இந்தியாவின் கரத்தை இறுக்கப் பிடிப்பதுதான் எமது நாட்டுக்கு நல்லது அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார்

இக்கட்டான நிலையில் நாட்டு மக்களுக்காக இரவிரவாக தூங்காது பணிசெய்யும் ஒரு ஜனாதிபதியை இந்த நாடும் நாமும் பெற்றதற்காக பெரு மகிழ்ச்சியடைகின்றேன். அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். பாகுபாடுகள் வேண்டாம். எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது. அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் பெருந்தோட்டத்துறை, சமூக உட்கட்டமைப்பு அமைச்சு, வர்த்தகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி , திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இயற்கை அனர்த்தத்திற்கு அரசாங்கத்தை குற்றஞ்சாட்ட முடியாது. தற்போதைய நெருக்கடியில் இருந்து எவ்வாறு மீளலாம் என்ற ஆலோசனைகளை அனைவரும் முன்வைக்க வேண்டும். அரசாங்கத்தை விமர்சிக்கும் நேரம் இதுவல்ல. ஜனாதிபதிக்கு நான் நன்றி கூறுகின்றேன். இரவு பகலாக அவர் முழு மூச்சாக செயற்படுகின்றார்.அவருக்கும் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எமது அயல் நாடான இந்தியாவுடன் அரசாங்கம் இணக்கமாகவே செயற்பட வேண்டும். இந்தியாதான் எங்களுக்கு முதலில் உதவி செய்யும் நாடு. எனவே இந்தியாவின் கரத்தை இறுக்கப் பிடிப்பதுதான் எமது நாட்டுக்கு நல்லது. இந்தியப் பிரதமர் , தமிழ் நாட்டு முதலமைச்சர் ஆகியோருக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றி கூறுகின்றேன்.

எமது வன்னி மாவட்டத்தில் அரச அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை, நகரசபை தவிசாளர்கள் , உறுப்பினர்கள், தொண்டர்கள் முப்படையினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கை அனர்த்தத்தால் மன்னார் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தை கவனத்திற் கொள்ளுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். விவசாயிகள், கடற் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஒரு வீட்டுக்கு 25000 ரூபா கொடுக்கப்படுவதை அறிந்த மகிழ்ச்சி, இன்னும் கொஞ்சம் அந்தத்தொகையை அதிகரிக்க வேண்டும் எமது பிரதேச சபை, நகரசபைகளின் தவிசாளர்கள் இயற்கை அனர்த்தம் தொடர்பில் முழு மூச்சாக செயற்படுகின்றார்கள் அவர்களுக்கும் நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

அனர்த்தம் ஒன்று ஏற்படும் போது 100 வீதம் ஒரு வேலையை பூரணமாக செய்ய முடியாது. ஒரு சில குறைகள் இருக்கும். எனவே அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஆகவே குறைகளை மாத்திரம் குறிப்பிட்டுக் கொண்டிருக்காதீர்கள். இக்கட்டான நிலையில் இருந்து மீள்வதற்கான ஆலோசனைகளை முன்வையுங்கள்.

அரசாங்கத்துடன் இணைந்து புது நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் தயார். எல்லோரும் இயற்கையால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவோம். பாகுபாடுகள் வேண்டாம்.எதிர்க்கட்சிகள் என்பதற்காக எல்லாவற்றையும் எதிர்க்காதீர்கள். நாம் அன்று சபையிலிருந்து வெளிநடப்பு செய்த்து எமக்கு நேரம் தரவில்லை என்பதற்காக மட்டுமே. அரசாங்கத்துடன் எவ்வித கோபமும் கிடையாது.அரசாங்கத்தின் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்வோம் என்றார்.

பாதிக்கப்பட்ட மக்கள் வன்னி மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளார்கள் அரசாங்கம் உங்களது கவனத்தை செலுத்துங்கள்

22/11/2025 சனிக்கிழமை பாரளுமன்ற அமர்வில் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்தின் சார்பாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் ஆற்றிய உரை.

ஊடகத்துறையில் தமது அர்பணிபான ஊடக தர்மத்தை கொண்டிருந்த சிவராம்,நடேசன் ,சுகிர்தராஜன் மற்றும் ஊடகத்துறையில் தமது உயிரை அர்பணித்த எமது அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.

ஊடகத்துறையானது, அரசியல்வாதிகள் ,அரசாங்கம் , மற்றும் பொதுவான வர்த்தகதுறை சார்ந்ததாக இருப்பினும் அவற்றுக்கு இன்றியமையாததாக காணப்படுவதுடன் ,இவ் ஊடகத்துறையானது எமது விடயங்களை மக்கள் மத்தியில் அதன் உண்மை தன்மையுடன் கொண்டு செல்கின்ற தார்மீக பொறுப்பை கொண்டுள்ளது.இவற்றுள் சரியானதாகவும் , உண்மையை வெளிக்கொணரும் ஊடகங்களும், உண்மைக்கு புறம்பானதாக செயற்படும் சிலதும் காணப்படுகிறது.

