ரிஷாட் திடீரென வைத்தியசாலையில் அனுமதி

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளின் நிமித்தம் கைது செய்யப்பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் மாரடைப்பு கரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 42 ஆம் இலக்க சிகிச்சை அறையில் அவர் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் உறுதி செய்தன.

ரிஷாத் பதியுதீன் தனக்கு நெஞ்சு வலிப்பதாக சி.ஐ.டி. அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ள நிலையில், அதனையடுத்தே அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சி.ஐ.டி.யினர் அழைத்து சென்றதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனைகளை அடுத்து அவர் தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சி.ஐ.டி.யினரின் பாதுகாப்புக்கு மத்தியில் அவர் சிகிச்சைப் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேசத்தை வளைக்க முன் தமிழ் பேசும் மக்களின் மனங்களை வெல்ல வேண்டும்

புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, இலங்கையில் உள்ள அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை அவசர அவசரமாக சந்தித்துள்ளார். நம்நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு முதலீடுகள் தேவை என்று கூறுகிறார். அதற்கு இந்த தூதுவர்கள் உதவ வேண்டுமெனவும் கூறுகிறார். புதிய நிதியமைச்சரின் கருத்து சரிதான்.

ஆனால், சர்வதேச நாடுகளை வளைத்து போட, நிதியமைச்சரை மாற்றி, தூதுவர்களை சந்தித்து கோரிக்கை விடுப்பது மாத்திரம் போதாது. இலங்கை அரசாங்கம் தனது, “போலி தேசியவாத” கொள்கையை மாற்ற வேண்டும். இனவாதத்தை கைவிட்டு, தமிழ், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.

அதேபோல் இலங்கை அரசாங்கம், உலக நாடுகளுக்கு தந்துள்ள தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை பற்றிய உறுதிமொழிகளை காப்பாற்றுகின்றதா என்பதை, இந்த அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களும் உறுதி செய்து விட்டு, இலங்கை அரசுக்கு உதவ முன்வர வேண்டும். அதைவிடுத்து விட்டு, தங்கள் சொந்த நலன்களுக்காக, தமிழ் பேசும் மக்களின் தோள்களில் சவாரி ஓட இனியும் முனைய கூடாது. உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விட வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்” என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இவ்விவகாரம் பற்றி தமுகூ தலைவர் மனோ எம்பி மேலும் கூறியதாவது, புதிய துடைப்பான் நன்றாக துடைப்பது போன்று, புது நிதி மந்திரி பதவிக்கு வந்தது முதல் நன்றாக சுறுசுறுப்பாக இயங்குகிறார். விளைவுகள் இன்னமும் வெளிவரவில்லை என்றாலும், பசில் ராஜபக்ச அரசுக்குள் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் ராஜபக்ச சகோதரர்களின் தோல்வியால் துவண்டு போயிருந்த இலங்கை பொதுஜன முன்னணி அரசாங்கத்துக்கு பெசில் ராஜபக்சத்தான் இப்போது கிடைத்துள்ள ஒரே துருப்பு சீட்டு என நன்றாக தெரிகிறது.

இவரது மூத்த சகோதரரும் பிரதமரும் முன்னாள் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச தந்து கையில் எப்போதும் ஒரு மந்திர பந்தை வைத்து உருட்டிக்கொண்டே இருப்பார். கடைசியில் அந்த மந்திர பந்து சரியாக வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது. அது சரியாக வேலை செய்து இருந்தால், அவர் பதவி விலகி அந்த இடத்துக்கு பெசில் வர வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்காதே.

இப்போது புதிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, ஏறக்குறைய எனக்கு எதிரிலேதான் ஆளும் தரப்பில் அமர்ந்துள்ளார். அலாவுதீனின் அற்புத விளக்கை, பெசில் தனது கையில் வைத்திருக்கின்றாரா என நான் அவர் பாராளுமன்றம் வந்த நாளன்று தேடி பார்த்தேன். அலாவுதீனின் அற்புத விளக்கை காணோம். தனது அலுவலகத்தில் வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

‘அண்டா-கா-கசம், அபூ-கா-கசம்-திறந்திடு சீசே’ என்ற மந்திரத்தை சொல்லி, கொள்ளையன் அபு ஹுசைனின் ரகசிய குகையை திறந்து, தங்கத்தையும், வைரத்தையும், செல்வத்தையும், நம்ம அலிபாபா எடுத்து தந்ததை போல, நம்ம புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவும் மக்களுக்கு மந்திரத்தால் நிவாரணம், விலை குறைப்பு, சம்பள உயர்வு, இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு, அனைவருக்கும் எல்லையில்லா தடுப்பூசி என்று வரிசையாக எடுத்து விடுவார் என எதிர்பார்த்தேன்.

அவர் தற்போது, அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய தூதுவர்களை சந்தித்து ஒத்துழைப்பை கோரி உள்ளார். நிறைய ன் முதலீடுகளையும், கடன்களையும், நன்கொடைகளையும், நிதி அமைச்சர் கோரினார் என எனக்கு ஒரு மேற்குலக வெளிநாட்டு தூதுவர் கூறினார். நல்ல விசயம்தான். எப்படியாவது மக்களுக்கு நல்லது நடந்தால் சரி. எமது அரசாங்கம் விரைவில் வரும். அதுவரை கஷ்டத்தை பொறுத்துக்கொண்டு இருங்கள் என நான் அரசியல் நோக்கில் பேச மாட்டேன். எங்கள் மக்களுக்கு நன்மை கிடைத்தால், நாம் உள்ளே இருந்தாலும், வெளியே இருந்தாலும், அது நம்ம அரசாங்கம்தான்.

ஆனால், புதிய நிதியமைச்சர் பெசில் ராஜபக்சவும், அவரது ஜனாதிபதி சகோதரரும், பிரதமர் சகோதரரும், தமது கொள்கைகளை மாற்ற வேண்டும். தொட்டதுக்கு எல்லாம் போலி தேசியவாதம் பேசி, நாடு பறி போகிறது என்று கூறி, சிங்கள இனம், பெளத்த மதம் ஆகிய இரண்டையும் இழுத்து விடும் பழக்கத்தை கைவிட வேண்டும். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவை தொடர்பில் உலகத்துக்கு கொடுத்த உறுதி மொழிகளை நிலை நாட்ட முன் வர வேண்டும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களின் மனங்களை வெல்ல முயல வேண்டும். அப்படி செய்தால், இலங்கை நாட்டை நோக்கி முதலீடுகள் குவியும். செல்வம் குவியும். வானளவு வளம் குவியும்.

அமெரிக்க, இந்திய, சீன, ரஷ்ய, ஐரோப்பிய யூனியன், ஜெர்மனி, பிரித்தானிய நாட்டு தூதுவர்களுக்கும் ஒன்றை கூற விரும்புகிறேன். இந்த செய்தியின் மொழிபெயர்ப்பு இவர்கள் கவனத்துக்கு போகும் என எனக்கு தெரியும். தமிழ், முஸ்லிம், இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க இலங்கை மக்களை இந்த அரசாங்கம் நியாயமாக நடத்துகிறதா என தேடி பாருங்கள். தேசிய ஒருமைப்பாடு, மனித உரிமைகள், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றை உறுதி செய்ய சொல்லுங்கள். உங்கள் சொந்த நலன்களுக்காக தமிழ் மக்களை பயன்படுத்த முயல வேண்டாம்.

உங்களை நம்பி பிரயோஜனம் இல்லை என்ற நிலைக்கு தமிழ் மக்களை தள்ளி விட வேண்டாம். சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழலாம் என, இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்து “வன் பெல்ட்-வன் ரோட்” என்ற சீனாவின் பட்டுப்பாதையில் தமிழ் மக்களும் பயணிக்கும் நிலைமையை உருவாக்கிட வேண்டாம் எனக்கூறி வைக்க விரும்புகிறேன்.

Posted in Uncategorized

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் குறித்து மஹா சங்கத்தினருக்கு ஜனாதிபதி விளக்கம்

நாட்டின் எதிர்காலத்திற்காக முன்னெடுக்கப்படும் கொள்கை சார்ந்த திட்டங்களுக்கு ஒரு சிலர் எதிர்ப்பு தெரிவிப்பது எதிர்கால தலைமுறையினருக்கு இழைக்கும் மாபெரும் துரோகமாக கருதப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்ட மூலத்தில் உள்ள தடைகளை நீக்கி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பௌத்த மகாசங்கத்தினரிடம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை பௌத்த ஆலோசனை சபை ஜனாதிபதி செயலகத்தில் கூடியது. இதன் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாவது,

உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் மாணவர்கள் அதிக நிதியை செலவு செய்கிறார்கள். இந் நிதியை சேமிக்க வேண்டுமாயின் உயர் தரம் வாய்ந்த பல்கலைகழகங்கள் நாட்டில் உருவாக்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சட்ட மூலத்தில் உள்ள தடைகளை நீக்கி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் கொண்டு வரப்படும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

பயணக்கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிப்பு!

தற்போது அமுலாக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடுகளில் சிலவற்றை தளர்த்தும் நோக்கில் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய தினத்திலிருந்து அமுலாகும் வகையில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சிறுவர் பூங்காக்கள், விலங்குகள் சரணாலயங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், மிருககாட்சிசாலைகளை பார்வையிட ஒரு தடவையில் 25 வீதமானவர்களுக்கே அனுமதியளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளக இசைநிகழ்ச்சிகளை மண்டப கொள்ளளவில் 50 சதவீத பார்வையாளர்களுடன் நடாத்தவும் புதிய சுகாதார வழிகாட்டியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, வழிப்பாட்டு தலங்களை திறந்து வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்கான வழிகாட்டல்கள் வேறுவேறாக வழங்கப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

சுதந்திரக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் புதன் பேச்சு

அரசாங்கத்துக்குள் ஏற்பட்டிருக்கின்ற முரண்பாடுகளை களைவதற்காக, எதிர்வரும் 21ஆம் திகதி புதன்கிழமையன்று முக்கிய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கும் ஸ்ரீ லங்கா சுத்திரக்கட்சியின் பிரதிநிதிகளுக்கும் இடையிலேயே இப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் தனியாக, சுதந்திரக் கட்சியினர்
பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என அறியமுடிகின்றது.

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமருடனான பேச்சுவார்த்தை அலரிமாளிகைளிலும் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. எனினும், பிரதமருடனான பேச்சுவார்த்தைக்கு இன்னும் திகதி குறிக்கப்படவில்லை என்றும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை கவனத்தில் எடுக்காமல் விடுதல், அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்காக, ஒருங்கிணைப்பாளர்களை இணைத்துக் கொள்ளும் போது, சுதந்திரக் கட்சியினரை கணக்கிலெடுக்காது விடல், உள்ளிட்டவை தொடர்பில், அரசாங்கத்துக்கு எதிராக, சுதந்திரக் கட்சியினர் தொடர்ச்சியாக
குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில், சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இதேவேளை, அரசாங்கத்தின் பங்காளியிலிருந்து விலகுமாறும், சுதந்திரக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள், அண்மையில் நடந்த
மத்தியக்குழுக் கூட்டத்தின் போது வலியுறுத்தியிருந்தனர்.

எனினும், நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு அவ்வாறான தீர்மானங்களை அதிரடியாக எடுக்காமல், அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவதற்கே சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.அதன்பிகாரமே எதிர்வரும் 21ஆம் திகதியன்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Uncategorized

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை ஆகஸ்ட் வரை இடைநிறுத்தம்

மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகளை நாளை (17) முதல் இடைநிறுத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இந்த விடயத்தை தெரிவித்தார்.

இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படவுள்ளன.

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களின் போக்குவரத்து வசதி கருதி மாத்திரமே மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் கடந்த புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டன.

Posted in Uncategorized

கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் உடைப்பு- நடவடிக்கை எடுக்குமாறு ரெலோ தலைவர் செல்வம் எம்பி வலியுறுத்தல்

மாவட்டத்தில் தொடர்ச்சியாக கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் சேதப்படுத்தும் நபர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று மன்னார் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கத்தோலிக்க திருவுருவச் சிலைகள் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தும் சம்பவம் தொடர்பாக மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களுக்கு இன்றைய தினம் (16) வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளார்

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மன்னார் மாவட்டத்தின் கத்தோலிக்கரின் வணக்கத்திற்குரிய திருவுருவ சிலைகளை இடிப்பது மற்றும் அடித்து நொறுக்குவதை நான் அவதானித்து வருகின்றேன். இத்தகைய செயல் கண்டிக்கத் தக்கது. மன்னார் மாவட்டத்தில் ஒற்றுமையுடனும் அமைதியுடனும் வாழும் கத்தோலிக்கர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே பகைமையை உருவாக்கும் செயல் இது இந்த செயற்பாடு அமைதி மற்றும் நல்லிணக்க இயக்கத்திற்கு எதிரான நபர்களின் செயல் என்பதை நான் நன்கு அறிவேன் எனவே காவல் துறையினர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அத்துடன் விரைவாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் கொண்டு வந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இனிமேல் இது போன்ற சம்பவங்கள் தொடர அனுமதிக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Posted in Uncategorized

வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சுதந்திரக் கட்சிக்கு அதன் இளைஞர் முன்னணி விடுத்துள்ள சவால்

பல்கலைக்கழக கட்டடைப்பை இராணுவமயமாக்க இடமளிக்க முடியாது, அதனால் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளவேண்டும்.

இல்லாவிட்டால் சட்டமூலத்துக்கு எதிராக சிறிலங்கா சுதந்திர கட்சி வாக்களிக்கவேண்டும் என சிறிலங்கா சுதந்திரக் கட்சி இளைஞர் முன்னணியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எரிக் வீரவர்த்தன தெரிவித்தார்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் முன்னணியின் நிலைப்பாட்டை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று கொழும்பு மருதானையில் அமைந்திருக்கும் கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் பிரதான பங்காளி கட்சியாக சிறிலங்கா சுதந்திர கட்சி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வின் செளபாக்கிய வேலைத்திட்டத்துக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கிவருகின்றது. என்றாலும் அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருக்கும் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்துக்கு நாங்கள் எந்தவகையிலும் ஆதரவளிக்க முடியாது. அது எமது எதிர்கால சந்ததியினருக்கு செய்யும் பாரிய அழிவாகும் என்றார்.

இலங்கை ஆட்சியாளர்கள் சீனசார்பு கட்சி அதிகாரத்தை நோக்கி இலங்கை அரசியலை நகர்த்துகிறார்களா? – பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

இலங்கை அரசியலில் சீன கொம்யூனிசத்தின் செல்வாக்கு அதீதமாக வளர்வதாக புலமையாளர் தரப்பிலும் ஊடகவியலாளர் மத்தியிலும் மற்றும் எதிர்க்கட்சிகளின் உரையாடலிலும் வெளிப்படுத்தப்படுகின்றது. அத்தகைய விம்பம் இலங்கைக்கு பொருத்தப்பாடு உடையதா? என்பதையும், அவ்வாறெனில் சீன கொம்யூனிசப்பண்பாடு தற்போது அடைந்துள்ள உண்மையான வடிவமும் புரிந்து கொள்ளுதல் வேண்டும். அத்தகைய புரிதலை தரும் நோக்கிலேயே இக்கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

