தமிழ் முற்போக்கு கூட்டணி பொகவந்தலாவையில் போராட்டம்

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07.11.2021) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10.00 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம், வீ. இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான வேலுகுமார், உதயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலரும் போராட்டத்தில் பங்கேற்று, விலையேற்றத்தைக் கண்டித்தனர். இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, பொகவந்தலாவை நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டிருந்தன.

” அத்தியாவசியப் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்கவும். வரவு – செலவுத் திட்டத்தில் நிவாரணம் வேண்டும். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊதிய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்களின் தொழில் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் உரம் வழங்க வேண்டும். அதற்கான விசேட பொறிமுறை அவசியம்.” எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

Posted in Uncategorized

புதிய அரசியலமைப்பில் ‘13’ காணாமல் போகுமா? காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள் – அகிலன்

ரெலோவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டம்தான் கடந்த வாரம் தமிழ் அரசியல் வட்டாரங்களில் முக்கிய பேசுபொருளாக இருந்தது. காரசாரமான விமர்சனங்கள் – அச்சுறுத்தல்களுக்கு மத்தியில்தான் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டம் சுமுகமாக நடத்தப்பட்டதாகவும், தமிழரசுக் கட்சியையும் இணைத்து அடுத்த சந்திப்பு விரைவில் நடைபெறும் எனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருக்கின்றார்கள். இதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன?

அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான அழுத்தத்தை இந்தியா கொடுக்க வேண்டும் எனவும் கோரும் தீர்மானத்தை ஏழு கட்சிகள் இணைந்து நடத்திய இந்த சந்திப்பின் பின்னர் நிறைவேற்றிய தீர்மானத்தில் தெரிவித்துள்ளன. இந்தக் கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்ட ஒன்றாக இருந்தாலும் கூட, ஏழு கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருப்பது தமிழ் அரசியலைப் பொறுத்தவரையில் முக்கியமான திருப்பம்!

கோட்டாபய ராஜபக்‌ச அரசாங்கத்தினால் தயாரிக்கப்படும் புதிய அரசியலமைப்பில், 13 ஆவது திருத்தத்தில் உள்ள அம்சங்கள் காணாமல்போகலாம் என எதிர்பார்க்கப்படும் ஒரு சந்தர்ப்பத்தில்தான் 7 சிறுபான்மையினக் கட்சிகள் இணைந்து இந்தக் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. “இவ்விடயத்தில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமாக இருந்தால், தமிழ்க் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒருமித்த குரலில் இது தொடர்பில் கோரிக்கை வைக்க வேண்டும்” என இந்தியா கேட்டுக் கொண்டிருந்தது. அதன் தொடர்ச்சியாகவே தமிழ்க் கட்சிகள் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

இந்தியத் தலைவர்கள், அதிகாரிகளைச் சந்திக்கும் சந்தர்ப்பங்களில், தமிழ்க் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒன்றாக இது இருந்திருக்கின்றது. “இலங்கை அரசுக்கு நாம் அழுத்தம் கொடுப்பது என்பது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் நீங்கள் (தமிழ்க் கட்சிகள்) ஒன்றிணைந்து இதற்கான கோரிக்கையை தெளிவாக முன்வையுங்கள்” என்பதை புதுடில்லி தமிழர் தரப்புக்குச் சொன்னதையடுத்தே, தமிழ்க் கட்சிகளை இவ்விடயத்திலாவது இணைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டது.

ரெலோ அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சியில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி உட்பட ஏழு கட்சிகள் பங்குகொண்டமை முக்கிய அம்சமாகும். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் சார்பில் பேராசிரியர் சிவநாதன், ரெலோ தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆனாலும்கூட, பிரதான தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தையும் இவ்விடயத்தில் இணைக்க முடியாமல் போய்விட்டது. குறிப்பாக, இலங்கை தமிழரசுக் கட்சி இதில் கலந்துகொள்ளவில்லை. கொள்கை ரீதியான முரண்பாடுகள் எதுவும் அதற்கு காரணமல்ல. முயற்சியை ரெலோ முன்னெடுத்தமையால், தமது முக்கியத்துவம் குறைந்துவிடும் என தமிழரசுக் கட்சி கருதியிருக்கலாம். கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா இதில் கலந்துகொள்வதாகக் கூறியிருந்தார். ஆனால், கட்சிக்குள் உருவாகிய அழுத்தங்களையடுத்து அவர் கலந்துகொள்ளவில்லை. கட்சியின் அரசியல் குழுவைக்கூட்டித்தான் இது குறித்து தீர்மானிக்க வேண்டும் என மாவை தரப்பில் பின்னர் தெரிவிக்கப்பட்டதாம்.