ஊடகவியலாளர்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சனைகள் காணப்படுகிறது ,குறிப்பாக ஊடகவியலாளர்களுக்கு வீட்டுத்திட்ட வசதிகள் இல்லை, நிரந்தர வருமானத்தை தீர்மானிக்கும் வகையில் அவர்களுக்கான கொடுப்பனவுகள் ,அவர்களது ஊதியங்கள் வழங்கப்படவேண்டும்.முக்கியமாக ஊடகவியலாளர்களுக்கான ஓய்வூதியம் வழங்கப்படவேண்டும். ஊடக துறை சாந்தவர்களுக்கான வங்கிகளில் கடன் மறுக்கப்படுகின்ற நிலை மாற்றப்படவேண்டும்.

அடிப்படை மக்கள் மத்தியில் இருந்து வந்திருக்கின்ற இந்த அரசாங்கம் அடிப்படை மக்கள் அடிப்படை மக்களுடைய தேவைகளை கண்டுகொள்கின்ற இங்கிருக்கும் ஒவ்வொருவரும் அதனை உணர்ந்த அரசாங்கம் என்றதன் அடிப்படையில் இந்த ஊடகத்துறையில் தங்களது கவனம் அவசியம் இருக்கவேண்டும் .

சுகாதாரத்துறையை பொறுத்தவரையில் எமது வன்னி மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முக்கியமாக நடைபெற்ற போரால் பாதிக்கப்பட்டு உள ரீதியான பாதிப்புக்குள்ளான மக்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எமது பிரதேசங்களில் அமைந்துள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் செயற்பாடுகள் மந்தகதியில் இயங்குவதை அமைச்சர் அவர்களது கவனத்திற்கு கொண்டுவருகிறேன்.

குறிப்பாக முல்லை மற்றும் மன்னார் மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள மாவட்ட ஆதார வைத்தியசாலைகள் மக்களது சுகாதார தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாத நிலைகள் காணபாபடுகிறது.வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்திய அதிகாரிகள்,தாதியர் மற்றும் ஊழியர்கள் மிகுந்த அர்பணிப்புள்ள சேவையை வழங்கிவரும் நிலையில் வைத்தியசாலையில் பெளதீக வழங்கள் ,மருத்துவ உபகரணங்கள் ,தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகள் மற்றும் பரூந்துபொருட்கள் என்பன அற்ற நிலைகளே தொடர்கின்றது.

இந்த விடயத்தில் எமது பிரதேச வைத்திய சாலைகளில் உள்ள சில விடயங்களை சுட்டிக்காட்ட விளைகிறேன் அந்த வகையில் ஆளனி பற்றாக்குறை ,கட்டடங்களது தேவைகள் ,மருத்துவ சேவைக்கான முக்கிய இயந்திரங்கள் அற்ற நிலையே காணப்படுகிறது.எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் உயர்ஸ்தானிகராக இருக்கலாம் ,வன்னி மாவட்டங்களுக்கு,வருகைதருவது மிக மிக குறைவாகவே காணப்படுகிறது.அமைச்சர்கள் ,அரசாங்க பிரதிநிதிகள் வன்னி மாவட்டங்களை வந்து அவற்றின் தேவைகளை ,குறைகளை நீக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக இருக்கிறது.

பாதிக்கப்பட்ட மக்கள் எமது வன்னி மாவட்டங்களில் தான் அதிகமாக உள்ளார்கள்.A9 வீதியூடாக யாழ்ப்பானத்திற்கு,விஜயம் மேற்கொள்ளும் அரசாங்க அமைச்சர்கள்,உயர்ஸ்தானிகர்கள் எமது வன்னி மாவட்டங்களுக்கு வருகைதரூவது மிகக்குறைவாகவே காணப்படும் நிலை தொடர்கிறது.அமைச்சர்களுடைய வருகை அந்தந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளூமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தாமலே நடைபெறுகிறது அமைச்சர்களது வருகை தெரியப்படுத்தப்படல் வேண்டும்.
வைத்தியசாலைகளில் மனித வளங்களை எடுத்து,நோக்குவோமாக இருந்தால் எமது வைத்தியசாலையில் மயக்கவியல் நிபுணர் சம்மந்தமாக பலமுறை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்தும் மயக்கவியல் நிபுணர்கள் மாற்றம் வழங்கப்பட்ட நிலையில் அவர்கள் இரண்டு பிரதேசங்களில் பணியாற்றுகிறார்கள் அங்கிருந்து மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் இன்றுவரை அவர்கள் பணிப்பொறுப்பை ஏற்கவில்லை வைச்சிய கலாநிதி, .M.D.D சில்வா அம்பாறை மாவட்டத்தில் இருந்தும் வைத்திய கலாநிதி ,D.K.R.கனங்கரா எம்பலப்பிட்டியவிலிருந்தும் வருகைதரவில்லை.

