இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த் தலைவர்களுடன் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கு எதிர்வரும் 20ஆம் விஜயம் மேற்கொள்ளும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோரைச் சந்திக்கவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து அவர் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச, வடக்கு,கிழக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களையும், மலையகக் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார். அத்தோடு முஸ்லிம் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

இந்திய பாராளுமன்றத் தேர்தல்கள் நிறைவடைந்ததன் பின்னர் மீண்டும் வெளிவிவாகார அமைச்சர் பதவியை ஏற்றுள்ள காலநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் மற்றும் இருதரப்பு உறவுகள் உட்பட பரஸ்பர ஒத்துழைப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக களநிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கதிர்காம காட்டுவழி பாதை திறக்கும் திகதி தொடர்பாக ஆளுநர் உத்தரவாதம்: ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன்

கதிர்காம காட்டுவழி பாதயாத்திரைக்கான கதவு திறக்கும் திகதி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் பிரதி தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று, இந்துமாமன்ற கட்டடத்தில் இன்று (17) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவலை தெரிவித்திருந்தார்.

கதிர்காம பாதயாத்திரைக்கான காட்டுவழிப்பாதை திறப்பு ஏற்கனவே இம்மாதம் 30ஆம் திகதி என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும் திடீரென அத்திகதியில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த மாதம் 02ஆம் திகதி என அறிவிக்கப்பட்டது.

இதனால் குழப்பமடைந்த யாழ்ப்பாணம் தொடக்கம் கிழக்கு மாகாணம் வரையுள்ள பாதயாத்திரிகர்களும் பொது அமைப்புக்களும் ரெலோ அமைப்பினர் தலைவர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு என்னிடம் கேட்டுக்கொண்டனர்.

இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுத்த அடைக்கலம் செல்வநாதன் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் உரிய அமைச்சர்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதாக கூறினார்.
இதன் அடிப்படையில் உரிய திகதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இம்மாதம் 30 ஆம் திகதி கதவு திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநரும் உரிய அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் கௌரவ ஆளுநர் அல்லது மாவட்ட அரசாங்க அதிபர் மூலம் வெளியிடப்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

Posted in Uncategorized

இலங்கை – சீன இராஜதந்திர உறவுகள் பெய்ஜிங்கில் மீளாய்வு!

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பில் வட்டமேசை கலந்துரையாடல் திங்கட்கிழமை (17) பெய்ஜிங்கில் இடம்பெறவுள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேசேகர தலைமையில் விசேட பிரதிநிதிகள் குழு சென்றுள்ளது.

பெய்ஜிங்கில் இடம்பெறும் இந்த இருதரப்பு கலந்துரையாடலில் சீன வெளியுறவு துணை அமைச்சர் சன் வெய்டாங் கலந்துகொள்வார். அரசியல், பொருளாதாரம், வர்த்தகம், முதலீடு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட இருதரப்பு ஈடுபாட்டின் துறைகளில் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்படவுள்ளது.

இதற்கு முன்னர் இத்தகையதொரு கலந்துரையாடல் 2023ஆம் ஆண்டு மே மாதம் கொழும்பில் நடைபெற்றது. இலங்கை – சீன உறவுகள் மற்றும் கூட்டுத்திட்டங்கள் என்பவை தொடர்பில் முழுமையாக பெய்ஜிங்கில் கலந்துரையாடலில் மீளாய்வு செய்யப்படும். அத்துடன் இருதரப்பு புதிய அணுகுமுறைகளுக்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும்.

பொருளாதார உறவுகளை பொறுத்தவரையில் இலங்கையின் முக்கியமானதொரு பங்காளியாக சீனா உள்ளது. குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தற்போது முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளது. அதாவது மூன்றாம் கடன் தவணையை சர்வதேச நாணய நிதியம் விடுவித்து இலங்கையின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதம் அளித்துள்ளது.

அதை தொடர்ந்து, சர்வதேச கடன் வழங்குநர்களுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்திட வேண்டும். இதற்கான இறுதிக்கட்ட தீர்மானங்களுக்காக வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழு இவ்வாரத்தில் ஜப்பான் செல்கின்றது. ஆனால் சர்வதேச கடன் மறுசீரமைப்பு விடயத்தில் சீனா தனித்து செயற்படுவதனால் இலங்கைக்கு நெருக்கடியானதொரு நிலைமையே உருவாகியுள்ளது.

இவ்வாறானதொரு தருணத்தில் பெய்ஜிங்கில் இடம்பெறுகின்ற இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பல்துறைசார் இராஜதந்திர உறவுகள் தொடர்பான கலந்துரையாடல், கடன் மறுசீரமைப்புக்கு சாதகமான சூழலை உருவாக்கும் என்ற நம்பிக்கையை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு நரேந்திர மோடி
தலைவர் பாரதீய ஜனதா கட்சி
பிரதம மந்திரி
இந்தியா

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

இந்திய நாட்டின் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய கட்சி நாடு தழுவிய ரீதியில் பெற்ற வெற்றிக்கு எமது வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

தங்களின் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்தும் மூன்றாவது தடவையும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை பெற்று ஆட்சி அமைப்பது தங்கள் மீது மக்கள் கொண்டுள்ள அதீத நம்பிக்கையை பறை சாற்றுகிறது.