இதனைவிட, இதில் பங்குகொள்ளாத இரண்டாவது பிரதான கட்சி கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. அவர்கள் இதில் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். காரணம்: 13 ஆவது திருத்தத்தை முற்றுமுழுதாக நிராகரிக்கும் ஒரு கட்சியாக அது உள்ளது. 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்வதென்பது, தமிழ் மக்களுடைய போராட்டத்தை இந்தியாவிடம் அடகுவைப்பதாகிவிடும் என்பதுதான் அவர்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தி வரும் நிலைப்பாடு. அதனால், 13 ஐ வலியுறுத்தும் இந்தச் சந்திப்பில் அவர்கள் கலந்துகொள்ளாமலிருந்தமை ஆச்சரியமான ஒன்றல்ல.

காப்பாற்ற முனையும் தமிழ்க் கட்சிகள்1987 ஆம் ஆண்டின் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான் இந்த 13 ஆவது திருத்தம். அந்த வேளையில் வடக்கு, கிழக்கில் பெரும் பகுதியைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த விடுதலைப் புலிகள் அதனை நிராகரித்தார்கள். ஏனைய தமிழ்க் கட்சிகள் அதனை ஒரு இறுதித் தீர்வாக ஏற்கமுடியாது என்ற போதிலும், அதனை ஒரு ஆரம்பமாக ஏற்பதாகக் கூறினார்கள். அப்போதைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி தமிழ்த் தலைவர்களுக்குக் கொடுத்த சில வாக்குறுதிகளும் இதனை ஏற்பதென்ற தமிழ்க் கட்சிகளின் முடிவுக்குக் காரணமாக இருந்தது.

ஆனால், 13 ஆவது திருத்தம் அது கொண்டு வரப்பட்டதிலிருந்து பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. இணைந்திருந்த வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்டது. மாகாண சபைகளுக்கு இருந்த காணி, பொலிஸ் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டு விட்டன. இப்போது கல்வி, மற்றும் மருத்துவத் துறையில் மாகாண சபைகளுக்குள்ள அதிகாரங்களில் கைவைக்கப்படுகின்றது. மாகாண சபைகள் செயற்படாதிருப்பதால், ஆளுநர்கள் மூலமாக இவ்வாறு பல்வேறு விடயங்களையும் சாதிப்பதற்கு அரசு முற்படுகின்றது. அதனால்தான், மாகாண சபைகளுக்கான தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்பதும் 13 முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதும் தமிழ்க் கட்சிகளால் முன்வைக்கப்படும் கோரிக்கையாகவுள்ளது.

அதேவேளையில், இது இந்தியாவைத் திருப்திப்படுத்துவதற்கான ஒரு முயற்சி என்ற கருத்தும் முன்வைக்கப்படுகின்றது. 1987 இல் அப்போதிருந்த பூகோள – பிராந்திய நலன்களின் அடிப்படையில்தான் இலங்கையை உடன்படிக்கைக்குள் இந்தியா கொண்டுவந்தது. உடன்படிக்கையின் பின்னிணைப்பாக இருந்த கடிதங்கள் இதனை உறுதிப்படுத்தும். தமது நலன்கள் அடையப்பட்ட நிலையில்தான், 13 ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியா நீண்டகாலமாக மௌனமாக இருந்தது. வடக்கு, கிழக்கு பிரிக்கப்பட்ட போதிலும், மாகாண அதிகாரங்கள் பறிக்கப்பட்ட போதும் இந்தியா எதுவும் செய்யவில்லை.

இப்போது, சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துவரும் நிலையில், இலங்கை மீதான தமது பிடியை இறுக்குவதற்கு 13 மட்டும்தான் தமது கைகளில் உள்ள துரும்புச் சீட்டு என்பதை இந்தியா அடையாளம் கண்டுகொண்டுள்ளது. அதனால்தான், தமிழ்க் கட்சிகளை நோக்கி அதற்கான நகர்வை புதுடில்லி மேற்கொண்டது. 13 ஐ அடிப்படையாகக் கொண்டு தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சி இந்தியாவைத் திருப்திப்படுத்தும் செயற்பாடு என குற்றஞ்சாட்டப்படுவதற்கு அதுதான் காரணம்.