எமது,முல்லை,மன்னார் போன்ற பிரதேசங்களில் Ambulance நோயாளர் அவசர காவு,வண்டிகளின் பற்றாக்குறை, என்பது காலம்காலமாக தீர்க்கப்படாமலே காணப்படுகிறது.குறிப்பாக கற்பிணி தாய்மாரின் குழந்தை பேற்றுக்காக அவர்களை யாழ்பாபாணம்,மற்றும் வவுனியா வைத்தியசாலைகளுக்கு மாற்றவேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கின்றது.யாழ்ப்பாணம் செல்வதாக இருந்தால் சுமார் 2 மணி நேரம் எடுக்கும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் நோயாளரின் நிலை மிகவும் அச்சத்திற்கு உரியதாக காணப்படுகிறது. ஆகவே எமது மாவட்ட வைத்திய சாலைகளில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை தீராத்துவையுங்கள்.
எமது வைத்தியசாலைகளுக்கு மாற்றம் செய்யப்பட்ட வைத்தியர்கள். இற்றைவரை வந்து பணிப்பொறுப்பை ஏற்கவில்லை. கடந்த முறை அமைச்சர் அவர்களே உங்களது மன்னார் விஜயத்தின் போது CCT SCAN இயந்திரம் ஒன்றை தருவதாக அந்த CCT உறுதியளித்திருந்தீர்கள் ,ஆனால் அந்த இயந்திரத்திற்கான கட்டடம் இருந்தும் அது எமக்கு நிரந்தரமாக வழங்கப்படாத குறை உள்ளது. CCT SCAN இயந்திரத்தை நிரந்தரமாக பெற்றுதாதருவதாக உறுதியளித்துள்ளீர்கள். அத்தோடு எமது வைத்தியசாலைகளின் அடிப்படை தேவைகளை வழங்கி முல்லை மற்றும் மன்னார் மாவட்டங்களில் உங்களது கவனத்தை செலுத்துங்கள்.

உண்மையிலே எமது வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவையை பாராட்டுகிறேன். மன்னார் வைத்தியசாலையில் மக்கள் போக பயன்படுகிறார்கள் ,தயங்குகிறார்கள். வைத்தியசாலையில் உயிரோடு அனுமதிக்கப்பட்டால் பிரதேமாகத்தான் வரவேண்டும் என்று அச்சப்படும் நிலை தொடர்கின்றது. உயிரற்ற உடலாக வந்துவிடுவோமோ என்ற அவநம்பிக்கை அங்கே நிலவுகிறது. ஏதாவது அசம்பாவிதம் நடந்தேறும் நேரத்தில் வைத்தியசாலையையும், பணிபுரியும் வைத்தியர்களையும் மக்கள் சூழ்ந்துகொள்ளுகிறார்கள். தவறுக்கான காரணங்களை கேட்கிறார்கள். ஆனால் வைத்தியசாலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இல்லாதிருக்கின்ற முல்லை மற்றும் மன்னார் வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் எப்படி தத்தமது கடமைகளை சிறப்பாக ஆற்ற முடியும்?

உளரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தென்னிலங்கையில் இருந்து தமிழ் மொழி தெரியாத சிங்கள வைத்தியர்கள் எமது பிரதேசங்களில் மனமுவந்து ஆற்றும் சேவைக்காக எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுகின்றேன். ஆனால் தமிழ் வைத்தியர்கள் தத்தமது பல்கலைக்கழக பட்டம் பெற்றதன் பின்னர் வெளிநாடுகளுக்கு செல்லுகிறார்கள். இந்த நிலையில் சிங்கள வைத்தியர்கள், தாதியர்களுக்கு எனது பாராட்டுகள்.

மன்னார் மாவட்டத்தை பொறுத்தவரையில் வறுமை கோட்டிற்கு கீழே இருக்கிற வைத்தியசாலையாக அது இனம்காணப்பட்டுள்ளது. சேவை செய்ய பனிக்கப்படுகின்ற வைத்தியர்கள் அங்கே சென்று 6 மாதங்கள் அல்லது 1 வருட காலப்பகுதியிலோ மாற்றத்தை பெற்று திரும்பி செல்லுகின்ற நிலை மன்னார் வைத்தியசாலையில் காணப்படுகிறது. ஆகவே கஸ்ரப்பிரதேசத்தில் இருந்து அந்த வைத்தியசாலை நீக்கப்பட்டு சகலவசதிகளோடும் இயங்கும் போதுதான் சேவையாற்ற நிரந்தரமாக வைத்தியர்கள் வருகைதரும் சந்தர்ப்பங்கள் காணப்படும். தாங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றம் கேட்டு அதனை பெற்று விலகிச்செல்லுகிறார்கள். இவ் ஆளனி விடயங்கள் சம்பந்தமாக கெளரவ அமைச்சர் அவர்களது கூடுதல் கவனம் இருக்கவேண்டும் என்பதே எனது கோரிக்கை.
இந்திய அரசாங்கத்தால் முல்லைத்தீவு மற்றும் மன்னார் அரச வைத்தியசாலைகளுக்கு உதவி கிடைக்கப்பெற்றுள்ளது. மன்னாரில் இறுதியாக பிரதம செயலாளர் கையொப்பமிட்டுள்ள வகையில் காலதாமதம் செய்யாமல் அதனை உடனே அமுல்படுத்தவேண்டும் என்று அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்ளுகின்றேன்.

