தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிசாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச துதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் – தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக அமைதி வழியில் ஜனநாயக ரீதியாக போராடிய எம்மை அரச அறிவுறுத்தலின் பேரில் பொலிசார் கடுமையாக சித்திரவதை செய்துள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவேண்டிய பொலிசாரின் இம் மிலேச்சத்தனமான பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதியான அணுகுமுறைகளுக்காக அழுத்தத்தினைப் பிரயோகிக்குமாறு வெளிநாட்டுத் துதுவராலயங்கள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ரீதியிலான பொறிமுறைகளுக்கும் அரசுக்கு உதவி அளிக்கும் நிறுவனங்களுக்கும் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோரியுள்ளார்.

இலங்கையில் தமக்கு எதிராக இடம்பெற்ற சித்திரவதைகள் தாம் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பினை எதிர்த்த வேளை இடம்பெற்ற தாக்குதல்கள் என்பதால் இலங்கை அரச கட்டமைபினுள்ளாக ஒருபோதும் நீதி கிட்டாது என்பதை நாம் உணர்கின்றோம். அரச கொள்கையும் சட்டங்களும் சட்ட அமுலாக்கமும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்பிற்கு வலுச்சேர்ப்பவையாகவே பேணப்படுகின்றன. யாரும் எதிராக அமையக்கூடாது என்பதில் ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பே இலங்கையில் நடைமுறையில் உள்ளது. எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோதும் மாற்றமின்றி இந் நிலை தொடர்கின்றது. பௌத்த பேரினவாத விஸ்தரிப்பிற்கு எதிராக கடந்த காலத்தில் கௌரவ நீதிமன்றங்களின் தீர்ப்புக்கள் கூட இந் நாட்டில் நடைமுறைப் படுத்தப்படுவதில்லை.

தையிட்டியில் நேற்று வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஏகமனதாக முன்னெடுத்த சபைத் தீர்மானத்தின் அடிப்படையில் பகிரங்க அகிம்சை வழி போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அப் போராட்டத்தில் கௌரவ நீதிமன்றின் உத்தரவுகளை மதித்தே நாம் போராடினோம். அவ்வாறாகப் போராடிய போது எம்மீது பொலிசார் பிரயோகித்த சித்திரவதையினையும் மனித குல நாகரீகத்திற்குப் ஏற்புடையதல்லாத நடவடிக்கைகள் தொடர்பாகவும் இலங்கையில் உள்ள பிரதான நாடுகளின் வெளிநாட்டுத் தூதுவராலயங்கள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான நிறுவனங்கள், சித்திரவதைக்கு எதிரான சர்வதேச தாபனங்கள், இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகள், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள மனித உரிமைகள் நிறுவனங்கள் மற்றும் ஏனைய தாபனங்களுக்கும் இவ்விடயம் பற்றி போதிய ஆதாரங்களுடன் முறையிட்டுள்ளோம்.

இராணுவமயமாக்கத்தின் கீழ் பொதுமக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளில் அரச அனுசரனையுடன் இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தினை பாதிக்கம் வகையில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராகவே நாங்கள் தொடர்ச்சியாக போராடிவருகின்றோம். அரசாங்கம் இவ்வாறான நீதிகோரிய அகிம்சை ரீதியிலான போராட்டங்கள் மீது அடக்கு முறையினையும் மக்களிடத்தில் அச்சத்தினையும் ஏற்படுத்தும் நோக்கில் பொலிசாரை ஏவிவிட்டு சித்திரவதை செய்து வருகின்றமை உடன் நிறுத்தப்படவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பெளத்த சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக ஜனநாயக வழியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டோம் – விடுதலையின் பின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

தமிழ்மக்களுக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் பௌத்த சிங்கள பேரினவாத சிங்கள நிகழ்ச்சி நிரலுடன் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிராக அதே சமயம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக இடம்பெற்ற இந்தப் போராட்டத்திலே நாங்கள் பங்கெடுத்திருந்த போது எங்களில் ஐவரை தேடித் தேடி கைது செய்தனர்.என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் விடுதலையின் பின் தெரிவித்தார்.

அரசாங்கத்தினால் நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கைதாக பொலிசாரின் இந்தக் கைது அமைந்துள்ளது.

