கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காக 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஒழிப்பு மற்றும் தடுப்பூசி கொள்வனவிற்காக 200 பில்லியன் ரூபா குறைநிரப்பு பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாகவும், ஓய்வு விடுதிக்கான நிரந்தர கட்டிடம் அமைக்க ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவித்து திட்டங்களை இவ்வருடத்துக்குள் நிறைவு செய்து தருமாறு கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின்(ரெலோ) தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வினோ நோகராதலிங்கம் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களுக்கு இன்றைய தினம் அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் சாரதிகள் தங்குவதற்கு என தனியான ஓய்வு விடுதி வசதிகள் இல்லாமையினால் நோயாளர் காவு வண்டிகளின் சாரதிகள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகுவதாக என்னிடம் முறைப்பாடு செய்தமைக்கு தங்களின் மேலான கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு வருகின்றேன்.
வடக்கு மாகாண சபையினால் வாகன தரிப்பிடத்துடன் கூடிய சாரதிகள் தங்குவதற்கான ஓய்வு விடுதி நிர்மாணிக்கவென நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை ஆரம்பக்கட்ட வேலைகள் கூட தொடங்கப்படவில்லை என அறிய முடிகின்றது.
நோயாளர் காவு வண்டிகள் எவ்வாறு விசேட கவனம் எடுத்து பராமறிக்கப்பட வேண்டுமோ அது போலவே அதன் சாரதிகளுக்கும் முறையான ஓய்வும் வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியது அக்கறையுள்ள ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
இவ்விடயமாக மாகாண சுகாதார திணைக்களம் உரிய மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது சாரதிகள் அனைவரும் வைத்தியசாலை பணிப்பாளரின் விடுதியிலேயே தற்காலிகமாக தங்கியிருக்கின்றனர். பல தடவைகள் வட மாகாண சுகாதார திணைக்கள அதிகாரிகளுடன் நிரந்தர வைத்தியசாலைப் பணிப்பாளரை நியமிக்கக் கோரியும்,நியமனம் செய்யப்படாமையினால் வைத்தியசாலை நிர்வாகம் செயலிழந்து காணப்படுகின்றது.
தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையில் தொடர்ந்தும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரால் நேரடியாக வைத்திய சாலையையும் நிர்வகிப்பது இயலாததாகும். நிரந்தர வைத்தியசாலை பணிப்பாளர் நியமிக்கப்படுமிடத்து தற்காலிகமாக பணிப்பாளர் விடுதியில் தங்கியிருக்கும் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களை சந்திப்பார்கள்.
ஒரு மாவட்ட பொது வைத்தியசாலை சகல வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும்.நோயாளர்கள் சிரமம் இன்றி மருத்துவ வசதிகளை பெற வேண்டும். மத்திய அரசாங்கம் இம்மாவட்ட வைத்தியசாலையை பொறுப்பேற்க இருக்கும் காரணத்தை காட்டி ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மாகாண சபை நிதியை மீளப் பெறவோ சாரதிகளின் அர்ப்பணிப்பான சேவையை கேள்விக்கு உற்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கின்றோம்.
எனவே காலம் தாழ்த்தாது முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிரந்தர பணிப்பாளரை நியமிக்குமாறும்,சாரதிகளுக்கான ஓய்வு விடுதிக்கான நிரந்தர கட்டிடத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியினை விடுவித்து திட்டங்களை இவ்வருடத்துக்குள் நிறைவு செய்து தருமாறும் தங்களை கேட்டுக்கொள்கின்றேன் என குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவுடன் நேற்று திங்கட்கிழமை விரிவான பேச்சுக்களை நடத்தியதாக பி.ரி.ஐ. செய்திச் சேவை நேற்றிரவு தெரிவித்தது.
இணையத் தொழில்நுட்பத்தின் ஊடாக மெய்நிகர் சந்திப்பாக இது இடம்பெற்றது. இதன்போது இரு தரப்பு உறவுகள், பிராந்திய விவகாரங்கள் தொடர்பில் இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தின் மூலமாக இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தொடர்பாக இந்தியத் தரப்பிலிருந்து அண்மைக் காலத்தில் அதிகளவுக்கு கரிசனை தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் பேச்சுக்கள் இடம் பெற்றிருப்பது முக்கியமானதாகும்.
“இலங்கை வெளிவிவகார அமைச்சருடனான பேச்சுவார்த்தைகள் சிறப்பானதாக அமைந்திருந்தது. இரு தரப்பு விவகாரங்கள் தொடர்பில் இதன்போது நாம் ஆராய்ந்தோம். பிராந்திய உறவுகள் குறித்தும் பேசினோம். நாம் தொடர்ந்தும் நெருக்கமான தொடர்பில் இருப்போம்” என இந்தப் பேச்சுக்கள் குறித்து தனது ருவிட்டர் தளத்தில் இந்திய வெளிவிவகார அமைச்சர் பதிவு செய்துள்ளார்.
இலங்கையில் காணாமல்போனவர்கள் அலுவலகம் இழப்பீட்டு அலுவலகத்திற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்தும் நாட்டின் சமீபத்தைய பயங்கரவாத தடைசட்டவிதிமுறைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செலே பச்செலெட் கரிசனை வெளியிட்டுள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 47வது அமர்வின் ஆரம்பத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் முஸ்லீம்களை இலக்குவைத்து முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என கருதப்படுபவை குறித்தும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் நான் கரிசனை கொண்டுள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூறும் சூழமைவில் தமிழர்கள் துன்புறுத்தப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காணாமல்போனவர்கள் – இழப்பீட்டு அலுவலகங்களிற்கான சமீபத்தைய நியமனங்கள் குறித்து நான் கரிசனை கொண்டுள்ளேன், கடந்தகாலகுற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்காத நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கைகளை மேலும் பாதிக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் குறித்தும் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது கரிசனத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த விதிமுறைகள் பயங்கரவாதத்திற்கு ஆதரவளித்த குற்றச்சாட்டின் கீழ் 300 முஸ்லீம்கள் தமிழர்களை தடுத்துவைக்க உதவியுள்ளன – இவை நல்லிணக்கத்தை முன்னெடுக்க உதவப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதமயப்படுத்தப்பட்டவர்களை அதிலிருந்து விடுவிக்கப்பதற்காக நீதிமன்ற நடவடிக்கைகள் இன்றி இரண்டு வருடம் தடுத்து வைப்பதற்கு இந்த விதிமுறைகள் வழிவகுக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார். பொலிஸ் என்கவுண்டர்ஸ் என்ற சூழமைவில் பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள வேளை நிகழ்கின்ற உயிரிழப்புகள் தொடர்வது குறித்து தான் சுட்டிக்காட்ட விரும்புதாக மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் கடந்த 18ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒரு வாரத்திற்குள் 22 பில்லியன் ரூபா பணம் அச்சிட்டிருப்பதாக இக்கொனொமிக்ஸ்ட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட 50 பில்லியன் ரூபாவை திரட்டுவதற்கான பிணைமுறிகளில் 60 சதவீதத்தையாகிலும் எவரும் கொள்வனவு செய்யவில்லை. அதன் காரணமாக குறைந்துள்ள நிதியை ஈடுசெய்வதற்காக அரசாங்கம் பணம் அச்சிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தத் தொகையை அரசாங்கம் அச்சிடவிருந்தது.
இருப்பினும் 400 மில்லியன் டொலர்களை சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கியிருந்த காரணத்தினால் அப்போது அச்சிடுவதை இலங்கை தவிர்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேசத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் மற்றும் கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதித் தலைவரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார், கோரளைப்பற்றுப் பிரதேச அரசியற் பிரமுகர்கள், கோரளைப்பற்று சமூக நல அமைப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
கோரளைப்பற்றில் நிலவுகின்ற முக்கிய சில பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன், மாவட்ட ரீதியில் மக்கள் எதிர்கொள்கின்ற பிரதான பிரச்சினைகளின் போது மாவட்டத்தில் தமிழ்ப் பாராளுமன்றப் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இதன் போது வாழைச்சேனை வைத்தியாசலையில் நிலவுகின்ற குறைபாடுகள், மற்றும் பிரதேசத்தில் நிலவுகின்ற காணிப்பிரச்சினைகள், பிரதேசத்தின் எல்லைகளில் ஏற்படுத்தப்படுகின்ற பிரச்சினைகள், தற்போதைய சூழ்நிலையில் மீன்பிடியாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் உட்பட தற்போது பேசுபொருளாக இருக்கின்ற வாழைச்சேனை வைத்தியசாலை பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலக விடயம் போன்றன தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் முன்நிற்பதற்கு நாங்கள் ஒருபோதும் தயங்குவதில்லை. கட்சி நிலைமைகளுக்கப்பால் மாவட்டத்தில் நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மக்களுக்காக ஒருமித்து நின்று செயற்படுவதற்கு நாங்கள் எப்போதும் தயாராக நிற்கின்றோம். ஆனால் அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பொதுவான பிரச்சினைகளில் கரிசனை கொள்வதாகத் தெரியவில்லை. அவ்வாறு அவர்களும் முன்வருவார்களாக இருந்தால் நாங்களும் தயாராகவுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீட்டுக்கு அருகில் மக்கள் ஒன்றுகூடிய நிலையில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையிலேயே மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதியில் ஒன்றுகூடியுள்ளனர்.
இதன்போது, பெருமளவானோர் ஒன்றுகூடிய நிலையில் குறித்த துப்பாக்கிச் சூட்டிற்கு எதிராக கோசங்களை எழுப்பி வருகின்றனர்.
இதையடுத்து, அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேய்ச்சல் தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்தார்.
இன்றைய தினம் பாரம்பரிய மேய்ச்சற்தரைப் பிரதேசமாக விளங்குகின்ற மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் அயல் மாவட்ட அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களின் பிரச்சினை சம்மந்தமான தற்போதைய நிலைமை தொடர்பில் ஆராயும் முகமாக மேற்கொண்ட பணயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் மேய்ச்சற்தரைப் பிரச்சினை மிகப் பேசு பொருளாக இருந்த விடயம். அதிலும் மட்டக்களப்பில் மயிலத்தமடு, மாதவணை மேய்ச்சற்தரை பெரிய பிரதேசமாகவும், கடும் பிரச்சினைக்குரிய பிரதேசமாகவும் இருந்தது.
கடந்த காலங்களில் நாங்கள் பல முறை இந்தப் பிரதேசத்திற்கு வந்திருக்கின்றோம். மட்டக்களப்பில் அதிக மாடுகளை மேய்க்கின்ற மேய்ச்சற்தரையாக இது காண்படுகின்றது. இந்தப் பிரதேசத்தில் அத்துமீறிச் சேனைப் பயிர்ச்செய்கை செய்பவர்களை வெளியேற்றுவதற்காக பண்ணையாளர்கள் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் வழக்குத்தாக்கல் செய்திருக்கின்றோம்.
அதன்படி கடந்த பெப்ரவரி மாதம் 28ம் திகதிக்கு முன்னதாக இங்கு சேனைப் பயிர்செய்கை செய்பவர்கள் அனைவரும் வெளியேறி மேய்ச்சற்தரையாகப் பயன்படுத்துவதற்கு விடவேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அத்தோடு கடந்த மே மாதம் 12ம் திகதி தவணையிடப்பட்டு, பயிர்ச்செய்கையாளர்கள் இப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிவிட்டார்களா என்று உறுதிப்படுத்தும் படியாகவும் அரச தரப்பு சட்டத்தரணிக்கு பணிக்கப்டடது. மே 12ம் திகதி நாட்டின் அசாதாரண நிலைமையினால் வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளன.
இவ்வாறான நிலையில் இப்பிரதேசத்தில் மீண்டும் அத்துமீறிய சேனைப்பயிர்ச் செய்கைக்கான நடவடிக்கைகள் நடைபெறுவதாக எங்களுக்குத் தெரியபப்படுத்தியதற்கமைவாக அந்த நிலைமையை வாழக்காளிகளாக இருக்கும் நாங்கள் நேரில் வந்து பார்வையிட்டோம்.
இந்கு வந்து பார்க்கும் போது இங்கு நீதிமன்ற உத்தரவுக்கமைவாக முற்றாக சேனைப்பயிர்ச் செய்கையாளர்கள் வெளியேறியதாகத் தெரியவில்லை. ஆங்காங்கே பள்ளப் பிரதேசங்களில் தற்போதும் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை அவதானித்தோம். அதற்கும் மேலாக எதிர்வரும் மாரி காலத்தில் மீண்டும் பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகின்றது. இதனை நாங்கள் அடுத்துவரும் வழக்குத் தவணையிலே எமது சட்டத்தரணிக்கூடாக நீதிமன்றுக்குத் தெரியப்படுத்த இருக்கின்றோம்.