அமைச்சர் அவர்களே ஆண்டுதோறும் அண்ணளவாக 2208 நோயாளர்கள் பிற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுகின்ற அபாயநிலை காணப்படுகிறது. ஆகவே இந்த விடயத்திலே கூடுதலான கவனத்தை எடுக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை நான் முன்வைக்கின்றேன். அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு அதாவது ,JVP ,NPP அரசாங்கம் என்பது அடிப்படை மக்கள் மத்தியில் இருந்து உருவாகிய ஒரு ,நீங்கள் ஒவ்வொருவரும் கட்டமைப்போடு உருவாகியவர்கள் நீங்கள் ஆகவே எமது மக்கள் வைத்தியசாலைகளுக்கு அதிகாலை 05:00 மணிக்கு வருகிறார்கள் அவர்கள் தமது உணவைக்கூட உண்ண முடியாத நிலையில் மதியம் 01:00 வணி வரை தத்தமது மருந்துப்பொருட்களை பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்களை பரிசோதனை செய்யாமலேயே எழுதப்பட்ட மருந்துகளை வழங்குவது வாடிக்கையாக நிகழ்ந்துவருகிறது. ஆகவே இந்த விடயத்திலும் அமைச்சர் அவர்களே நீங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். எமது முல்லைத்தீவு மற்றும் மன்னாரையும் நீங்கள் உங்களது இரு கண்களாகவே பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

இறுதியாக உண்மையிலே ஒரு விடயத்தை குறிப்பிட வேண்டும். அதாவது இங்கே பலபேர் உண்மையில் எனக்கும் உளரீதியான உடன்பாடில்லை. ஏனென்றால் நான் ஆயுதமேந்தி போராடியவன் என்ற அடிப்படையிலே இந்த மாகாண சபைக்குள்ளான வைத்தியசாலைகள், நடுவன் அரசுக்கு செல்லுவது என்பது பலபேரும் எதிர்த்துக்கொண்டிருக்கிற இந்த நிலையிலே எங்களது மன்னார் மாவட்ட மக்களுடைய அவநம்பிக்கை இந்த மாகாண சபை இப்பொழுது இருக்கின்ற இந்த மாகாண சபையினூடாக நிதிகள் கொடுக்கப்படும் விடயங்கள் கூட காலதாமதமாகி கவனிப்பாரற்ற ஒரு சூழலை காணுகின்ற அந்த நிலையிலே மன்னார் மற்றும் முல்லைத்தீவு வைத்தியசாலைகளை நடுவன் அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவற்றை நடுவன் அரசு தனதாகாகிக்கொள்ளும் நிலையில் தான் மக்களது அடிப்படை எதிர்பார்ப்பு அதாவது வைத்தியசாலையில் இருந்து உயிரோடு திரும்பிவருவோம் என்ற அந்த நம்பிக்கையை நீங்கள் உண்டுபண்ண வேண்டும் என்று கேட்டுக்கொள்ளுகின்றேன்.

Posted in Uncategorized

எம்மிடம் பிரதேசவாதம் கிடையாது. வெள்ள நீரை வெளியேற்றுவதில் அறிவுசார் அணுமுறையையும் திட்டமிடலையுமே நாம் கோருகின்றோம் – தவிசாளர் நிரோஷ் பதில்

நல்லூர் பிரதேச வெள்ள நீர் வலிகாமம் கிழக்கு பிரதேசத்திற்குள் உள் நுழையக்கூடாது என்று நாம் செயற்படுவதாக கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன் அவர்கள் குற்றஞ்சாட்டுவதில் உண்மை கிடையாது. வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையோ அல்லது எமது மக்களோ அவ்வாறான மனநிலையில் இல்லை. நாம் வெள்ளத்தினை அகற்றவதில் அனர்த்த முகாமைத்துவக் கொள்கை ரீதியில் சமநிலையையே பின்பற்றகின்றோம். இந் நிலையில் இக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் மறுத்துள்ளார்.

ஏற்கனவே வலிகாமம் கிழக்கில் புவியியல் அமைப்பில் தாழ் நிலமான இருபாலை, கல்வியங்காடு பிரதேசத்தின் பகுதிகளில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளில் குடியிருக்க முடியாதவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அப் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் வெள்ளத்தினை அகற்ற முடியாதுள்ளது.

அவ்வாறான சூழ்நிலையில் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு முறையான தீர்வை முன்வைக்காது தாழ் நிலம் என்ற காரணத்திற்காக ஏனைய பகுதிகளின் நீரை குறித்த குடியிருப்புக்களுள் முழுமையாக வெட்டி விட முடியாது. அவ்வாறு வெட்டி விடுவதனால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களை வலி கிழக்கின் இருபாலை மற்றும் நல்லூர் பிரதேச சபைக்கும் வலி கிழக்கிற்குமான கல்வியங்காடு பகுதி மக்களை குடி எழுப்புதாக அது அமையும். வெள்ளம் ஒரிடத்தில் நிற்கக் கூடாது என்பதற்காக ஒரு பகுதி மக்கள் குடியிருப்பினை வெள்ளக்காடாக மாற்ற முடியாது. அனர்த்த முகாமைத்துவக்கொள்கையும் அறிவு சார் அணுகுமுறையையும் நாம் பொறுப்புடன் பின்பற்ற வேண்டும்.

வெள்ளம் வழிந்தோடும் செயற்பாட்டினை நடைமுறைப்படுத்தம்போது ஒருபகுதி மக்கள் பாதிக்கப்படாது பரவலாக வெள்ள சமநிலை ஒன்றை பேணும் கொள்கையை நாம் கொண்டுண்டுள்ளோம். இதே அணுகுமுறை புத்தார் கிழக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு – தெற்கு பகுதிகளிலும் பின்பற்றப்படுகின்றது. இங்கு பிரதேச சபை எல்லை வேறுபாடுகள் கிடையாது. கட்சி அரசியல்வேறுபாடுகள் கிடையாது. ஒருதரப்பினர் முழுமையாகப் பாதிக்கப்படக்கூடாது என்ற அடிப்படையில் அனர்த்த முகாமைத்துவ பொறிமுறையை ஒரு தரப்பிற்காக அல்லது வசதி படைத்தவர்களுக்குச் சாதகமாக மாற்றிவிடமுடியாது.

ஏற்கனவே நல்லூர் பிரதேச சபையில் இருந்து வெள்ள நீரை வலிகாமம் கிழக்கிற்குள் கொண்டு வருவதற்கான வாய்க்கால் கட்டுமானம் பற்றிய சம்பாசணைகள் ஆரம்பிக்கப்பட்டபோது தாழ் நிலமாக உள்ள வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் நீரை கொண்டுவருவதில் தடையில்லை ஆனால் வலிகாமம் கிழக்குப் பகுதியில் இருக்கின்ற மக்கள் குடியெழுப்பப்படாது முதலில் வலிகாமம் கிழக்குப் பகுதிக்குள் வெள்ளம் தேங்கக் கூடிய இடங்களுக்கான கால்வாய்கள் பொறிமுறைகள் உரியவாறு அறிவுசார் நிபுணர் அறிக்கை பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். அதற்கான பெரும் நிதியை தேடுகின்றோம்.

தற்போதைய அனர்த்தத்தில் கூட மேற்படி வாய்கால் வெட்டப்பட முயற்சி எடுக்கப்பட்டபோது எனக்கோ அல்லது எமது சபைக்கோ உறுப்பினர்களுக்கோ தெரியாது. நாம் அதில் தடைகளை ஏற்படுத்தவில்லை. நல்லூர் மற்றும் வலிகாமம் கிழக்கின் ஒருபகுதி மக்களே சென்று நேரில் எதிர்த்தனர். அதனாலேயே வாய்க்கால் வெட்டுவது தடைப்பட்டது. மேற்படி வாய்க்கால் பிரச்சினையில் பிரதேச வேறுபாடுகள் கிடையாது. வட்டாரங்களின் அடிப்படையில் கல்வியங்காடு எமது சபைக்குரிய வட்டாரம் அதன் வெள்ளமும் மேற்படி வாய்காலினுடாக வெளியேறவேண்டும். அதுபோல வெள்ளம் தாக்கக் கூடிய பகுதியில் நல்லூர் பிரதேச வட்டாரமும் அடங்கியுள்ளது. ஆகவே இங்கு மக்கள் கேட்பதும் நாம் செயற்படுவதும் அனர்த்த முiகாமைத்துவத்தின் அடிப்படையில் குறைந்த பட்ச பாதிப்பு சமநிலையை பேணுவதற்கே. அதனை சகலரும் புரிந்துகொள்ள வேண்டும். சகலருக்கும் பாதிப்பள்ளது. அது வேதனையானது. பிரதான வீதிகளினை அடிப்படையாகக் கொண்டு மட்டும் நாம் நடவடிக்கை எடுத்து உட் கிராமங்களை நாம் வெள்ளத்தில் மூழ்கவிடமுடியாது. குடியிருப்புக்களையும் நிலத்தடி நீர் முகாமைத்தவத்திலும் எமக்கு கரிசனை வேண்டும்.

இந்திய உதவிக்கு நன்றி மேலதிக உதவி கோரி ரெலோ இந்திய துணை உயர்ஸ்தானிகருடன் சந்திப்பு

இந்திய உதவிக்கு நன்றி தெரிவித்ததுடன் மேலதிக உதவிகளுக்கான கோரிக்கையும் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) கட்சியால் முன்வைப்பு.

இன்று 2-12-2025 செவ்வாய்கிழமை மதியம் 2:00 மணியளவில் இந்திய துணை உயர் ஸ்தானிகர் அவர்களை தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் அவர்களும் , கட்சியின் பேச்சாளர் திரு. சுரேந்திரன் அவர்களும் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி சந்திப்பில் நாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அதி விரைவாக மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரண வேலைகளிலும் இந்தியா முன்னின்று செயல்பட்டு வரும் நிலையில் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது.

நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர் கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது.

அதே போன்று நடைபெற்ற எதிர்பாராத பாரிய அனர்த்தத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ள வேளையில் உடனடியாக இந்தியா அதிதீவிர மீட்பு மற்றும் நிவாரண வேலைகளில் முன்னின்று செயல்படுகிறது.

எமது அயல் நாடாக இந்தியா எப்பொழுதும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேலதிக கோரிக்கைகளும் ரெலோ கட்சியால் முன்வைக்கப்பட்டது.

வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கும், குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றிற்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டதுடன்,

உடனடி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம் என்றும், அதே வேளை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உடனடியாக கட்டி எழுப்ப வேண்டிய தேவையையும் எடுத்துக் கூறிய ரெலோ தரப்பினர், பயிர்களை இழந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளும், மீனவர்கள் வலைகளை,கடற்றொழில் உபகரணங்களை ,கடற்கலங்களை பறிகொடுத்தும் ,சிறு முயற்சியாளர்கள் கால்நடைகள் மற்றும் கோழி வளர்ப்பு உட்பட பல முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டியதோடு அடுத்த கட்டமாக வாழ்வாதாரத்தை மீட்கின்ற உதவி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவின் உதவிக்கரம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளிள் துரித கதியில் செயல்படுவதற்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில் பாதிக்கப்பட்டவர்களுடைய வாழ்வாதார மீட்புப் பணிகளும் அடுத்த கட்ட அவசரமான விடயமாக இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் ரெலோ கட்சி முன்வைத்து மேற்படி சந்திப்பு நிறைவுற்றது.

Posted in Uncategorized

நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறிய ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி

மக்களின் நலன்சார்ந்த நிவாரன பணிகள் சம்மந்தமாக எமக்கு சந்தர்ப்பம் வழங்கபடவேண்டும் என்ற கோரிக்கை மறுக்கப்பட்டது

டிட்வா புயலின் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை மற்றும் அனர்த்தம் காரணமாக குறிப்பாக எமது வன்னி மாவட்டங்களில் எமது மக்கள் அனுபவிக்கும் துன்ப ,துயரங்கள், அவற்றில் இருந்து மீளுவதற்கான எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறுபட்ட விடயங்களை 1/12/2925 தினம் பாராளுமன்ற அமர்வில் எமது சார்பில் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள்,மற்றும் நேர ஒதுக்கீடுகள் என்பன வழங்கப்படவேண்டும் என்று கோரிக்கையை நாம் முன்வைத்திருந்தோம்.

ஆனால் எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கை மறுக்கப்பட்டதன் காரணத்தால் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்ப்பு சார்பில் இன்றைய விவாதத்தில் இருந்து வெளிநடப்பு செய்கின்றேன்.

அ.அடைக்கலநாதன்.
தலைவர்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ )
வன்னி பாராளுமன்ற உறுப்பினர்.

Posted in Uncategorized

வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை – தவிசாளர் நிரோஸ்!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது.

அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலையை நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை.

பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை. இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு பலரும் திண்டாடுகின்றார்கள்.

முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறிருந்தபோதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதிவகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந் நிலையில் உனடி உதவிகளை வழங்கத்தவர்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ தலைமையில் வியாழக்கிழமை மாதாந்த அமர்வு நடைபெற்றது.

இவ் அமர்வில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் அடையாளங்களினையும் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதாகத் தெரிவிக்கின்றபோதும் அது சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டதாகவும் ஒத்தோடுவதாகவுமே உள்ளது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தவிசாளரினால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. மேலதிகமாக இவ் விடயம் தொடர்பில் அவசரதீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர் இ.கஜிபனினால் தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றும் சபையில் முன்வைக்கப்பட்து.

சபையின் இத் தீர்மானத்திற்கு தாம் ஒருபோதும் ஆதரவு அளிக்க முடியாது என தேசியமக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக தவிசாளருடன் வாதிட்டனர். பின்னர் இத் தீர்மானத்தில் அரசாங்கம் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை முன்னெடுக்கின்றது என்ற கருத்தினை நீக்கவேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதேச சபைக்கு புத்தர் சிலை பற்றிய தீர்மானத்தினை முன்வைக்கமுடியாது. இச்சபை அபிவிருத்திக்கான அலகு. ஆகவே வலிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட அபிவிருத்தி விடயங்களை மட்டுமே பார்க்கவேண்டிய சபை எதற்காக இங்கே புத்தர் சிலை பற்றி முன்வைக்கின்றீர்கள் எனவும் கடுமையாக தேசியமக்கள் சக்தியினர் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த விகாரை விடயத்தில் நடந்துகொண்ட விடயத்தினை எதிர்த்தனர். வரலாற்று ரீதியில் மாறிமாறி வரும் அரசாங்கங்களின் இனவாத நீட்சியே நடக்கின்றது என சகல தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் வாதிட்டனர். இந் நிலையில் சபையில் அமளிதுமளி நீடித்தது.

சபையினை அமைதிப்படுத்திய தவிசாளர், பொலிசார் மீளவும் பேரினவாத நோக்கில் அமைக்கப்பட்ட பௌத்த சிலையை அகற்றிவிட்டு மீண்டும் பக்குவமாக அரசு நிறுவியது. இராணுவம் பாதுகாப்பளித்தது. பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் மீயுயர் சபையில் தம்மால் மீள சிலை அகற்றப்படவில்லை எனவும் பாதுகாப்பிற்காகவே சிலை நகர்த்தப்பட்டதாகவும் மீள நிறுவப்படும் என அறிவித்தார். இவைகள் அரசாங்கத்தின் நடத்தைகள் கிடையாதா? கொள்கை கிடையாதா? தமிழ் மக்களை ஒடுக்கிவிட்டு சகித்துவாழக்கோருவதில் என்ன நியாயம் எனக்கேள்வி எழுப்பியதுடன் தேசிய மக்கள் சக்தி எதிர்த்தால் வாக்கெடுப்பின் ஊடாக தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்றார்.

இவ்விடயத்தில் அரசாங்கத்தினை குற்றஞ்சாட்டி முன்வைக்கப்படும் பிரேரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தேசிய மக்கள் சக்தியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையில் இருந்து அரசாங்கத்தினை நியாயப்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தியவாறு வெளிநடப்புச் செய்தனர். சபை ஆசனங்களில் இருந்து எழுந்து சென்று தமது எதிர்ப்பினை காட்டினர். இந் நிலையில் இப் பிரேரணையில் எவருக்காவது ஆட்சேபனைகள் உள்ளவா எனத் தவிசாளர் கேள்வி எழுப்பினார். பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் நடைபெற்றது தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஆக்கிரமிப்பு என பிரேரணையின் மீது கருத்துரைத்தனர்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரேரணையினை வலுப்படுத்தம் கவனயீர்ப்பு கருத்துக்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

Posted in Uncategorized

வன்னியில் ஒரேயொரு சிகையலங்கார கடையே இராணுவம் நடத்துகிறது விபரமறியா பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிமல் ஆதாரத்துடன் செல்வம் MP விளக்கம் 

பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் விவாதத்தில் இராணுவத்தினர் எமது தாயக பகுதிகளில் கட்டட உபகரணங்கள் விற்பனை நிலையம் , உணவு நிலையங்கள், மற்றும் சிகை அலங்கார நிலையங்களை நடாத்திவருகிறார்கள் என்றும் அவர்களால் ஈட்டப்படும் வருமானங்களை யார் ஈட்டிக்கொள்ளுகிறார்கள் என்ற கேள்வி  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ  செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கெளரவ அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் அவர்களும் வன்னியில் ஒரேயொரு சிகை அலங்கார நிலையம் மட்டும் இராணுவத்தால் கையாளப்பட்டு வருவதாக கூறியிருந்தனர்.

அவர்களின் கூற்று உண்மைக்கு புறப்பானதாக காணப்படுவதுடன் சிகை அலங்கார சங்கங்களின் சம்மேளனம் எமது தாயக பகுதிகளில் எங்கெங்கே இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விற்பனை நிலையங்கள் தொடர்பாகவும் அவை அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை என்பன அடங்கலான முழுமையான தரவுகளை வழங்கியுள்ள நிலையில் மேற்படி தரவுகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் அமைச்சர் கெளரவ விமல் ரத்நாயக்க அவர்களுக்கு அவசர கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

முகநூலில் பிழைப்பு நடத்தும் ஜந்துக்கள் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்-ரெலோ

இணையவழி ஊடக வாயிலாகவும், போலியான முகநூல் கணக்கினூடாகவும், யூடியுப் ஊடாவும் சட்டத்தை கையில் எடுத்து என்னைப்பற்றி தவறான செய்தியை வெளியிடுவது எனக்கு பாரதூரமான களங்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையற்ற, ஆதாரமற்ற பொய்யான இச்செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் இவ்வாறான செயல் எனது பாரளுமன்ற சிறப்புரிமையை மீறும், அவமதிக்கும் நடவடிக்கையாக உள்ளதால் இதுதொடர்பில் கவனத்தில் எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

என்னைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்திகளை, இணையவழி ஊடக வாயிலாகவும், போலியான முகநூல் கணக்கினூடாகவும், யூடியுப் ஊடாவும் எனது பெயருக்கும், பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக சில தனி நபர்களாலும் ஐ.பி.சி எனப்படும், ஊடகத்தாலும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தற்கொலை செய்து இறந்த ஒருவரது மரணத்தை என்னுடன் சம்பந்தப்படுத்தி, கொலை செய்யப்பட்டார் என பொய்ப் பிரசாரம் செய்யப் படுகிறது.மேலும் பொய்யான தனித்தனியாக, துண்டு துண்டாக பதிவு செய்யப்பட்ட தொலை பேசி உரையாடல் குரல் பதிவுகளை, வெட்டியும் ஒட்டியும் திரிபு படுத்தியும் தவறாக சித்திரித்தும் எனக்கு எதிராக பயன்படுத்தி போலி முகநூல்களில் பரப்பபட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு முகநூல்களில் பதிவேற்றியமையால் எனது கௌரவத்திற்கும், தனிப்பட்ட மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் பொது மக்கள் மத்தியிலும், அரசியல் பரப்பிலும்,சர்வதேச மட்டத்திலும் பங்கம் விளைவிப்பதோடு தவறான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனால் நான் பெரிதும் மன உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளாகியுள்ளேன்.