தங்களது இந்த வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் நமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன். தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் வெற்றிக்கு ரெலோ தலைவர் செல்வம் வாழ்த்து

மாண்புமிகு மு க ஸ்டாலின்
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
முதலமைச்சர்
தமிழ்நாடு

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்துக்கள்

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுடைய அரசியல் இயக்கம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு எமது உளம் நிறைந்த வாழ்த்துக்கள்.

தாங்கள் இந்த மாபெரும் இயக்கத்தின் தலைமையை ஏற்று பயணிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து மாநிலங்கள் அவை தேர்தலிலும் அபரிதமான வெற்றியை ஈட்டியதோடு நாடாளுமன்றத் தேர்தலிலும் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருப்பது தங்களுடைய ஆளுமையையும் தலைமைத்துவத்தையும் வெளிப்படுத்தி நிற்கிறது.

தாங்கள் ஈட்டிய இந்த மாபெரும் வெற்றிக்கு எமது ஈழ மக்கள் சார்பாகவும் எமது கட்சி சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.

தங்கள் அரசியல் பணி தொடர்ந்து சிறக்கவும் மக்கள் மனதில் இன்று போல் என்றும் இடம்பெற்றிருக்கவும் வாழ்த்துகிறேன்.

அன்புடன் செல்வம் அடைக்கலநாதன் பா.உ
தலைவர் – தமிழ் ஈழ விடுதலை இயக்கம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Posted in Uncategorized

இராணுவத்தினால் அழிக்கப்பட்ட தியாகி பொன் சிவகுமாரனின் சிலையில் அஞ்சலி

பொன் சிவகுமாரனின் 50 ஆவது நினைவேந்தல் இராணுவத்தினரால் இடித்து அழிக்கப்பட்ட பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலையில் தமிழ்த் தேசியவாதிகளால் இன்று காலை உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் மற்றும் அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் ஈஸ்வரன, அதன் செயலாளா தனுபன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அகவணக்கம் செலுத்தியதுடன் திருவுருவச் சிலைக்கு தீபமேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் அச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தில்; மீள சிலை வளாகத்தின் ஒருபகுதியில் முன்னாள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஸ் பிரதியிஸ்டை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

தமிழர்களின் அரசியல் அபிலாசைக்கான வழிகாட்டி பொன் சிவகுமாரன் ரெலோ தலைமை குழு உறுப்பினர் நிரோஷ்

போராட்டப் பயணப்பாதையில் இனத்திற்கான மாணவர் எழுச்சியின் வடிவமாக சிவகுமாரனின் எழுச்சியையும் தியாகத்தினையும் என்றும் நினைவில் கொள்கின்றோம் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தியாகி பொன் சிவகுமாரனின் 50 ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று நாம் தமிழ்த் தேசியவாதிகளால் நிர்மாணிக்கப்பட்டு இராணுவத்தினராலும் இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கியவர்களினாலும் தகர்க்கப்பட்ட நிலையில் என்னால் மீள பிரதிஸ்டை செய்யப்பட்ட திருவுருவச்சிலையில் அஞ்சலித்து உறுதிபுணுகின்றோம்.

உயிர் தமிழுக்கு உடல் மண்ணிற்கு என்ற இலட்சியத்துடன் தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னுயிர்த் தியாகம் செய்த தியாகி பொன் சிவகுமாரன் அவர்களது உருவச்சிலை 05 யூன் 1975 ஆம் ஆண்டு சிறைமீண்ட இளைஞன் முத்துக்குமாரசுவாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினராலும் இராணுவத்துடன் சேர்ந்தியங்கிய தரப்புக்களாலும் இச் சிலை பலதடவைகள் உடைத்து நொருக்கப்பட்டு உரும்பிராய் சந்தை வளாகத்தில் வீசப்பட்டு புதையுண்டு கிடந்த நிலையில் அதனை தமிழ் மீள எடுத்து சிவகுமாரனின் சிலை அமைத்த வளாகத்தின் நான் தவிசாளராக பதவி வகித்தபோது பிரதிஸ்டை செய்தேன். எமது இனவிடுதலைக்கான வரலாறுகளை வழிகாட்டியாக நாம் கைக்கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான அரச அடக்கு முறை இன்றும் நீட்சியாக காணப்படுகின்றது. எமது உரிமைகளுக்காக தன்னுயிரைத் தியாகம் செய்த சிவகுமாரனின் அர்ப்பணிப்பினை ஒட்டுமொத்த தமிழ் இனமும் நினைவுகூர்கின்றது.

