கொழும்பில் இந்திய தூதுவரின் வீட்டை வீடியோ பதிவு செய்த பாகிஸ்தானியர்கள்

இந்திய உயர்ஸ்தானிகரின் கொழும்பு தேஷ்டன் வீதியில் அமைந்துள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை காணொளியாக பதிவு செய்த மூன்று பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் கணனி பொறியியலாளர் ஒருவரும் இருப்பதாகவும் இவர்கள் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை நாட்டில் இருந்து வெளியேற தடைவிதித்து கொழும்பு கோட்டை நீதவான் நேற்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இவர்கள் மூவரும் முச்சக்கர வண்டியில் சென்றுக்கொண்டிருந்த போது மேல் குறிப்பிட்ட இடத்தில் வண்டியை நிறுத்தி இந்திய உயர்ஸ்தானிகரின் இல்லத்தை காணொளியாக பதிவு செய்ததாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து கமராக்களில் அந்த காட்சிகள் இருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்றா எதிர்பார்க்கின்றீர்கள்? – நாடாளுமன்றில் ரிஷாட் கேள்வி

இனவாதத்தையும் மதவாதத்தையும் மூலதனமாக வைத்துகொண்டு நீண்டகாலம் ஆட்சி செய்ய முடியாது எனவும், அரசுக்கு வாக்களித்த மக்கள் கூட இன்று வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இன்று (16) நாடாளுமன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது,

இன்று நாட்டு மக்கள் பெரிதும் கஷ்டப்படுகின்றார்கள். நீங்கள் உங்கள் தொகுதிகளுக்கு சென்று அந்த மக்களுடன் உரையாடினீர்கள் என்றால் விவசாயிகள் படுகின்ற வேதனைகள் புரியும். அரசாங்கத்தை உருவாக்கிய விவசாயிகள் கூட தங்களது எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்ற அச்சத்தில் காலம் கடத்துகின்றார்கள். அவர்களின் அன்றாடத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாமல் தவிக்கின்றனர். இன்று பாதையில் நிற்கும் அத்தனை பேரும் அரசுக்கு எதிரானவர்கள் அல்ல. அரசுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் பெரும்பாலானோர், எதிராக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அவர்களின் தேவைப்பாட்டை நிறைவேற்றக் கூடிய வகையில், உங்கள் உள்ளத்தில் மாற்றம் வர வேண்டும்.

இந்த வரவு செலவுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் பாதுகாப்பு விடயத்துக்காக நிதி அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு என்று கூறும் போது, வெறுமனே ஆயுத ரீதியானது மட்டுமின்றி ஒரு மனிதனின் உணவு, வறுமையை நீக்குதல், இருப்பிட வசதி, சுகாதார வசதி, கல்வி மற்றும் இன்னோரன்ன விடயங்களை வழங்குவதும் கூட பாதுகாப்புடன் தொடர்புபட்டதே. எனவே, அந்த விடயத்துக்கு இந்த வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கீடுகள் போதாமையாக உள்ளது.

இந்த அரசாங்கம் மட்டுமின்றி, கடந்த காலங்களிலும் வரவு செலவு திட்டத்தை பார்க்கும் போது, தேர்தலை மையமாக வைத்துக்கொண்டோ, கட்சியை வளர்ப்பதற்காகவோ செயற்பட்டதனால்தான், 70 வருடங்களுக்கு முன்னர் நாம் சுதந்திரத்தைப் பெற்ற போதும், இன்னும் அதலபாதாளத்தில் இருக்கின்றோம். இதனால்தான் ஒவ்வொரு வருடமும் நமது நாட்டின் கடன் சுமை அதிகரித்துக்கொண்டே போகின்றது. பொருளாதாரம் சீரழிகின்றது. உலக வரைபடத்திலே வறுமையான நாடாக பதியப்பட்டுள்ளது. எனவேதான், இந்த நிலையை மாற்றுவார் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சுமார் 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அந்த நம்பிக்கையில்தான் பாராளுமன்றத் தேர்தலிலே கிட்டத்தட்ட 142 ஆசனங்கள், அதாவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறக்கூடிய வகையில் அவரது அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