13 ஐ வலியுறுத்துவதன் பின்னணியில் இந்திய நலன்கள் உள்ளது என்பது உண்மையாக இருந்தாலும், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில், தற்போதைய நிலையில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதுதான் புத்திசாலித்தனமானது என இதனை முன்னெடுக்கும் கட்சிகள் கருதுகின்றன. 1987 இல் விடுதலைப் புலிகள் பலமான ஒரு அமைப்பாக இருந்தது. அதனால், பேரம் பேசக்கூடிய சக்தி அதற்கு இருந்தது. தற்போதைய நிலையில் உருவாகிவரும் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதுதான் இராஜதந்திரமாக இருக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தையும் தவறவிட்டால், கோட்டாபய கொண்டுவரப்போகும் புதிய அரசியலமைப்பில் இருப்பதும் இல்லாமல் போய்விடக்கூடிய ஆபத்தும் இருக்கின்றது!

புதிய அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தில் இருக்கக்கூடிய அம்சங்கள் தொடர்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை கோட்டாபய அரசின் நிகழ்ச்சி நிரலைப் புரிந்துகொண்ட எவருக்கும் சொல்லத் தேவையில்லை. ஆதனால், தமது பிடி தளரலாம் என்ற அச்சம் இந்தியாவுக்கு இருக்கலாம். இந்தியா தற்போது இவ்விடயத்தில் தீவிரமாக இருப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலைமையை எமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதுதானே இராஜதந்திரம் என்ற கூட்ட ஏற்பாட்டாளர்களின் கருத்தையும் புறக்கணித்துவிட முடியவில்லை.

Source:இலக்கு

யாழில் குறைந்த பாராளுமன்ற ஆசனம் கம்பஹாவுக்கு

கம்பஹா மாவட்டத்துக்கு இதுவரை இருந்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கப்படுவதாக கம்பஹா மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் ஜயலால் தெரிவித்துள்ளார்.

கம்பஹா வட்டத்துக்கு இதுவரை இருந்துவந்த பாராளுமன்ற ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 18ஆக இருந்தது.

புதிய வாக்காளர் பதிவில் வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமைய கம்பஹா மாவட்டத்துக்கு ஒரு ஆசனம் அதிகரித்திருக்கின்றது.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 225 உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய மாவட்ட மட்டத்தில் ஆசனங்களின் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படுகிறது.

அதன் பிரகாரம் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 6 பாராளுமன்ற ஆசனங்கள் இருந்து வந்தன.

தற்போது அது 5ஆக குறைவடைந்துள்ளது. புதிய வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு அமையவே ஒரு ஆசனம் குறைந்துள்ளது. அவ்வாறு குறைந்த ஆசனம் கம்பஹா மாவட்டத்துக்கு சென்றிருக்கின்மை குறிப்பிடத்தக்கது.

சீன இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையமாக இலங்கை மாற இடமுள்ளது: பென்டகன் ஆய்வறிக்கை

இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் சீன குடியரசின் இராணுவத் தளங்களாக அல்லது வசதி வழங்கும் நிலையங்களாக மாறுவதற்கு பெரும்பாலும் இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள புதிய பாதுகாப்பு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன இராணுவ மற்றும் பாதுகாப்பு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இந்த அறிக்கையை தயாரித்துள்ளது.

சீனா தமது இராணுவ பலத்தை பரந்த பிரதேசத்தில் பேணும் நோக்கில், இலங்கை உள்ளிட்ட 13 நாடுகளில் தமது இராணுவத்திற்கு வசதி வழங்கும் நிலையங்களை ஸ்தாபிப்பதற்கு இடமுள்ளதாக இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கையுடன் கம்போடியா, மியன்மார், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேஷியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 13 நாடுகளை சீனா இதற்காக பயன்படுத்துவதற்கு இடமுள்ளதாக பென்டகன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா தமது இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை வலுப்படுத்துவதற்கு இதன் மூலம் எதிர்பார்ப்பதாகவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே

யாழில் சனிக்கிழமையன்று நடைபெற்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் கலந்துரையாடலில் அகில இலங்கை தமிழரசு கட்சியும் இருக்க வேண்டும் என நானும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரவுப் ஹக்கீமும் வலியுறுத்தினோம். அதை அந்த உரையாடலில் கலந்துக்கொண்ட எல்லா கட்சிகளும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டார்கள். என்னை பொறுத்தவரையில், அகில இலங்கை தமிழரசு கட்சி மட்டுமல்ல, இந்த பொது நோக்கில் இணைந்து செயற்பட விரும்பும் எல்லா தமிழ், முஸ்லிம் கட்சிகளும் ஒரு தளத்தில் அமர்ந்து பேசுவது ஆரோக்கியமானதே என எண்ணுவதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார்.

ஆனால், அகில இலங்கை தமிழரசு கட்சி பிரதானமான கட்சி என்பதால், முதலில் அந்த கட்சி உள்வாங்கப்பட வேண்டுமெனவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்த கலந்துரையாடல் தொடர்ந்து நிகழ வேண்டும் எனவும் நான் விரும்புகிறேன்.

கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த உரையாடல் ஏற்பாட்டை தமிழீழ விடுதலை இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. அக்கட்சியின் தலைவர் நண்பர் செல்வம் அடைக்கலநாதனின் அழைப்பின் பேரிலேயே நாம் கலந்துக்கொண்டோம். அடைக்கலநாதன் எம்பியினதும், அவரது கட்சியினதும் இந்த முன்முயற்சி பாராட்டுக்குரியது எனவும் நான் எண்ணுகிறேன்

ஆனால், இத்தகைய உரையாடல் தமிழ் கட்சிகள் மத்தியில் ஐக்கியத்தை மென்மேலும் வலுப்படுத்த வேண்டும். அதைவிடுத்து இதன் மூலம் பிளவுகள் அதிகரிக்குமானால், இத்தகைய முயற்சிகளில் பங்குபற்றி காலவிரயம் செய்ய தமிழ் முற்போக்கு கூட்டணியாக நாம் விரும்ப மாட்டோம் என தமுகூ தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

Posted in Uncategorized

கொழும்பு – யாழ்ப்பாணம் ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

COVID தொற்று நிலைமை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – புறக்கோட்டை ரயில் சேவை 5 மாதங்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமானது.

காலை 05.30-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட யாழ் தேவி ரயில் யாழ்ப்பாணத்தை சென்றடைந்து மாலை 06.10-க்கு அங்கிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்டது.

பகல் 01.15-க்கு காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் நகர்சேர் கடுகதி ரயிலும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை உடனடியாக நிறுத்தவேண்டும் – பொது மகஜர் வெளியீடு

இலங்கைப் பொலிஸாருக்கு சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் இலங்கைப் பொலிஸாரினால் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், மனித உரிமைகள் விவகாரத்தில் இதுவரையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.

மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான ‘பொதுத்தொடர்பு மேம்பாட்டு’ உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்று ஸ்கொட்லாந்தைத் தளமாகக் கொண்டியங்கும் ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இலங்கைப் பொலிஸாருக்குப் பயிற்சிகளை வழங்குவதை ஸகொட்லாந்து பொலிஸ் உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தி பொதுமகஜர் ஒன்றையும் அவ்வமைப்பு வெளியிட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘ஃப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ (சித்திரவதைகளிலிருந்து விடுதலை பெறல்) என்ற அமைப்பு, உலகளாவிய ரீதியில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்குவதுடன் அவர்களது உரிமைகளுக்காகவும் போரடிவருகின்றது.

அவ்வமைப்பு அதன் உத்தியோகபூர்வ இணையப்பக்கத்தில் ‘ஸ்கொட்லாந்து பொலிஸுக்குக் கூறுங்கள்: இலங்கையில் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஒன்றிணையுங்கள்’ என்ற தலைப்பில் பொதுமகஜர் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் சிறுபான்மையினத்தவருக்கு எதிரான சித்திரவதைகள் மற்றும் பாலியல் ரீதியான அச்சுமீறல்களுடன் இலங்கைப் பொலிஸார் தொடர்புபட்டிருக்கின்றார்கள் என்று அந்த மகஜரில் சுட்டிக்காட்டியிருக்கும் அவ்வமைப்பு, இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டு தற்போது ஐக்கிய இராச்சியத்தில் வாழ்பவர்கள், சித்திரவதைகளால் ஏற்பட்ட பாதிப்புக்களிலிருந்து மீண்டு அவர்களது வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு அவசியமான அனுசரணையைத் தமது அமைப்பு வழங்கிவருவதாகவும் தெரிவித்திருக்கின்றது.

