மாற்றத்தை எண்ணி மனதை தேற்றிய பவித்ரா

இவ்வாறானதொரு மாற்றம் ஏற்படும் என்று, தான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை எனத் தெரிவித்துள்ள போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, வாழ்க்கையில் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என மனதை தேற்றிக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

இன்று (16) அமைச்சரவை மாற்றத்தின் பின்னர், சுகாதார அமைச்சிலுள்ள அதிகாரிகளிடம் உரையாடிய போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

எதிர்பாராத தருணத்தில் தனக்கு இந்த அமைச்சு மாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், தான் குறிப்பிட்ட இடத்துக்குச் செல்லும் வரை தனது அமைச்சுப் பதவியில் மாற்றம் வரும் என தான் அறிந்திருக்கவில்லை என்றார்.

எது எப்படியாயினும் வாழ்க்கையில் அனைத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

இலங்கையை உன்னிப்பாக அவதானிக்கிறது பிரித்தானியா: வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப்

இலங்கையில் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அணுசரணை நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பில் உன்னிப்பான கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கையில் நிகழ்ந்ததாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான சாட்சியங்களை சேகரித்தல், பாதுகாத்தல் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுடைய செயற்பாட்டிற்கான நிதி தடையின்றி கிடைப்பதையும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் மேலதிகமாக ஒதுக்கப்படுவதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானிய கொன்சவேர்ட்டிக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி பாராளுமன்ற குழுவின் தலைவருமான எலியட் கோல்பர்ன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள், போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் சாட்சியங்களை திரட்டுதல் மற்றும் பாதுகாத்தல் செயற்பாட்டுக்காக 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி குறைக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும், அச்செயற்பாட்டிற்கான நிதியை கூடுதலாக அளிப்பதற்கு பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலாவாய அபிவிருத்தி இராஜாங்க அலுவலகத்திற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார்.

அக்கடிதத்திற்கு அளித்துள்ள பதிலிலேயே பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்ப்பட்ட 46/1 தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான நிதி விடயம் சார்ந்து தாங்கள் கடந்த ஜுன் 24ஆம் திகதி எனக்கு கிடைக்கப்பெற்றது. அதனை தமிழர்களின் சார்பில் எனது கவனத்திற்கு கொண்டுவந்தமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கையின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தும் சூழல் தொடர்பில் தொடர்ச்சியாக கரிசனை செலுத்தி வருகின்றேன். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பிரித்தானியா தலைமையிலான இணை அனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பிலான 46/1 தீர்மானத்தினை நிறைவேற்றியதன் பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆழ்ந்த கரிசனைகளை செலுத்தி வந்து கொண்டிருக்கின்றேன். அத்துடன் அவ்விதமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை முழுமையாக ஊக்குவிப்பதோடு ஆதரித்தும் வந்திருக்கின்றேன்.

மிக அண்மையில் அதாவது மே 10ஆம் திகதி இலங்கையில் உள்ள பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகருடனும் ஜுன் 17ஆம் திகதி இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடனும் ஐ.நா.தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான எனது கரிசனையை மிகவும் ஆழமாக வெளிப்படுத்தியிருந்தேன்.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கான நிதி பற்றிய விடயத்தினை எனது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளீர்கள். அதற்காக முதலில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஜுன் ஆறாம் திகதி எனது அலுவலகர்கள் ஜெனிவாவிலும், நியூயோக்கிலும் இந்த விடயம் சம்பந்தமாக செயற்படுவதற்காக ஊக்குவிக்கப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பில் சுயாதீனமாக செயற்படும் வரவுசெலவுத்திட்ட கேள்விகள் மற்றும் நிருவாகத்திற்கான ஆலோசனைக் குழுவானது 2021ஆம் ஆண்டுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதித்தொகைக்கு தனது இணக்கத்தினை வெளியிட்டிருக்கின்றது. அத்துடன் ஆரம்பகட்டத்தில் குறிக்கப்பட்டிருந்த தொகையை விடவும் நிதி குறைக்கப்பட்டிருந்தமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இருப்பினும், அதன்காரணமாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் ஆரம்பகட்டச் செயற்பாடுகளின் வினைத்திறனில் குறைவான நிலைமைகள் காணப்படவில்லை. அவை முன்னேற்றகரமாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான ஐ.நா.உயர்ஸ்தானிகரத்திற்கான வரவு செலவுத்திட்டத்தொகையை அதிகரிப்பது தொடர்பில் தொடர்ச்சியாக கலந்துரையாடல்களைச் செய்வோம். மேலதிகமான நிதி மூலங்களிலிருந்து மேலும் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கைளை முன்னெடுப்போம். அதுமட்டுமன்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணையை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறைகள் பற்றி தொடர்ச்சியாக கண்காணிப்புடன் இருக்கவுள்ளதோடு அதற்கான ஒத்துழைப்புக்களையும், ஊக்குவிப்பினையும் வழங்கவுள்ளோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம்: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் முக்கிய அம்சங்கள்