நமது பாராளுமன்றத்திலே இருக்கின்ற மூத்த அரசியல்வாதிதான் மஹிந்த ராஜபக்ஷ. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடத்திலும் பாராளுமன்றத்திலும் இருந்த அதிகாரங்கள், இருபதாவது திருத்தத்தின் ஊடாக ஜனாதிபதியிடம் கைமாறப்பட்டது. மஹிந்த ராஜபக்ஷ என்ற ஒரு நாமம் இலங்கையின் அரசியல் வரலாற்றில் பேசப்பட்ட ஒன்று. அவரது அரசாங்கத்தில் ஒன்பது வருடங்களாக நானும் இணைந்து பணியாற்றியிருக்கின்றேன். அவரது தேர்தல்களிலே அவருக்கு பக்கபலமாக இருந்தவன் என்ற வகையிலே அவரது அமைச்சரவையிலே சுமார் ஒன்பது வருடங்கள் பணியாற்றியவன் என்ற வகையில் அவரிடம் இருந்த தூர சிந்தனையை நாம் கண்டோம்.

நாட்டைப் பற்றிய கவலைகளை அவரிடம் கண்டோம். நாட்டின் பொருளாதாரம் பற்றிய திட்டங்களைக் கண்டோம். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற சிந்தனையைக் கண்டோம். ஆனால், இன்று மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஒரமாக்கப்பட்டுவிட்டாரா? என்று கூட எண்ணத் தோன்றுகின்றது. அவரது கருத்துக்களுக்கு இடமில்லையா என்ற கேள்வியும் எமக்கு எழுகின்றது. ஏனெனில், இந்த இரு வருட கால ஆட்சியையும் மகிந்தவின் ஒன்பது வருட ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, மலையும் மடுவும் போல இருக்கின்றது. மிகவும் வித்தியாசமாக இருக்கின்றது. மக்களின் வெறுப்பை மிகவும் விரைவாக சம்பாதித்த அரசாக இது மாறியுள்ளது. எதை எடுத்தாலும் இனவாதம், மதவாதமாக பார்க்கின்ற ஒரு நிலை.

இதன் மூலம் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலையே ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலின் போது சமத்துவம் என்ற தொனிப்பொருளைக் கொண்டுவந்து, “ஒரே நாட்டு ஒரே சட்டம்” என்று கூறினார்கள். இந்த நாடு ஒரே நாடே. இரு நாடுகள் அல்ல. யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இது ஒரே நாடுதான். இந்த நாடு ஒரே நாடாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, நான் சார்ந்த முஸ்லிம் சமூகமும் சகோதரச் சமூகங்களான சிங்கள, தமிழ் சமூகங்களும் இணைந்தி சுதந்திரத்துக்காகப் போராடி, அதை பெற்றுக்கொண்டோம். இந்த ஒரே நாட்டிலே முஸ்லிம்களுக்கான தனியார் சட்டங்கள் அவர்களுடைய தனித்துவக் கலாச்சார விழுமியங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தன. அதுபோல, தேச வழமை மற்றும் கண்டியச் சட்டங்களும் நடைமுறையில் இருந்தன. இதனை அன்று தொடக்கம் எல்லோரும் அங்கீகரித்ததுடன் நீதிமன்றங்களிலும் அவை பிரயோகிக்கப்பட்டன.

இந்த நாட்டிலே பயங்கரவாதம் உருவெடுத்த போதும், நாட்டிலுள்ள பெரும்பாலானவர்கள் அதனை எதிர்த்து ஒற்றுமையை பேணியதே கடந்தகால வரலாறு. இப்போது அவற்றை எல்லாம் புறந்தள்ளிவிட்டு “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற தூரநோக்கு இல்லாத ஒரு கொள்கையை அறிமுகப்படுத்தி, அதுவும், அல்லாஹ்வை மிக மோசமாக கேவலப்படுத்திய ஒருவரை அதன் தலைவராக ஆக்கியுள்ளீர்கள். உலகின் இரண்டு பில்லியன் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ்வை, ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி எனக் கூறி, அவரை ஏசிய ஒருவரை இவ்வாறு தலைவராக ஆக்கியுள்ளீர்களே. அதுமட்டுமின்றி, நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டு, சிறையில் இருந்து பின்னர் ஜனாதிபதி மைத்திரிபாலவினால் மன்னிப்பளிக்கப்பட்ட ஒருவரையே, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக நியமித்துள்ளீர்கள். இதன் மூலம் நீங்கள் எதனை சாதிக்க நினைக்கின்றீர்கள்? இந்த நாட்டில் வாழும் இருபது இலட்சம் முஸ்லிம்களை பயமுறுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? அல்லது பெரும்பான்மை மக்களை சந்தோஷப்படுத்தலாம் என்று நினைக்கின்றீர்களா? எதிர்மாறாக பெரும்பான்மை சிவில் சமூகம் கூட இதனை எதிர்க்கும் நிலை இன்று வந்துள்ளதே.