மேலும் இலங்கையில் இடம்பெற்ற சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதாக இருந்தால், ஸ்கொட்லாந்து பொலிஸார் இலங்கைப் பொலிஸாருடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் தமது இணையப்பக்கத்தில் பகிரப்பட்டுள்ள பொதுமகஜரைப் பூரணப்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆதரவை வெளிக்காட்டுமாறும் அவ்வமைப்பு பொதுமக்களிடம் கோரியுள்ளது.

சுமார் 1000 பேரின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக்கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்தப் பொதுமகஜரை தற்போதுவரை (நேற்று நண்பகல்) 204 பேர் பூரணப்படுத்தி, இலங்கைப்பொலிஸாருடன் ஸ்கொட்லாந்து பொலிஸார் இணைந்து பணியாற்றக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை இம்மகஜர் தொடர்பில் ‘ப்ரீடம் ஃப்ரொம் டோர்ச்சர்’ அமைப்பு அதன் உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்துள்ளது. ‘பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உள்ளாக்கும் பொலிஸாருக்குப் பயிற்சி வழங்கப்படக்கூடாது.

இலங்கைப் பொலிஸ் பொதுமக்களை சித்திரவதைகளுக்கு உட்படுத்தியதுடன் சிறுபான்மையின சமூகத்தின்மீது அடக்குமுறையைப் பிரயோகித்த வரலாற்றைக் கொண்டிருக்கின்றது. அவ்வாறிருந்தும் அவர்களுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கான ஊதியத்தை போரிஸ் ஜோன்ஸனின் அரசாங்கம் ஸ்கொட்லாந்து பொலிஸுக்கு வழங்குகின்றது’ என்று அப்பதிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்கொட்லாந்து பொலிஸாரினால் சுமார் 15 வருடங்களுக்கும் அதிகமான காலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்ற போதிலும், இதுவரையில் மனித உரிமைகள் விவகாரத்தில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றங்கள் எவையுமில்லை.

மனித உரிமைகள் தொடர்பில் தாம் கொண்டிருக்கும் மோசமான பதிவுகளை வலுவிழக்கச்செய்யும் வகையிலான பொதுத்தொடர்பு மேம்பாட்டு உத்தியாகவே இப்பயிற்சி வழங்கலை இலங்கை அரசாங்கம் நோக்குகின்றது என்றும் அவ்வமைப்பு அதன் டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் கட்டுப்பாட்டு விலையை நீக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைய சீனி, பருப்பு, கோழி இறைச்சி, செமன், சோளம், பெரிய வெங்காயம், கோதுமை மா, உருளைக்கிழங்கு மற்றும் பால்மா மற்றும் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினால் வௌியிடப்பட்ட 7 வர்த்தமானி அறிவித்தல்கள் இந்த விஷேட வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வௌ்ளை மற்றும் சிகப்பு சீனிக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலையும் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் கட்சிகளின் இன்றைய தீர்மானங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவித்தல்

எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக்கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இருவாரங்களுக்குள் நடாத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் தமிழ் பேசும் கட்சிகளிடையே இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில்,

தமிழ் பேசும் மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்து வரும் அரசியல் தீர்வு என்பது அவர்களின் அரசியல் அபிலாசைகளைத் திருப்திப்படுத்தக்கூடிய முறையிலேயே அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தும் அதேவேளையில், எமது மக்கள் தொடர்ந்து சந்தித்துக் கொண்டிருக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் கருத்தில் கொண்டு பின்வரும் தீர்மானங்களை, அவை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த நாட்டின் அரசியல் சாசனத்தில் அமைந்திருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுதத்ப்பட வேண்டும், அத்துடன் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட வேண்டும்.