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் உரையில் இருந்து சில முக்கிய தகவல்கள்…

*“எதிர்காலத்தில் இந்தியாவின் சிறு விவசாயிகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கிசான் இரயில் இந்தியாவின் 70 வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

*ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக பதக்கம் வென்று கொடுத்த விளையாட்டு வீரர்களுக்கு வாழ்த்துகள்.

*இந்தியாவில் 54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. உலகிலேயே இந்தியாவின் தடுப்பூசித் திட்டம் தான் மிகப் பெரியது. இந்தியர்கள் கொரோனாவை மிக பொறுமையாக எதிர்கொண்டு வருகிறார்கள். பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியிலும் நாம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறோம்.

*இந்தியா தடுப்பூசிக்காக யாரையும் சாராமல் இருக்கிறோம். அது நம் தொழில்துறையினர், விஞ்ஞானிகளின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

*ஓகஸ்ட் 14ஆம் திகதியை பிரிவினை கோரங்களை நினைவு கோரும் நாளாக அனுசரிக்க முடிவு செய்திருக்கிறோம்.

*நம் இலக்குகளை அடைய அனைவரின் முயற்சியும் அவசியம்.இந்தியா தன் 100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது நாம் நம் இலக்குகளை அடைந்திருக்க வேண்டும்.

*உலகத் தரம் வாய்ந்த அடிப்படை கட்டமைப்புகளோடு, குறைந்த அரசு தலையீட்டோடு, அதிக நிர்வாகம் நிறுவப்படுவது தான் நம் இலட்சியம்.

*இந்தியாவின் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும். இந்தியாவின் முன்னேற்றம் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். வட கிழக்கு பகுதி, ஜம்மு காஷ்மீர், லடாக், நம் கடலோரப் பகுதிகள், மலைப்பகுதிகள் என அனைத்து தரப்பு மக்களும் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றத்தில் இருக்க வேண்டும்.

*ஜம்மு காஷ்மீரில் சட்டமன்றத் தேர்தலை நடத்தத் தேவையன பணிகள் நடந்து வருகின்றன. அப்பகுதியின் முன்னேற்றத்தை கண்கூடாக பார்க்க முடிகிறது. லடாக்கில் நவீன கட்டுமானங்கள் வரவிருக்கின்றன. அதோடு இண்டஸ் மத்திய பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளது.

*இன்று இந்திய கிராமங்களில் ஆப்டிக் ஃபைபர் தொழில்நுட்பம் மூலம் இணைய வசதிகள் சென்றடைந்து கொண்டிருக்கின்றன். கிராமபுறங்களிலும் டிஜிட்டல் தொழில்முனைவோர்கள் உருவாகி வருகிறார்கள்.

*எதிர்காலத்தில் இந்தியாவின் சிறு விவசாயிகளின் ஒருங்கிணைந்த வலிமையை அதிகரிக்க வேண்டும். அவர்களுக்கு புதிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். விசாயிகளுக்கு நன்மை பயக்கும் விதத்தில் கிசான் ரயில் இந்தியாவின் 70 வழித்தடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.

*ஒரு காலத்தில் செல்ஃபோன்களை இறக்குமதி செய்து கொண்டிருந்த இந்தியா தற்போது செல்ஃபோன்களை ஏற்றுமதி செய்யும் நாடாக உருவெடுத்திருக்கிறது.

*விரைவில் பிரதமர் கதிசக்தி தேசிய திட்டங்கள் தொடங்கப்படும். இது இந்தியாவை உருமாற்றும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றார் பிரதமர்.

*இந்தியாவில் எல்லா மூலை முடுக்குகளையும் 75 வந்தே பாரத் இரயில்கள் இணைக்கும்.