தற்போதைய இந்த அரசின் காலத்தில் இந்தப் பிரச்சனையை நீதிமன்றத்தினூடாகவும் தீர்க்க முடியுமா என்ற சந்தேகமே ஜதார்த்த பூர்வமாக எங்கள் மத்தியில் இருக்கின்றது. ஏனெனில் இந்த அரசு திட்டமிட்டு இந்த வேலையை ஆளுநருக்கூடாக ஊக்குவிப்பதாகவே நாங்கள் பார்க்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரமல்ல வடக்கு கிழக்கு தமிழ் மக்களை எந்தளவுக்கு அடிமைப்படுத்த, துன்புறுத்த முடியுமே அந்தளவிற்குத் துன்புறுத்துகின்றது இந்த அரசு.
மேய்ச்சற்தரை உள்ளிட்ட எமது மக்களின் பல பொதுப் பிரச்சினைகளில் எமது மாவட்டத்தில் இருக்கும் அரசு சார்பான இரண்டு பிரதிநிதிகளும் கவனம் கொள்வதாக இல்லை. மாவட்டத்தில் நிலவுகின்ற தொல்பொருள், மேய்ச்சற்தரை போன்ற பிரச்சினைகளில் இவர்கள் இருவரும் தலையிடாமல் இருப்பது கவலைக்குரியது. இவ்வாறான பிரச்சினைகளில் மக்களுக்காக அவர்கள் முன்வர வேண்டும்.
ஆனால், நாங்கள் அவ்வாறிருக்க மாட்டோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசினால் மக்களுக்கு ஏற்படுத்தப்படும் அநியாயங்களை எப்போதும் தட்டிக் கேட்கும்” என்றார்.

பயணத்தடையினால் பாதிக்கப்பட்டுள்ள வறுமைக்கோட்டிலுள்ள 5000 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மன்னார். வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியிலுள்ள 5000 குடும்பங்களுக்கான நிவாரணப் பொதிகள் வழங்கும் பணிகள், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதனினால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் பயணத்தடையினால் தொழில் வாய்ப்பினை இழந்த குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் ஆகியவற்றுக்கே இந்த நிவாரணப் பொதிகளை வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை வவுனியாவில் நிவாரணப் பொதிகள் வழங்கும் செயற்பாட்டினை, தமிழீழ விடுதலை இயக்கத்தின் வவுனியா உதவி மாவட்ட அமைப்பாளர் ராஜனிடம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நேற்று கையளித்தார்.
புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஆதரவாளரான வி.யோகநாதனின் நிதிப் பங்களிப்பில் இந்த நிவாரணம் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஒரு காய்ந்த மரம் போன்றவர் என்பதுடன், காணாமற்போன அரசியல்வாதி என்ற நினைப்பே எம்மிடம் உள்ளதென தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அவர் சொல்லும் கருத்துகள் செய்யும் செயற்பாடுகள் குறித்து நாம் கணக்கெடுப்பதில்லை; எமக்கு அக்கறையும் இல்லை என்றார்.
ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த அவர், எமது கட்சியிலிருந்து 60 பேர், ரணிலுடன் சென்றுவிடுகின்றனர் என்கிறார்கள் எம்மிடம் 45 உறுப்பினர்கள் மட்டுமே இருக்கின்றனர் எனத் தெரிவித்த அவர்,ஒருவர் பின்னால் ஓடும் அளவுக்கு எமது உறுப்பினர்களின் நிலை மாறிவிடவில்லை.
நாம் வேண்டாமென்று ஒதுக்கிய ஒருவர் பின்னால் மீண்டும் ஓடும் அளவுக்கு எம்மில் எவருக்கும் பைத்தியம் பிடிக்கவில்லை என்றார். இதேவேளை,நாட்டின் தற்போதைய நிலையில், அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்கள் போதுமானதாக இல்லை என்பதுடன், அவை பிழையான தீர்மானங்களாகும்.
அதனால் தான் சர்வகட்சி மாநாட்டை நடத்த வேண்டுமென நாம் நினைக்கிறோம் இவ்வாறான
நேரத்தில் தான் அரசாங்கம் நாட்டிலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி அவர்களது அபிப்ராயங்களையும் செவிமடுத்து செயற்பட வேண்டும் என்றார்.
“எனவே, இந்த அரசாங்கம் அதனை செய்யத் தயாரில்லை என்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் சர்வகட்சி மாநாடு குறித்து மீண்டும் அரசாங்கத்துக்கு நினைவுப்படுத்தினார்” என்றார்.