சீனா மாவோ சேதுங் தலைமையில் கார்ள் மாக்ஸின் சிந்தனைகளை ஆசியமயப்படுத்துவதில் வெற்றி கண்டது. ஆனால் அத்தகைய சோசலிச மரபு படிப்படியாக கொம்யூனிச சர்வதிகாரத்தை மாவோ சேதுங்-இன் கலாசாரப்புரட்சியோடு அடைந்தது. ஆனால் டெங் சியாவொப்பிங் அத்தகைய சோசலிச சர்வதிகார கட்டமைப்பை பொருளாதார நலன்கருதி சந்தை சோசலிச கட்டமைப்பாக வடிவமாக்கினார். அது ஒரு வகையில் மேற்கு முதலாளித்தவத்திற்கு வெற்றிகரமான அம்சமாக காணப்பட்டது. இதனால் மேற்கின் சந்தையும் சீனாவின் சோசலிச சந்தையும் போட்டிபோடும் நிலையொன்று உலகளாவியரீதியில் வளர்ச்சியடைந்தது. அதுவே உலகளாவிய அரசியல் பொருளாதார கட்டமைப்பையும் உருவாக்கியது. இத்தகைய சீனா சோசலிச சர்வதிகார சந்தை கட்டமைப்புடனேயே இலங்கையின் ஆட்சித்தறை நெருக்கமான உறவை வைத்தள்ளது.

இத்தகைய சீனா இலங்கை நெருக்கத்தின் ஆரம்ப புள்ளி சண்முகதாசனின் தலைமையில் உருவாகிய சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் கட்டமைப்போடு இலங்கையில் செல்வாக்கையும் பரிமாணத்தையும் பெறத்தொடங்கியது. சண்முகதாசனின் சீன சார்பு கொள்கை என்பது சீனாவின் ஆசிய மாதிரி பற்றியது. இலங்கை 1935ஆம் ஆண்டிலிருந்து சோசலிச அரசியல் கட்சி மரபுக்குள் ஈர்க்கப்பட்டதும் சண்முகதாசனின் புரட்சிகரமான சிந்தனைக்கு முக்கிய வேராக அமைந்திருந்தது. சண்முகதாசனின் வழிநடத்தலில் தோன்றி புரட்சிகரமான அணுகுமுறையை பின்பற்றிய றோஹன விஜயவீர சீன கொம்யூனிச மரபின் இரண்டாவது பரம்பரையாக கருதப்பட்டார். அவர் 1971இலும், 1989இலும் முன்னெடுத்த ஆயுத புரட்சி தோல்வியில் முடிந்த போதும் அதுவொரு அரசியல் பொருளாதார புரட்சிகரமான மரபை தோற்றுவித்தது. இதன் மூன்றாவது பரம்பரையாகவும், மேற்கின் சந்தைக்கு நிகரான சர்வதிகார சோசலிச சந்தை பொறிமுறைக்குமான உறவாக காணப்பட்டது. அத்தகைய உறவின் தொடக்க புள்ளி முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாக்கா ஆவார். சண்முகதாசனும் றோஹண விஜயவீரவும் ஆயுதப்போராட்டத்தினூடாக சீன அறிமுகத்தை இலங்கையில் மேற்கொண்ட போதும் ஸ்ரீமாவோ அரசாங்கம் மிதவாத அரசியலூடாக புவிசார் அரசியலை தந்திரோபாயமாக கையாளும் விதத்தில் சீனா-இலங்கை உறவை கட்டமைத்தார். ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவிற்கு முன்பே ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியிலிருக்கும் போது அரிசி-இறப்பர் உடன்படிக்கை சீன இலங்கை உறவை அடையாளப்படுத்தியது என்பதுவும் மறுக்க முடியாது.