*பெரிய அளவிலான சீர்திருத்தங்களை செய்ய அரசியல் விருப்பங்கள் அவசியம். சிறந்த ஆளுகை இருந்தால்தான் நல்லாட்சியை வழங்க முடியும். அந்த வகையில் இந்தியா எழுதும் புதிய அத்தியாயத்துக்கு உலகம் சாட்சியாக உள்ளது.

*இந்திய அரசு நிர்வாகத்தின் புதிய அத்தியாயம் இது. எளிய மக்களின் வாழ்கையில் அரசின் தேவை இல்லாத தலையீடுகளைக் நீக்குவது அவசியம். அதன் அடிப்படையில் பல்வேறு தேவையில்லாத சட்டங்களை நீக்கி இருக்கிறோம்.

*இராணுவ பள்ளிகள் அனைத்தும் பெண்களுக்கு திறந்துவிடப்படும். கல்வி, விளையாட்டு, ஒலிம்பிக் என எல்லா துறைளிலும் இந்தியாவின் பெண்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

*100ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு முன், எரிசக்தித் துறையில் யாரையும் சாராத நாடாக இந்தியா இருக்க வேண்டும் என நாம் உறுதி ஏற்க வேண்டும். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா நிகர கார்பன் உமிழ்வு நாடாக வேண்டும் என்கிற நோக்கில் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

*இந்தியாவை பசுமை ஹைட்ரஜன் ஏற்றுமதி ஹப்பாக மாற்ற வேண்டும். பசுமை எரிசக்தி, வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்”

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்துவரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சியை நிறுத்துங்கள்: யஸ்மின் சூக்கா கோரிக்கை

திட்டமிட்ட சித்திரவதைகளை முன்னெடுத்து வரும் இலங்கை பொலிஸாருக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானிய அரசாங்கமும் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கோரியுள்ளார்.

ஸ்கொட்லாந்து இலங்கை பொலிஸாருக்கு வழங்கும் பயிற்சிகளை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக விடுத்துள்ள அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்தும், பிரித்தானிய அரசாங்கத்திடம் அதையொத்த தீர்மானத்தினை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வகையிலும் வெளியிட்டுள்ள ஊடக அறிவிப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2016ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொலிஸ் பிரிவுகளுக்கு பயிற்சிகளை வழங்குவதை நிறுத்துமாறு சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்திட்டம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது.

அத்துடன், இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பல்வேறு சமயங்களில் நிகழ்த்திய சித்திரவதைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளையும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கானசெயற்திட்டம் தயாரித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் இலங்கை பொலிஸ் பிரிவுகளின் சித்திரவதைகள் மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் பற்றிய ஆதாரங்களுடன் சமர்ப்பணங்களும் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு பிரித்தானியா பயிற்சிகளை வழங்குவதை அடிப்படையாக வைத்து தம்மீதான குற்றங்களை இலங்கை பொலிஸ் பிரிவுகள் வெள்ளையடிப்புச் செய்வதற்கு முயற்சிக்கின்றன. ஐ.நா.வில் அவ்விதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மேலும், பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளின் பெயரில் அழைத்துச் செல்பவர்களை சித்திரவதைக்குட்படுத்தியமை தொடர்பிலான ஆதராங்களை சேகரித்து வைத்துள்ளது.

அதில் குற்றவாளிகளின் பெயர்களும் உள்ளடக்கமாக உள்ளன. பொலிஸாரின் மற்றொரு பிரிவாக இருக்கும் விசேட அதிரடிப்படையானது போரின் போதும், அதற்குப் பின்னரும் தமிழர்களை கடத்துதல், விசாரணைக்கு அழைத்துச் செல்லுதல், தடுத்து வைத்தல், அக்காலப்பகுதியில் சித்திரவதைக்கு உட்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. விசேட அதிரடிப்படையின் அவ்விதமான செயற்பாடுகளுக்குரிய சாட்சியங்களும் பதிவாகியுள்ளன.

ஆகவே, இவ்விதமான குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் இலங்கையின் பொலிஸ் பிரிவுகள் பொறுப்புக்கூறும் வரையில் அவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதை பிரித்தானியா நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது.

