இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் பெய்ஜிங்கில் மீளாய்வு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல் 2023ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை – சீன உறவுகள் மற்றும் கூட்டுத்திட்டங்கள் என்பவை தொடர்பில் முழுமையாக பெய்ஜிங்கில் கலந்துரையாடலில் மீளாய்வு செய்யப்படும். அத்துடன் இருதரப்பு புதிய அணுகுமுறைகளுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

பொருளாதார உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையின் முக்கியமானதொரு பங்காளியாக சீனா உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மூன்றாம் கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் விடுவித்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட தீர்மானங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இவ்வாரத்தில் ஜப்பான் செல்கின்றது. ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தனித்து செயற்படுவதனால் இலங்கைக்கு நெருக்கடியானதொரு நிலைமையே உருவாகியுள்ளது.

இவ்வாறானதொரு தருணத்தில் பெய்ஜிங்கில் இடம்பெறுகின்ற இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு நரேந்திர மோடி
தலைவர் பாரதீய ஜனதா கட்சி
பிரதம மந்திரி
இந்தியா

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு மு க ஸ்டாலின்
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
முதலமைச்சர்
தமிழ்நாடு

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய அரசியல் இயக்கம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தாங்கள் இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து மாநிலங்கள் அவை தேர்தலிலும் அபரிதமான வெற்றியை ஈட்டியதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருப்பது தங்களுடைய ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தாங்கள் ஈட்டிய இந்த மாபெரும் வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்கவும் மக்கள் மனதில் இன்று போல் என்றும் இடம்பெற்றிருக்கவும் வாழ்த்துகிறேன்.

அன்புடன் செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

இராணுவத்தினால் அழிக்கப்பட்ட தியாகி பொன் சிவகுமாரனின் சிலையில் அஞ்சலி

பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன, அதன் செயலாளா தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் அச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தில்; மீள சிலை வளாகத்தின் ஒருபகுதியில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் பிரதியிஸ்டை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் ரெலோ தலைமை குழு உறுப்பினர் நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று நாம் தமிழ்த் தேசியவாதிகளால் நிர்மாணிக்கப்பட்டு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியவர்களினாலும் தகர்க்கப்பட்ட நிலையில் என்னால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவச்சிலையில் அஞ்சலித்து உறுதிபுணுகின்றோம்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் இச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தின் நான் தவிசாளராக பதவி வகித்தபோது பிரதிஸ்டை செய்தேன். எமது இனவிடுதலைக்கான வரலாறுகளை வழிகாட்டியாக நாம் கைக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார். எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ரெலோ ஆதரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

கடந்த கால எமது அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு எழுந்துள்ள சூழ்நிலையிலும் காலத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எமது கட்சியின் தலைமை குழு எடுத்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையானது வெற்றியளிப்பதற்கு தமிழ் தேசிய தரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம்.

அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் தற்போதைய முயற்சிக்கு நமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

தலைமைக்குழு
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

Posted in Uncategorized

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: நோர்வே தூதுவர் உறுதி!

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener), வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸிடம் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர், இன்று (6)வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள்

இதன்போது ,வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

நோர்வே தூதுவர் உறுதி

கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போதும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் கூறினார்.

விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

Posted in Uncategorized

’’Foxhill supercross ’’ கார் பந்தயம்: 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்

தியத்தலாவ நரியகந்த, “Foxhill supercross” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 20பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான காணொளி தற்போது வௌியாகியுள்ளது.

Posted in Uncategorized

2024ஆம் ஆண்டிலும் இலங்கை 33வது ஆண்டாக வரவு – செலவுத் திட்ட வருமான இலக்கை எட்டத் தவறும் – வெரிட்டே ரிசேர்ச்

2024ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக 33வது ஆண்டாக இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வருமானம் தொடர்பான வரவு செலவுத்திட்ட இலக்கை எட்டத் தவறிவிடும் என அண்மையில் வெளியிடப்பட்ட ‘2024 வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையில்’ எதிர்பார்க்கப்படுகிறது.

‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ஆண்டுதோறும் வெரிட்டே ரிசேர்ச் நிறுவனத்தால் தொகுக்கப்பட்டு, பொருளாதாரத் தகவல்களுக்கான இலங்கையின் முதன்மை தளமாக உள்ள PublicFinance.lk இல் வெளியிடப்படுகிறது.

இலங்கையின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் நிதி, பணம் மற்றும் பொருளாதார மதிப்பீடுகளின் வலுவான பகுப்பாய்வு மற்றும் புறநிலை மதிப்பீட்டை இந்த அறிக்கை வழங்குகிறது. அரசாங்க நிதி பற்றிய பாராளுமன்றக் குழுவால் (COPF) வெளியிடப்படும் வரவு செலவுத் திட்ட அறிக்கையின் நோக்கத்தையே இந்த அறிக்கையும் பிரதிபலிக்கிறது. இந்த இரண்டு அறிக்கைகளும் வரவு செலவுத்திட்டம் பற்றிய புரிதலையும் விவாதத்தையும் பொதுமக்கள் மத்தியிலும் பாராளுமன்றத்திலும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.வெரிட்டே ரிசேர்ச்சின் ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை’ பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் அரசாங்கத்தின் கணிப்புகளை விடவும் வரவு செலவுத் திட்டவிளைவுகள் தொடர்பாக மிகவும் துல்லியமான கணிப்புக்களை தொடர்ச்சியாக வழங்கியுள்ளது. இது இலங்கையில் தொழில்சார் பொருளாதாரப் பகுப்பாய்வு மற்றும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கான ஒரு முக்கியமான மேலதிக உள்ளீட்டை உருவாக்குகிறது.

மிகைப்படுத்தப்பட்ட வரி வருமானம்

1991ஆம் ஆண்டிலிருந்து வரவு செலவுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வருமான இலக்கை இலங்கை இதுவரை எட்டவில்லை. மிகச் சமீபத்தில், வழிவகைகள் பற்றிய பாராளுன்றக் குழு, 2023 ஆம் ஆண்டில் வரவு செலவு திட்ட இலக்கை விட வரி வருமானம் 13% குறைந்துள்ளது எனத் தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டில் அரசாங்கம் ரூ.4,164 பில்லியன் வருமானத்தை எதிர்பார்க்கிறது, இது 2023 ஆம் ஆண்டிற்கான அதன் திருத்தப்பட்ட கணிப்புகளிலிருந்து 42% அதிகரிப்பாகும். எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கை 14% பற்றாக்குறையை கணித்துள்ளதுடன், வருமானம் ரூ.3,570 பில்லியனாக இருக்கும் என எதிர்வுகூறியுள்ளது.

பெறுமதி சேர் வரி (VAT) மூலம் கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே கணிக்கப்பட்ட பற்றாக்குறையில் 61 சதவீதத்திற்குக் காரணம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டாண்மைவருமான வரி, தனிநபர் வருமான வரி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) மற்றும் சுங்க இறக்குமதி வரி ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் வருமானம் மிகைப்படுத்தப்பட்டதே மீதமுள்ள 39 சதவீதத்திற்குக் காரணமாகவுள்ளது.

வருமானத்தில் வட்டி விகிதம்

உலகில் வருமானத்திற்கு அதிக வட்டிச் செலவு விகிதத்தை இலங்கை கொண்டுள்ளதுடன், இந்த விகிதத்தைக் குறைப்பது பேரினப் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகும். 2024 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டம்இந்த விகிதத்தை 64% ஆகக் குறைக்க எதிர்பார்க்கிறது. எவ்வாறாயினும், ‘வரவு செலவுத் திட்ட நிலை தொடர்பான அறிக்கையின்’ வருமானக் கணிப்புகள் மற்றும் வட்டிச் செலவுகள் தொடர்பான அரசாங்கக் கணக்கீடு ஆகியவை, கடந்த சில ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இது 70 சதவீதத்தைத் தாண்டும் எனக் குறிப்பிடுகின்றன. கடன் நிலைத்தன்மையின் முக்கிய குறிகாட்டியாக பொருளாதார வல்லுநர்கள் கருதும் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட பொருளாதார மீட்சித் திட்டத்தில் இலங்கை இதன் மூலமாக பின்தங்கும் நிலை ஏற்படும்.

வங்குரோத்தான நாட்டை நோக்கி வரும் சுற்றுலாப் பயணிகள் – நிலாந்தன்!

களுத்துறையில் ஒரு சுற்றுலாப் பயணி-அவர் ஒரு வெள்ளைக்காரர்- ஒரு தேநீர்க் கடையில் வடை சாப்பிடுகிறார்.அவரை கடைக்குள் உபசரித்து வடையோடு இரண்டு விதமான சம்பல்களையும் கொடுத்த அந்த கடையைச் சேர்ந்த ஒருவர்,அவரிடம் ஒரு வடைக்கும் ஒரு பால் தேனீருக்கும் மொத்தம் ஆயிரம் ரூபாய் வாங்குகிறார்.சுற்றுலாப் பயணிக்கு அந்தத் தொகை அதிகம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது.அவர் அந்த வழியால் வரும் ஆட்களை மறித்து வடையின் விலை என்னவென்று கேட்கிறார்.அந்த வழியால் வந்த இரண்டு சிங்களப் பெண்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் கதைக்கிறார்கள்,அவர்களில் ஒருவர் அந்த வடையின் விலை 120 ரூபாய் என்று கூறுகிறார். வெள்ளைக்காரர் உண்மையை கண்டுபிடித்து விட்டார் என்பதை அறிந்த கடைக்காரர் சிறு தொகையை திரும்ப கொடுக்கிறார். இந்த விடயம் “டிக்டொக்” காணொளியில் பரவலாகப் பகிரப்பட்டது. அதன் விளைவாக கடைக்காரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன .

ஏற்கனவே இது போன்ற மற்றொரு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணியை ஒரு கொத்துரொட்டி கடைக்காரர் அவமதிக்கின்றார். சம்பவம் நடந்தது கொழும்பு புதுக்கடையில். அங்கேயும் ஒரு இடியப்ப கொத்து என்ன விலை என்று கேட்டபோது கடைக்காரர் 1900 ரூபாய் என்று கூறுகிறார். சுற்றுலாப் பயணி அதை நம்பாமல் கேள்வி கேட்டபோது கடைக்காரர் சுற்றுலாப் பயணியை நோக்கி வாயை பொத்து என்ற சமிக்கையை காட்டுகிறார். அது சமூக வலைத் தளங்களில் பரவலாக வெளிவந்தது. விளைவாக கடைக்காரர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்தார்கள்.

இந்த இரண்டு விடயங்களையும் முன்வைத்து, சமூக வலைத்தளங்களில் பகிடியாக ஒரு விடயம் பகிரப்படுகிறது. இனி சாப்பாட்டுக் கடைக்கு போகும் போது வீடியோவையும் ஓன் பண்ணிவிட்டு சென்றால் சாப்பாட்டுக் கடைக்காரர்கள் மரியாதையாக நடந்து கொள்வார்கள் நியாயமான விலையைகக் கூறுவார்கள் என்பதே அந்தப் பகிடியாகும்.

ஆனால் சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பது போல அரசாங்கம் உள்ளூர் மக்களை சாப்பாட்டுக் கடைக்காரர்களின் விடயத்தில் பாதுகாக்கும் என்று எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இது தொடர்பாக முகநூலில் ஒரு மருத்துவர் ஒரு குறிப்பை எழுதியிருந்தார். நட்சத்திர அந்தஸ்துள்ள சுற்றுலா விடுதிகளில் உணவின் விலை உச்சமாகத்தான் உள்ளது. சாதாரண இளநீரில் இருந்து தொடங்கி மேற்கத்திய முறையிலான உணவுகள்வரை எல்லாவற்றுக்கும் பெரிய விலை தான். ஏன் அப்படியென்று சுற்றுலாப் பயணிகள் கேட்பதில்லை. ஏனென்றால் நட்சத்திர விடுதிகளில் அதுதான் விலை. அதையே தெருவோரக் கடைக்காரர் செய்தால் அது வழக்காகி விடுகிறது என்ற தொனிபட மேற்படி மருத்துவர் ஒரு குறிப்பை போட்டிருந்தார்.

இது விடயத்தில் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்ட வேண்டும்.முதலாவது வெள்ளைத் தோலைக் கண்டால் அல்லது சுற்றுலாப் பயணிகளைக் கண்டால் உள்ளூர் வியாபாரிகள் விலையை உயர்த்திக் கூறும் ஒரு நிலைமை எப்பொழுதும் உண்டு. இது இலங்கையில் மட்டுமல்ல இந்தியாவும் உட்பட ஆசிய ஆபிரிக்க நாடுகள் பெரும்பாலானவற்றில் காணப்படும் ஒரு பொதுத் தோற்றப்பாடு. ஒரு வெளிநாட்டுப் பயணிக்கு ஒரு பொருளை டொலர் மதிப்பில் விற்க முற்படுவது.இதுதான் புதுக்கோட்டை மற்றும் களுத்துறைச் சம்பவங்களின் பின்னணி. இது முதலாவது .

இரண்டாவது விடயம்,சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்ல உள்ளூர் பணக்காரர்களும் சுற்றுலா விடுதிகளில் உணவு அருந்தும் பொழுது அந்த விலைப்பட்டியலைக் குறித்துக் கேள்வி கேட்பதில்லை. சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம், திருநெல்வேலிச் சந்தைக்கு அருகாக அமைந்திருக்கும் ஒரு மரக்கறி உணவகத்தில் விற்கப்படும் உணவுகளின் விலைப்பட்டியல் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்தது. நட்சத்திர அந்தஸ்துள்ள உணவு விடுதிகள் சாதாரண உணவுகளுக்கும் குடிபானங்களுக்கும் பல மடங்கு விலையைப் போடுகின்றன. பணக்காரர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதைக் கேள்வி கேட்காமல் நுகர்கிறார்கள். அதையே தெருவோரக்கடை என்று வந்தால் அல்லது தெருவோரத்தில் பொருளை விக்கும் ஏழை என்று வந்தால் ஆயிரம் நியாயங்கள் கேட்டு விலையை எப்படிக் குறைக்கலாம் என்று முயற்சிக்கிறார்கள் .

இது சமூக வலைத்தளங்களின் காலம். மனிதர்கள் நடமாடும் கமராக்களாக மாறிவிட்டார்கள். எனவே இது போன்ற செயல்கள் நடக்கும் பொழுது அது உடனுக்குடன் படமாக்கப்படுகின்றது. எடுத்த கையோடு சுடச்சுட சமூக வலைத்தளங்களில் செய்தியாக்கப்படுகின்றது. குற்றங்களைத் தடுப்பதற்கும் அநியாயங்களைத் தடுப்பதற்கும் அது உதவுகின்றது. குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் தங்களை உள்ளூர் வியாபாரிகள் ஏமாற்றுகிறார்கள் அல்லது சுரண்டப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு அதிகரித்து வருகிறது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கமும் அதற்கு காரணம். இவ்வாறு சுற்றுலாப் பயணிகள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் விழிப்புக் காரணமாக மேற்சொன்ன இரண்டு சம்பவங்கள் தொடர்பாகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அரசாங்கம் இந்த விடயத்தில் உஷாராகக் காணப்படுகின்றது. சுற்றுலா பயணிகளைக் கவர வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு உண்டு ஏனென்றால் சுற்றுலாப் பயணிகள்தான் இப்பொழுது நாட்டுக்குள் டொலர்களைக் கொண்டு வரும், பொன்முட்டை இடும் வாழ்த்துக்களாகும்.இந்த மாதத்தில் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் மொத்தம் 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்குள் வந்திருக்கிறார்கள்.

நாட்டின் பெரும்பாலான நட்சத்திர அந்தஸ்த்துள்ள விடுதிகள் மட்டுமல்ல சாதாரண விடுதிகளும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிகின்றன. நாட்டின் உயர்தர மதுச்சாலைகள்,தேநீர்க் கடைகள்,சிற்றுண்டிச் சாலைகள் போன்றவற்றிலும் கடற்கரைகளிலும் உல்லாசப் பயணத் தலங்களிலும் பெருமளவுக்கு சுற்றுலாப் பயணிகளைக் காண முடிகின்றது.

சுற்றுலாப் பயணிகள் அதிக தொகையாக இலங்கைக்குள் வருவதற்கு பிரதானமாக இரண்டு காரணங்கள் உண்டு.இது ஒரு அழகிய நாடு.அது முதலாவது முக்கியமான காரணம். இரண்டாவது காரணம், நாட்டின் நாணயப் பெறுமதி வெகுவாகக் குறைந்துவிட்டது.இதனால் ஒரு வெளிநாட்டவர் தன்னுடைய நாணயத்தை இங்கே செலவழிக்கும் பொழுது குறைந்த செலவில் அதிக அளவு நன்மைகளைப் பெற முடியும். இக்காரனத்தால் இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக தொகையாக வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவுக்கும் மாலை தீவுகளுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கடிகள் தோன்றிய பின் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையை நோக்கி ஊக்குவிக்கப்படுகின்றார்கள். இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வெள்ளைக்காரர்களைப் போல காசை அள்ளி வீசமாட்டார்கள் என்ற ஒரு அபிப்பிராயம் சுற்றுலா விடுதி உரிமையாளர்களிடமும் உள்ளூர் வணிகர்களிடமும் உண்டு. அமெரிக்க ஐரோப்பிய சுற்றுலாப் பயணிகளை விடவும் இந்திய சுற்றுலாப் பயணிகள் இலங்கையின் சந்தை நிலவரங்கள் தொடர்பாக அதிகம் விழிப்புடன் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

இவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானவர்கள் நாட்டின் தெற்குப் பகுதியை நோக்கியே போவதாக ஓர் அவதானிப்பு உண்டு. வடக்கு கிழக்கை நோக்கி வருபவர்களின் தொகை ஒப்பிட்டுளவில் குறைவு என்றும் அவதானிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கில் உள்ள விருந்தகங்கள், சுற்றுலாத் தங்கங்களின் விருந்தோம்பும் பண்பைக் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.சுற்றுலாப் பயணிகளை கவரத்தக்க விருந்தோம்பல் பண்பாடும் அதற்குரிய விருந்தோம்பல் வலை அமைப்பும் தமிழ்ப் பகுதிகளில் குறைவு என்றும் சுட்டிக் காட்டப்படுகின்றது.அவ்வாறு சுற்றுலாப் பயணிகளைக் கவரத்தக்க ஒரு சுற்றுலாப் பாரம்பரியத்தை அல்லது ஒரு சுற்றுலாப் பண்பாட்டைக் கட்டியெழுப்பத் தேவையான உயர் கற்கை நெறிகள் இப்பொழுது தமிழ்ப் பகுதிகளில் உண்டு.எனினும் ஆயுத மோதல்களுக்குப் பின்னரான கடந்த 15 ஆண்டுகளிலும் கவர்ச்சிமிகு செழிப்பான விருந்தோம்பல் பாரம்பரியம் ஒன்றைத் தமிழ் மக்கள் மத்தியில் கட்டியெழுப்ப முடியவில்லை என்று சுட்டிக் காட்டப்படுகின்றது.

இன்னும் சில மாதங்களில் நல்லூர் திருவிழா வருகிறது. அதையொட்டி புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகரித்த தொகையில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருவார்கள்.இனிவரும் மாதங்களில் நாட்டுக்கு அதிகம் வருவாயை ஈட்டித் தரப்போகும் தரப்புகளில் ஒன்றாக புலம்பெயர்ந்த தமிழர்கள் காணப்படுவார்கள்.முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது சொந்தக்காரர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்குவதுண்டு. ஆனால் இப்பொழுது இந்தப் போக்கு மாறி வருகின்றது.புலம்பெயர்ந்த தமிழர்களில் ஒரு பகுதியினர் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு விரும்புகின்றார்கள். உறவினர்களின் வீடுகளில் தங்குவதை விடவும் சுற்றுலா விடுதிகளில் தங்குவதை அவர்கள் விரும்பக் காரணம் என்ன?

மிகவும் துயரமான ஒரு காரணம் உண்டு. உறவினர்கள் நண்பர்களின் வீடுகளில் தங்கும் பொழுது உறவினர்களும் நண்பர்களும் இவர்களிடம் எதையாவது எதிர்பார்க்கின்றார்கள்.அவர்கள் எதிர்பார்ப்பதை இவர்கள் கொடுக்க முடியாத போது அல்லது இவர்கள் கொடுப்பது அவர்கள் எதிர்பார்த்ததை ஈடு செய்யாத போது அங்கே அதிருப்தி உண்டாகிறது. அதனால் மனக் கஷ்டங்கள் ஏற்படுகின்றன.விடுமுறைக் காலத்தை தாய்நாட்டில் சந்தோஷமாகக் கழிப்பதற்கு என்று வரும் புலம்பெயர்ந்த தமிழர்கள் பலர் மேற்சொன்ன காரணத்தால் தமது விடுமுறை நாட்கள் மன அழுத்தம் மிக்கவைகளாக மாறின என்று குறைபடுகிறார்கள்.

மேலும் அங்கிருந்து வரும் முதலாம் தலைமுறை புலம் பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரை.பெரும்பாலானவர்களுடைய பெற்றோர் இப்பொழுது உயிரோடு இல்லை.எனவே பெற்றோரோடு தங்க வேண்டிய நிர்ப்பந்தமும் அவர்களுக்குக் குறைவு. மேலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. தங்கப் போகும் வீடுகளிலும் பிள்ளைகள் வளர்ந்து விட்டன. ஒரு குறுகிய காலத்துக்குள் எல்லாரையும் உள்வாங்கும் அளவுக்கு உள்ளூர் வீடுகளின் அறைகள் போதாமல் இருக்கலாம். மேலும்,வெளிநாட்டில் வளர்ந்த பிள்ளைகள் “ஏசி” அறைகளைக் கேட்கிறார்கள். அதுவும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சுற்றுலா விடுதிகளில் தங்குவதற்கு ஒரு காரணம். இது போன்ற காரணங்களால் சுற்றுலா விடுதிகளுக்கு வருமானத்தை ஈட்டும் ஒரு தரப்பினராக புலம் பெயர்ந்த தமிழர்களும் மாறி வருகிறார்கள்.

எதுவாயினும் நாட்டுக்குள் வெளிநாட்டுக் காசு வருகிறது. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இயங்கும் ஓர் அரசாங்கத்தைப் பொறுத்தவரை, அது ஒரு வரப் பிரசாதம். அது நாட்டின் டொலர் கையிருப்பைக் கூட்டுகின்றது. அது போலவே வெளிநாட்டுக்குச் சென்ற தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் அனுப்பும் காசும் நாட்டின் டொலர் கையிருப்பை அதிகப்படுத்துகிறது.அண்மைக் காலங்களில் 10பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளி நாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பியிருப்பதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவை தவிர அரசாங்கம் வரிகளை உயர்த்தியிருக்கின்றது.மின்சாரக் கட்டணம் தொலைதொடர்புக் கட்டணம் போன்ற உள்ளூர்ச் சேவைக் கட்டணங்களை அதிகப்படுத்தியுள்ளது. இவற்றால் அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கின்றது. இவை போன்ற பல காரணங்களினாலும் நாட்டின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் நிமிர்த்தப்படுகிறது என்று ஓர் உணர்வு ஆங்கிலம் தெரிந்த படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் ஏற்பட்டு வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு பச்சை மிளகாய் ஒரு கிலோ 2000 ரூபாய்க்கு மேல் போனது.ஆனால் இப்பொழுது உள்ளூர் சந்தைகளில் 100 ரூபாய்க்கு சற்று அதிகமாகப் போகின்றது. அப்படித்தான் தக்காளிப் பழம் பெரியது ஒரு கிலோ 800 ரூபாய்க்கு மேல் போனது. இப்பொழுது 50 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை போகின்றது.

மரக்கறி விலை குறைகிறது. கடல் உணவுகளின் விலையும் குறைக்கின்றது. அரசாங்கம் சாதாரண சிங்கள மக்களைக் கவரும் நோக்கத்தோடு நெத்தலிக் கருவாடு, சீனி,பருப்பு போன்றவற்றின் விலைகளை அவ்வப்போது குறைத்து வருகின்றது.ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் பொழுது மேலும் பல சலுகைகளை எதிர்பார்க்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலை நோக்கி நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்துவதற்காக ரணில் விக்கிரமசிங்க கடுமையாக உழைக்கின்றார். அவர் மீண்டும் ஒரு தடவை ஜனாதிபதியாக வருவதை மேற்கு நாடுகள் விரும்புகின்றன.பன்னாட்டு நாணய நிதியம் போன்ற உலகப் பெரு நிறுவனங்களும் விரும்புகின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலை நோக்கி அவர் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதற்கு மேற்படி தரப்புகள் அவருக்கு உதவும்.

எனினும் ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற பின் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்கள் என்று கூறப்படுகின்றவை சாதாரண சிங்கள மக்களைச் சென்றடைந்தனவா என்ற கேள்விக்கு விடை முக்கியம். ஏனெனில் ஜனாதிபதியைத் தீர்மானிப்பதற்குரிய பிரதான வாக்காளர்கள் சிங்களக் கிராமங்களில்தான் இருக்கிறார்கள். சிங்கள பௌத்த அரசியலின் வாக்கு வங்கியின் இதயம் கிராமங்களில்தான் உண்டு. கிராமப்புற வாக்காளர்கள் அரசாங்கத்தைப் பற்றி என்ன கருதுகிறார்கள் என்பதுதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கப் போகின்றது.