வலிகாமம் கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உணவுகள் உதவிகள் தேவை – தவிசாளர் நிரோஸ்!

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபை எல்லைக்குள் அதிக வெள்ளப்பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ள நிலையில் எமது பகுதிக்கு உடனடி உணவு உதவிகள் தேவையாகவுள்ளன என உதவிகளை நல்கக் கூடியவர்களின் கவனத்தினை ஈர்க்கும் முகமாக ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

எமது பிரதேசம் பொதுவாக வசதிக்குறைவான மக்களைக்கொண்ட பகுதியாகும். குறிப்பாக ஒவ்வொரு கிராமங்களின் ஐம்பது சதவீதமான பகுதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அரசாங்கம் முகாம்களுக்குச் செல்வொருக்கே உடனடி உதவி என்ற சுற்று நிருபத்தினை வெளியிட்டிருந்தது.

அதன் வாயிலாக வீடுடுகளுக்குள் கடும் வெள்ளப்பாதிப்புக்களை எதிர்கொண்டு முடக்கப்பட்டுள்ள மக்கள் உணவுக்குத் திண்டாடும் நிலையை நிலை உள்ளது. இந் நிலையில் முகாம்களுக்குள் செல்ல முடியாதவர்களுக்கு உதவிகள் கிட்டவில்லை.

பிரதேசத்தில் ஏற்கனவே பலருக்கும் ஒருவகை வைரஸ் காய்ச்சல் உள்ள நிலையில் முகாம்களுக்குள் செல்லவதை மக்களில் பலரும் விரும்பவில்லை. இந்நிலையில் வீடுகளுக்குள் வெள்ள நீர்புகுந்து கடும் பாதிப்புக்களை எதிர்கொண்டு பலரும் திண்டாடுகின்றார்கள்.

முதியவர்கள், சிறுவர்கள், நோயாளிகள் என பலரும் உடனடி உணவிற்கே திண்டாடுகின்றார்கள். தற்போதைய நிலையில் முகாம்களுக்கள் சென்றால் தான் உதவி என்ற நிலையில் சுற்றுநிருப மாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எது எவ்வாறிருந்தபோதிலும் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரச உதவிகள் சென்றடைய வேண்டும். மேலும் தன்னார்வலர்களின் உதிவகள் ஆங்காங்கே குறைந்தளவில் கிடைக்கப்பெற்று வருகின்றன. இந் நிலையில் உனடி உதவிகளை வழங்கத்தவர்கள் வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தில் அதிகமாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் காணப்படுவதால் அவற்றிற்கு உதவிகளை நல்க முன்வரவேண்டும். என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஸ் தெரிவித்தார்.

Posted in Uncategorized

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை அரசு உடன் நிறுத்தவேண்டும் என்ற தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் கடும் எதிர்ப்பினையும் மீறி வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ தலைமையில் வியாழக்கிழமை மாதாந்த அமர்வு நடைபெற்றது.

இவ் அமர்வில் தமிழ் மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் அவர்களது இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத் தொன்மையினையும் அடையாளங்களினையும் மாற்றியமைக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். அரசாங்கம் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்குவதாகத் தெரிவிக்கின்றபோதும் அது சிங்கள பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்குக் கட்டுப்பட்டதாகவும் ஒத்தோடுவதாகவுமே உள்ளது. அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என தவிசாளரினால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. மேலதிகமாக இவ் விடயம் தொடர்பில் அவசரதீர்மானம் மேற்கொள்ள வேண்டும் என உறுப்பினர் இ.கஜிபனினால் தவிசாளரிடம் கோரிக்கை ஒன்றும் சபையில் முன்வைக்கப்பட்து.

சபையின் இத் தீர்மானத்திற்கு தாம் ஒருபோதும் ஆதரவு அளிக்க முடியாது என தேசியமக்கள் சக்தி உறுப்பினர்கள் கூட்டாக தவிசாளருடன் வாதிட்டனர். பின்னர் இத் தீர்மானத்தில் அரசாங்கம் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை முன்னெடுக்கின்றது என்ற கருத்தினை நீக்கவேண்டும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கடுமையான வாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பிரதேச சபைக்கு புத்தர் சிலை பற்றிய தீர்மானத்தினை முன்வைக்கமுடியாது. இச்சபை அபிவிருத்திக்கான அலகு. ஆகவே வலிகாமம் கிழக்கிற்கு உட்பட்ட அபிவிருத்தி விடயங்களை மட்டுமே பார்க்கவேண்டிய சபை எதற்காக இங்கே புத்தர் சிலை பற்றி முன்வைக்கின்றீர்கள் எனவும் கடுமையாக தேசியமக்கள் சக்தியினர் வாதிட்டனர்.