Posted in Uncategorized

யாழில் இராணுவத்திடமிருந்து விடுவித்தாக ஆளுநர் சுரேன் இராகவனால் சான்றிதழ் வழங்கப்பட்ட காணிகளை சுவீகரிப்பதாக வர்த்தமானியில் அறிவித்தல் – வேதனையில் வலி வடக்கு காணி உரிமையாளர்கள்

சுரேன் ராகவன் வடக்கு மாகாண ஆளுநராக இருந்த சமயம் விடுவித்ததாக கடிதம் வழங்கிய நிலங்களை சுவீகரித்துள்ளதாக அரசு வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளதாக காணி உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மைத்திரிபால சிறிசேனா அரசின் காலத்தில் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ஆம் திகதி பெரும் விழா எடுத்து நிலத்தை விடுவிப்பதாக படம் காட்டி

நவரட்ணம் விக்னேஸ்வரன் ஆகிய எனது 23 பரப்பு காணி உட்பட பலரின் நிலம் விடுவிப்பமாக அப்போதைய ஆளுநரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேன் ராகவன் சான்றிதழ் தந்தார்.

ஆனாலும் இன்றுவரை நிலம் விடுவிக்கப்படாமல் கடற்படையினர் ஆக்கிரமித்திருக்க எமக்கு எந்தவொரு அறிவித்தலும் வழங்காது திருட்டுத்தனமாக 2021-02-15ஆம் திகதியிடப்பட்டு காணி அமைச்சர் எஸ்.எம்சந்திரசேனா நிலத்தை சுவீகரிப்பதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ளார்.

இந்த அரசின் உச்ச பட்ச அராஜகத்தின் வெளிப்பாடாகவே இதனைப் பார்க்கின்றோம். இதனால் இந்த விடயத்தை எங்கு எல்லாம் கொண்டு செல்ல முடியுமோ அங்கெல்லாம் கொண்டு செல்வேன் என்றார்.

Posted in Uncategorized

தனது தலைவன் நெருக்கடியில் இருக்க, உரத்துப் பேச வேண்டிய முஷாரப் அரசுக்கு சாமரம் வீசுவது விந்தையளிக்கிறது

பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் அரசைக் கவிழ்க்க முயலாமல் நாட்டைக் கட்டியெழுப்ப வாருங்கள் என்கிறார். அரசு மூண்றிலிரண்டு பெரும்பான்மையுடன் உள்ள போது அரசை கவிழ்க்க முடியாது என்பது இவருக்குத் தெரியாமலில்லை. அரசிடமிருந்து ஏதோ ஒன்றைப் பெற இவர் இந்தக் கருத்தை கூறுகிறார் என்பது மக்களுக்குத் தெரியாது என்று இவர் நினைக்கிறார் போலும் என தேசிய காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி கே.எல்.சமீம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் அண்மையில் விடுத்திருந்த “அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை கைவிட்டு, நாட்டை கட்டி எழுப்ப கைகோருங்கள்” எனும் ஊடக அறிக்கைக்கு பதிலளிக்கும் நோக்கில் தேசிய காங்கிரசின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தல் வேட்பாளருமான சட்டத்தரணி கே.எல்.சமீம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

தனது தலைவன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள நிலையில் உரத்துப் பேச வேண்டிய பாரிய பொறுப்பை மறந்து அரசுக்கு சாமரம் வீசுவது விந்தையளிக்கிறது. சமூகத்தில் தனது தலைவனுக்கான இவரது குரல் போதாது என்ற கருத்தும் உண்டு. தேர்தலின் போது கசத்த மஹிந்த இப்போது வெல்லமானது எப்படி? பொத்துவில் மக்களை முஹுது விகாரையை வைத்து அரசியல் இலாபம் அடைந்ததைப்போல் இன்னும் என்ன அடையப் போகிறாரோ. அரசைக் கவிழாமல் பாதுகாக்க அரசின் பங்காளி கட்சியான தேசிய காங்கிரசும் உண்டு. உங்களை போன்ற யாருடைய பங்கும் அரசுக்குத் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவர் இந்திய தூதுவராலயத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்!

இலங்கைக்கான இந்திய தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடக்கப் போவதாக தூதுவராலயத்திற்கு தகவலளித்த குற்றத்திற்காக முன்னாள் விமானப்படை அதிகாரியொருவர் கொழும்பு குற்றவியல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாளை (15) இந்திய சுதந்திரத் தினம் கொண்டாடப்படவிருப்பதால், இந்திய தூதுவராலயத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்த இடமிருப்பதாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தகவல்கள் கூறுகின்றன.

