ஐ.நா.வுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் , ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டாவிடம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அடிமைத்தனத்தின் தற்கால வடிவங்கள் , அதன் காரணங்கள், விளைவுகள் உள்ளிட்டவை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாரம்பரிய அடிமைத்தனம், கடன் கொத்தடிமை, கட்டாய உழைப்பு, அடிமைத்தனம் மற்றும் அடிமைத்தனம் சார்ந்த நிலைமைகளில் உள்ள சிறுவர்கள் , பாலிய அடிமைத்தனம், கட்டாய மற்றும் இள வயது திருமணங்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போன்றன விசேட அறிக்கையாளரின் ஆணையில் உள்ளடங்கும்.

இந்த சந்திப்பின் போது தொழிலாளர் நலன் தொடர்பான இலங்கையின் முன்னேற்றம் மற்றும் சிறுவர் தொழிலாளர் முறைமையை ஒழிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கலந்துரையாடினார்.

சிறுவர் தொழிலாளர்கள் , புலம்பெயர் தொழிலாளர்கள் , கடன் கொத்தடிமைகள் உட்பட பல துறைகளில் சர்வதேசத்திற்கு ஏற்ப இலங்கையின் தொழிலாளர் சட்டங்களைக் கொண்டு வருவதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அவர் விவரித்தார்.

இலங்கையை ‘சிறுவர் தொழிலாளர்கள் இல்லாத வலயமாக மாற்றுவது தொடர்பான இலங்கையின் முன்னேற்றத்தை விசேட அறிக்கையாளர் பாராட்டினார்.

பாதிக்கப்படக் கூடிய தொழிலாளர் குழுக்களை பாதுகாப்பதில் இலங்கை விழிப்புடன் இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் , ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கை தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று வலியுறுத்தினார்.

சம்பந்தப்பட்ட துறைகளில் இலங்கையின் அனுபவங்களை புரிந்து கொள்வதற்கும் , சர்வதேச அர்ப்பணிப்புக்களுக்கு இணங்க உள்நாட்டு செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கும் விசேட நடைமுறைகள் ஆணை பெற்றவர்களின் விஜயங்கள் உதவியாக இருந்தததாக அவர் குறிப்பிட்டார்.

மன்னாரில் டெங்கு காய்ச்சல் அபாயம்

மன்னார் மாவட்டத்தில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையுடன் தற்போது டெங்கு காய்ச்சலும் தீவிரமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 25 பேர் டெங்கு காய்ச்சலுடன் அடையாளங்காணப்பட்டுள்ளதாக மன்னர் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர், வைத்தியர் ரி. விநோதன் தெரிவித்துள்ளார்.

இன்று (01) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

காய்ச்சல் ஏற்பட்டவுடன் பிற சிகிச்சைகளின்றி, உடனடியாக வைத்தியசாலையை நாடுமாறும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

மின்சாரத் தடை – விரைவில் மின்சாரம் வழங்கப்படும்…!

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொத்மலை மின் உற்பத்தி நிலையம் முதல் பியகம வரையான மின் விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு இதற்கு காரணம் எனவும் மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

மாத்தறை, காலி, இரத்மலானை, குருநாகல், அதுருகிரிய, பியகம, ஹபரணை, பன்னிப்பிட்டிய உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரத் தடை இவ்வாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இந்நிலையில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

கேஸ் வெடிப்புச் சம்பவங்கள்: மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பரிந்துரைகளை பெற நடவடிக்கை

சயைமல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை மொறட்டுவை பல்கலைக்கழகத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் வெளி மாவட்டங்களிலிருந்து 20 மாதிரிகள் நேற்று (28) பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைசச்ர் தெரிவித்தார்.

இதனிடையே நேற்றைய தினமும் (28) சில பிரதேசங்களில் எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகின.