இந்த இருவருட காலத்தில் நீங்கள் மிகவும் சண்டித்தனமான ஆட்சியே நடத்துகின்றீர்கள். நான் சிறையில் இருந்து பாராளுமன்றத்துக்கு வந்து, எனது கருத்தைக் கூட கூற முடியாது தடுத்தீர்கள்.. ஒரு ஜனநாயகக் கட்சியின் தலைவனாக, ஜனநாயகவாதியாக மக்கள் தந்த ஆணையில் இங்கு வந்திருக்கும் நான், எனக்கு நடந்த அநியாயத்தை கூற விடாமல் மறுக்கின்ற விரோதப் போக்குடன் செயற்பட்டீர்கள். இவைகள் எல்லாம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது என்பதை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

கடந்த கால ஆட்சியாளர்கள் உங்களை சிறையில் அடைத்தார்கள் என்றீர்கள். இவ்வாறான சிறையடைப்புக்\கு நாங்களா காரணம்? நாங்கள் இருதரப்புடனும் பங்காளிகளாக இருந்திருக்கின்றோம். நியாயத்தின் பக்கம் நின்றிருக்கின்றோம். நாட்டின் அபிவிருத்திக்கு துணை செய்திருக்கின்றோம். நாட்டின் பாதுகாப்புக்கு பக்கபலமாக இருந்திருக்கின்றோம். அனைத்து நல்ல விடயங்களுக்=கும் ஆட்சியாளர்களுடன் கைகோர்த்திருக்கின்றோம்.

இந்த பட்ஜெட்டிலே சில விடயங்களை நீங்கள் மறைமுகமாகக் கொண்டு வந்து மக்களுக்கு சுமையை கொடுத்திருக்கின்றீர்கள். இந்த நாட்டிலே டொலர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்னும் நான்கைந்து மாதங்களுக்குப் பின்னர் என்ன நடக்குமென்று தெரியாது.

எனவே, இவ்வாறான நிலையிலே இனவாதத்தை கிளறி, நாட்டைக் குட்டிச்சுவராக்காதீர்கள். சட்டத்தை எல்லோருக்கும் சமமாகப் பிரயோகியுங்கள். அப்போதுதான் நாடு முன்னேற்றமடையும். வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும். கடந்த காலங்களில் மலேசியா, அபுதாபி போன்றவை பாரிய முதலீடுகளை செய்தனர். நான் அமைச்சராக இருந்த போது, கட்டார் ஒரு பில்லியன் முதலீடு செய்ய தயாரானது. ஓமான் மற்றும் பல இஸ்லாமிய நாடுகள் இவ்வாறு தயாராக இருந்தன. அந்த நாடுகளைப் பொறுத்தவரையில் இந்த நாட்டிலே வேறு எந்த எண்ணத்தையும் அதாவது, வளங்களை சூறையாட வேண்டும் என்ற கபட நோக்கம் இருந்ததில்லை. இந்த நாட்டில் சமாதானம், அபிவிருத்தி ஆகியவற்றை மட்டுமே சிந்திக்கின்ற இஸ்லாமிய நாடுகள் கூட, “ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற செயலணியின் தலைவராக முஸ்லிம்களின் இறைவனை நிந்தித்த ஒருவரை ஏற்றுக்கொள்வார்களா? எனவே, இவற்றை எல்லாம் நீங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு நீண்டகாலம் அரசியல் செய்ய முடியாது என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ளுங்கள்.

இன்னுமொரு விடயத்தையும் நான் கூற வேண்டும். அண்மையில் நடந்த திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் சட்டமாணி நுழைவுப் பரீட்சையின் வினாத்தாள்கள் பரீட்சைக்கு முன்னரேயே வெளியாகின. இது தொடர்பில், நீதி அமைச்சரும் கல்வி அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், அண்மையில் புத்தளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக புத்தளம் மாவட்ட மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர். அவர்களின் நிவாரணக் கொடுப்பனவுகள் மற்றும் பாதிப்புக்களை சரிசெய்வது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

Posted in Uncategorized

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் மாபெரும் பேரணி

ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் திட்டமிட்டவாறு கொழும்பில் இன்று (16) நடைபெற்றது.

எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டப் பேரணி ஆரம்பமானது.

சமையல் எரிவாயு, பால் மா, அரிசி, மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உர தட்டுப்பாட்டால் விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கொள்ளுப்பிட்டிசந்தி வரை பேரணியாக வந்தவர்கள் காலி முகத்திடல் நோக்கி பயணித்தனர்.

பின்னர் காலிமுகத்திடல் சுற்றுவட்டத்தில் ஒன்றுகூடினர்.

இதனிடையே வாகனங்களில் கொழும்பிற்கு வருகை தருவோரை மட்டுப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கொழும்பு – களுத்துறை மாவட்ட எல்லையில் அமைந்துள்ள பாணந்துறை வீதித்தடையில் கொழும்பு நோக்கி பயணித்த அனைத்து பஸ்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

ஹைலெவல் வீதியில் பயணித்த பஸ்கள் நுகேகொடை மேம்பாலத்திற்கு அருகில் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

அரலகங்கில பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் அணியினர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதேவேளை, பொலன்னறுவை, மணம்பிட்டி, கத்துறுவெல ஆகிய பிரதேசங்களிலும் மக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நாட்டில் பல பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு கொழும்பிற்கு வரும் வாகனங்கள் பொலிஸாரால் பரிசோதிக்கப்பட்டன.

எதிர்க்கட்சியின் எதிர்ப்பு பேரணியினை முன்னெடுப்பதற்கு பல இடங்களில் பொலிஸாரால் இடையூறு ஏற்பட்டது.

குருநாகல் – ஹிரிபிட்டிய, குருநாகல் – மாவத்தகம, வாரியபொல, பலாங்கொடை, ஹல்துமுல்ல மற்றும் நொச்சியாகம உள்ளிட்ட பகுதிகளில் இடையூறு ஏற்பட்டது.

கொழும்பிற்கு வருகை தர முடியாமற்போனோர், பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

பெந்தோட்டை பகுதியிலும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் அநுராதபுரத்தில் இருந்து வருகை தந்த ஐக்கிய மக்கள் சக்தி குழுவினருக்கு அநுராதபுர எல்லையயை கடப்பதற்கு ராஜாங்கனை பொலிஸாரால் அனுமதி வழங்கப்படவில்லை.

ஊவா, சப்ரகமுவ மாகாண நுழைவாயிலில் ஹல்தமுல்ல, மரங்கஹவெல பிரதேசத்திலும் கொழும்பிற்கு வருகை தந்த வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல – அரசாங்கம்

இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சீன கப்பலில் உரங்களை தவிர ஆயுதங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் குறித்த கப்பல் கடற்பரப்பில் பயணிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை இல்லை என கூறினார்.

இதேவேளை மாகாண சபைகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

Posted in Uncategorized

இராவணனிடம் விமானம் இருந்ததா – ஆரம்பமாகும் ஆய்வு

இலங்கை வேந்தன் இராவணனிடம் விமானம் இருந்தாகவும் அதில் இந்தியாவரை அவர் பறந்தாகவும் இராமாயணத்தில் உள்ள குறிப்புக்கள் தொடர்பாக இலங்கை அரசு ஆய்வுகளை நடாத்தவுள்ளது.

இந்த ஆய்வு பணிகளில் இந்தியாவும் இணைந்து பங்கேற்க அந்நாட்டு ஆய்வாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இலங்கையின் அரசனான இராவணன் விமானம் வைத்து இருந்ததாகவும், அதில் இந்தியாவுக்கு பறந்து வந்து சீதையை கடத்தி சென்றதாகவும், இராமாயணத்தில் குறிப்புகள் உள்ளன.

இராமாயணத்தை புனையப்பட்ட இதிகாசம் என சிலர் புறந்தள்ளினாலும், இராவணன் என்ற அரசன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இலங்கையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, இராவணன் ஆட்சியின்போது இலங்கையில் விமானங்கள் மற்றும் விமான நிலையங்கள் இருந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது குறித்து, கொழும்பு நகரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதில், விமான போக்குவரத்து துறை நிபுணர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், புவியியலாளர்கள் பங்கேற்றனர்.