குறித்த பௌத்த பன்சலையை நிர்வகிப்பவர்கள் பொதுமக்களுடைய காணிகளை அடாத்தாகக் கைப்பற்றி சட்டவிரோத கட்டிடங்கள் அமைத்து அடாத்தாக இராணுவப்பலத்துடன் தாங்கள் அதனை ஆட்சியுரிமை செய்து முகாமை செய்கின்ற நிலமையிலே நாங்கள் எங்கள் மக்களின் காணிக்காக நீதியுரிமை வேண்டிப் போராடிய நிலையில் கைது செய்யப்படுகின்றோம். கௌரவ நீதிமன்றம் ஏற்கனவே ஒரு தீர்ப்பை வழங்கியதாகவும் சொல்லி இருந்தார்கள். நீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம். நீதிமன்ற தீர்ப்புக்கு பாதகமில்லாமல் ஜனநாயக அகிம்சை வழியிலே நாங்கள் போராடி இருந்தோம். இலங்கையிலே பௌத்த சிங்கள பேரினவாதம் தொடர்பில் கடந்தகாலங்களிலே கௌரவ நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளைக் கூட பொலிசார் நடைமுறைப்படுத்தவில்லை. அது ஒரு அப்பட்டமாகவே தெரிந்த விடயம். குருந்தூர்மலையிலே பொலிசாரை அமுல்படுத்துமாறு நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை நடைமுறைப்படுத்தவில்லை. அதேபோன்று வெவ்வேறு பட்ட விடயங்களின் அடிப்படையிலே பௌத்த சிங்களப் பேரினவாத நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்கு எதிராக நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புக்களை குறைந்த பட்சமேனும் நடைமுறைப்படுத்தாத நிலையில் இந்த இடத்தில் அமைதிக்கும் சட்டத்திற்கும் மதிப்பளித்து ஜனநாயக ரீதியில் போராடிய நாங்கள் மிலேச்சத்தனமாக கைது செய்யப்பட்டிருக்கிறோம். இந்தக் கைதுகளின் போதான நடவடிக்கைகள் என்பது எங்களின் பாதுகாபைஇ அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. எமது மண்ணிலே பௌத்த சிங்கள பேரினவாதத்தை நிலைநிறுத்த வேண்டும். பௌத்த சிங்கள தேசமாக இதனை மாற்ற வேண்டும் என்ற அரசாங்கத்தின் கொள்கைக்கு பொலிசார் செயல்வடிவம் அளிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம்.

அகில இலங்கைக் கம்பன் கழகத்தின் மூன்றாம் கட்ட வெள்ள நிவாரண நிதியுதவி

அகில இலங்கைக் கம்பன் கழகம் தனது உள்நாட்டு, வெளிநாட்டு உறுப்பினர்களின் ஆதரவோடு இயற்கை அனர்த்தத்தால் பாதிப்புற்ற மக்களுக்கு கொழும்பு மாநகர சபையின் மூன்றாம் கட்ட நிதியுதவியான ரூபா 250000/= இரண்டரை இலட்சத்தினை தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் மூலமாக மன்னார் மக்களுக்கு அனுப்பி வைத்துள்ளது.

கொழும்பில் உள்ள கம்பன் கழக அலுவலகத்தில் மேற்படி தொகைக்கான காசோலை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நிதியுதவியை வழங்கிய அகில இலங்கை கம்பன் கழகம் ஊடாக நிதியுதவியை வழங்கிய அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

மன்னார் மாவட்ட நிவாரணங்கள் குறைபாடுகளுக்கான தீர்வு உள்ளீட்டு பலதரப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி கவனத்திற்கு கொண்டு சென்றார் செல்வம் MP

பேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், கால்நடைகளை இழந்தோர், மீனவர்களுக்கான நிவாரணங்கள் மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் அடிப்படை குறைபாடுகளுக்கான தீர்வு உள்ளீட்டு பலதரப்பட்ட கோரிக்கைகளை ஜனாதிபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் தலமையில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று 13.12.2025 தினம்
மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
.
மேற்படி கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் உள்ளிட்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களும், வடமாகாண மற்றும், மன்னார் மாவட்ட திணைக்களங்களின் அதிகாரிகளும், பங்கேற்றிருந்தனர்.

கலந்துரையாடலின் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஜனாதிபதி அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி அவர்கள் அவற்றுக்கான தீர்வையும் வழங்கியிருந்தார்.

அந்த வகையில் நடைபெற்ற பேரிடரால் வடமாகாணத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் விவசாயிகள், குறிப்பாக ஆடு மாடு போன்ற கால்நடைகளை இழந்தவர்களுக்கான இழப்பீட்டை பாரபட்சமின்றி அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றும்
மன்னார் மாவட்டத்தில் அதிகளவு பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கு மட்டுமே சலுகைகள், நிவாரணம் வழங்கப்படுகிறது என்றும் வாழ்வாதாரமான கடற்றொழில் பாதிக்கப்பட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் மன்னார் மாவட்ட மீனவர்கள் அதிகம் உள்ளதை சுட்டிக்காட்டியதை தொடர்ந்து ஜனாதிபதி அவர்கள் அனைத்து மீனவ குடும்பங்களுக்கு நிவாரணங்களை வழங்குமாறு கட்டளை பிறப்பித்திருந்தார்.