Posted in Uncategorized

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்து தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆளுகின்றது அரசு – ரெலோ செயலாளர் நாயகம் ஜனா

பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்குக் கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்றையதினம் மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தப் போராட்டமானது, முல்லைத்தீவில் இராணுவத்தினரால் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும், திருகோணமலையில் ஊடகவியலாளர் தாக்கப்பட்டமைக்கும் மேலாக தற்போதைய அரசாங்கத்தின் முன்னைய ஆட்சியின் போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் என அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் நீதி கோரும் ஒரு போராட்டமாகவே இதனைப் பார்க்கின்றோம்.

ஊடகவியலாளர்கள் உண்மையை வெளியில் கொண்டு வருபவர்கள். உண்மையை விரும்பாத இந்த அரசினால் கடந்த காலங்களிலே இவ்வாறு ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்யப்பட்டிருப்பது மாத்திரமல்லாமல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் காரணம் காட்டி இந்த நாட்டிலே ஒரு இராணுவ ஆட்சியை அமைப்பதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருப்பது கண்கூடாகத் தெரிகின்றது.

இதன் காரணமாக இறந்தவர்களைக் கூட நினைவு கூர முடியாமல் நாங்கள் நிற்கின்றோம். தெற்கிலே இறந்தவர்களைத் தாராளமாக நினைவுகூரக்கூடிய நிலை இருக்கும் போது வடக்கு கிழக்கிலே தமிழ் மக்களாகிய நாம் எமக்காக இறந்த ஆத்மாக்களுக்கு அஞ்சலி செலுத்த முடியாத ஒரு நிலையில் இருக்கின்றோம். பயங்கரவாதத் தடைச் சட்டத்தைச் சாட்டாக வைத்துக் கொண்டு இந்த அரசு தமிழ் மக்களையும், ஊடகவியலாளர்களையும் அடக்கி ஆண்டு கொடிருக்கின்றது.

இந்த அரசிற்குச் சர்வதேசத்தினால் பல அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறிக் கொண்டிருக்கின்றது. அதன் நிமித்தம் அச்சட்டத்தை மாற்றியமைக்கவுள்ளதாக அரசு தெரிவித்திருக்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கி அரசியற் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றோம்.

இந்த நாட்டிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணி ஞானசார தேரர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பல குற்றச் செயல்களைச் தமிழினத்திற்கு எதிராக கடந்த காலங்களில் செயற்படுத்தி வந்த அந்தத் தேரரை ஒரே நாடு ஒரே சட்டம் செயலணிக்கு நியமித்திருக்கின்றார்கள். புதிய அரசியலமைப்பினைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்தப் புதிய அரசியலமைப்பிலே ஒரே நாடு ஒரே சட்டம் என்ற போர்வையிலே சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்றே அது உருவாகும் என அறிய முடிகின்றது.

13வது திருத்தச் சட்டம் வடகிழக்கிற்கு மாத்திரம் தேவையானது அல்ல. 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்ப்படுத்தி அதனூடாக மாகாணங்களுக்குரிய பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் பட்சத்தில் தான் வடகிழக்கு மாத்திரம் அல்ல தெற்கில் கூட பொலிஸ் அதகாரங்களை அந்தந்த மாகாணங்கள் பயன்படுத்தி அவர்களின் பாதுகாப்பை அவர்களே உறுதிப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே சர்வதேசம் இந்த நாட்டில் நடப்பதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கின்றது. நேற்றைய நிகழ்விற்கான தடைவிதிப்பினைக் கூட சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. எனவே சர்வதேசம் இந்த நாட்டின் மீது ஒரு அழுத்தத்தை ஏற்படுத்தி இந்த நாட்டிலே அனைத்து மக்களும் சமமாக வாழ்வதற்கு ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

இந்த அடக்குமுறை தொடருமாக இருந்தால் எமது போராட்டம் தொடர்ச்சியாக இருக்கும். நாங்கள் எப்போதும் ஊடகவியலாளார்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று தெரிவித்தார்.