Posted in Uncategorized

PTA மீளாய்வுக் குழுவால் ஜனாதிபதிக்கு அறிக்கை

1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து இன்று (15) கையளிக்கப்பட்டது.

அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021 ஜூன் 24ஆம் திகதியன்று, மேற்படி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.

பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சட்ட வரைவாளர் தில்ருக்ஷி சமரவீர, நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பியுமந்தி பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, வெளிவிவகார அமைச்சின் பிரதி சட்ட ஆலோசகர் திலானி சில்வா, வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மஹேஷா ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க, இந்த அதிகாரிகள் குழுவின்
செயலாளராகச் செயற்பட்டார்.

Posted in Uncategorized

சீனாவின் சின்தாவோ நகர் – கண்டி நகர் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை

சீனாவின் சிந்தாவோ நகருக்கும் கண்டி நகருக்கும் இடையில் இன்று (15) புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

இலங்கைக்கான சீனத் தூதுவரும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன், கண்டி மற்றும் சிந்தோவோ மேயர்கள் Online ஊடாக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

நகரங்களுக்கு இடையில் கல்வித்துறை, பொருளாதார தொடர்பு, தொழில்நுட்ப அறிவு, கலாசார மத விவகாரங்கள் மற்றும் விளையாட்டு தொடர்பிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்த உடன்படிக்கையூடாக எதிர்பார்க்கப்படுவதாக கண்டி மாநகர மேயர் கேசர சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

அமெரிக்க இராஜாங்கத்திணைக்கள உயரதிகாரி உயர்மட்டத்தலைவர்களுடன் முக்கிய கலந்துரையாடல்

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் கெல்லி கெய்டர்லிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்திருப்பதுடன் நாட்டின் உயர்மட்டத்தலைவர்களை பலரை சந்தித்துப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தவுள்ளார்.

கெல்லி கெய்டர்லிங்கின் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்கத்தூதரக விவகாரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி மார்ட்டின் கெல்லி அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளார்.

அதில் இலங்கைக்கு வருகைதந்திருக்கும் அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளரை வரவேற்பதாகத் தெரிவித்துள்ள அவர், கெல்லி இலங்கையில் இருக்கும் காலப்பகுதியில் உயர்மட்டத்தலைவர்கள் மற்றும் அதிகாரிகளை சந்திப்பதுடன் இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் இருநாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்புகளை மேலும் வலுப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்களை முன்னெடுப்பார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க இராஜாங்கத்திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலாளர் தெற்று மற்றும் மத்திய ஆசிய விவகாரப்பணியகத்தின் பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கான பொது இராஜதந்திர துணைச்செயலாளராவார்.

கடந்த 2016 – 2019 ஆம் ஆண்டுவரை உருகுவே நாட்டிற்கான அமெரிக்கத்தூதுவராகவும் 2019 – 2021 ஆம் ஆண்டுவரை தேசிய போர்க்கல்லூரியில் பிரதிக்கட்டளைத்தளபதியாகவும் சர்வதேச விவகார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள அவர், நாட்டின் பொருளாதாரம் முன்நோக்கிப்பயணிப்பதற்கான பங்களிப்பை வழங்கிவரும் ‘குட் மார்க்கெட்’ முயற்சியாண்மையின் இணை ஸ்தாபகரை நேற்றைய தினம் சந்தித்துக் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட்டாலே நிரந்தர தீர்வு காண முடியும்- ரெலோ

இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் இணைந்து ஒருமித்த நிலைப்பாட்டில் செயற்பட்டு சர்வதேச ஆதரவினை பெற்றாலே நிரந்தர தீர்வுகாண முடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கில் காணி அபகரிப்பு மற்றும் சிங்கள குடியேற்றங்கள் தொடர்பில் இலக்கு ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில்,

‘வடக்கு, கிழக்கு தாயக பூமியிலே எங்கள் இனக்குடிபரம்பலை சிதைப்பதற்கும், எங்களுடைய பிரதிநிதித்துவங்களை குறைப்பதற்கும், எங்கள் தாயக பூமியை கூறு போடுவதற்குமான, திட்டமிட்ட காணி அபகரிப்பும், அந்த காணி அபகரிப்பின் ஊடாக, சிங்கள குடியேற்றங்களை கொண்டு வந்து, நிறுவுவதற்கான முயற்சியையும் அரசாங்கம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

