ராஜபக்‌ஷர்களின் ஆட்சியில் திவாலாகும் நாடு – புருஜோத்தமன் தங்கமயில்

ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சி பீடமேறி, ஒன்றரை ஆண்டுகளுக்கு உள்ளேயே, நாடு திவாலாகும் கட்டத்தை அடைந்திருக்கின்றது.

ஏற்கெனவே பெறப்பட்ட கடன்களுக்கான வட்டிகளைச் செலுத்துவதற்கே, கடன்களைப் பெற வேண்டிய நிலை; உணவுப் பொருட்களின் இருப்பு அபாயக்கட்டத்தை அடைந்திருக்கின்றது; ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் வழங்குமா என்ற சந்தேகம் நீடிக்கின்றது; உள்நாட்டு உற்பத்தி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்து இருக்கின்றது; விவசாயிகள் உரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், கறுப்புச் சந்தை பெரியளவில் விரிந்திருக்கின்றது. அங்கு ஒரு சில பண முதலைகளுக்கான வசதி வாய்ப்புகள் தங்கு தடையின்றி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருகின்றன. மக்களின் வியர்வையை மெல்ல மெல்ல உறிஞ்சி முடித்து, இப்போது இரத்தத்தையும் உறிஞ்சும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள்.

நாட்டின் தேசிய வீரர்களாக, பாதுகாவலர்களாக முன்னிறுத்தப்பட்டே ராஜபக்‌ஷர்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களை ஆட்சியில் அமர்த்துவதற்காக, பௌத்த விகாரைகளுக்குள் இருந்து பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. தென் இலங்கையின் சமூகக் கட்டமைப்பின் ஆணி வேர், விகாரைகளுக்குள் இருக்கின்ற நிலையில், ராஜபக்‌ஷர்களின் மீள் வருகைக்கான கட்டியத்தை பௌத்த பிக்குகளே தலைமையேற்று மொழிந்தனர்.

ஆனால், அந்தப் பிக்குகளே ராஜபக்‌ஷர்கள் ஆட்சியில் அமர்ந்த குறுகிய காலத்துக்குள்ளேயே அவர்களுக்கு எதிராகத் திரும்பி இருக்கிறார்கள். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த வெற்றியைப் பொதுத் தேர்தலில் பெற்று, தங்களுக்கு வேண்டிய அனைத்துச் சட்டத் திருத்தங்களையும் ராஜபக்‌ஷர்கள் குறுகிய காலத்துக்குள்ளேயே செய்தார்கள்.

ஆனால், ஆட்சியை ஒருமைப்படுத்தி முன்நகர்த்துவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துவது குறித்துச் சிந்திக்க மறந்துவிட்டார்கள். அதனால், அரசாங்கத்தின் பங்காளிகள், அனுதாபிகள், திட்டம் வகுப்பாளர்கள் தொடங்கி அனைத்துத் தரப்பினரும் ராஜபக்‌ஷர்கள் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக, தென் இலங்கை தற்போது வெளிப்படுத்தியுள்ள அதிருப்தியின் அளவை, எந்தக் காலத்திலும் வெளிப்படுத்தியது இல்லை. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோற்கடிக்கப்பட்ட தருணத்திலும் கூட, தென் இலங்கை மக்கள் தற்போதுள்ள அதிருப்தியின் அளவை வெளிப்படுத்தி இருக்கவில்லை.

ஆனால், இன்றைக்கு ராஜபக்‌ஷர்களின் நிலை என்பது, அபாயத்துக்குரிய கட்டத்தை அடைந்திருக்கின்றது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கான ஆட்சியில் இருக்க வேண்டும் என்கிற திட்டத்தோடு 2019இல் ஆட்சி பீடமேறிய ராஜபக்‌ஷர்களுக்கு முதல் ஐந்து ஆண்டுகளையே பிரச்சினைகள் இன்றிக் கடக்க முடியுமா என்ற சிக்கல் ஏற்பட்டிருக்கின்றது.

அண்மையில், எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்து ஆளுங்கட்சியின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுனவே கண்டன அறிக்கை வெளியிடும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ, அந்தக் கட்சி முன்னிறுத்தி ஜனாதிபதியான கோட்டாய ராஜபக்‌ஷ, அந்தக் கட்சியின் கூட்டணியில் அங்கம் வகித்து மொட்டுச் சின்னத்திலேயே தேர்தலில் வென்ற உதய கம்மன்பில உள்ளிட்டவர்கள் கூடிப்பேசி, முடிவெடுத்து அறிவித்த எரிபொருள் விலையேற்றத்தை, பொதுஜன பெரமுன அறிக்கை ஊடாகக் கண்டிக்கிறது. அதிலும், எரிபொருள் அமைச்சராக கம்மன்பிலவை பதவி விலகுமாறும் கோருகிறது என்றால், ஆளுங்கட்சிக்குள் காணப்படும் குழப்பங்களின் அளவைப் புரிந்து கொள்ள முடியும்.

பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷ பதவி வகிக்கின்ற போதிலும், 20ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம், அவரின் அதிகாரங்கள் பிடுங்கப்பட்டுவிட்டன. அவ்வாறான நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவினதும் அவரது இராணுவ செயலணியினதும் திட்டங்களின் படியே நாடு நிர்வகிக்கப்படுகிறது.

இங்கு, அமைச்சர்களாக இருந்தாலும் அவர்களின் அதிகாரம் செல்லாக்காசான நிலைதான். அப்படியான நிலையில், பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்‌ஷவை மீண்டும் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து அமைச்சராகப் பதவியில் அமர்த்தினால், தங்களின் அதிகாரங்களை மீளப்பெற முடியும் என்று பொதுஜன பெரமுனவில் குறிப்பிட்டளவான அரசியல்வாதிகள் நினைக்கிறார்கள்.

அதன்போக்கில்தான், பசிலின் பாராளுமன்ற பிரவேசத்துக்கான துதிபாடல்களும் ஆராதனைகளும் செய்யப்படுகின்றன. ஆனால், பசில் மீண்டும் அமைச்சரவைக்குள் வந்தால், ஆட்சி அதிகார மையம் இரு துருவங்களாக மாறும்; அது, ஜனாதிபதிக்கு அவ்வளவு இனிப்பானதாக இருக்காது என்று அவரது சகாக்கள் அச்சப்படுகிறார்கள்.

அத்தோடு, ஆளுங்கட்சியின் பங்காளிக் கட்சிகளுக்கு பசில் மீதான பயம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. ஏனெனில், தங்களது கட்சிகளை இல்லாதொழித்து, ஒரே கட்சியாகப் பெரமுனவை, பசில் வளர்க்க நினைக்கிறார். அதன்மூலம், பங்காளிக் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகத் தன்னை நிலைப்படுத்தலாம் என்பது பசிலின் திட்டம்.

அதனால்தான், விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட பங்காளிக் கட்சிகளுக்கு எதிரான நிலையை, தன்னுடைய விசுவாசிகளைக் கொண்டு பசில் செய்கிறார். எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிராக வெளியிடப்பட்ட அறிக்கை, உண்மையில் உதய கம்மன்பிலவை இலக்கு வைத்து வெளியிடப்பட்டது.

அண்மையில், விமல் வீரவன்சவின் அமைச்சின் கீழிருந்த அரச நிறுவனமொன்று, அவரிடமிருந்து மஹிந்த அமரவீரவின் அமைச்சுக்கு மாற்றப்பட்டது. அது தொடர்பில், அவருக்கு எந்தவித முன்னறிவிப்பும் விடுக்கவில்லை. அது குறித்து, விமல் வீரவன்ச ‘பேஸ்புக்’கில் புலம்பும் அளவுக்கு அரசாங்கத்தின் உள்குளறுபடிகள் இருக்கின்றன.

இன்னொரு பக்கம், ராஜபக்‌ஷர்களின் பிரசார பீரங்கிகளாக இருந்த ஊடகங்கள் கூட, இன்றைக்கு எதிரான நிலையெடுத்து விமர்சிக்கத் தொடங்கிவிட்டன. ராஜபக்‌ஷர்களின் வருகை, நாட்டில் தேனையும் பாலையும் ஓட வைக்கும் என்று 24 மணி நேரமும் ஓதிக்கொண்டிருந்த சம்பந்தப்பட்ட ஊடகங்கள், அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியைச் சமாளிக்க முடியாமல், அதனை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்துவிட்டன.

கொரோனா பெருந்தொற்று, நாட்டு மக்களை அனைத்து விதத்திலும் பாதித்துவிட்டது. வருமானம் என்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. மக்கள் அடக்குக்கடைகளை நோக்கிச் செல்வது வாடிக்கையாகி விட்டது. நகை நட்டுகள் இல்லாத மக்களின் நிலை, இன்னும் மோசம்.

அப்படியான நிலையில், நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாகக் கூறிக் கொண்டு, பௌத்த விகாரையின் பின்னணியில், ஒரு மணித்தியாலத்துக்கு மேலாகக் கடந்த கால ஆட்சிகளைக் குறைகூறி, மக்களை எரிச்சலூட்டுகிறார் ஜனாதிபதி. நாடு மீளமுடியாத பொருளாதார அபாயத்தின் இருக்கும் போது, அது குறித்துச் சிந்திக்காமல், மீண்டும் மீண்டும் தங்களின் அனைத்துத் தோல்விகளையும் கடந்த கால ஆட்சியாளர்கள் மீது போட்டுவிட்டு நழுவிவிட முடியும் என்பது, எவ்வளவு அபத்தமானது.

அதிலும் நகைப்புக்குரியது என்னவென்றால், நல்லாட்சிக் காலம் என்கிற ஐந்து வருடங்களுக்கு முன்னாலுள்ள பத்து ஆண்டுகளையும் இதே ராஜபக்‌ஷர்கள்தான் ஆட்சி செலுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் மறந்து நின்று, நாட்டின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லாட்சிக் காலம் மட்டுமே காரணம் எனும் தோரணை, ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலைக்கு ஒப்பானது.

ராஜபக்‌ஷர்கள் தொடர்ச்சியாக, போர் வெற்றி வாதத்தைத் தங்களது பிரதான காப்புக் கருவியாக கையில் ஏந்தி இருக்கின்றார்கள். இப்போதும் அதையே தூக்கிக் கொண்டு வருகிறார்கள்.

ஆனால், மக்களின் வயிற்றின் பசி, நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போது, போர் வெற்றி வாதம் ஒரு பொருட்டுக்கும் உதவாது என்பது ராஜபக்‌ஷர்களுக்கு விளங்கவில்லை. நாட்டின் எதிர்காலம் குறித்த எந்தக் கரிசனையும் இன்றி, தங்களின் குடும்பங்கள், எதிர்கால ஆட்சிக்கான திட்டங்களை மாத்திரமே வைத்துக் கொண்டு, ராஜபக்‌ஷர்கள் முன்நகர்த்து கொண்டிருக்கிறார்கள். மற்றப்படி, அரசாங்கத்துக்குள் நிகழும் குளறுபடிகளும் கூட ராஜபக்‌ஷர்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியின் போக்கிலானவைதான்.

ஆனால், நாடும் நாட்டு மக்களும் இவ்வளவு அபாயங்களைச் சந்தித்து நிற்கும் போது, பிரதான எதிர்க்கட்சியோ எந்தவித பொறுப்பும் இன்றி, தூங்கியே காலத்தைக் கழித்து வருகின்றது. அடுத்த தேர்தல் வர, இன்னமும் காலம் இருக்கின்றது. அப்போது விழித்தால் போதும் என்பது அவர்களின் உத்தேசம். அப்படியான நிலையில், நாடு எப்படித் தப்பித்துக் கொள்ளும்?`

அதி விசேட வர்த்தமானியின் பிரகாரம் பிரதமரின் கீழுள்ள புதிய விடயதானங்கள் இதோ..!

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவி பிரமாணம் செய்துக் கொண்டார். பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை என்ற புதிய அமைச்சின் கீழ் உள்ளடங்கும் விடயதானங்கள் தொடர்பிலான அதி விசேட வர்த்தமானி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைக்கு அமைய பொருளாதார மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை துரிதப்படுத்தலுக்கான கொள்கை அபிவிருத்தி, திட்டங்களை தயாரித்தல் மற்றும் மேம்படுத்தல் பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சின் விடய எல்லையாக காணப்படுகிறது.

கடமைகளும், பணிகளும்

அரசினால் செயற்படுத்தப்படும் தேசிய கொள்கைகளின் பிரகாரம் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்ட செயற்படுத்துகைக்கு தேவையான திட்டங்களை தயாரித்தல், தேசிய வரவு – செலவு, அரச முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழுள்ள கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்காக அரச பொறிமுறை மற்றும் தனியார் துறைகளை ஈடுப்படுத்தல்,

பொருளாதார புத்தாக்கம் மற்றும் வறுமை ஒழிப்பு ஜனாதிபதி செயலணி மற்றும் காலநிறை மாற்றங்களுக்கு நிலையான தீர்வுகளுடன் கூடிய பசுமை சமூக பொருளாதாரமொன்றை நாட்டில் உருவாக்குவதற்காக ஜனாதிபதி செயலணியுடன், சகல அமைச்சுக்களையும், ஒன்றினைத்து உரிய நடவடிக்கைகளை வழிநடத்துவதற்கான வசதிகளை வழங்கல்,

கிராமத்துடனான கலந்துரையாடல் கிராமிய அபிவிருத்தி ஜனாதிபதி செயலணியுடன் ஒன்றிணைத்தல், பாவனையாளர்களை போன்று உள்ளுர் உற்பத்தி மற்றும். விநியோகஸ்தர்களுக்கு, சாதாரண விலையின் கீழ் பொருட்கள் மற்றும் சேவைகள் பெறுவதை உறுதி செய்யும் வகையில் வாழ்க்கை செலவுகள் தொடர்பிலான அமைச்சரவை உபகுழுவிற்கு காலத்திற்கு காலம் யோசனைகளை சமர்ப்பித்தல், வாழ்க்கை செலவு மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் பாவனையாளர்கள் நுகர்வதை மேற்பார்வை செய்தல் மற்றும் மீளாய்வு செய்தல்.

மாவட் மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுக்கள், மற்றும் மாகாண சபைகளின் அபிவிருத்தி, நட்வடிக்கைகளுக்கு ஒன்றிணைந்து மக்கள் மயப்படுத்தப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை செயற்படுத்தல்.

அதி விசேட முன்னுரிமைகள்

சுபீட்சத்தின் இலக்கு கொள்கை திட்டத்திற்கு அமைய நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்காக தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை திட்டமிடலும், செயற்படுத்தலும் மற்றும் தேசிய கொள்கையை தயாரித்தல்.

பொருளாதார அபிவிருத்தியின் போது தனியார் துறைகளின் பங்களிப்பை இலகுப்படுத்துவதற்காக அரச மற்றும் தனியார் மற்றும் கூட்டுறவு துறைகளை ஒருங்கிணைப்பு செய்தல், கிராமிய மற்றும் பொருளாதார அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் உபாய முறைகளை செயற்படுத்தல்,

உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, சேதன பசளை உற்பத்தி ஒழுங்குப்படுத்தல், உள்ளிட்ட அரசியன் முன்னுரிமை அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டங்கள் ஆகியவற்றை எதிர்பார்க்கும் இலக்கை நோக்கி வழி நடத்துவதற்காக சகல அமைச்சுக்கள், மற்றும் உரிய நிறுவனங்களை ஒருங்கிணைத்தல்.

அடிமட்ட சேவைகள் வழங்கல் வலையமைப்பை வலுவூட்டி கிராமிய மற்றும் பிரதேச பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக சர்வதேச வங்கிகள், நிதியங்கள், மற்றும் உள்ளுர் வங்கிகள் ஆகியவற்றை இணைத்துக் கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.

உள்ளடக்கப்படும் தாபனங்கள்

பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துணை துறை அமைச்சின் கீழ் தேசிய திட்டமிடல் திணைக்களம், தொகை மதிப்பு , புள்ளிவிபரவியல் திணைக்களம்,கொள்கை கற்கை நிறுவனம், நிலைபேறான அபிவிருத்தி மன்றம்,கொம்பிரோலர் ஜெனரால் அலுவலகம், மதிப்பீட்டுத் திணைக்களம் மற்றும் இலங்கை கணக்குகள் மற்றும் கணக்காய்வு தர மீளாய்வு சபை, இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு நலன்புரி பயனுறுதி சபை, அரசாங்க சேவை பரஸ்பர சகாய நிதியச் சங்கம் ஆகிய 10 தாபனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் தற்போது பொருளாதார கொள்கை மற்றும் திட்டச் செயற்படுத்துறை துறை அமைச்சுக்கு மேலதிகமாக புத்தசாசனம் மற்றும் சமயம் மற்றும் கலாசார அலுவல்கள், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சுக்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் மேலும் 381 பேருக்கு கொரோனா

நாட்டில் மேலும் 381 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் 1,223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 269,899 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 239,584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும், 3,391 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Posted in Uncategorized

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்ட ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் கைது!

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினர்.

எனினும், குறித்த ஆர்ப்பாட்டமானது தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு எதிரானது எனத் தெரிவித்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டமையால், அங்கு பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதை அடுத்து அங்கு பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

அதேநேரம, குறித்த சட்டமூலத்திற்கு எதிராக இன்று ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அங்கும் ஏற்பட்ட சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து ஜே.வி.பியின் நான்கு உறுப்பினர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

இதனால் ஹட்டன் பகுதியிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

இலங்கையின் புதிய நிதியமைச்சராக பசில் ராஜபக்ஷ சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இன்று(08) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த நிலையில் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டத்தை செயற்படுத்தும் அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம்(07) தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

ஜனாதிபதி செயலகத்தினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைக்கமைய இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Posted in Uncategorized

பிரிட்டன் தூதுவரை சந்தித்த கூட்டமைப்பின் உறுப்பினர்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று இலங்கைக்கான பிரிட்டன் உயர் ஸ்தானிகர் சாரா ஹல்டனைச் சந்தித்தனர்.

கொழும்பில் உள்ள பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஆலயத்தில் இந்தச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களைச் சந்திக்கக் கிடைத்ததை மகிழ்ச்சியாகக் கருதுவதாக உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு, கிழக்கில் கொரோனாத் தடுப்பு நடவடிக்கைகள், அதிகாரப் பகிர்வு, மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறலின் அவசியம் போன்ற விடயங்கள் விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாக சாரா ஹல்டன் மேலும் கூறினார்.

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

மஹிந்த ராஜபக்ஷ: “சீனாவே எமது உண்மையான நண்பன்; ஆசியாவின் எழுச்சியை சீனாவே வழி நடத்தும்”

சீனாவே தமது உண்மை நண்பன் என்றும் இனி ஆசியாவின் எழுச்சியையும் சீனாவே வழிநடத்தும் என்பதுதான் யதார்த்தம் எனவும், இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு விழாவில் இணைய வழியாக நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு பொதுச் செயலாளரும், சீன ஜனாதிபதியுமான ஷி ஜின்பிங்கை தனது உரையில் விழித்துப் பேசிய மஹிந்த ராஜபக்ஷ, இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகுக்கு சீனாவே உதவியது என்றும் குறிப்பிட்டார்.

“சீனா எமது வரலாற்று நட்பு நாடாகும். அந்த நீண்ட வரலாற்றில் சீனா எம்முடன் செயற்பட்டுள்ள விதத்துக்கு அமைய, சீனா எமக்குள்ள உண்மையான நண்பர் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்” எனவும் தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால ராஜதந்திர உறவை அங்கீகரிக்கும் பொருட்டும், ஒரு நினைவு நாணயத்தை தாம் வெளியிட்டுள்ளதாகவும் இதன்போது அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “நாம் 1957ஆம் ஆண்டிலேயே சீன அரசாங்கத்துடன் ராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தினோம். சீனாவை ‘சுதந்திர சீனா’வாக மாற்றிய சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் எமது நாடு ஏற்கனவே இடதுசாரி வணிக உறவுகளைப் பேணி வருகிறது” என்று தெரிவித்தார்.