Posted in Uncategorized

மலையக மக்கள் ஒரு ” தேசிய இனம்” என்ற வகையில் அங்கீகரிக்கப்படவேண்டும்- தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவர் செல்வம் எம்.பி

இலங்கையில் பெருந்தோட்ட மக்கள் ஒரு தேசிய இனமாக அடையாளப்படுத்தப்படவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைத்தலைவரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவருமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

எனினும் பெருந்தோட்ட தேசிய இனத்தின் தொழில்சார் உாிமைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் அவர்களுக்கான காணி பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்றும் செல்வம் அடைக்கநாதன் கோரிக்கை விடுத்தார்.

மலையக மக்களுக்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நன்மை தரக்கூடிய அனைத்து செயற்திட்டங்களுக்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது ஆதரவை வழங்கும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இதற்கிடையில் பெருந்தோட்டங்களில் தரிசு நிலங்கள் பகிரப்படும் போது தொழிலாளர்கள் மத்தியில் அது பகிரப்படவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம் ராமேஸ்வரன் அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைத்தார்.

Posted in Uncategorized

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி மறுப்பு

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு சில நீதிமன்றங்கள் அனுமதி வழங்கியுள்ளதுடன், சில நீதிமன்றங்கள் அனுமதி மறுத்துள்ளன.

நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று வழக்கு விசாரணை இடம்பெற்றது.

மக்கள் ஒன்று கூடும் நிகழ்வுகளை நடத்த முடியாது என இதன்போது நீதவான் உத்தரவிட்டதாக கிளிநொச்சி பொலிஸ் தலைமையக பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிமன்றம் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு கடந்த 17, 23 ஆகிய திகதிகளில் வழங்கிய தடை உத்தரவை திருத்தி அமைத்து கட்டளை பிறப்பித்துள்ளது.

இதற்கமைய, தடைசெய்யப்பட்ட இயக்கமொன்றின் நிகழ்வினை நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியாதென நீதிமன்றம் அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும், இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமெனவும் முல்லைத்தீவு நீதிமன்றம், மாவீரர் நாள் தடை உத்தரவை திருத்தியமைத்துள்ளது.

மாவீரர் தினம் அனுஷ்டிப்பு தொடர்பாக மன்னார் பொலிஸாரினால் நேற்று (26) மன்னார் நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸாரால் மீண்டும் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் நேற்று (26) நிராகரிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியுமென்பதுடன், இறந்தவர் யாராக இருந்தாலும் அவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு எனவும் முல்லைத்தீவு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் உயிர் நீத்த உறவுகளுக்கு இன்று நந்திக்கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த உறவுகளின் ஆத்ம சாந்தி வேண்டி, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடுகளிலும் அவர் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிகழ்வுகளில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.

Posted in Uncategorized

மாவீர்களின் கல்லறைகளை சிதைத்து நாடே வெட்கத் தலைகுனியும் அரச பயங்கரவாதத்தை அரசே செய்தது – ரெலோ யாழ். மாவட்ட அமைப்பாளர் நிரோஷ்

கேர்ப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை அரசு படைத்தரப்பின் ஊடாக சிதை;தது நாட்டின் வரலாற்றில் வெட்கக்கேடான அரச பயங்கரவாதம் ஆகும்.போரில் இறந்தவர்களைக்கூட மலினப்படுத்தும் இனவாதமும் வெறித்தனமும் அரசிடம் நிலைத்திருப்பது மனிடத்தன்மை அல்ல. என தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தவிசாளர் நிரோஷ் தெரிவித்தார்.

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் முகமாக ஈகைச்சுடர் ஏற்றிவைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், நினைவு கூர்தல் என்பது எமது உரிமையாகும். இன்றைய நிலையில் அவ் நினைவுகூறும் உரிமையினை இராணுவ பிரசன்னங்கள், அடாவடித்தனங்கள் ஊடாக தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு மேலாக பொலிசார் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வழக்குகளையும் தாக்கல் செய்துள்ளனர்.