இந்நிலையில் பிரதேச சபையினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தேசிய மக்கள் சக்தியை தவிர்ந்த ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் ஒருமித்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றக்கூடாது எனவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பௌத்த விகாரை விடயத்தில் நடந்துகொண்ட விடயத்தினை எதிர்த்தனர். வரலாற்று ரீதியில் மாறிமாறி வரும் அரசாங்கங்களின் இனவாத நீட்சியே நடக்கின்றது என சகல தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் வாதிட்டனர். இந் நிலையில் சபையில் அமளிதுமளி நீடித்தது.

சபையினை அமைதிப்படுத்திய தவிசாளர், பொலிசார் மீளவும் பேரினவாத நோக்கில் அமைக்கப்பட்ட பௌத்த சிலையை அகற்றிவிட்டு மீண்டும் பக்குவமாக அரசு நிறுவியது. இராணுவம் பாதுகாப்பளித்தது. பாதுகாப்பு அமைச்சர் நாட்டின் மீயுயர் சபையில் தம்மால் மீள சிலை அகற்றப்படவில்லை எனவும் பாதுகாப்பிற்காகவே சிலை நகர்த்தப்பட்டதாகவும் மீள நிறுவப்படும் என அறிவித்தார். இவைகள் அரசாங்கத்தின் நடத்தைகள் கிடையாதா? கொள்கை கிடையாதா? தமிழ் மக்களை ஒடுக்கிவிட்டு சகித்துவாழக்கோருவதில் என்ன நியாயம் எனக்கேள்வி எழுப்பியதுடன் தேசிய மக்கள் சக்தி எதிர்த்தால் வாக்கெடுப்பின் ஊடாக தீர்மானம் பரிசீலிக்கப்படும் என்றார்.

இவ்விடயத்தில் அரசாங்கத்தினை குற்றஞ்சாட்டி முன்வைக்கப்படும் பிரேரணையினை ஏற்றுக்கொள்ள முடியாது எனக்கூறி தேசிய மக்கள் சக்தியினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் சபையில் இருந்து அரசாங்கத்தினை நியாயப்படுத்தி தீர்மானத்திற்கு எதிராக தமது பலத்த எதிர்ப்பினை வெளிப்படுத்தியவாறு வெளிநடப்புச் செய்தனர். சபை ஆசனங்களில் இருந்து எழுந்து சென்று தமது எதிர்ப்பினை காட்டினர். இந் நிலையில் இப் பிரேரணையில் எவருக்காவது ஆட்சேபனைகள் உள்ளவா எனத் தவிசாளர் கேள்வி எழுப்பினார். பிரசன்னமாகியிருந்த உறுப்பினர்கள் நடைபெற்றது தமிழ் மக்களுக்கு எதிரான பேரினவாத ஆக்கிரமிப்பு என பிரேரணையின் மீது கருத்துரைத்தனர்.
இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி தவிர்ந்த ஏனைய கட்சிகளின் பிரேரணையினை வலுப்படுத்தம் கவனயீர்ப்பு கருத்துக்களுடன் ஏகமனதாக தீர்மானம் நிறைவேறியது.

வன்னியில் ஒரேயொரு சிகையலங்கார கடையே இராணுவம் நடத்துகிறது விபரமறியா பாதுகாப்பு பிரதி அமைச்சர் பிமல் ஆதாரத்துடன் செல்வம் MP விளக்கம் 

பாராளுமன்ற அமர்வில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் விவாதத்தில் இராணுவத்தினர் எமது தாயக பகுதிகளில் கட்டட உபகரணங்கள் விற்பனை நிலையம் , உணவு நிலையங்கள், மற்றும் சிகை அலங்கார நிலையங்களை நடாத்திவருகிறார்கள் என்றும் அவர்களால் ஈட்டப்படும் வருமானங்களை யார் ஈட்டிக்கொள்ளுகிறார்கள் என்ற கேள்வி  தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ  செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் முன்வைக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த கெளரவ அமைச்சர் விமல் ரத்நாயக்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் அவர்களும் வன்னியில் ஒரேயொரு சிகை அலங்கார நிலையம் மட்டும் இராணுவத்தால் கையாளப்பட்டு வருவதாக கூறியிருந்தனர்.

அவர்களின் கூற்று உண்மைக்கு புறப்பானதாக காணப்படுவதுடன் சிகை அலங்கார சங்கங்களின் சம்மேளனம் எமது தாயக பகுதிகளில் எங்கெங்கே இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டுவரும் விற்பனை நிலையங்கள் தொடர்பாகவும் அவை அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கை என்பன அடங்கலான முழுமையான தரவுகளை வழங்கியுள்ள நிலையில் மேற்படி தரவுகள் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களால் அமைச்சர் கெளரவ விமல் ரத்நாயக்க அவர்களுக்கு அவசர கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

முகநூலில் பிழைப்பு நடத்தும் ஜந்துக்கள் ஆதாரம் இருந்தால் நீதிமன்றம் செல்லுங்கள்-ரெலோ

இணையவழி ஊடக வாயிலாகவும், போலியான முகநூல் கணக்கினூடாகவும், யூடியுப் ஊடாவும் சட்டத்தை கையில் எடுத்து என்னைப்பற்றி தவறான செய்தியை வெளியிடுவது எனக்கு பாரதூரமான களங்கத்தை ஏற்படுத்துகிறது. உண்மையற்ற, ஆதாரமற்ற பொய்யான இச்செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் இவ்வாறான செயல் எனது பாரளுமன்ற சிறப்புரிமையை மீறும், அவமதிக்கும் நடவடிக்கையாக உள்ளதால் இதுதொடர்பில் கவனத்தில் எடுத்து எனக்கு நீதி வழங்க வேண்டுமென தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் வலியுறுத்தினார்

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (13) நடைபெற்ற அமர்வின் போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

என்னைப் பற்றிய உண்மைக்குப் புறம்பான செய்திகளை, இணையவழி ஊடக வாயிலாகவும், போலியான முகநூல் கணக்கினூடாகவும், யூடியுப் ஊடாவும் எனது பெயருக்கும், பதவிக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் கடந்த சில வாரங்களாக சில தனி நபர்களாலும் ஐ.பி.சி எனப்படும், ஊடகத்தாலும் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.

தற்கொலை செய்து இறந்த ஒருவரது மரணத்தை என்னுடன் சம்பந்தப்படுத்தி, கொலை செய்யப்பட்டார் என பொய்ப் பிரசாரம் செய்யப் படுகிறது.மேலும் பொய்யான தனித்தனியாக, துண்டு துண்டாக பதிவு செய்யப்பட்ட தொலை பேசி உரையாடல் குரல் பதிவுகளை, வெட்டியும் ஒட்டியும் திரிபு படுத்தியும் தவறாக சித்திரித்தும் எனக்கு எதிராக பயன்படுத்தி போலி முகநூல்களில் பரப்பபட்ட செய்திகளை ஆதாரமாகக் கொண்டு முகநூல்களில் பதிவேற்றியமையால் எனது கௌரவத்திற்கும், தனிப்பட்ட மரியாதைக்கும், நம்பிக்கைக்கும் பொது மக்கள் மத்தியிலும், அரசியல் பரப்பிலும்,சர்வதேச மட்டத்திலும் பங்கம் விளைவிப்பதோடு தவறான தோற்றப்பாட்டையும் ஏற்படுத்துகிறது. இதனால் நான் பெரிதும் மன உளைச்சலுக்கும் துன்பத்துக்கும் ஆளாகியுள்ளேன்.

யாழ்ப்பாணம் நகரத்தில், பருத்தித்துறை வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இயங்கி வரும் பிரித்தானிய, லண்டன் நகரை பதிவாக கொண்ட, இணையவழி ஊடகம் சில தனி நபர்களை அழைத்து எனக்கு எதிரான மேற்கூறிய கருந்துக்களை ஒளிப்பதிவு செய்து வெளியிட்டுள்ளது

இவ்வூடகத்திற்கு பாதுகாப்பு தரப்பினால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். அனுமதி இல்லாமல் இந்த ஊடகம் இயங்குகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது.அத்துடன் காலைக்கதிர் எனும் இணையவழி மஞ்சள் ஊடகம் 11-11-2025 வெளியிடப்பட்ட வெளியீட்டில் எனது பெயரைக் குறிப்பிட்டு நான் கைது செய்யப்படுவது உறுதி என செய்தி வெளிட்டுள்ளனர்.

இவ்வாறான பொய்யான தகவல்கள் பாராளுமன்ற சிறப்புரிமையினை (பாராளுமன்ற சிறப்புரிமை அதிகார சட்டம் ) சட்டத் 22 (2) பிரிவினை மீறும் செயற்பாடாகும் இவ்வாறான சட்டமீறல் குற்றவியல் தண்டனைகோவை சட்டத்தின் 90 ஆவது பிரிவினை மீறுகிறது என்பதனையும் அதனமூலம் மேல் நீதிமன்றத்தில் தண்டனை வழங்க வேண்டிய குற்றமாகும்.

இவர்கள் சட்டத்தை கையில் எடுத்து தவறான செய்தியை வெளியிடுவது பாரதூரமான களங்கத்தை எனக்கு ஏற்படுத்துகிறது உண்மையற்ற,ஆதாரமற்ற பொய்யான இச்செய்திகளை வேண்டுமென்றே பரப்பும் இவர்களின் செயல் எனது பாரளுமன்ற சிறப்புரிமையை மீறும், அவமதிக்கும் நடவடிக்கையாக உள்ளதால், மேற்படி விடயத்தினை சிறப்புரிமை குழுவிற்கு ஆற்றுப்படுதி எனக்கு நீதி வழங்குமாறு வேண்டிக் கொள்கிறேன் என்றார்.

Posted in Uncategorized

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்-ரெலோ தலைவர் செல்வம் MP

பொருளாதார நெருக்கடியில் மீட்சிப் பெற்று, மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. பயங்கரவாத தடைச் சட்டத்தை அமுல்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியில் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (12) நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நான்காம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

2025ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை அவதானிக்கும்போது இந்த வருடத்தின் கடைசி நேரத்தில்தான் அபிவிருத்தி தொடர்பான வேலைத்திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றது. எங்களின் அதிகாரிகள் அந்த நிதியை திருப்பி அனுப்பி விடக்கூடாது என்று இரவு பகலாக ஓடி உழைத்துக்கொண்டிருக்கின்றனர். இதனால் கடந்த வரவு செலவுத் திட்டத்தை நல்ல வரவு செலவுத் திட்டமென அறிவித்தமை பிழையானது என்பதனை நான் உணர்ந்துகொள்கின்றேன்.

ஏனென்றால், வருடத்தின் கடைசி காலப்பகுதி மழைக்காலம் என்பதனால் எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க முடியாத நிலைமை காணப்படுகிறது. இதனால் 2026ஆம் ஆண்டு வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்த முயலும்போது பல்வேறு விடயங்கள் முதலில் கையாளப்பட வேண்டும் என்பது எமது ஆலோசனையாகும்.

வனஜீவராசிகள் தொடர்பான பிரச்சினைகள் பாரிய பிரச்சினையாக உள்ளது. ஏதேனும் விடயத்தை எங்கள் பிரதேசத்தில் செய்ய வேண்டும் என்றால் அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அபிவிருத்திக்கு கூடுதாலான பணத்தை ஒதுக்கினாலும் அந்த அபிவிருத்தி தடைபடுகின்றது என்றால் வனஇலாகா திணைக்களமும் அதற்கு காரணமாகும்.

பாரியளவிலான விவசாய காணிகளை அந்த திணைக்களம் கைப்பற்றி வைத்திருக்கின்றது. இது தொடர்பில் அபிவிருத்தி குழு கூட்டத்திலும் குறிப்பிட்டுள்ளோம். ஒவ்வொரு அரசாங்கத்திலும் இதுவே நடக்கின்றது. வீட்டுத் திட்டம்,விவசாயிகளுக்கான அபிவிருத்தி திட்டங்கள் என்பன இந்த திணைக்களங்களால் தடைப்படுகின்றது. அரசாங்கம் தனது கட்டுப்பாட்டில் இதனை வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். இந்த திணைக்களம் தனியான அரசாங்கம் போன்று செயற்படுகின்றது. எதற்கும் அடங்குவதாக இல்லை. எவ்வளவு நிதியை ஒதுக்கினாலும் இந்த திணைக்களங்களில் மிக மோசமான செயற்பாடுகளால் அந்த அபிவிருத்திகள் நடக்காது.

அபிவிருத்தியில் நாங்கள் இப்போதுதான் முன்னேறி வருகின்றோம். எமது அயல் நாடான இந்தியா நிதியை வழங்க முனைகின்ற போது ஏன் அதனை தடுக்கின்றீர்கள். பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையம் என்ற தரத்திற்கு கொண்டு வர ஏன் மறுக்கpன்றீர்கள். காங்கேசன்துறை கப்பல்துறை முயற்சியை ஏன் மறுக்கின்றீர்கள்.

தலைமன்னாரில் இருந்து இராமேஸ்வரம் செல்லும் கப்பல் போக்குவரத்து சேவை திட்டத்தை ஏன் தாமதப்படுத்துகின்றீர்னள். சுற்றுலாத்துறையே எமது நாட்டுக்கு கைகொடுக்கின்றது. இந்த விடயத்தில் எமக்கு உதவுவதற்கு இந்தியா வருகின்ற போது வடக்கு என்ற காரணத்தால் அதனை நிறுத்துகின்றீர்களா? .இந்த விடயத்தை இனம் சார்ந்த விடயமாக பார்க்கின்றீர்களா? இந்தியா தனது உதவியை நீட்டுகின்ற போது கைபிடித்து பொருளாதார நிலைமையை ஏற்படுத்துவதே சரியாக இருக்கும் இந்த விடயத்தில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என்று கோருகின்றேன்.

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாங்கள் மேம்பட வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்போதே எமது முதலீட்டாளர்கள் வருவார்கள். அவர்கள் முதலீடு செய்யும் போது பயங்கரவாத தடைச்சட்டம் இருக்குமாக இருந்தால் அந்த முதலீடு எப்படி வந்தது அது விடுதலைப் புலிகளின் பணமா? என்று விசாரிக்கலாம் என்பதனால் எவரும் வருவதற்கு அச்சப்படுகின்றனர். நாட்டை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டுமென்றால் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும். இதனை நீக்குவதாக அரசாங்கம் குறிப்பிட்டாலும் ஒரு வருடம் கடந்தும் இன்னும் அந்த விடயத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. இதனை செய்யாவிட்டால் பொருளாதாரம் முன்னேற்றமடையாது என்றே கூற வேண்டும் என்றார்.

Posted in Uncategorized

கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விசேட சந்திப்பு!

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் ரெலோ தலைவருமான வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று 05-11-2025 புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சின் காரியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் தலைமன்னார் பியர் மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும், தாழ்வுபாடு மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகளும் மன்னார் பிரதேச சபை உபதவிசாளர் திருமதி றொயிற்றன் சாந்தினி அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

நுண்பாகநிதி நிறுவனங்களின் அத்துமீறல், அடாத்து வட்டியாளர்களுக்கு எதிராக அவசர அவசர தீர்மானம் வலி கிழக்கில் நிறைவேற்றம்

நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகளையும் அடாத்தான வட்டிக்கு நிதி வழங்குபவர்களையும் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஒக்டோபர் மாத அமர்வு தவிசாளர் தியாகராஜா நிரோ~; தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இதில் அவசர நடவடிக்கைக்கான பிரேரணையாக சபையின் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் மேற்படி பிரேரணை முன்வைக்கப்பட்டது.

கடந்த சபையில் நுண்பாக நிதி நிறுவனங்களின் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பாக அவரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட கிராமங்கள் தோறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதன் மூலம் நிதிநிறுவனங்கள் சட்டம் ஒழுங்கு அந்நிறுவனங்கள் வரையரைக்குப் புறம்பாக செயற்படுவது நீண்ட முயற்சியினால் மட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

தற்போதைய நிலையில் மீளவும் கிராமங்கள் தோறும் நுண்நிதிக்கடன் வழங்குனர்கள் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை இலக்கு வைத்து வீடு வீடாகச் சென்று நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இவ்வாறாக ஈடுபடுவதன் வாயிலாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நாட்டின் நடைமுறையில் உள்ள நிதி சார் சட்டம் ஒழுங்குகளின் வாயிலான கடப்பாடுகளை பூர்த்திசெய்யாது அவற்றினை அந் நிறுவனங்கள் மீறிவிடுகின்றனர். இதனால் பெரும் இன்னல்களுக்குள் கிராமப்புறப் பெண்கள் தள்ளப்பட்டு விடுகின்றனர். பிரதேச சபை நடைமுறையில் செயற்படும் நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை கிராமங்களுக்குள் கண்காணிக்க வேண்டும். அவற்றின் அத்துமீறல்கள் தொடர்பாக உடன் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என சபை உறுப்பினரின் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது. மேலும் மீற்றர் வட்டியாளர்களை சட்டத்தின் முன்நிறுத்தவும் வேண்டும். இந் நடவடிக்கைகளை தன்னால் கடந்த சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தவேண்டும் எனவும் உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

இவ்விடயத்தில் உடனடி இடர்நிலையாகக் கருதி பிரதேச சபை உச்ச அளவில் செயற்படாவிடில் அப்பாவிகளை பாதுகாக்க முடியாதுபோகும் என்பதுடன் அநியாயமாக பலர் தவறானமுடிவுகளைக்கூட எடுக்கத்தள்ளப்படும் நிலை ஏற்படும். உடனடியாக இத் தீர்மானத்தினை முன்கொண்டு செல்லத்தக்க செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த உறுப்பினர் ஐங்கரன் இராமநாதனால் கோரப்பட்டது.