அரசாங்கத்தினாலும் அரசாங்க ஆதரவுடனும் வடக்குக் கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படடு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

பல்லின, பல்மொழி, பல்மத மக்கள் வாழும் இந்த நாட்டில் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டை முன்னெடுப்பதற்கும் நடைமுறைப்படுததுவதற்குமாக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணி மக்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய பாரிய ஆபத்தைக் கொண்டிருப்பதால் அதனை திட்டவட்டமாக நிராகரிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ் கட்சிகளின் இன்றைய தீர்மானங்கள்

1. 13 A முழுமையாக அமுல்படுத்த வேண்டும்
2. மாகாண சபை தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படல் வேண்டும்
3. திட்டமிட்ட காணி அபகரிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
4. பயங்கர வாத தடை சட்டம் உடனடியாக நீக்கப்படல் வேண்டும்.
5. ஒரே நாடு ஒரே சட்டம் என்பதை நிராகரிக்கின்றோம்.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem), தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் (Mano Ganesan), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் சித்தார்த்தன் (Siddharthan), தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran), தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் என்.ஸ்ரீகாந்தா (N. Srikanth), தமிழ் மக்கள் கூட்டணியின் பொருளாளர் வி.பி.சிவநாதன் (V.P.Sivanathan),தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான குருசுவாமி சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கலந்துரையாடலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி,தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொது நிலைப்பாடு

அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் விளைவாக மிகவும் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலிருக்கும் நிலையில், மாற்று அரசியல் கொள்கைகளையுடைய அனைத்துக் கட்சிகளினதும் சமூகக்குழுக்களினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்யக்கூடியவகையில் பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் முழுமையான விகிதாசார முறைமையின் பிரகாரமே நடாத்தப்படவேண்டும் என்று சிறிய அரசியல் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மை பேணப்படுவதை உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலொன்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் அதன் நிறைவேற்றுப்பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் சனிக்கிழமை கொழும்பிலுள்ள மெரினா பீச் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பதற்கு நாட்டிலுள்ள சிறுகட்சிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டிருந்த நிலையில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ),தமிழரசுக்கட்சி, ,புளொட், தமிழ் முற்போக்குக்கூட்டணி, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக்கட்சி (ஈ.பி.டி.பி), ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும் மேலும் சில தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்துகொண்டிருந்ததுடன் தேர்தல் முறைமையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த தமது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டனர்.

அதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் கூறியதாவது:

தேர்தல் முறைமையில் ஜனநாயகத்தன்மையை உறுதிசெய்யும் நோக்கிலான இந்தக் கலந்துரையாடல் தமிழ், முஸ்லிம் சிறுபான்மையின சமூகத்திற்கு மாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கருதக்கூடாது.

மாறாக இது நாட்டின் ஜனநாயகத்தையும் அனைத்து சிறுகட்சிகளினது பிரதிநிதித்துவத்தையும் உறுதிசெய்யும் நோக்கிலான கலந்துரையாடலாகும். அண்மைக்காலத்தில் தேர்தல் முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி சிறுகட்சிகளை ஓரங்கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

ஆனால் அரசியலமைப்பிற்கான 20 ஆவது திருத்தத்தின் மூலம் வலுவான நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நடைமுறையிலுள்ள சூழ்நிலையில், பாராளுமன்றத்தில் அனைத்துக்கட்சிகளினதும் பிரதிநிதித்துவத்தை உறுதிசெய்வதன் ஊடாகவே நிறைவேற்றதிகாரத்திற்கும் பாராளுமன்றத்திற்கும் இடையிலான சமநிலையை உறுதிசெய்யமுடியும்.

உண்மையைக் கூறுவதானால் தேர்தல் முறைமை விவகாரத்தைப் பொறுத்தமட்டில் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவிடமிருந்து பாடங்கற்றுக்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

அவரது ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட விகிதாசார முறைமையின் ஊடாகவே மக்கள் விடுதலை முன்னணியின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றத்திற்குள் உள்வாங்கப்பட்டது. இது வரவேற்கத்தக்க விடயமாகும்.

அதுமாத்திரமன்றி தேர்தல் முறைமை விவகாரம் ஒட்டுமொத்த நாட்டினதும் பிரச்சினை என்பதை மனதிலிருத்திச் செயற்படவேண்டும். பாராளுமன்றத்தில் அனைத்து இனங்களினதும் பிரதிநிதித்துவத்தைப்போன்றே பெண் பிரதிநிதித்துவமும் சமளவில் உறுதிசெய்யப்படுவது அவசியமாகும்.