எமது மண்ணில் தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஆயுத ரீதியிலான அடக்கு முறைகளுக்கு எதிராக இனத்தினை பாதுகாப்பதற்காக தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களை நினைவில் கொள்கின்றோம். அவர்களது தியாகங்கள் மாவீரர்களை புனிதர்களாக்கியுள்ளது. இன்றும் இந் நாட்டில் எமது இனம் அடக்குமுறைகளில் இருந்து விடுதலை பெற போராடிக்கொண்டிருக்கின்றது.

இன்றும் கோப்பாய் உள்ளிட்ட மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவ முகாம்கள் ஆக்கப்பட்டு வித்தடல்கள் விதைக்கப்பட்ட கல்லறைகளை சிதைத்து அரசு கோரத்தாண்டவமாடியுள்ளது. உலகில் எங்குமில்லாத வன்முறை எண்ணம் இறந்தவர்களின் கல்லறையை சிதைத்த அரச இயந்திரத்திடம் தான் இருக்கின்றது. எத்தனை தடவைகள் மாவீரர் துயிலும் இல்லங்களைச் அரச படைகள் சிதைத்தன என்பதை உலகமே அறியும். அவ்வாறாக கல்லறைகளை சிதைத்த உங்களால் எமது மக்களிடத்தில் இருந்து மாவீரர்களின் தியாகங்களை அகற்ற முடியவில்லை என்பதை கொடூரமாக யுத்தத்தினை முடித்து 12 ஆண்டுகளின் கழிந்த மக்களின் உணர்வுகளில் இருந்து அரசு உணர்ந்தே வருகின்றது. இதனால் அரச கட்டமைப்பு எதிர்கொண்டிருக்கும் பயப்பீதியே சந்திக்கு சந்தியும் இராணுவத்தை நிறுத்தி மக்களை அச்சுறுத்தி அடக்க நினைப்பதற்கான காரணம் ஆகும்.

போரிட்டு மரணித்த மாவீரர்கள் ஒருபோதும் சிங்கள மக்களுக்கு எதிராகவோ அவர்களது உரிமைகளுக்கு எதிராகவோ அவர்களது தேசியத்திற்கு எதிராகவோ போரிடவில்லை. எமது இனத்தின் அடையாளங்களும் நிலமும் பூர்வீகமும் திட்டமிட்டு காலத்திற்குக் காலம் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளர்களால் அழிக்கப்பட்ட போது அதற்கு எதிராகவே போராடினர். எம் மூதாதையர் அகிம்சை வழியில் போராடிய போது அதற்கு மதிப்பளிக்காது அகிம்சை வழியையும் ஜனநாயகப் போராட்டத்தினையும் அரச பயங்கரவாதத்தின் ஊடாக நசுக்கியமையின் விளைவாகவே விடுதலைப்போராட்டம் ஆயுத மயப்படுத்தப்பட்டது.

அதில் உலகில் எங்குமில்லாத அளவுக்கு எமது மாவீரர்களின் தியாகங்கள் நிலைத்திருக்கையில் மாவீரர்களை நினைவேந்துவதும் வரலாற்றுக்கடமையும் தெய்வீகக் கடமையும் ஆகும். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் ஈகைச்சுடரினை ஏற்றி உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஊடகத்துறைக்கே நீதிவழங்க முடியாத ஜனநாயகமே நாட்டில் உள்ளது – பாராளுமன்றில் ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இன்றும் கேள்விக்குட்பட்டே ஊடக சுதந்திரம் நாட்டில் உள்ளது. படுகொலைசெய்யப்பட்ட ஊடகர் விடயத்திலேயே நீதி மறுக்கப்படுகின்றபோது என்ன ஜனநாயகம் இருக்கின்றது புர்ந்துகொள்ள முடிவதாக பாராளுமன்றில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வெளிவிவகார மற்றும் ஊடக அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தில் நேற்று வியாழக்கிழமை(25) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தொரிவித்தார்.