கடந்த 11ம் திகதி பாராளுமன்றத்திலே இது சம்பந்தமான எதிர்ப்புக் குரல் எழுப்பப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டமிட்ட குடியேற்றங்களை நிறுவுவதற்கு எதிராக முன்னெடுக்கப்பட இருக்கின்ற போராட்டத்திற்கு, தமிழீழ விடுதலை இயக்கம் தன்னுடைய முற்றுமுழுதான ஆதரவினை வழங்கும். இந்த போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து எங்கள் காணி நிலங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாய சூழலில் இன்று இருக்கின்றோம்.

இதைத் தாண்டி நாங்கள் பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பதும், தொடர்ந்து இதற்கு எதிராக போராடுவதும் என்பது நிரந்தர தீர்வாக அமையாது.

எங்களுடைய மாகாண சபை சொற்ப அதிகாரங்களோடு செயல்பட்டுக் கொண்டிருந்த போது கூட கடந்த காலங்களில் இப்படியான காணி அபகரிப்பையும், குடியேற்றங்களையும் நிறுத்தி இருந்தது.

இந்த மாகாண சபை அதிகாரங்களை எங்களுடைய அரசியல் தீர்வை எட்டும் வரைக்கும், 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் வந்த இந்த மாகாண சபை அதிகாரங்களை, நிரந்தரமாக, மீளப் பெறப்பட முடியாத, காணி அதிகாரங்களை, பெற்றுக்கொள்வதன் மூலம் தான் இந்த பிரச்சனைக்கான நிரந்தர விடிவை நாங்கள் காணமுடியும்.

அதற்கான ஒரு பாரிய அரசியல் நகர்வு ஒன்றை நாங்கள் இப்பொழுது மேற்கொண்டிருக்கிறோம். மேலும் 13ம் திருத்தச் சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபையை, பலப்படுத்தி நிரந்தரமான அதிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான அரசியல் நகர்வினை மேற்கொண்டருக்கிறோம்.

இந்த நகர்விலே இது அரசியல் தீர்வாக அல்ல. ஆனால், எங்களுடைய இனக்குடிப்பரம்பலை பேணுவதற்கு தற்போதைய கால சூழலில் அவசியமான ஒரு விடயமாக கருதயே இதை நாங்கள் நகர்த்தியிருக்கிறோம். இதில் இணைந்து கொள்ள அனைத்து தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகளையும் அழைத்திருக்கிறோம்.

ஆகவே எங்களுடைய அதிகார பலத்தை நாங்கள் பெற்று கொள்வதற்கும் சர்வதேச ஆதரவினை கோருவதற்கும், இலங்கை அரசாங்கத்தினுடைய இந்த செயற்பாடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்குமான எங்களுடைய அரசியல் நகர்வை இப்பொழுது வெற்றிகரமாக, நாங்கள் முன்னெடுத்து இருக்கிறோம்.

தொடர்ந்தும் எங்கள் தாயக பூமியை மீட்பதற்கான, காப்பாற்றுவதற்கான, போராட்டங்களை நடத்துவதோடு, அதற்கான, அதிகாரங்களை பெற்று நிரந்தரமாக இதற்கு ஒரு விடிவை காணுவதற்கான செயல்திட்டத்தை, தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம்.

அதில் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்ற அனைத்து அரசியல் தலைவர்களும்,அரசியல் பிரதிநிதிகளும், எங்களுடைய இந்த செயற்பாட்டில் ஒன்றிணைந்து ஒருமித்த நிலைப்பாட்டிலே, நாங்கள் சர்வதேச ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் மூலம்தான், நிரந்தரமாக இதற்கு தீர்வு காண முடியும். என்பது எங்களுடைய நிலைப்பாடு’ என மேலும் தெரிவித்துள்ளார்.

சீன உரத்தை மூன்றாம் தரப்பினர் பரிசோதிக்க இலங்கை இணக்கம் – சீன தூதரகம்

பாதகமான நுண்ணுயிர்கள் அடங்கியுள்ளமை இரு தடவைகள் உறுதிப்படுத்தப்பட்ட சீன உரத்தை மூன்றாம் தரப்பொன்றினால் மீண்டும் பரிசோதிப்பதற்கு இலங்கை இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized