013 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முதல்கட்ட வேலை மண் நிரப்புதல் முடிவடைந்துள்ள நிலையிலும், அரங்கு அமைத்தல் மற்றும் புல் பதித்தல் போன்ற வேலைகள் நடைபெறுவது தோல்வியடைந்துள்ளது.

20022 ம் ஆண்டு மூன்றாம்கட்ட வேலைக்காக ஒதுக்கப்பட ரூபாய் 51 மில்லியன் பயன்படுத்தப்படவில்லை. அது மீள எடுக்கப்பட்டுள்ளது.

எமில்நகர் கிராமத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக மணல் நிரப்புதல், வடிகால் அமைப்பினை ஏற்படுத்துதல் மற்றும் அரங்கு அமைப்பு ஆகிய வேலைக்கு ரூபாய் 49 மில்லியன் செலவிடப்பட்டு முற்றுப்பெற்றதாக கூறப்பட்ட போதிலும் இதிலே ஒரு ஒருவேலையும் நடைபெறவில்லை இந்த கிணறு காணாமல் போனதுபோல இதிலே பாரிய ஊளல் நடந்திருக்கிறது. இந்த நிதிகள் எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் வேலைகள் நடைபெறவில்லை. ஆகவே அமைச்சு இதிலே துரித கவனம் எடுக்க வேண்டும் என்று இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்ளுகிறேன்.

நறுவிலிக்குளம் கிராமத்தில் விளையாட்டு மைதானம் கட்டுமாணத்தில் நீச்சல் தடாகம், உட்புற அரங்கம் மற்றும் அரங்கம், 400m ஓட்டப்பாதை, மற்றும் வெளிப்புற வேலைகள் இந்த நிலைபாபாடு ஆய்வு அறிக்கையிலே 60%, 72%,90% என முடிவடைந்ததாக கூறப்பட்டிருக்கிறது. ரூபாய் 37 மில்லியன் ஒதுக்கீட்டுத்தொகையிலே ரூபாய் 143.7 மில்லியன் நிதி செலவிடப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதிலே முக்கிய கவனத்தை செலுத்தி அந்த மைதானத்தை நிறைவு செய்யுமாறு இச்சந்தர்ப்பத்திலே கேட்டுக்கொள்ளுகிறேன்.

பாடசாலை கிரிக்கற் விளையாட்டு மேம்பாட்டிற்காக 7 பாடசாலைகள் இனம்காணப்பட்டு 5 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்ட நிலையிலே 90% வீதமான வேலைகள் முடிவடைந்த போதிலும் பாடசாலை விளையாட்டு மைதான கட்டுமான வேலைகள். பல்வேறு காரணங்களால் முடிக்கப்படாமல் இருப்பதால் இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் கவனத்தில் எடுத்து இந்த பாடசாலை விளையாட்டு மைதானத்திலே ஒதுக்கப்பட்ட நிதிகளை மீண்டும் ஒதுக்கி நடைமுறைபபடுத்துவதற்கு கோரியிருக்கிறேன்.

நன்றி.

அ.அடைக்கலநாதன்.
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

பாரளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாக செயற்பட ரெலோ தலைவர் செல்வம் அழைப்பு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு குழுவாக ஒன்றுபட்டு ஒன்றினைந்து செயற்படுதல் தொடர்பாக
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பிவைப்பு.

மேற்படி விடயத்தின் தேவையையும் முக்கியத்துவத்தையும் அறிந்து தெளிந்து உணர்ந்து பொதுவான விடயங்களில் ஒன்றுபட்டு செயற்படுவது சாலச்சிறந்தது. இந்த குழுவை நம்மத்தியில் உருவாக்கி செயற்பட தங்கள் ஒவ்வொருவருடைய ஒத்துழைப்பினையும் வேண்டி நிற்கின்றேன். இது தமது இனத்தின் பிரச்சனைகளை சீர்தூக்கிபார்த்து கலந்துரையாடி முடிவுகளை எடுக்க உதவும் என்று நம்புகின்றேன். இவ்வாறான ஓர் குழுவாக பாரளுமன்றத்தில் செயற்பட உங்களது மேலான ஒத்துழைப்பை தருமாறு வேண்டிநிற்கின்றேன்.

நன்றி

கௌரவ.செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்ற உறுப்பினர் வன்னி மாவட்டம்.
தலைவர்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ.

Posted in Uncategorized

தையிட்டி விகாரை தொடர்பான ஜனாதிபதியின் இயலாமை : ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநுரவை நோக்கி கேள்வி கேட்ட போது அவர் வழங்கிய பதில் அவரின் இயலாமையை வெளிப்படுத்தியுள்ளது என ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காணியில் உரிமையாளர்களின் அனுமதி இல்லாமல் தனிநபர் சட்டத்தை மீறி சட்டத்திற்கு முரணாக அமைக்கப்பட்ட விகாரை தொடர்பில் நீதி வழங்குமாறு ஜனநாயக வழியில் போராடும் மக்களையும் அதற்கு ஆதரவு வழங்கும் மக்கள் பிரதிநிதிகளையும் பார்த்து மதவாதத்தையும் இனவாதத்தையும் தூண்ட முயற்சிக்கின்றனர் என அப்பட்டமான பொய்யு ரைக்கும் ஜனாதிபதி கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே தமிழர் தாயகப்பகுதியில் அரச சட்டவிரோத செயற்பாடுகளை மறைக்க முயற்சிக்கின்றார்.

இதன் மூலம் இதுவரை அரச இயந்திரம் மேற் கொண்ட மேற் கொள்ளும் மத ஆக்கிரமிப்பு மற்றும் இனவாத ஆக்கிரமிப்பு போன்றவற்றை வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி ஆதரிக்கின்றாரா ?

அநுர அரசாங்கம்

அநுர அரசாங்கம் தமிழர் தாயகத்தை இரண்டாக பிரித்து கிழக்கு மாகாணத்திற்கும் தமிழர்களுக்கம் தொடர்புகள் இல்லை என்ற உள் நோக்கில் மறைத்து வடக்கு மாகாணம் என்ற உரையாடலை முதன்மைப் படுத்துகின்றனர்.

ஜனாதிபதி சட்டவிரோத நடவடிக்கைக்கு நாட்டின் சட்டங்களுக்கு அமைவாக என்ன செய்வேன் என சொல்வதற்கு முதுகெலும்பற்று வடக்கு மக்களின் கருத்துக்களின் அடிப்படையில் தீர்வு வழங்குவோம் என்பது வேடிக்கையாக உள்ளது.

ஆகவே வடக்கு , கிழக்கு மாகாணங்களில் சட்டத்தின் ஆட்சியை அரச இயந்திரத்தின் மூலம் வழங்கும் இயலுமையை ஜனாதிபதி வழங்க தயார் இல்லை” என அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

தோல்வியடைந்த பொறிமுறைகளை மீள தூசி தட்டும் அநுர அரசாங்கம் :ரெலோ யாழ் மாவட்ட தலைவர் சபா குகதாஸ்

கடந்த கால அரசின் பொறிமுறைகளையே தற்புபோதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் அரசும் கையில் எடுப்பதாக ரெலோ வின் யாழ் மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 58 கூட்டத் தொடரில் பங்கேற்று உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் விஜிதஹேரத், உள்ளகப் பொறிமுறை மூலம் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.

கடந்தகால ஆட்சியாளர்களினால் காலத்தை கடத்துவதற்கும் பாதிக்கப்பட்டவர்களை பலவீனப்படுத்துவதற்கு உண்மைக்கான நல்லிணக்க ஆணைக்குழுக்களை நிறுவியது.

தொடர்ச்சியான நிகழ்ச்சி

இது போன்ற, தோற்றுப் போன பொறிமுறைகளை அநுர அரசும் கையில் எடுப்பதாக கூறுகின்றமை கடந்தகால ஆட்சியாளர்களின் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலாகவே உள்ளது.

மனிதவுரிமைப் பேரவையால் வழங்கப்பட்ட உள்ளகப் பொறிமுறை , கலப்புப் பொறிமுறை மற்றும் கால நீடிப்பு போன்றவற்றுக்கு என்ன நடந்தது உலகிற்கே தெரியும்.

அத்துடன் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, பர்ணகம மற்றும் உடலகம ஆணைக்குழுக்களுக்கும் தோல்வியடைந்ததை எல்லோரும் அறிவர்.