நாட்டின் ஜனநாயகத்தின் தூண்களில் ஒன்றான ஊடகத்துறையை பாதுகாப்பதும் ஊடகர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாடு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. நாட்டில் போர் இடம்பெற்ற காலத்திலும் அதன் பின்பாகவும் பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவை எதற்குமே நீதி கிட்டவில்லை.

தமிழ் ஊடகத்துறையில் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெளிக்கொண்டு வந்த ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுயாதீனமாக கருத்துக்களை வெளிக்கொண்டுவந்த சிங்கள, ஆங்கில ஊடகவியலாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, ஊடகவியலாளர்களான நிமலராஜன்(2000);, ஐயாத்துரை நடேசன் (2004);, தர்மரட்னம் சிவராம்(2005);, சுப்பிரமணியம் சுகிர்தராஜன் (2007), செல்வராஜா ரஜீவர்மன் (2007), லசந்த விக்கிரமதுங்க(2009), பரணிரூபசிங்கம் தேவகுமார்(2009) என நாட்டின் ஜனநாயகத்தைக் காக்கவென அயராது உழைத்த எத்தனையோ பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதுபோன்று சுப்பிரமணியம் ராமச்சந்திரன், பிரகித் எக்னலிய கொட என எத்தனையோ ஊடகவியலாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

உதயன் மற்றும் மகாராஜா ஊடக வலையமைப்பு உள்ளிட்ட பல நிறுவனங்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன. இவ்வாறாக ஊடகத்துறை மீதான அடக்கு முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிலேச்சத்தனமான கருத்துச் சுதந்திர மீறல்களும் இந் நாட்டின் கறை படிந்த வரலாறுகளாகக் காணப்படும் போது இந்த நாட்டில் இவை எவற்றுக்காவது நீதி வழங்கப்பட்டுள்ளதா எனக் கேட்க விரும்புகின்றோம்.

ஊடக படுகொலைகள் மற்றும் ஊடக நிறுவனங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கு நிச்சயமாக அரசாங்கம் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை காணப்படுகின்றது. ஆனால் தங்களது அரசாங்கத்தின் கடந்த ஆட்சியில் ஏராளமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்ட போதும் அவை அனைத்தினதும் கோவைகளும் இலாவகமாக முடப்பட்டுள்ளன. இறுதி யுத்தத்தில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் எந்த நீதியும் கிட்டாது தவிக்கின்றனர்.

நான் பிரதிநிதித்துவப்படுத்தும் வன்னி மாவட்டத்தில் கணவன் ஊடகத்துறையில் பணியாற்றியதன் காரணமாக குடும்பத்தலைவனை இழந்து பல தாய்மார்கள் வாழ்வாதாரம் கூட இன்றி இன்னல் படுகின்றனர். தங்களது குடும்பத்தினை வாழ்வாதார ரீதியாகக் காப்பாற்ற வேண்டிய கணவனை, தந்தையை இழந்த நிலையில் மெனிகளாக நடைபிணங்களாக அழைகின்றனர். எனவே ஒவ்வொரு இழப்பினையும் சரியாக ஆராய்ந்து நீதியுடன் கூடிய தீர்வுகள் முன்வைக்கப்படவேண்டும்.

அரசாங்கம் இந் வரவு செலவுத்திட்டத்திலே கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்டவர்கள் என்று குறிப்பிடப்படுபவர்களுக்காக நூறு மில்லியன்களை ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்திற்காக சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில் பாதிக்கப்பட்டுள்ள அவர்களது குடும்பங்களுக்கு நிதியைப் பெற்றக்கொடுத்து அவர்களுக்கான வாழ்வாதாரத்தினை வழங்கவேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது என்பதை உணர்ந்து செயற்படவில்லை.

போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும் வாழ்வாதாரமும் எவ்வாறாக அரசாங்கத்தின் கவனிப்பின்றி காணப்படுகின்றதோ அதுபோன்றே இழப்புக்களைச் சந்தித்த ஊடகவியலாளர்களின் குடும்பங்களும் நடுத்தெருவில் விடப்பட்டுள்ளன.

ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டணையைப் பெற்றுக்கொடுக்க வேண்டும். ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தவர்களை அரசியல் ரீதியில் பாதுகாப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறான நிலைமைகளே பல தசாப்தங்கள் கடந்துள்ள போதும் ஊடகர் படுகொலை விசாரணைகள் கிடப்பில் கிடப்பதற்கான காரணங்கள் ஆகும்.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் விடயத்தில், கடந்த நல்லாட்சிக்காலப்பகுதியில் நீதி விசாரணைகளுக்குப் புறம்பாக வாழ்வாதாரம் இழந்துள்ள அவர்களது குடும்பங்களுக்கு நலத்திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்பட்டன. பிரதமர் அலுவலகத்தின் தலையீட்டில் குழு ஒன்று அமைக்கப்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும் நல்லாட்சியில் இடையில் நிலவிய குறுக்கீடுகளும் புதிய அரசாங்கத்தின் பதவியேற்பும் அந் நடவடிக்கைகளை நிராகரித்துவிட்டன.
அடிப்படையில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் நீதி விசாரணையில் தலையீடு இன்றி மேலும் ஓர் செயற்றிட்டமாக வாழ்வாதார இழப்பீடு அளிக்கும் பொறிமுறையை ஏற்படுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அடிப்படையில் நேற்றுக் கூட யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஊடக அமையத்தினருடன் நான் கலந்துரையாடிய போது பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு எதுவும் சென்றடையவில்லை என்பதை உறுதிப்படுத்தினார்கள்.

ஊடகவியலாளர்களைப் பொருத்தளவில் அவர்கள் மக்களின் நலன்களுக்காக தினமும் உழைப்பவர்கள். அவர்கள் இந்த கொவிட் காலப்பகுதியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அடிப்படையில் சுயாதீன ஊடகவியலாளர்கள் பலர் பல்வேறுபட்ட இடர்களுக்கு முகங்கொடுக்கின்றனர். இந்த நிலையில் அரசாங்கம் அவர்களுக்கு சலுகையளிக்க முன்வரவேண்டும்.

வரவு செலவுத்திட்டத்தில் இணைய இணைப்புக்கள் மற்றும் பொதுப்போக்குவரத்தில் கட்டணச்சலுகையளிப்பு போன்றவற்றினை ஏற்படுத்துவது சிறந்ததாகும்.

மேலும் கொழும்பில் தங்கியிருந்து தொழில் புரியும் ஆசிரிய பீட ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க வீட்டுத்திட்டங்களை ஏற்படுத்துமாறு கோருகின்றேன். பிராந்திய செய்தியாளர்களுக்கு இலகு கொடுப்பனவு மோட்டார் சைக்கிள் திட்டங்களை அமுல்படுத்தவேண்டும். நோய்வாய்ப்படும் ஊடகவியலாளர்களுக்கு விசேடமான காப்புறுதித்திட்டம் ஒன்றை முன்வைக்கக் கோருகின்றேன். இன்றும் நோய்வாய்ப்பட்ட நிலையில் சிரேஷ்ட பத்திரிகை ஆசிரியர் தனபாலசிங்கம், சிரேஷ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் போன்றோர் இன்னல் படுகின்றனர். இவர்கள் போன்றவர்கள் நியாயத்திற்காக ஆற்றிய பங்களிப்பை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது.

மேலும், ஊடகத்தறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவது அவசியமாகும். இன்றும் வடக்குக் கிழக்கு ஊடகவியலாளர்கள் விசாரணை என்ற பெயரில் அடிக்கடி பொலிஸ் நிலையங்களுக்கு அழைக்கப்படுகின்றார்கள். இது அவர்களது கருத்துத் தெரிவிக்கும் சுதந்திரத்தையும் தகவல் பெறும் சுதந்திரத்தையும் மீறுவதாகும். கடந்த மாவீரர் தினத்தில் உதயன் பத்திரிகை படம் ஒன்றை வெளியிட்டமைக்காக பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் வழக்கொன்றை எதிர்கொள்ள நேர்ந்தது. இதேவேளை மாவீரர் தின காலப்பகுதியில் ஊடகவியலாளர்களின் தொழில் உரிமையினைப் பறிக்கும் வகையில் பொலிசாரினால் வழக்குகள் தொடுக்கப்படுகின்றன.