ஆனால் சோவியத் யூனியனில் சோசலிசம் வீழ்ந்து புதிய உலக ஒழுங்கு மலர்ந்த போது வலுவான தேசங்கள் இலங்கை போன்ற சிறிய நாடுகளை கைவிடும் நிலை ஏற்பட்ட போது ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவின் வாரிசான சந்திரிக்கா பண்டாரநாயக்க சீனா-இலங்கை உறவை இன்னொரு கட்டத்துக்கு எடுத்துச்சென்றார். இதுவும் முழுமையாக அரசியல் மற்றும் பொருளாதார நலனுடன் இசைவுபட்டதாக அமைந்திருந்தது. இதன் வளர்ச்சிப்போக்கை அதி தீவிரமாகவும் நான்காவது பரம்பரை எனவும் அடையாளப்படுத்தக்கூடிய அளவிற்கு சீனா-இலங்கை உறவின் பரிணாமத்தை மிதவாத அரசியலுக்குள்ளிலிருந்த எழுச்சி பெற்ற இன்றைய பிரதமரும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய மகிந்த ராஜபக்சா தோற்றுவித்தார். இத்தகைய சீனா-இலங்கை உறவு அரசியல் பொருளாதாரமாக மட்டுமன்றி இராணுவமாகவும், கட்சி சர்வதிகாரமாகவும் வரைமானம் எடுக்கின்ற ஒன்றாக விளங்குகிறது. இலங்கையினுடைய அரசியல் சூழலை தனிக்கட்சி அரசியலுக்குள்ளால் நகர்த்தவும், பொது நிர்வாக இயந்திரத்தின் மீது இராணுவ செல்வாக்கை பலப்படுத்தவும் திட்டமிடுகிறது. இத்தகைய திட்டமிடல், சீனா சார்பு அரசியல் பொருளாதார இராணுவ, கட்சி பரிணாமம் என நீண்டதொரு வளர்ச்சிப்போக்கை தொடக்கி உள்ளது. இதற்கு எதிராக எழுந்துள்ள அலைகள் பலவீனமாக அமைந்திருப்பதோடு உலகளாவிய சீனாவின் அதிகார சமநிலைக்கு முன்னால் அதிக நெருக்கடிக்கும் அத்தகைய அணிகள் தள்ளப்பட்டுள்ளன.

அதுமட்டுமன்றி சீனாவை விமர்சிக்கும் அல்லது எதிர்க்கும் அணியினர்களில் பிரதானமானவர்கள் புரட்சிகர ரோஹன விஜயவீர-இன் பாசறையில் வளர்ந்த விஜயவீரா-இன் மரணத்திற்கு பின்னர் மிதவாத அரசியலை அடையாளப்படுத்திய ஜே.வி.பி-இனர். ஆயினும் அவர்களது எதிர்ப்புவாதம் முழுமையான வடிவத்தை கொண்டதா என்பது சந்தேகத்திற்குரியது. இலங்கையில் சீனாவின் காலணித்துவம் பற்றி விமர்சனம் செய்யும் ஜே.வி.பி-இனர் சீன கொம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் கொம்யூசிஸ்ட் கட்சியின் சாதனைகளை அங்கீகரித்தமை சந்தேகத்தை வெளிப்படுத்தி உள்ளது. அதேபோன்றே ஐக்கிய தேசிய கட்சியும் சீனா மீதான விமர்சனங்களை அதீதமாக கொண்டிருந்த போதிலும் 1952 றப்பர்-அரிசி உடன்படிக்கையில் தொடங்கி ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சி தலைவராக இருக்கின்ற போது சீனாவிற்கு அழைத்து செல்லப்பட்ட போதும் நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருக்கின்ற போது சீனா மேற்கொண்ட ஒரே சுற்று ஒரே பாதைக்கான ஆரம்ப விழாவில் கலந்து கொண்டமையும் அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு குத்தகைக்கு வழங்கும் உடன்பாட்டில் ஒப்பமிட்டதனூடாகவும் அதன் எதிர்ப்பு வாதத்தின் நம்பிக்கை பலவீனம் என்பது தெளிவாகிறது. தமிழ்த்தரப்பை பொறுத்தவரை அது தனது தனிப்பட்ட அரசியல் நலனுக்காகவும், இந்திய-அமெரிக்க நட்புக்காகவும் வடிவமைக்கப்பட்டதொன்றாக தெரிகிறது.