நீதிப் பொறிமுறை

எதிரணியில் இருக்கும் போது தேசிய மக்கள் சக்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதிப் பொறிமுறைக்கு ஆதரவான கருத்துக்களை பதிவு செய்தது இல்லை ஆகவே பாதிக்கப்பட்ட மக்களால் நிராகரிக்கப்பட்ட பொறிமுறைகளால் இன நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் ஏற்பட வாய்ப்பில்லை.

அநுர அரசாங்கத்திற்கு மடியில் கனம் இல்லையென்றால் 15 ஆண்டுகளாக தோல்வியடைந்த பொறிமுறைகளை சிந்திக்காது பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைக்கும் கடந்த மனிதவுரிமைப் பேரவையின் ஆணையாளர்களின் பரிந்துரைகளுக்கும் ஏற்ப சர்வதேச விசாரணைப் பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இதன் மூலமே உண்மையை கண்டறிவதுடன் நல்லிணக்கத்தையும் மீள் நிகழாமையையும் ஏற்படுத்த முடியும்.

மாற்றத்தை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன் -ரெலோ தலைவர் செல்வம்

ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் வரவு,செலவுத்திட்டம் சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் முன்மொழிவுகளைக் கொண்டிருந்தமையால் அதனை ஆதரிக்கும் தீர்மானத்தினை எடுத்ததாக, ரெலோவின் தலைவரும், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி வரவு, செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமை (25) நடைபெற்றிருந்த நிலையில் அதனை ஆதரித்து வாக்களித்தமை தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் மாற்றத்தினை ஏற்படுத்துவோம் என்ற கோசத்துடன் மக்களின் ஆணையைக் கோரிய ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கு அதற்கான ஆணை மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் வழங்கப்பட்டுள்ளது.

அவ்விதமான நிலையில் அவர்களின் ஆட்சியின் முதலாவது வரவு, செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் அவர்கள் வடக்கு, மாகாணத்துக்கு அதிகமான ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார்.

அதனைவிடவும், சதாரண மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் வரவு, செலவுத்திட்டத்தின் முன்மொழிவுகள் அமைந்திருக்கின்றன என்பதை கட்சி அரசியலுக்கு அப்பால் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த வகையில், அவர்களின் முன்மொழிவுகள் உரிய வகையில் செயற்படுத்தப்பட்டு நடைமுறைச்சாத்தியமாக வேண்டும் என்பது எனது வலியுறுத்தலாக இருக்கின்றது. கடந்த காலத்தில் ஆட்சியில் இருந்த அரசுகள் முன்மொழிவுகளை கவர்ச்சிகரமாக முன்வைத்தாலும் அவற்றை செயற்படுத்துவதில்லை.

ஆகவே,தான் தேசிய மக்கள் சக்தி மாற்றத்தை ஏற்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார்கள். அந்த மாற்றத்தினையே நாமும் எதிர்பார்க்கின்றோம். சாதாரண பொதுமக்களுக்காக அரசாங்கம் செயற்பட வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பாகும்.

பொருளாதாரரீதியாக வரவு,செலவுத்திட்டம் முன்னேற்றகரமாக இருந்தாலும் அவற்றை செயற்படுவதில் அரசாங்கம் அதீதமான முனைப்பினைக் காண்பிக்க வேண்டியுள்ளது.

அதேநேரம், அரசாங்கமானது, தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற நீண்டகால பிரச்சினைகளுக்கும் தீர்வினைக் காண்பிப்க வேண்டியது அவசியமாகின்றது.

என்னைப்பொறுத்தவரையில், மாற்றத்தை நோக்கி அரசாங்கம் செல்வதற்கு ஆதரவினை வழங்குவதற்கு தயாராகவே உள்ளேன். ஆனால் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் தாமதமன்றி முன்னெடுக்க வேண்டும்.

தேசிய இனப்பிரச்சினைகான தீர்வு, பொறுப்புக்கூறல் விடயங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக படைகள் உட்பட தொல்பொருள் திணைக்களம் உள்ளிட்டவற்றுக்கு துணைபோதல் ஆகியவற்றுக்கும் தாமமன்றி தீர்மானங்களை எடுக்க வேண்டியது அவசியமாகின்றது.

அவ்வாறு அரசாங்கம் செயற்படாது விட்டால் என்னால் தற்போது காண்பிக்கப்பட்டுள்ள நல்லெண்ண சமிக்ஞையை விலக்கிக் கொள்ளவே நேரிடும் உள்ளார் என்றார்.