இந் நிலைமைகள் அவர்களது தொழிலைச் சிக்கலுக்குள் தள்ளியள்ளது. எனவே ஊடகத்தறையின் சிறப்பு உரிமைகள் பாதுகாக்கப்படவேண்டும். அது இந்த நாட்டில் ஜனநாயகம் ஒரளவுக்கு ஏனும் வாழ்வதற்கு அவசியமானது. இவை குறித்து இந்த பாராளுமன்றம் விசேட கவனம் செலுத்த வேண்டும். என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றில் தெரிவித்தார்.

சிறுபான்மை குழு என்பதை ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றிக்கொண்டது அமரிக்க வெளிவிவகாரச் செயலகம்

சுமந்திரன் குழுவினர், அமரிக்க ராஜாங்க திணைகளத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பணியகத்தின் பதில் உதவி செயலாளர் லீசா பீற்றர்சன் தலைமையிலான பிரதிநிதிகள் குழுவுடனும், உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அலுவலகத்தின் பிரதிநிதிகள் குழுவுடனும் சந்திப்புக்களை நடத்தினர். இவ்வமைப்புக்கள் இலங்கையில் தமிழ் தேசிய இனப்பிரச்சனை என்பதை ஓரம்கட்டும் வகையில் சிறுபான்மை குழுவாக தமிழ் மக்களை சித்தரிக்குமாறு தமது கீச்கத்தில் (twitter) செய்தி வெளியிட்டன. அரசியல் தீர்வுக்காக பேசச் சென்றதாக சொல்லிக்கொண்ட சட்ட நிபுணர் குழுவும் அதனை ஆமோதிக்குமாறு அச் செய்தியை தமது கீச்சக பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர்.

சிறுபான்மை குழு என தமிழ் மக்களை சிறுமை படுத்தி அவர்களின் அரசியல் ஸ்தானத்தை குறைமதிப்பு செய்வதை தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் {TAMIL DIASPORA ALLIANCE} என்ற புதிய அமைப்பு ஆட்சேபித்து ராஜாங்க திணைக்களத்திற்கு செய்தியிட்டது. அதனை தொடர்ந்து கீச்சகபக்கதில் சில முக்கிய பிரமுகர்களும் ஆதரவு தெரிவிக்க தொடங்கினர். பேராசிரியர் ஓரின் யிவ்டாசல் Prof Oren Yiftachel சமூக விஞ்ஞானி, அனுராதா மிட்டேல் Anuradha Mittal ஒக்லாந்து நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர், மேத்தா பட்கர் Medha Patkar பிரபல மனித உரிமை, சமூக செயற்பட்டாளர், கலாநிதி சுவாதி சக்கரபூர்த்தி Dr. Swati Chakraborty என பலரும் தமது ஆதரவை தெரிவிக்க தொடங்கினர்.

இந்நிலையில் இன்று அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான வெளியுறவு செயலகத்தில் துணை செயலர் டொனால்ட் லூ {Donald Lu] வுடன் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பை தொடர்ந்து ‘சிறுபான்மை குழு’ என்பதற்கு பதிலாக ‘தமிழ் மக்கள்’ என்று மாற்றம் செய்து கீச்சகத்தில் செய்தி வெளியிட்டனர்.

அதில் “நிரந்தர சமாதானம் மற்றும் அவர்களின் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக் குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது” என்று தெரிவிக்கப்ட்டிருக்கிறது.

இதையடுத்து தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் என்ற புதிய இளைய தலைமைத்துவ அமைப்புக்கு அரசியல் செயல்பாட்டாளர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

நன்றி-nationaltamil

Posted in Uncategorized