மற்றும் மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் காணப்படும் அடிப்படை தேவைகளை, குறைபாடுகளை பூர்த்திசெய்ய கோரிக்கை விடுத்த கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி அவர்கள் சுகாதார அமைச்சரோடு கலந்தாலோசித்து மேற்கொள்ளவேண்டிய அனைத்து அடிப்படை பிரச்சனைகள் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதாகவும் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களுக்கு இடையே யாழில் சந்திப்பு

இலங்கை தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களுக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களுக்கும் இடையே யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) சந்திப்பு நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தமிழ் அரசு கட்சியின் தலமை அலுவலகத்தில் தமிழ் அரசு கட்சியின் தலைவர் திரு.C.V.K சிவஞானம் அவர்களது தலமையில் நடைபெற்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இணைந்த செயற்பாட்டை கருத்திற்கொண்டு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அழைப்பின் பேரில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றது.

இந்த சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சி தலைவர்களான ரெலோ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்,ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,PLOTE இயக்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், முருகேசு சந்திரகுமார், சி.ரவீந்திரா, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பொதுச் செயலாளர் நா.இரட்ணலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னார், மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்தரையாடினார் ரெலோ தலைவர் செல்வம்

பேரிடரால் பாதிக்கப்பட்ட மன்னார், மடு மற்றும் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்களை சந்தித்து கலந்தரையாடினார் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள்.

மன்னார் பிரதேச செயலாளர் , மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்,மற்றும் மடு பிரதேச செயலாளர் ஆகிய மூன்று பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பொன்றை வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்றைய தினம் 5/12/2025 வெள்ளிக்கிழமை மேற்கொண்டிருந்தார்.

மேற்படி பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடலில் கடந்த வாரத்தில் நாட்டில் ஏற்பட்ட பேரிடர் அனர்த்தம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படவேண்டிய பல்வேறுபட்ட நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது .

மன்னார் மாவட்டத்தில் மடு மற்றும் மாந்தை பிரதேசங்களில் அதிகளவிலான அனர்த்தங்களும், அழிவுகளும், ஏற்பட்டுள்ளது, குறிப்பாக மடு மற்றும் மாந்தை பகுதிகளில் உள்ள பிரதான நிலப்பரப்புகளை உள்ளடக்கிய பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் யாவும் நிர்மூலமாக்கப்பட்டு தொடர்புகள் அற்ற நிலை ஏற்ப்பட்டுள்ளது. மடுப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலை காணப்படுகிறது. பாதைகள் முற்றாக அழிந்துள்ள நிலையே அதிகம் காணப்படுகிறது.

மற்றும் பல்வேறுபட்ட கிராமங்களில் மின்சாரம் மற்றும் மின்சார இணைப்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட நிலை காணப்படுவதுடன் கடந்த பேரிடர் காலத்தில் பிரதேச செயலக நடவடிக்கைகள் முற்றுமுழுதாக ஸ்தப்பித்திருந்ததுடன்,மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு செயலகத்தினுடைய தொலைத்தொடர்புகள் யாவும் முற்றுமுழுதாக தடைப்பட்டிருந்துள்ளது. இதன் காரணமாக பேரிடரின் போது கிராமங்களின் நிலைபற்றிய தொடர்புகள் கிராம சேவகர்களின் நிலை மற்றும் செய்யவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பலதரப்பட்ட விடயங்களை அறியமுடியாதிருந்துள்ளது.

தற்பொழுது பேரிடரால் பாதிக்கப்பட்ட பேரிடர் நிவாரண நிதி 25000/= வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரதேச செயலாளர்கள், பிரதேசசபை தவிசாளர்கள ,உறுப்பினர்கள் ஊழியர்கள், கிராம சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் என பலரும் இரவு பகல் பாராது தங்களது மக்களுக்கான முழுமையான பணிகளை ஆற்றிவருகின்ற நிலை காணப்படுகிறது.
மடு பிரதேசத்தில் பல கிராமங்கள் பல்வேறுபட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் கன மழை காரணமாக அப்பகுதியில் உள்ள குளங்கள் உடைக்கப்பட்டதுடன், பெருக்கெடுத்து பாயும் வெள்ள நீர் மற்றும் கட்டுக்கரை குள நீர் போன்ற நீர் நிலைகளில் இருந்து பெருக்கெடுத்த வெள்ள அனர்த்தத்தின் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டு தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்ட துர்ப்பாக்கிய சூழல் நிலவியிருந்தது.

