முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் வீட்டில் காயமடைந்த சிறுமி மரணம்

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின் வீட்டில் பணியாற்றும் போது தீக்காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிந்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இன்று காலை குறித்த சிறுமி உயிரிழந்துள்ளதாக பொரளை பொலிஸார் கொழும்பு பதில் நீதவான் ரஜீந்ரா ஜயசூரிய இன்று தெரியப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் 73வது வோட்டில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்த சிறுமியின் உடலை பார்வையிடுவதற்காக கொழும்பு பதில் நீதவான் சென்றுள்ளார்.

பின்னர் சிறுமி தீக்காயங்களுக்குள்ளான முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதினின், கொழும்பு7 பௌத்தாலோக மாவத்தையிலுள்ள வீட்டையும் நீதவான் பார்வையிட்டுள்ளார்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள வேண்டும் என பொரளை பொலிஸார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொண்டு நீதிமன்றத்தில் தகவல் வெளியிடுமாறு நீதவான் நீதிமன்ற சட்ட வைத்தியரிடம் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 3ஆம் திகதி உடலில் தீக்காயங்களுக்குள்ளான நிலையில் குறித்த சிறுமி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுமி டயகம பிரதேசத்தை சேர்ந்த இஷாலினி ஜுட் குமார் என்ற 16 வயதுடைய சிறுமி என குறிப்பிடப்படுகின்றது.

Posted in Uncategorized

அமெரிக்கத் தூதுவரை சந்தித்தது கூட்டமைப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தலைமையிலான குழுவினரை இன்று (15) சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இதன் போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு உள்ளிட்ட பரந்துப்பட்ட விடயங்கள் பேசப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிபந்தனைகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வர அனுமதி

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது.

இதற்கமைய, நாட்டிற்குள் வந்த பின்னர் முதலாவது தினத்தில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லையாயின் அவர்கள் இலங்கையின் எந்த பாகத்திற்கும் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கப்படும் என சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேநேரம், சுற்றுலா மேற்கொண்டுள்ள 7ஆவது தினத்தில், சுகாதார அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை நிலையத்தில் அவர்கள் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து சுற்றுலாப் பயணிகளும் இலங்கை வருவதற்காக விமானத்தில் பயணிப்பதற்கு 72 மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையில் தொற்று உறுதியாகவில்லை என்பதற்கான ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் பஷிலுக்கும் 7 நாடுகளின் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையில் இரு தரப்பு பேச்சு

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவிற்கும், ஏழு நாடுகளின் தூதுவர்கள் மற்றும். உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தை 14-07-21 இடம்பெற்றது.

அமெரிக்கா, சீனா, இந்தியா, ரஸ்யா, பிரித்தானியா, ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராஜதந்திரிகள் இச்சந்திப்பில் கலந்துக் கொண்டார்கள்.

பிரித்தானியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளின் உயர்ஸ்தானிகர்களும் இன்று நிதியமைச்சரை சந்தித்தனர்.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் பசுமைப் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது தொடர்பில் அமைச்சர் பசில் ராஜபக்ஸ அதீத கவனம் செலுத்தியதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், மீள்புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை ஊக்குவிப்பதற்கு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு வர்த்தகத்தினை மிகுந்த ஒத்துழைப்புடன் முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது இணக்கம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிர்காலத்திலும் தடுப்பூசி வசதிகளை வழங்குவதாக சீன தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

உயர்மட்ட முதலீட்டாளர்களை ஹம்பாந்தோட்டை தொழில் பேட்டையில் தொடர்புபடுத்த தயாராகவுள்ளதாகவும் சீன தூதுவர் இதன்போது கூறியுள்ளார்.

LNG வலு சக்தி செயற்றிட்டத்திற்காக முதலீட்டாளர்களை ஈடுபடுத்துவதற்கு இருக்கும் இயலுமை தொடர்பாக ஆராய்வதாக அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

நான்காவது நாளாக தொடரும் ஆசிரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை

Online கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களால் முன்னெடுக்கப்படும் தெழிற்சங்க நடவடிக்கை நான்காவது நாளாக இன்றும் (15) தொடர்கின்றது.

கடந்த 12 ஆம் திகதி தொழிநற்சங்க நடவடிக்கையில் பங்கேற்றிருந்த தமது உறுப்பினர்களுக்கு நீதி மன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட நிலையிலும் சிலர் தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் செல்லப்பட்டமை உள்ளிட்ட பல விடயங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த தொழிற்சங்க நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

24 ஆண்டுகளாக காணப்படும் அதிபர், ஆசியர்களுக்காக சம்பளப் பிரச்சினை குறித்து அனைத்து அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் தமது பிரச்சினைக்கு எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை என அவர் கூறியுள்ளார்

மேலும் காலம் தாழ்த்தாது, தமது பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கு பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்குமாறும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

45 இலட்சம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளிலிருந்து ஆசிரியர்கள் விலகியுள்ளமை தொடர்பில் அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் வழங்கவில்லை என கல்வி தொழிற்சங்கத்தின் தலைவர் உலப்பனே சுமங்கல தேரர் கூறியுள்ளார்.

இதனால் இந்த தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமது கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் திங்கட்கிழமை, தமது தொழிற்சங்கத்தினர் இசுருபாயவுக்கு செல்லவுள்ளதாகவும் உலப்பனே சுமங்கல தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக Online முறையிலான கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை என்பதுடன் மாணவர்கள் கல்வி கற்பதற்காக இருந்த ஒரேயொரு சந்தர்ப்பமும் அற்றுப்போய் இன்றுடன் 4 நாட்கள் ஆகின்றன.

இதனால் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

குறிப்பான தரம் 05 புலமைபரிசில் பரீட்சை, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை, உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Uncategorized

விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் இன்று ஆஜராகும் பேப்ரல் அமைப்பு

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இன்று (14) பேப்ரல் அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சபைமுதல்வரும் வெளிநாட்டு அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலான இந்த விசேட குழு இன்று முற்பகல் பாராளுமன்றத்தில் கூடவிருப்பதுடன், இதில் குழுவின் அழைப்பையேற்றுக் கலந்துகொள்ளவிருக்கும் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பேப்ரல்) தமது முன்மொழிவுகளை சமர்ப்பிக்கவுள்ளது.

அதேநேரம், பாராளுமன்ற விசேட குழு முன்னிலையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைப்பது தொடர்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கும் விசேட குழுவின் அனுமதி கிடைத்திருப்பதாக இக்குழுவின் செயலாளரும், பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதி செயலாளர் நாயகமுமான குஷானீ ரோஹனதீர தெரிவித்தார்.

அத்துடன், இக்குழுவின் சகல கூட்டங்களின்போதும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாட்டாளர்களை பங்கெடுக்கச் செய்யுமாறும் தலைவர் அறிவுறுத்தியிருப்பதாக ரோஹனதீர அவர்கள் குறிப்பிட்டார்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் மறுசீரமைப்புக் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட விசேட பாராளுமன்றக் குழுவுக்கு அரசியல் கட்சிகளின் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் பூர்த்தியடைகிறது.

Posted in Uncategorized

பிரித்தானியா தொடர்பில் சீனா கொண்டுவந்த அறிக்கை! இலங்கையும் கையெழுத்து

பிரித்தானியாவின் மனித உரிமை நிலைமை குறித்து கவலைகளை எழுப்பி, சீனாவால் கொண்டுவரப்பட்ட கூட்டு அறிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் போது இந்த கூட்டு அறிக்கை கொண்டுவரப்பட்டது.

“ஒரு குழு நாடுகளின் சார்பாக பேச எமக்கு மரியாதை உண்டு. ஐக்கிய இராச்சியத்தின் மனித உரிமை நிலைமை குறித்த எங்கள் ஆழ்ந்த கவலைகளை நாங்கள் வெளிப்படுத்துகிறோம்.

கடுமையான இனவெறி, இன பாகுபாடு, வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வன்முறை ஆகியவை ஐக்கிய இராச்சியத்தில் நீண்ட காலமாக இருந்து வருகின்றது” என ஜெனீவாவில் உள்ள சீன தூதுக்குழு அறிக்கையை வழங்கிய பின்னர் தெரிவித்துள்ளது.

“இங்கிலாந்தில் குடியேறிகளின் தடுப்பு மையங்கள் மோசமான நிலைமைகளின் கீழ் இயங்குகின்றன. அத்துடன், புலம்பெயர்ந்தோரின் உரிமைகள் கடுமையாக மீறப்படுகின்றன.

மேலும் மனித உரிமைகளை மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிட பிரித்தானியா ஒரு சாக்குப்போக்காக பயன்படுத்தியுள்ளதாகவும், சீன தூதுக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 47 வது அமர்வின் ஒரு இணையவழி கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

“மேற்கில் மனித உரிமைகள்: சர்வதேச கண்காணிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பதிலளிக்காமை” என்ற கருப்பொருளிலான இணைய வழி கலந்துரையாடலை சீனா, பெலாரஸ், ரஷ்யா மற்றும் வெனிசுலா இணைந்து ஏற்பாடு செய்தன.

40 க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

பெலாரஸ், ரஷ்யா, வெனிசுலா, ஈரான், வட கொரியா, இலங்கை உள்ளிட்ட பல, இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலவசக் கல்விக்கு பேரழிவை ஏற்படுத்தும்: சஜித் பிரேமதாச ​

உத்தேச கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் இலங்கையின் இலவசக் கல்விக்கு பேரழிவை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ​தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேசியப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் ஊக்குவிப்பதற்கும் தேவையான உயர் கல்வியை வழங்குவதற்காக சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்த வேண்டியது தேசிய ரீதியிலான தேவையாக இருந்தாலும், அந்த அடிப்படை தேவைக்கு அப்பாற்சென்று இலவசக் கல்வியை அழிப்பதற்கு உயர் கல்வி கட்டமைப்பிற்கு அப்பால் ஒரு நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் நடைமுறைப்படுத்தும் இந்த செயற்பாடு மூலம் உயர் கல்வியின் பண்புகள், தரம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் செல்வாக்கு முற்றாக இரத்தாகும் எனவும் அது இலவசக் கல்வியை பாரிய நெருக்கடிக்குள் தள்ளும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

வட, தென் மற்றும் ஊவா மாகாண ஆளுநர்கள் திடீர் மாற்றம் – தேர்தலுக்கு தயாராகும் பஸில்!

வடமாகாணம், தென்மாகாணம் மற்றும் ஊவா மாகாணங்களில் தற்போது ஆளுநர்களாக உள்ளவர்கள் மாற்றப்பட உள்ளனர் என்று புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

அதன்படி, தென் மாகாண ஆளுநராக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யப்பா அபேவர்தனவின் சகோதரரும், கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் எம்.பியமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென்மாகாண ஆளுநர் விலி கமகே ஊவா மாகாண ஆளுநராக நியமிக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.

இதுதவிர, நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கு எம்.பி பதவியை விட்டுக்கொடுத்த ஜயந்த கெட்டகொடவுக்கு வடமாகாண ஆளுநர் பதவி வழங்க யோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனை அவர் நிராகரித்திருக்கின்றார்.

பின்னர் அவருக்கு இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் பதவிக்கு யோசனை முன்வைக்கப்பட்ட போதும் அதனையும் அவர் நிராகரித்ததாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அதேபோல வடமாகாண ஆளுநர் பதவிக்கு சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவரது பெயரும் முன்மொழியப்பட்டதாகவே தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் சில அமைச்சர்களின் ஆசனங்கள் வழமைக்கு மாறாக மாற்றப்பட்டதாக தெரியவருகிறது.

இலங்கை அமைச்சரவை சம்பிரதாயத்திற்கமைய, ஜனாதிபதி, பிரதமருக்கு அடுத்த ஆசனத்தில் சிரேஸ்ட அமைச்சர்கள் அமரும் இடத்தில் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ அமர்ந்ததாக சொல்லப்படுகின்றது.

அந்த இடத்தில் முதல் ஆசனத்தில் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வளவு நாட்களாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த மாற்றங்கள் அனைத்தையும் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ மாகாண சபைத் தேர்தலை இலக்கு வைத்தே மேற்கொள்கின்றார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

Posted in Uncategorized

வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்!

இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தின் முதலாவது துணைவேந்தராக, யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வளாகமாக இயங்கிவந்த “யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகம்” எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் “இலங்கை வவுனியா பல்கலைக் கழகம்” எனத் தரமுயரும் என கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸினால் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, இலங்கை வவுனியா பல்கலைக் கழகத்தைத் தாபிப்பதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு நிலையாக யாழ்ப்பாண பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த. மங்களேஸ்வரன் முதலாவது துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.