இந்த நபர் வழங்கிய எச்சரிக்கை மீது கொழும்பு காலி வீதியில் அமைந்துள்ள இந்தி தூதுவராலய அதிகாரியொருவரால் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் நேற்று பதியப்பட்ட முறைப்பாட்டிற்கேற்ப, கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கீர்த்தி ரத்நாயக என்ற முன்னாள் விமானப்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் ஊடக செய்தியாளர் சிரேஷ்ட எஸ்.எஸ்.பி. சட்டத்தரணி அஜித் ரோஹன கூறுவதற்கேற்ப, பனாகொட பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்து இந்த சந்தேக நபர் விமானப்படையிலிருந்து விரட்டப்பட்டவராவார்.

Posted in Uncategorized

தமிழகம், கேரளாவில் சிறப்பு தேடுதல்! – விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் மீட்பு

இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, ​​விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய புலனாய்வு முகமையால் இன்று தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கின்றன.

தமிழகம் மற்றும் கேரளாவில் ஏழு இடங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்திய தேசிய புலனாய்வு நிறுவனத்தின் தகவல்படி விடுதலைப் புலிகள் தொடர்பான புத்தகங்கள், கையடக்க தொலைபேசிகள், சிம் அட்டைகள் உட்பட ஏழு மின்னணு சாதனங்கள் அங்கு கண்டுபிடிக்கப்பட்டன.

ஏப்ரல் மாதத்தில், இந்திய கடலோர காவல் படையினர் 300 கிலோகிராம் ஹெராயின், ஐந்து துப்பாக்கிகளுடன் ஆறு இலங்கையர்களை கைது செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் முக்கிய சந்தேகநபர் பாகிஸ்தான் பிரஜை என்றும் அவருக்கு புலிகளுடன் நேரடி தொடர்பு இருப்பதாகவும் இந்திய பாதுகாப்பு படையினர் வெளிப்படுத்தியுள்ளனர்.

மூன்றாவது நாளாக 150 ஐ கடந்த கொரோனா மரணங்கள்

நாள் ஒன்றில் பதிவான அதிகப்படியான கொவிட் மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 160 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சற்றுமுன்னர் அவர் உறுதிப்படுத்தினார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 350,693 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 307,345 ஆக அதிகரித்துள்ளது.

மதுரை ஆதீனம் சிவபதமடைந்தார்

மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் உடல் நலக்குறைவால் நேற்று வெள்ளிக்கிழமை(13-08-2021) இரவு சிவபதமடைந்தார்.

சுவாசக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்த மதுரை ஆதீனம் கடந்த ஆகஸ்ட்- 09 ஆம் திகதியன்று மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை(12) தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்ட அவருக்கு நேற்று(13) வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கைச் சுவாச சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் நேற்று இரவு-9.15 மணியளவில் சிகிச்சை பலனின்றிச் சிவபதமடைந்தார்.

தமிழகத்தில் உள்ள மிகப் பழமையான சைவத் திருமடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சந்நிதானமாக விளங்கியவர் மதுரை ஆதீனம்.

சிறந்த தமிழ்ப் புலமையும், பன்மொழிப் புலமையும், கணீர் என்ற குரல் வளமும், பேச்சாற்றலும் மிக்கவராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் திகழ்ந்தார்.

காஞ்சி சங்கர மடத்துக்கு நேர் எதிரான ஆதீனமாக ஓர் நவீன வரலாற்றைத் தொடங்கி வைத்த சைவப் பெரியார் குன்றக்குடி அடிகளாரைப் போல வடமொழி எதிர்ப்பு, வைதீக எதிர்ப்பு போன்ற தமிழ்மண்ணுக்கே உரிய சிந்தனைகளை கொண்டவராக இறை பணியாற்றியவர்.

தமிழ்மொழி, மண், மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் மதுரை ஆதீனம்.

இதேவேளை, கடந்த-2019 ஆம் ஆண்டு மதுரை ஆதீனத்தின் இளவரசராக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகளால் முடிசூட்டப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தான் மதுரை ஆதீன மடத்தின் 293 ஆவது மடாதிபதியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக மதுரை ஆதீன மட நிர்வாகிகள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

Posted in Uncategorized