மற்றும் மன்னார் குஞ்சுக்குளத்தை சூழ உள்ள பல்வேறுபட்ட கிராமங்கள் புயலின் தாக்கத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு அவ் பகுதிகளுக்குள் பேரிடர் நேரத்தில் யாருமே செல்ல முடியாத நிலை காணப்பட்டிருந்தது. பாதைகள் யாவும் மழை வெள்ளத்தால் நிரம்பி துண்டிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது குஞ்சுக்குள பகுதிகளுக்கான ஒரு பாதை பாவிக்க கூடிய சூழ்நிலை உள்ளது. அந்த பாதையினூடாக அனர்த்த முகாமைத்துவ நிர்வாகம், பிரதேச செயலகம் போன்றன மக்களை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மாந்தை மேற்கு பிரதேசத்தில் அதிகளவு கால்நடைகளும், வீதிகளும் பேரிடரால் பாதிக்கப்பட்ட நிலை காணப்படுகிறது. மக்களது வாழ்வாதார கால்நடைகள், அழிவுற்ற நிலையும், விவசாய நிலங்களும் முற்றுமுழுதாக பாதிப்படைந்துள்ளது. அந்த வகையில் இவ் அழிவுகளுக்கான இழப்பிடுகளை எந்த வகையில் பெற்றுக்கொள்ளுவது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியதில் நேரம் காலம் பார்க்காது மக்களுக்கான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதில் மும்முரமாக தமது சேவையில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையிலே பேரிடரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மடு ,மாந்தை மற்றும் மன்னார் நகர பிரதேசம் ஆகியவை அதிகளவு பாதிக்கப்பட்ட பகுதிகளாக காணப்படுவதுடன் இலங்கையில் வட மாகாண ரீதியில் மன்னார் மாவட்டம் அதிகளவான பாதிப்பையும், முல்லைத்தீவு , வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் போன்றவை பாதிப்புகளை அடைந்துள்ளதுடன் ஆரம்பத்தில் மன்னார், பூநகரி பாதை துண்டிக்கப்பட்ட நிலையில் நிவாரண பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை ,மற்றும் குடி நீர் வழங்கல் துண்டிக்கப்பட்ட நிலை காணப்பட்டது என்றும் பிரதேச செயலாளர்களினால் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் கால்நடைகளின் இறப்பு மிக மோசமாக எமது பகுதியில் நடைபெற்றது என்றும் குறிப்பிட அளவில் இறந்த கால்நடைகளை புதைத்திருந்தாலும் பேரிடரால் அகப்பட்ட கால்நடைகள் காடுகளில் இறந்து நிலையில் அவற்றை அகற்றமுடியாத சூழ்நிலையில் அவற்றின் துர்நாற்றத்தால் தொற்றுநோய்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளது என்ற அச்சமும் நிலவுவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Posted in Uncategorized

பிரதேசவாதம் கிடையாது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுமுறையையும் அனர்த்த முகாமைத்துவத்தினையுமே கொண்டுள்ளோம் தவிசாளர் நிரோஷ் பதில்

நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நான்; செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் முன்வைத்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது அடிப்படையற்றது. உண்மைக்குப் புறம்பானது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மற்றும் பிரதேச மக்கள் மறுத்துள்ளனர்.

அமைச்சரின் குற்றச்சாட்டினை அடுத்து பிரதேச மக்களுடன் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , உப தவிசாளர் ஜனார்த்தனன், வட்டார உறுப்பினர் கஜேந்திரகுமார் உள்ளிட்ட மேலும் பலர் பகிரங்க மக்கள் சந்திப்பினை நடத்தியதுடன் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொண்டுள்ள தரப்புக்களின் நிலைமைகளை மக்களுடன் நேரில் ஆராய்ந்தனர். அதன் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே தவிசாளர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்,

வெள்ளத்தினை அகற்றவதில் அனர்த்த முகாமைத்துவக் கொள்கை ரீதியில் உடனடி பாதிப்புக்களை நிவர்த்தித்தல் மற்றும் பாதிப்புக்களை குறைத்தல், நிலைத்தகு தீர்வு நடவடிக்கைக்கு சந்தர்ப்பத்தினை ஏற்படுத்ததல் என்ற நடவடிக்கைகளிலேயே நாம் ஈடுபடுகின்றோம்.

இந் நிலையில் பொறுப்புவாய்ந்த அமைச்சர் நான் வெள்ளத்தினை மறித்து அணை கட்டியுள்ளதாக சாடியுள்ளார். அவர் பாதிக்கப்பட்ட மக்களுடன் நேரடியாக சந்திக்காது ஒரிருவர் ஊடாக தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார். அல்லது அரசியல் ரீதியில் என்மீது சேறுபூசமுயற்சித்துள்ளார். இங்கு பிரதேச வாதங்கள் எமக்குக் கிடையாது. பாதிக்கப்பட்டவர்களிடத்தில் அவர்களாக அக ரீதியில் சிறு மண் அணை ஏற்படுத்தப்பட்டு ஒரு பகுதிக்குள் முழுமையாக வெள்ளத்தாக்கம் ஏற்பாடுத்தப்படாது இரு பகுதியிடத்திலும் வெள்ள நீர் சமநிலைப்பகிர்வு ஒன்று நடந்துள்ளது.

ஏற்கனவே வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான கல்வியங்காட்டின் ஒரு பகுதிக்குள் சகல வெள்ளத்தினையும் விட்டு நூற்றுக்கணக்கான குடும்பங்களை வீடுகளில் குடியிருக்க முடியாதளவுக்கு மாற்றிவிடுவது அரச கொள்கையாகவே அறிவார்ந்த நடவடிக்கையாகவோ அமையாது.