“சீன கம்யூனிஸ்ட் கட்சியே தற்போது உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியாகும். அந்த அரசியல் கட்சியின் வெளிநாட்டு உறவுகள் குறித்த கொள்கைக்கு அமைய, 70 ஆண்டுகளாக உலகுக்கு மிக முக்கியமான ஒரு செய்தியை அது வழங்கியுள்ளது என்பதனை நான் கூற வேண்டும்”

ஆசியாவின் எழுச்சியை சீனா வழி நடத்தும்

“சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுதான் சீனாவை உலக அரங்குக்கு உயர்த்தியது என்பது எனக்குத் தெரியும்” என்று தனது உரையில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

“சீனா தனது அரசியல் கருத்துக்களை உலகின் மத்தியில் திணிக்க ஒருபோதும் முயற்சிக்கவில்லை. பிற நாடுகளின் விவகாரங்களை தாம் ஒழுங்குறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்ற உணர்வை சீனா ஒருபோதும் கொண்டிருக்கவில்லை. சீனா தனது சொந்த அடிப்படையில் பிற நாடுகளுக்கு உதவியது.

ஒரு நாட்டின் சுதந்திரத்துக்கும் இறையாண்மைக்கும் இது மிகவும் முக்கியமானது. அந்த நாடுகளுக்கு தங்கள் சுதந்திரத்தை பேணி செயற்பட அனுமதித்ததனால் உலக நாடுகள் சீனாவுடன் வர்த்தகம் செய்ய தயங்கவில்லை. இலங்கையும் அதே போன்றுதான்.

அதனால்தான் உலகின் பல கதவுகள் சீனாவுக்கு திறக்கப்பட்டன. சர்வதேச அளவில் சீனாவின் முன்னேற்றத்துக்கு அந்தக் கொள்கை மிகவும் முக்கியமானதாகும்” என்றார் ராஜபக்ஷ

“அடுத்த நூற்றாண்டில் ஆசியாவின் எழுச்சியை சீனா வழிநடத்தும் என்பது தற்போது யதார்த்தமாகிவிட்டது.

உலகை இரண்டு முகாம்களாகப் பிரிப்பது இனி முக்கியமல்ல. இந்த நெருக்கடியிலிருந்து ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளை மீட்பதில் சீனா முக்கிய பங்கு வகித்தது. இரண்டு முகாம்களாகப் பிரித்ததன் காரணமாக சிரமங்களை எதிர்கொண்டிருந்த உலகிற்கு சீனாவே உதவியது.

பட்டுப் பாதையின் மூலம் ஆசியாவின் பொருளாதார பலத்தை சீனா பெற்றுக் கொடுக்கும் சீனாவின் பட்டுப் பாதை (Silk Road) ஒன்றும் எமக்கு விசித்திரமானதல்ல.

ஏனெனில், பண்டைய காலத்திலேயே, சீனாவை இணைக்கும் பட்டுப் பாதையின் ஒரு புள்ளியிலேயே இலங்கை இருந்தது. திறந்த பொருளாதாரத்தின் உலக யதார்த்தத்தை தமக்கு ஏற்ற வகையில் சீனா ஏற்றுக்கொண்டது.

எனவே, நாட்டில் வர்க்கப் பிளவுகளை ஏற்படுத்தும், நாட்டை பலவீனப்படுத்தும் ஒன்றாக அன்றி – திறந்த பொருளாதாரத்தை சீனா ஏற்றுக்கொண்டது. தனது திறந்த பொருளாதாரக் கொள்கையின் கீழ், தனது நாட்டில் தொண்ணூறு கோடி மக்களின் வறுமையை சீனா ஒழித்துள்ளது.

திறந்த பொருளாதாரத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக உள்ளது.

ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆசியாவுக்கு இருந்த பொருளாதார பலத்தை, இந்த பட்டுப் பாதையின் மூலம் மீண்டும் ஆசியாவுக்கு சீனா பெற்றுக்கொடுக்கும் என்று நான் நம்புகிறேன்.

2060ஆம் ஆண்டளவில் சீனாவை, கரியமில வாயு சமநிலையை பேணும் Carbon Neutral நாடாக மாற்றுவதற்கு சீனா உறுதியளித்துள்ளது. அதனால் சீனாவின் முதலீடுகளை கொண்டு பயன்பெறும் பட்டுப் பாதையின் நாடுகளும் இதுபோன்ற கொள்கைகளுடன் செயற்படுவது அவசியமாகும்.

Carbon Neutral நாடாக மாற்றுவது மாத்திரமன்றி இந்து சமுத்திரத்தை மாசற்ற இடமாக மாற்றுவது இன்று அதன் இரு புறமுள்ள அனைத்து நாடுகளினதும் பொறுப்பாகும்.

சினோஃபார்ம் தடுப்பூசியை உருவாக்கி உலகுக்கு தாராளமாக நன்கொடை அளித்தமைக்காக சீனாவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதனை உலகத்துடன் பகிர்ந்து கொண்டு கம்யூனிஸ்ட் கட்சி உலகுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகின்றது என்று நான் கூற வேண்டும். சீனா ஆய்வு செய்துள்ள தடுப்பூசியை எங்களைப் போன்ற நாடுகள் தயாரிப்பதற்கு தேவையான அனுமதியையும் அளித்துள்ளது.

இது போன்ற உலகளாவிய தொற்றுநோய் சூழலில், சீன கம்யூனிஸ்ட் கட்சி எடுக்கும் முடிவுகள் அனைத்துமே, மனிதர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட முடிவுகளே ஆகும்” என்றார் ராஜபக்ஷ.

சீனாவுக்கு மிகவும் நெருக்கமாக இலங்கை சென்று கொண்டிருக்கிறது என்ற பரவலான கருத்து எழுந்திருக்கும் நிலையில் ராஜபக்ஷவின் பேச்சு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

Posted in Uncategorized

தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையை முதலிடம் பிடிக்கச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்:ரெலோ வினோ நோகராதலிங்கம்

இலங்கையில் ஏற்றுமதி செயற்பாட்டில் சீனர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. எதிர்காலத்தில் இலங்கையின் அரசியலிலும் சீனா ஆக்கிரமிப்பும் ஆதிக்கமும் செலுத்துவதை உங்களால் தடுக்க முடியாது. அதேவேளை இலங்கை அரசு தோல்வியடைந்த நாடுகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் இலங்கை கிரிக்கெட் அணி தோல்வியடையும் அணிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கவும் போட்டியிடுகின்றனதென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இந்த நாடு அனைத்து துறைகளிலும் வரலாற்றில் என்றுமில்லாதவாறு தோல்விகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது. ஏற்றுமதிகளும் இறக்குமதிகளும் பல தடைகளையும் சவால்களையும் சந்தித்து வரும் துர்ப்பாக்கியம் இந்த நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தோல்வியடைந்து கொண்டிருக்கும் அரசினால் ஒரு நாட்டினை வெற்றியடைய செய்ய முடியாது. பொருளாதார, அரசியல் ரீதியாக இந்த அரசு முழுமையாக தோல்வியடைந்து விட்டது. ஆனால் அதற்காக இந்த நாட்டை தோல்வியடைந்த நாடாக மாற்றிக்கொள்ள மக்கள் யாரும் அனுமதிக்கப்பபோவதில்லை.

ஆட்சிபீடமேறிய மிக குறுகிய காலத்தில் இந்த அரசு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தவறிய மிக மோசமான மக்களினால் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமை நீடித்தால் காத்திருக்கும் பேராபத்துக்களிலிருந்து இலங்கையை காப்பாற்ற முடியாது.

இறைமை, இறைமையென மூச்சுக்கொருதடைவை முழங்கிக்கொண்டிருக்கும் இந்த அரசு நாட்டின் சுவாசமே அடங்கிப்போவதைக் கண்டு கொள்ளாமல் அலட்சியமாகவுள்ளது. அரசியல் தீர்வுக்காகவும் மனித உரிமை விடயங்களுக்காகவும் பொருளாதார மீட்சிக்காவும் நிரந்தர சமாதானத்துக்காகவும் உண்பதற்காக, உறங்குவதற்காக மக்கள் இன்று வீதிகளில் இறங்கி போராடிக்கொண்டிருக்கின்றனர்.

இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியில் தமிழ், முஸ்லி ம் மக்களும் தலைவர்களும் சிங்கள மக்கள், தலைவர்களுடன் இணைந்து போராடியது போன்று இலங்கையின் இரண்டாவது சுதந்திர போராட்டத்துக்கு தமிழ், முஸ்லிம் மக்களை மீண்டும் இணையுமாறு பிக்குகள் அழைக்கின்றனர். மூவின மக்களும் இணைந்து போராடினால் தான் சுதந்திரம் பெற முடி யுமென்பதனை பௌத்த தலைவர்கள் உணர்ந்திருப்பது நல்ல அறிகுறி.

Posted in Uncategorized

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 372 பில்லியன் ரூபாய் நட்டம்

ஸ்ரீலங்கன் விமான சேவை 372 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்கொண்டுள்ளதாக பொது முயற்சியாண்மை எனப்படும் கோப் குழுவில் தெரிய வந்துள்ளது.

நேற்று (06) ஸ்ரீலங்கன் விமான சேவை அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்த நிலையில் இதன் போது கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத் இதனை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் அசோக் பத்திரண கோப் குழுவில் கருத்து தெரிவித்ததுடன் அதற்கு போது கோப் குழுவின் தலைவரும் பதிலளித்துள்ளார்.

இலங்கை செல்லும் தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இலங்கையில் கொவிட் பரவல் தீவிரமடைந்து வருவதன் காரணமாக இலங்கைக்கு பயணங்கள் மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்க பிரஜைகள் மீள் பரிசீலனை செய்யுமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் கடந்த மே 24 ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்த, 3 ஆம் மட்ட எச்சரிக்கையானது பயணம் செய்வது குறித்து மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்பது 4 ஆம் மட்ட எச்சரிக்கையாக பயணம் செய்ய வேண்டாம் என்று மாற்றப்பட்டிருந்தது.

தற்போது குறித்த 4 ஆம் மட்ட எச்சரிக்கை மட்டம் தற்போது மீண்டும், 3 ஆம் மட்ட எச்சரிக்கையாக மாற்றப்பட்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று (06) வெளியிட்ட புதிய பயண அறிவுறுத்தலுக்கமைய, கொவிட் பரவல் அதிகரித்திருப்பதன் காரணமாக இலங்கைக்குப் பயணம் மேற்கொள்வது தொடர்பில் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

அதேவேளை இலங்கையில் பயங்கரவாத செயற்பாடுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளும் அதிகரித்துள்ளன என்றும் அந்த எச்சரிக்கை மட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேருந்து நிலையம், விமான நிலையம், சுற்றுலா விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என இந்த புதுப்பிக்கப்பட்ட அறிவித்தல் ஊடாக சுற்றுலா பயணிகளுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

இலங்கையில் கொவிட் பரவல் மிகவும் அதிகரித்திருப்பதை காட்டும் வகையில் அமெரிக்காவின் தொற்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையம், இலங்கை தொடர்பில் 3 ஆம் மட்ட சுகாதார எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகள் கொவிட் வைரஸுக்கு எதிராக முழுமையாகத் தடுப்பூசியைப் செலுத்தியிருப்பின், அவர்களுக்கு கொவிட் தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

எவ்வாறிருப்பினும் இலங்கைக்கான விஜயம் தொடர்பில் மீள் பரிசீலனை செய்வதும் கொவிட் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அறிந்து வைத்திருப்பதற்கும் அமெரிக்கத் தூதரகத்தின் கொவிட் – 19 குறித்த இணையப் பக்கத்தைப் பார்வையிடுவதும் சிறந்தது என அப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.