யாழ்ப்பாணம் நகரத்தில், பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் பிரித்தானிய, லண்டன் நகரை பதிவாக கொண்ட, இணையவழி ஊடகம் சில தனி நபர்களை அழைத்து எனக்கு எதிரான மேற்கூறிய கருந்துக்களை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளது

இவ்வூடகத்திற்கு பாதுகாப்பு தரப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அனுமதி இல்லாமல் இந்த ஊடகம் இயங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.அத்துடன் காலைக்கதிர் எனும் இணையவழி மஞ்சள் ஊடகம் 11-11-2025 வெளியிடப்பட்ட வெளியீட்டில் எனது பெயரைக் குறிப்பிட்டு நான் கைது செய்யப்படுவது உறுதி என செய்தி வெளிட்டுள்ளனர்.

இவ்வாறான பொய்யான தகவல்கள் பாராளுமன்ற சிறப்புரிமையினை (பாராளுமன்ற சிறப்புரிமை அதிகார சட்டம் ) சட்டத் 22 (2) பிரிவினை மீறும் செயற்பாடாகும் இவ்வாறான சட்டமீறல் குற்றவியல் தண்டனைகோவை சட்டத்தின் 90 ஆவது பிரிவினை மீறுகிறது என்பதனையும் அதனமூலம் மேல் நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டிய குற்றமாகும்.

இவர்கள் சட்டத்தை கையில் எடுத்து தவறான செய்தியை வெளியிடுவது பாரதூரமான களங்கத்தை எனக்கு ஏற்படுத்துகிறது உண்மையற்ற,ஆதாரமற்ற பொய்யான இச்செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் இவர்களின் செயல் எனது பாரளுமன்ற சிறப்புரிமையை மீறும், அவமதிக்கும் நடவடிக்கையாக உள்ளதால், மேற்படி விடயத்தினை சிறப்புரிமை குழுவிற்கு ஆற்றுப்படுதி எனக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் MP

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அவதானிக்கும்போது இந்த வருடத்தின் கடைசி நேரத்தில்தான் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றது. எங்களின் அதிகாரிகள் அந்த நிதியை திருப்பி அனுப்பி விடக்கூடாது என்று இரவு பகலாக ஓடி உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் கடந்த வரவு செலவுத் திட்டத்தை நல்ல வரவு செலவுத் திட்டமென அறிவித்தமை பிழையானது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன்.

ஏனென்றால், வருடத்தின் கடைசி காலப்பகுதி மழைக்காலம் என்பதனால் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்த முயலும்போது பல்வேறு விடயங்கள் முதலில் கையாளப்பட வேண்டும் என்பது எமது ஆலோசனையாகும்.

வனஜீவராசிகள் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக உள்ளது. ஏதேனும் விடயத்தை எங்கள் பிரதேசத்தில் செய்ய வேண்டும் என்றால் அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அபிவிருத்திக்கு கூடுதாலான பணத்தை ஒதுக்கினாலும் அந்த அபிவிருத்தி தடைபடுகின்றது என்றால் வனஇலாகா திணைக்களமும் அதற்கு காரணமாகும்.

பாரியளவிலான விவசாய காணிகளை அந்த திணைக்களம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இது தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இதுவே நடக்கின்றது. வீட்டுத் திட்டம்,விவசாயிகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் என்பன இந்த திணைக்களங்களால் தடைப்படுகின்றது. அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் இதனை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த திணைக்களம் தனியான அரசாங்கம் போன்று செயற்படுகின்றது. எதற்கும் அடங்குவதாக இல்லை. எவ்வளவு நிதியை ஒதுக்கினாலும் இந்த திணைக்களங்களில் மிக மோசமான செயற்பாடுகளால் அந்த அபிவிருத்திகள் நடக்காது.

அபிவிருத்தியில் நாங்கள் இப்போதுதான் முன்னேறி வருகின்றோம். எமது அயல் நாடான இந்தியா நிதியை வழங்க முனைகின்ற போது ஏன் அதனை தடுக்கின்றீர்கள். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்ற தரத்திற்கு கொண்டு வர ஏன் மறுக்கpன்றீர்கள். காங்கேசன்துறை கப்பல்துறை முயற்சியை ஏன் மறுக்கின்றீர்கள்.

தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பல் போக்குவரத்து சேவை திட்டத்தை ஏன் தாமதப்படுத்துகின்றீர்னள். சுற்றுலாத்துறையே எமது நாட்டுக்கு கைகொடுக்கின்றது. இந்த விடயத்தில் எமக்கு உதவுவதற்கு இந்தியா வருகின்ற போது வடக்கு என்ற காரணத்தால் அதனை நிறுத்துகின்றீர்களா? .இந்த விடயத்தை இனம் சார்ந்த விடயமாக பார்க்கின்றீர்களா? இந்தியா தனது உதவியை நீட்டுகின்ற போது கைபிடித்து பொருளாதார நிலைமையை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும் இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்கள் முதலீடு செய்யும் போது பயங்கரவாத தடைச்சட்டம் இருக்குமாக இருந்தால் அந்த முதலீடு எப்படி வந்தது அது விடுதலைப் புலிகளின் பணமா? என்று விசாரிக்கலாம் என்பதனால் எவரும் வருவதற்கு அச்சப்படுகின்றனர். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இதனை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனை செய்யாவிட்டால் பொருளாதாரம் முன்னேற்றமடையாது என்றே கூற வேண்டும் என்றார்.

Posted in Uncategorized