வெள்ள நீரை தற்போது எதிர்ப்புக் கிளம்பியுள்ள பகுதிக்குள் கொண்டு வருவதற்கு ஏற்கனவே கட்டுமானம் பற்றிய சம்பாசணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது, தாழ் நிலமாக உள்ள பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில் தடையில்லை ஆனால் அப்; பகுதியில் இருக்கின்ற மக்கள் குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக் கூடிய இடங்களுக்கான கால்வாய் பொறிமுறைகள் நிபுணர் அறிக்கை பெறப்பட்டு தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்பதாகவே காணப்பட்டது. இதனை பூர்த்தி செய்வதற்கு நாம் பலதரப்பக்களுடனும் அணுகியுள்ளோம் என்றார்.

இந்தியாவின் கரத்தை இறுக்கப் பிடிப்பதுதான் எமது நாட்டுக்கு நல்லது அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார்

இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம். எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது. அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியாது. தற்போதைய நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீளலாம் என்ற ஆலோசனைகளை அனைவரும் முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. ஜனாதிபதிக்கு நான் நன்றி கூறுகின்றேன். இரவு பகலாக அவர் முழு மூச்சாக செயற்படுகின்றார்.அவருக்கும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது அயல் நாடான இந்தியாவுடன் அரசாங்கம் இணக்கமாகவே செயற்பட வேண்டும். இந்தியாதான் எங்களுக்கு முதலில் உதவி செய்யும் நாடு. எனவே இந்தியாவின் கரத்தை இறுக்கப் பிடிப்பதுதான் எமது நாட்டுக்கு நல்லது. இந்தியப் பிரதமர் , தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகியோருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன்.

எமது வன்னி மாவட்டத்தில் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை, நகரசபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள், தொண்டர்கள் முப்படையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கை அனர்த்தத்தால் மன்னார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தை கவனத்திற் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள், கடற் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு வீட்டுக்கு 25000 ரூபா கொடுக்கப்படுவதை அறிந்த மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் அந்தத்தொகையை அதிகரிக்க வேண்டும் எமது பிரதேச சபை, நகரசபைகளின் தவிசாளர்கள் இயற்கை அனர்த்தம் தொடர்பில் முழு மூச்சாக செயற்படுகின்றார்கள் அவர்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது 100 வீதம் ஒரு வேலையை பூரணமாக செய்ய முடியாது. ஒரு சில குறைகள் இருக்கும். எனவே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே குறைகளை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். எல்லோரும் இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். பாகுபாடுகள் வேண்டாம்.எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். நாம் அன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்த்து எமக்கு நேரம் தரவில்லை என்பதற்காக மட்டுமே. அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது.அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் வன்னி மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளார்கள் அரசாங்கம் உங்களது கவனத்தை செலுத்துங்கள்

22/11/2025 சனிக்கிழமை பாரளுமன்ற அமர்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்தின் சார்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஆற்றிய உரை.

ஊடகத்துறையில் தமது அர்பணிபான ஊடக தர்மத்தை கொண்டிருந்த சிவராம்,நடேசன் ,சுகிர்தராஜன் மற்றும் ஊடகத்துறையில் தமது உயிரை அர்பணித்த எமது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஊடகத்துறையானது, அரசியல்வாதிகள் ,அரசாங்கம் , மற்றும் பொதுவான வர்த்தகதுறை சார்ந்ததாக இருப்பினும் அவற்றுக்கு இன்றியமையாததாக காணப்படுவதுடன் ,இவ் ஊடகத்துறையானது எமது விடயங்களை மக்கள் மத்தியில் அதன் உண்மை தன்மையுடன் கொண்டு செல்கின்ற தார்மீக பொறுப்பை கொண்டுள்ளது.இவற்றுள் சரியானதாகவும் , உண்மையை வெளிக்கொணரும் ஊடகங்களும், உண்மைக்கு புறம்பானதாக செயற்படும் சிலதும் காணப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகிறது ,குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத்திட்ட வசதிகள் இல்லை, நிரந்தர வருமானத்தை தீர்மானிக்கும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் ,அவர்களது ஊதியங்கள் வழங்கப்படவேண்டும்.முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும். ஊடக துறை சாந்தவர்களுக்கான வங்கிகளில் கடன் மறுக்கப்படுகின்ற நிலை மாற்றப்படவேண்டும்.

அடிப்படை மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கின்ற இந்த அரசாங்கம் அடிப்படை மக்கள் அடிப்படை மக்களுடைய தேவைகளை கண்டுகொள்கின்ற இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அதனை உணர்ந்த அரசாங்கம் என்றதன் அடிப்படையில் இந்த ஊடகத்துறையில் தங்களது கவனம் அவசியம் இருக்கவேண்டும் .

சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் எமது வன்னி மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முக்கியமாக நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு உள ரீதியான பாதிப்புக்குள்ளான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது பிரதேசங்களில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் மந்தகதியில் இயங்குவதை அமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

குறிப்பாக முல்லை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள மாவட்ட ஆதார வைத்தியசாலைகள் மக்களது சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைகள் காணபாபடுகிறது.வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள்,தாதியர் மற்றும் ஊழியர்கள் மிகுந்த அர்பணிப்புள்ள சேவையை வழங்கிவரும் நிலையில் வைத்தியசாலையில் பெளதீக வழங்கள் ,மருத்துவ உபகரணங்கள் ,தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் மற்றும் பரூந்துபொருட்கள் என்பன அற்ற நிலைகளே தொடர்கின்றது.

இந்த விடயத்தில் எமது பிரதேச வைத்திய சாலைகளில் உள்ள சில விடயங்களை சுட்டிக்காட்ட விளைகிறேன் அந்த வகையில் ஆளனி பற்றாக்குறை ,கட்டடங்களது தேவைகள் ,மருத்துவ சேவைக்கான முக்கிய இயந்திரங்கள் அற்ற நிலையே காணப்படுகிறது.எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் உயர்ஸ்தானிகராக இருக்கலாம் ,வன்னி மாவட்டங்களுக்கு,வருகைதருவது மிக மிக குறைவாகவே காணப்படுகிறது.அமைச்சர்கள் ,அரசாங்க பிரதிநிதிகள் வன்னி மாவட்டங்களை வந்து அவற்றின் தேவைகளை ,குறைகளை நீக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் எமது வன்னி மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளார்கள்.A9 வீதியூடாக யாழ்ப்பானத்திற்கு,விஜயம் மேற்கொள்ளும் அரசாங்க அமைச்சர்கள்,உயர்ஸ்தானிகர்கள் எமது வன்னி மாவட்டங்களுக்கு வருகைதரூவது மிகக்குறைவாகவே காணப்படும் நிலை தொடர்கிறது.அமைச்சர்களுடைய வருகை அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளூமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலே நடைபெறுகிறது அமைச்சர்களது வருகை தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
வைத்தியசாலைகளில் மனித வளங்களை எடுத்து,நோக்குவோமாக இருந்தால் எமது வைத்தியசாலையில் மயக்கவியல் நிபுணர் சம்மந்தமாக பலமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தும் மயக்கவியல் நிபுணர்கள் மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் இரண்டு பிரதேசங்களில் பணியாற்றுகிறார்கள் அங்கிருந்து மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் இன்றுவரை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்கவில்லை வைச்சிய கலாநிதி, .M.D.D சில்வா அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் வைத்திய கலாநிதி ,D.K.R.கனங்கரா எம்பலப்பிட்டியவிலிருந்தும் வருகைதரவில்லை.

எமது,முல்லை,மன்னார் போன்ற பிரதேசங்களில் Ambulance நோயாளர் அவசர காவு,வண்டிகளின் பற்றாக்குறை, என்பது காலம்காலமாக தீர்க்கப்படாமலே காணப்படுகிறது.குறிப்பாக கற்பிணி தாய்மாரின் குழந்தை பேற்றுக்காக அவர்களை யாழ்பாபாணம்,மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தால் சுமார் 2 மணி நேரம் எடுக்கும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளரின் நிலை மிகவும் அச்சத்திற்கு உரியதாக காணப்படுகிறது. ஆகவே எமது மாவட்ட வைத்திய சாலைகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீராத்துவையுங்கள்.
எமது வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட வைத்தியர்கள். இற்றைவரை வந்து பணிப்பொறுப்பை ஏற்கவில்லை. கடந்த முறை அமைச்சர் அவர்களே உங்களது மன்னார் விஜயத்தின் போது CCT SCAN இயந்திரம் ஒன்றை தருவதாக அந்த CCT உறுதியளித்திருந்தீர்கள் ,ஆனால் அந்த இயந்திரத்திற்கான கட்டடம் இருந்தும் அது எமக்கு நிரந்தரமாக வழங்கப்படாத குறை உள்ளது. CCT SCAN இயந்திரத்தை நிரந்தரமாக பெற்றுதாதருவதாக உறுதியளித்துள்ளீர்கள். அத்தோடு எமது வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகளை வழங்கி முல்லை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களது கவனத்தை செலுத்துங்கள்.

உண்மையிலே எமது வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையை பாராட்டுகிறேன். மன்னார் வைத்தியசாலையில் மக்கள் போக பயன்படுகிறார்கள் ,தயங்குகிறார்கள். வைத்தியசாலையில் உயிரோடு அனுமதிக்கப்பட்டால் பிரதேமாகத்தான் வரவேண்டும் என்று அச்சப்படும் நிலை தொடர்கின்றது. உயிரற்ற உடலாக வந்துவிடுவோமோ என்ற அவநம்பிக்கை அங்கே நிலவுகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தேறும் நேரத்தில் வைத்தியசாலையையும், பணிபுரியும் வைத்தியர்களையும் மக்கள் சூழ்ந்துகொள்ளுகிறார்கள். தவறுக்கான காரணங்களை கேட்கிறார்கள். ஆனால் வைத்தியசாலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாதிருக்கின்ற முல்லை மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் எப்படி தத்தமது கடமைகளை சிறப்பாக ஆற்ற முடியும்?

உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் இருந்து தமிழ் மொழி தெரியாத சிங்கள வைத்தியர்கள் எமது பிரதேசங்களில் மனமுவந்து ஆற்றும் சேவைக்காக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். ஆனால் தமிழ் வைத்தியர்கள் தத்தமது பல்கலைக்கழக பட்டம் பெற்றதன் பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லுகிறார்கள். இந்த நிலையில் சிங்கள வைத்தியர்கள், தாதியர்களுக்கு எனது பாராட்டுகள்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிற வைத்தியசாலையாக அது இனம்காணப்பட்டுள்ளது. சேவை செய்ய பனிக்கப்படுகின்ற வைத்தியர்கள் அங்கே சென்று 6 மாதங்கள் அல்லது 1 வருட காலப்பகுதியிலோ மாற்றத்தை பெற்று திரும்பி செல்லுகின்ற நிலை மன்னார் வைத்தியசாலையில் காணப்படுகிறது. ஆகவே கஸ்ரப்பிரதேசத்தில் இருந்து அந்த வைத்தியசாலை நீக்கப்பட்டு சகலவசதிகளோடும் இயங்கும் போதுதான் சேவையாற்ற நிரந்தரமாக வைத்தியர்கள் வருகைதரும் சந்தர்ப்பங்கள் காணப்படும். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றம் கேட்டு அதனை பெற்று விலகிச்செல்லுகிறார்கள். இவ் ஆளனி விடயங்கள் சம்பந்தமாக கெளரவ அமைச்சர் அவர்களது கூடுதல் கவனம் இருக்கவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
இந்திய அரசாங்கத்தால் முல்லைத்தீவு மற்றும் மன்னார் அரச வைத்தியசாலைகளுக்கு உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. மன்னாரில் இறுதியாக பிரதம செயலாளர் கையொப்பமிட்டுள்ள வகையில் காலதாமதம் செய்யாமல் அதனை உடனே அமுல்படுத்தவேண்டும் என்று அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அமைச்சர் அவர்களே ஆண்டுதோறும் அண்ணளவாக 2208 நோயாளர்கள் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்ற அபாயநிலை காணப்படுகிறது. ஆகவே இந்த விடயத்திலே கூடுதலான கவனத்தை எடுக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு அதாவது ,JVP ,NPP அரசாங்கம் என்பது அடிப்படை மக்கள் மத்தியில் இருந்து உருவாகிய ஒரு ,நீங்கள் ஒவ்வொருவரும் கட்டமைப்போடு உருவாகியவர்கள் நீங்கள் ஆகவே எமது மக்கள் வைத்தியசாலைகளுக்கு அதிகாலை 05:00 மணிக்கு வருகிறார்கள் அவர்கள் தமது உணவைக்கூட உண்ண முடியாத நிலையில் மதியம் 01:00 வணி வரை தத்தமது மருந்துப்பொருட்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை பரிசோதனை செய்யாமலேயே எழுதப்பட்ட மருந்துகளை வழங்குவது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. ஆகவே இந்த விடயத்திலும் அமைச்சர் அவர்களே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். எமது முல்லைத்தீவு மற்றும் மன்னாரையும் நீங்கள் உங்களது இரு கண்களாகவே பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இறுதியாக உண்மையிலே ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதாவது இங்கே பலபேர் உண்மையில் எனக்கும் உளரீதியான உடன்பாடில்லை. ஏனென்றால் நான் ஆயுதமேந்தி போராடியவன் என்ற அடிப்படையிலே இந்த மாகாண சபைக்குள்ளான வைத்தியசாலைகள், நடுவன் அரசுக்கு செல்லுவது என்பது பலபேரும் எதிர்த்துக்கொண்டிருக்கிற இந்த நிலையிலே எங்களது மன்னார் மாவட்ட மக்களுடைய அவநம்பிக்கை இந்த மாகாண சபை இப்பொழுது இருக்கின்ற இந்த மாகாண சபையினூடாக நிதிகள் கொடுக்கப்படும் விடயங்கள் கூட காலதாமதமாகி கவனிப்பாரற்ற ஒரு சூழலை காணுகின்ற அந்த நிலையிலே மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளை நடுவன் அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நடுவன் அரசு தனதாகாகிக்கொள்ளும் நிலையில் தான் மக்களது அடிப்படை எதிர்பார்ப்பு அதாவது வைத்தியசாலையில் இருந்து உயிரோடு திரும்பிவருவோம் என்ற அந்த நம்பிக்கையை நீங்கள் உண்டுபண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

Posted in Uncategorized

எம்மிடம் பிரதேசவாதம் கிடையாது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுமுறையையும் திட்டமிடலையுமே நாம் கோருகின்றோம் – தவிசாளர் நிரோஷ் பதில்

நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நாம் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் குற்றஞ்சாட்டுவதில் உண்மை கிடையாது. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையோ அல்லது எமது மக்களோ அவ்வாறான மனநிலையில் இல்லை. நாம் வெள்ளத்தினை அகற்றவதில் அனர்த்த முகாமைத்துவக் கொள்கை ரீதியில் சமநிலையையே பின்பற்றகின்றோம். இந் நிலையில் இக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மறுத்துள்ளார்.