அதனை முன்னிறுத்தி பாராளுமன்ற, மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிமன்றத்தேர்தல்கள் அனைத்தும் விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையிலேயே நடாத்தப்படவேண்டும் என்ற பொதுநிலைப்பாடு எட்டப்படவேண்டும். அத்தோடு அம்முறையின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்கள் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்றும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அங்கு கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன், அரசியலில் பெண்பிரதிநிதிகளை உள்வாங்குவதில் காணப்படும் சவால்கள் தொடர்பில் எடுத்துரைத்ததுடன் கடந்த பாராளுமன்றத்தேர்தலில் தமது கட்சியின் சார்பில் பெண் வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டபோதிலும் அவர் ஏற்கனவே அரசியல் பின்புலமொன்றைக் கொண்டிருந்தமை தொடர்பிலும் சுட்டிக்காட்டினார்.

அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், விகிதாசாரப்பிரதிநிதித்துவ முறைமையில் தேர்தல் நடாத்தப்பட்டாலும் எல்லைநிர்ணய முறைமை நடைமுறையில் இருப்பதன் காரணமாக எதிர்பார்க்கக்கூடிய பிரதிபலனை அடைந்துகொள்ளமுடியாது என்று தெரிவித்தார்.

தற்போது நடைமுறையிலுள்ள எல்லைநிர்ணய முறையில் வெளிப்படைத்தன்மை இல்லையென்று குறிப்பிட்ட அவர், இரகசியமான முறையில் மேற்கொள்ளப்படக்கூடிய எல்லை நிர்ணயத்தின் விளைவாக விகிதாசார முறையின் ஊடாக உள்வாங்கப்படக்கூடிய சிறுகட்சிகளின் பிரதிநிதித்துவம் சிதைக்கப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியதுடன் எல்லை நிர்ணயமுறைமையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார்.

அதேவேளை அரசியலில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்துப்பேசிய தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், உள்ளுராட்சி மன்றங்களில் 25 சதவீத பெண்பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டதைப்போன்று ஒவ்வொரு தொகுதிகளிலும் உள்ள வட்டாரங்களில் குறித்த எண்ணிக்கையிலான பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார். அதன்மூலமே அரசியலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என்று குறிப்பிட்ட அவர், சமஷ்டி முறைமை தொடர்பில் கூட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய உறுதியான நிலைப்பாடு குறித்தும் தெளிவுபடுத்தினார்.

மேலும் ஒருபுறம் தேர்தல் முறைமை மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பில் பேசப்படும் அதேவேளை, மறுபுறம் சிங்கள பௌத்த வாக்குகளால் வெற்றியடைந்ததாக அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பதிவுசெய்யும் ஜனாதிபதியின் போக்கு மற்றும் சிறுபான்மையினக்குழுக்களின் செயற்பாடுகள் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கலாம் என்ற வெளிவிவகார அமைச்சரின் கருத்து என்பன நாடு பயணிக்கவேண்டிய பாதை தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எத்தகையதாக இருக்கின்றது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக இதன்போது தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவரும் யாழ்மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

அதுமாத்திரமன்றி உள்ளுராட்சி, மாகாணசபைகள், பாராளுமன்றம் ஆகிய மூன்று தேர்தல்களுக்குமான சீர்திருத்தங்கள், தெரிவுக்குழுவினால் ஒரேவேளையில் தயார்செய்யப்பட்டு, ஒரே சட்டமூலத்தின் ஊடாக அரசியலமைப்புத்திருத்தமாகக் கொண்டுவரப்படவேண்டும் என்றும் ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகனாணசபைத்தேர்தல்களை விகிதாசார முறைமையின்கீழ் விரைந்து நடத்துவதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும் என்றும் இக்கலந்துரையாடலின்போது கூட்டாக வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடலில் சிறுகட்சிகளைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், எஸ்.சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ரவூப் ஹக்கீ;ம், வே.இராதாகிருஷ்ணன், வேலுகுமார், உதயகுமார்,தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ ) வின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் உள்ளடங்கலாக மேலும் பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.