அரச அடக்குமுறைக்கும் வன்முறைக்கும் அகிம்சை வழிலான அணுகுமுறைகள் பயனற்றுப் போன சூழ்நிலையில் அரச அடக்குமுறையை எதிர்கொண்டாக வேண்டும் என்ற ஓர் நிர்ப்பந்தத்தில் மக்களின் மனநிலை நின்ற விடுதலைப்போராட்ட வீரனாகவே பொன். சிவகுமாரன் செயற்பட்டார்.

பொன் சிவகுமாரன் இனத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக ஓர் இளையவனாக மாணவர் விடுதலைப் போராட்டத்தின் முன்னேடியாக கட்சி அரசியல் விடயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசிய விடுதலையை இலக்காகக் கொண்டு போராட்ட அமைப்புக்கள் நிறுவனமயப்படுத்தப்படாத காலகட்டத்தில் தனது தியாகத்தினை நிலைநாட்டியுள்ளார். எதிரியிடம் விடுதலைப்போராளிகள் உயிருடன் அகப்பட்டுவிடக்கூடாது என்ற அடிப்படையில் தன் இன்னுயிரை சயனைட் அருந்தி மாய்த்துள்ளார்.

விடுதலைப்போராட்டம் ஒடுக்குமுறைகளுக்கு எதிரானது என்ற நியாயபூர்வமான யதார்த்தத்தினை பொன். சிவகுமாரன் அவர்களது தியாகம் என்றும் பறைசாற்றுகின்றது. தமிழ் மாணவர்களுக்கு எதிராகத் திட்டமிட்டு கொண்டுவரப்பட்ட கல்வி ரீதியிலான தரப்படுத்தல்கள், உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் என நீண்டு செல்லும் இனத்திற்கு எதிரான அநீதிகளிற்கு எதிராக பொன். சிவகுமாரன் போராடியுள்ளார். எமது போராட்டங்களின் முன்னோடியாக தியாகி சிவகுமாரனை என்றும் நினைவில் கொள்கின்றோம். இவ்வாறு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோ தலைமை குழு உறுப்பினருமான தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ரெலோ ஆதரவு

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று நடைபெற்ற தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு கூட்டத்தில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது பற்றிய விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

கடந்த கால எமது அனுபவங்களின் அடிப்படையில் தமிழ் மக்கள் மத்தியில் பொது வேட்பாளர் என்ற நிலைப்பாடு எழுந்துள்ள சூழ்நிலையிலும் காலத்தின் தேவை மற்றும் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும் பொது வேட்பாளர் என்ற கோரிக்கைக்கு ஆதரவு நிலைப்பாட்டை எமது கட்சியின் தலைமை குழு எடுத்திருக்கிறது.

இந்தக் கோரிக்கையானது வெற்றியளிப்பதற்கு தமிழ் தேசிய தரப்பில் இருக்கும் அனைவரும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை முன் நிறுத்த வேண்டிய அவசியத்தையும் நாம் வலியுறுத்துகிறோம்.

அனைத்து தமிழ் தரப்பினர்களையும் ஒருங்கிணைக்கும் தற்போதைய முயற்சிக்கு நமது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதாகவும் தீர்மானித்துள்ளோம்.

தலைமைக்குழு
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்

வட மாகாணத்தின் அபிவிருத்திக்கு ஆதரவளிக்க தயார்: நோர்வே தூதுவர் உறுதி!

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் (May-Elin Stener), வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம். சார்ள்ஸிடம் (P.S.M. Charles) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே தூதுவர், இன்று (6)வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய போதே, இதனை குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள்

இதன்போது ,வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கையின் முன்னேற்றங்கள், காணி விடுவிப்பு, கண்ணிவெடி அகற்றல் செயற்பாடுகள், சுற்றுலாத்துறை அபிவிருத்தி, கல்வி, இயற்கை சக்தி வளங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனினும், சுற்றுலா வழிகாட்டிகள் போதிய எண்ணிக்கையில் இல்லை எனவும், தங்குமிட வசதிகள் போதுமான அளவு இல்லை எனவும் குறிப்பிட்ட ஆளுநர், சுற்றுலாத் துறையை மேம்படுத்த முதலீடுகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

நோர்வே தூதுவர் உறுதி

கற்றல் செயற்பாடுகள் மற்றும் தொழிற்கல்வியை பெற முடியாது போதும் இளைஞர், யுவதிகள் தொடர்பில் மாற்று வழிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஆளுநர் கூறினார்.

விடயங்களை கேட்டறிந்துக் கொண்ட இலங்கைக்கான நோர்வே தூதுவர், வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ச்சியாக வழங்கத் தயார் எனவும், ஒருங்கிணைந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.

’’Foxhill supercross ’’ கார் பந்தயம்: 7 பேர் பலி; 20 பேர் படுகாயம்

தியத்தலாவ நரியகந்த, “Foxhill supercross” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 20பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் விபத்தில் உயிரிழந்த 07 பேரில் 4 பந்தய உதவியாளர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினையடுத்து நடைபெறவிருந்த எஞ்சிய அனைத்து பந்தய போட்டிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தியத்தலாவை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தின் போது பதிவான காணொளி தற்போது வௌியாகியுள்ளது.

Posted in Uncategorized