ஏற்கனவே வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான இருபாலை, கல்வியங்காடு பிரதேசத்தின் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில் குடியிருக்க முடியாதவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வெள்ளத்தினை அகற்ற முடியாதுள்ளது.

அவ்வாறான சூழ்நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முறையான தீர்வை முன்வைக்காது தாழ் நிலம் என்ற காரணத்திற்காக ஏனைய பகுதிகளின் நீரை குறித்த குடியிருப்புக்களுள் முழுமையாக வெட்டி விட முடியாது. அவ்வாறு வெட்டி விடுவதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை வலி கிழக்கின் இருபாலை மற்றும் நல்லூர் பிரதேச சபைக்கும் வலி கிழக்கிற்குமான கல்வியங்காடு பகுதி மக்களை குடி எழுப்புதாக அது அமையும். வெள்ளம் ஒரிடத்தில் நிற்கக் கூடாது என்பதற்காக ஒரு பகுதி மக்கள் குடியிருப்பினை வெள்ளக்காடாக மாற்ற முடியாது. அனர்த்த முகாமைத்துவக்கொள்கையும் அறிவு சார் அணுகுமுறையையும் நாம் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

வெள்ளம் வழிந்தோடும் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தம்போது ஒருபகுதி மக்கள் பாதிக்கப்படாது பரவலாக வெள்ள சமநிலை ஒன்றை பேணும் கொள்கையை நாம் கொண்டுண்டுள்ளோம். இதே அணுகுமுறை புத்தார் கிழக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு – தெற்கு பகுதிகளிலும் பின்பற்றப்படுகின்றது. இங்கு பிரதேச சபை எல்லை வேறுபாடுகள் கிடையாது. கட்சி அரசியல்வேறுபாடுகள் கிடையாது. ஒருதரப்பினர் முழுமையாகப் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை ஒரு தரப்பிற்காக அல்லது வசதி படைத்தவர்களுக்குச் சாதகமாக மாற்றிவிடமுடியாது.

ஏற்கனவே நல்லூர் பிரதேச சபையில் இருந்து வெள்ள நீரை வலிகாமம் கிழக்கிற்குள் கொண்டு வருவதற்கான வாய்க்கால் கட்டுமானம் பற்றிய சம்பாசணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது தாழ் நிலமாக உள்ள வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில் தடையில்லை ஆனால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மக்கள் குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக் கூடிய இடங்களுக்கான கால்வாய்கள் பொறிமுறைகள் உரியவாறு அறிவுசார் நிபுணர் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான பெரும் நிதியை தேடுகின்றோம்.

தற்போதைய அனர்த்தத்தில் கூட மேற்படி வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்டபோது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில் தடைகளை ஏற்படுத்தவில்லை. நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கின் ஒருபகுதி மக்களே சென்று நேரில் எதிர்த்தனர். அதனாலேயே வாய்க்கால் வெட்டுவது தடைப்பட்டது. மேற்படி வாய்க்கால் பிரச்சினையில் பிரதேச வேறுபாடுகள் கிடையாது. வட்டாரங்களின் அடிப்படையில் கல்வியங்காடு எமது சபைக்குரிய வட்டாரம் அதன் வெள்ளமும் மேற்படி வாய்காலினுடாக வெளியேறவேண்டும். அதுபோல வெள்ளம் தாக்கக் கூடிய பகுதியில் நல்லூர் பிரதேச வட்டாரமும் அடங்கியுள்ளது. ஆகவே இங்கு மக்கள் கேட்பதும் நாம் செயற்படுவதும் அனர்த்த முiகாமைத்துவத்தின் அடிப்படையில் குறைந்த பட்ச பாதிப்பு சமநிலையை பேணுவதற்கே. அதனை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். சகலருக்கும் பாதிப்பள்ளது. அது வேதனையானது. பிரதான வீதிகளினை அடிப்படையாகக் கொண்டு மட்டும் நாம் நடவடிக்கை எடுத்து உட் கிராமங்களை நாம் வெள்ளத்தில் மூழ்கவிடமுடியாது. குடியிருப்புக்களையும் நிலத்தடி நீர் முகாமைத்தவத்திலும் எமக்கு கரிசனை வேண்டும்.