தென்னிலங்கை புத்திஜீவிகளும் பெருமளவு ஊடகப்பரப்பில் செயற்படுவோரும் சீன-இலங்கை உறவை வளர்ச்சிக்குரியதொன்றாகவே கருதுகிறார்கள். குறிப்பாக அத்தகைய உறவை புவிசார் அரசியலாகவும் பூகோள அரசியலாகவும் புவிசார் பொருளதாரமாகவும் கணிப்பிட்டு செயற்படுகின்றனர். இவை அனைத்தும் இலங்கைக்குரிய ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுமென கருதுகின்றனர். அதேநேரம் ஒரு சில ஆய்வாளர்களும் ஊடகப்பரப்பினரும் நீண்ட கால நோக்கில் சீன-இலங்கை உறவு ஆபத்தானதாக அமைந்துவிடுமா? என சந்தேகிக்கின்றார்கள். அனால் யதார்த்தமாக நோக்கினால் இலங்கையின் ஆட்சியாளர்கள் சீன – இலங்கை உறவை நீண்ட பரிமாணமிக்கதொன்றாக உருவாக்க திட்டமிடுகிறார்கள். அதுவே இலங்கையின் இறைமையையும் பொருளாதார செழிப்பையும் உலகளாவிய நெருக்கடியிலிருந்து மீள உதவுமென கருதுகின்றனர். இத்தகைய ஆட்சியாளர்கள் மேற்குலகத்தையும் இந்தியாவையும் கையாளும் பொறிமுறையே சீனாவின் உறவு வெற்றிகரமான முகமென கருதுகிறது. அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாளும் விதத்திலேயே திருகோணமலை துறைமுகத்தையும் மேற்கு முனையத்தையும் வடக்கு கிழக்கில் இந்தியாவின் பிரசன்னத்தையும் முகாமை செய்து வருகிறது. சீனாவுடன் 99 ஆண்டு கால குத்தகைக்கு உடன்பட்ட இலங்கை ஆட்சியாளர்கள் அமெரிக்காவோடு 5 வருட குத்தகைக்கு மட்டுமே உடன்பட்டுள்ளார்கள். தென்னிலங்கை ஆட்சியார்களின் கணிப்பு சரியாக அமையுமாயின் ஏறக்குறைய 5-10 ஆண்டுகளுக்குள் இலங்கை மீதான அமெரிக்க இந்தியாவின் செல்வாக்கு முற்றாக நீங்கிவிடுமென கருதுகின்றது. காரணம் சீனாவும் – இலங்கையும் நிரந்தரமான நட்பு நாட எனும் விம்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இலங்கையில் சீன சார்பு வளர்ச்சி நிலை என்பது ஆட்சியில் உள்ள மிதவாத அரசியல் தலைமைகளிடம் இராணுவரீதியிலான கட்டமைப்பையும் சர்வதிகார ரீதியிலான கட்சி கட்டமைப்பையும் விஸ்தரிப்பதற்கான முனைப்போடு அணுகப்பட்டு வருகிறது. பொருளாதாரம் அல்லது சந்தை பொருளாதாரம் அத்தகைய விம்பத்துக்கு ஒத்துழைப்பை கொடுக்கும் அங்கமாகவே பார்க்கப்படுகிறது. இது இலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருத்தப்பாடுடைய நிலையாகும். சீனா இலங்கைக்குள் பொருளாதார ஒத்தழைப்பை முதன்மைப்படுத்த இலங்கை சீனாவுக்குள் கட்சி அரசியலையும் பொருளாதாரத்தையும் இராணுவ பரிமாணத்தையும் தேடுகின்றது.

-அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்-

Posted in Uncategorized