Posted in Uncategorized

ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களது மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி

ஆதி பரம்பொருளான சிவபெருமானுக்கு உகந்த தினமான மகா சிவராத்திரி தினத்தில் சிவபெருமானை நினைத்து மனதாற வழிபட்டு, சிவனின் அருளை பரிபூரணமாக பெற்று உலகு எங்கும் வாழும் இந்து மக்கள் அனைவரும் சிறப்பாக வாழ எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

“மாயை இருள் நீங்கி ஒளி பிரகாசிக்கும்’ என்ற நம்பிக்கையுடன் வாழும் இந்து மக்கள் இந்த சிவராத்திரி நாளில் இரவு முழுவதும் ,விழித்திருந்து விரதமிருந்து தான தருமங்களில் ஈடுபடுகின்றனர்.

இன்றைய மகா சிவராத்திரி நாளை கொண்டாடும் எமது இந்து மக்களின் வாழ்வு சிறக்கவும் ,மக்களுடைய நல்ல எண்ணங்களும், விருப்பங்களும் நிறைவேறி அவர்களின் வாழ்வு வளமிக்கதாகவும் , சிறப்பானதாகவும் அமையவும் இந் நாளில் பிராத்தித்துகொள்ளுவதுடன் எனது வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

அ.அடைக்கலநாதன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.
தலைவர்.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ.

யாழ்.நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்

யாழ். நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்காக விசாரணைக்குழுவொன்றை அமைக்க வேண்டும்.” என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம்,ரெலோ அமைப்பின தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 19-02-2025 நடைபெற்ற பாதீடுமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்.

மேலும் அவர் ,” யாழ். நூலக மேம்பாட்டுக்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பாதீட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றேன்.

ஆசியாவிலேயே முதன்மை இடத்தைப்பெற்ற யாழ். நூலகம் எரிக்கப்பட்ட சம்பவம் இன்னும் ஆறாத வடுவாக உள்ளது. எனவே, நூலகத்தை எரித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு விசாரணைக்குழுவை அமைக்க வேண்டும்.

இதனை செய்தவர்கள் இப்போதும் நடமாடிக்கொண்டிருக்கின்றார்கள், எனவே, தண்டனை பெற்றுக்கொடுப்பதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

யாழ்ப்பாணம் கல்வியில் மேலோங்கி இருந்த ஒரு மாவட்டம். யாழ்ப்பாணம் என்றால் கல்வி மான்கள் சிறந்து விளங்கிய மாவட்டம். இன்று பின்தங்கிய நிலையில் இருப்பதற்கு நூலகம் எரிப்பு சம்பவமும் ஒரு காரணம்.

நிதி ஒதுக்கீட்டுக்கு நன்றி. அதேபோல எரித்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்

மன்னார் மாவட்டத்தில் முறையான வடிகால் அமைப்பிற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்க ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

மன்னார் மாவட்டத்தில் முறையான வடிகால் அமைப்பு அமைப்பதற்கு வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பில்.

இலங்கை மாண்புமிகு #ஜனாதிபதி #அனுரகுமார #திசனாயக அவர்களுக்கு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ #செல்வம் #அடைக்கலநாதன் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சமீபத்திய இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளையும் குடியிருப்புகளையும் விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதனால் பயிர்கள் நாசம், பொருட் சேதம் போன்றவற்றை மக்கள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சொத்துக்கள் மற்றும் சாகுபடியில் முதலீடு செய்த முதலீடுகளை கூட பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இது ஒவ்வொரு வருடமும் நடக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இது நிகழும்போது, ​​அரசு அல்லது அரசு சாரா நிறுவனங்கள் உலர் உணவுகளை வழங்குகின்றன மற்றும் அவற்றை மற்ற இடங்களில் அல்லது தேவாலயங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற பொது இடங்களில் குடியேற்றுகின்றன.

இதை நிரந்தர தீர்வு என்று சொல்ல முடியாது. இது ஒரு தற்காலிக தீர்வு மட்டுமே நீண்ட காலமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால் ஆய்வு நடத்தி முறையான வடிகால் அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

இந்தப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதற்கு இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்,
அ.அடைக்கலநாதன்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பினர்
வன்னி மாவட்டம்.