இத் தீர்மானத்தின் மீது உப தவிசாளர் ஜனார்த்தனன் உரையாற்றுகையில் மக்கள் தெளிவின்றி ஆடம்பரத்தேவைகளுக்காக முறைகேடான கடன்களைப் பெற்று பாரிய இடருக்கள் இகப்பட்டுள்ள நிலையில் அதுதொடர்பில் உடனடி நடவடிக்கைகளுக்காக சகல தரப்புக்களும் ஒன்றினைய வேண்டும் என்றார்.

இந் நிலையில் இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில் விரைவான செயற்றிட்டங்களை வகுத்து செயற்படுத்தவதற்கான ஒழுங்களை கடந்த காலத்தில் இச் சபையில் மேற்கொள்ளப்பட்டமை போன்று தற்போதைய சபையில் முன்வைக்கப்பட்டுள்ள மேலதிகத் தீர்மானத்தினையும் அடிப்படையாகக் கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ அறிவித்தார்.

Posted in Uncategorized

ஆளும் கட்சி என்ற அதிகாரத்தில் உள்ளராட்சி சட்டங்களை மீறிவிட முடியாது இருபாலையில் தேசிய மக்கள் சக்திக்கும் தவிசாளருக்கும் இடையில் தர்க்கம்

உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களையும் சட்டத்தினையும் நாட்டின் ஆளும் கட்சி என்றவகையில் அரசாங்கத்தில் உள்ளவர்கள் மீறிவிட அனுமதிக்க முடியாது என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

இருபாலைச் சந்தியில் பேருந்து தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்காக பிரதேச சபையிடம் விண்ணப்பித்துவிட்டு அவ் விண்ணப்பத்தினை பரிசீலிப்பதற்காக பிரதேச சபை வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் போக்குவரத்துசபை போன்ற திணைக்களங்களின் பரிந்துரையை பெற்றத்தரக் கோரியிருந்த நிலையில், இருபாலைச் சந்தியில் சந்தியில் குறித்த பேருந்து நிலையத்தினை ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரஜிவன் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் உள்ள10ராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றம் சிலர் திறந்து வைத்தனர்.

இந்நிலையில் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலர் தவிசாளரைத் தொடர்பு கொண்டு மேற்படி தரிப்பிடத்திற்று சட்டப்படியாக தங்களினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளதா எனக் கேள்வி எழுப்பினர். இதனைத்தொடர்ந்து தவிசாளர் விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகத் தெரிவித்துடன் அவ்வாறாக சட்டப்படியான அனுமதியற்ற விடயத்தில் சட்டம் ஒழுங்கு சகலருக்கும் சமன் என்ற அடிப்படையில் தான் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.

தவிசாளரினால் தரிப்பிடத்தின் பெயர்ப்பலகையினை சேதமற்ற வகையில் அகற்றுவதுடன் உடனடியாக சபையினைத் தொடர்புகொண்டு உரிய அனுமதியை பெற்றக்கொள்ளுமாறு அறிவித்தல் ஒட்டுவதற்கு பணிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்தில் ஒன்று கூடிய தேசிய மக்கள் சக்தியின் பிரதேசசபையின் உறுப்பினர்களான சி.சுகிர்தரூபன்,சிகஜீபன் தாம் வீதிஅபிவிருத்தி அதிகாரசபையில் அனுமதிபெற்றதாகவும் தவிசாளர் அரசியல் காரணங்களுக்காக செயற்படுகின்றார் எனவும் வாக்குவாதப்பட்டனர். தவிசாளருடன் நின்றிருந்த உறுப்பினர் அ.கமலறேகனுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்விடத்தில் தவிசாளர் விட்டுக்கொடுப்பின்றி பெயர்பலகையினை சேதாரமன்றி அகற்றுமாறும் அனுமதியை சபை வழங்கும் வரையில் காட்சிப்படுத்தமுடியாது கூறி அகற்றவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் குறித்தபேருந்து நிலையத்தினை ஞாபகமாக சமர்ப்பணம் செய்யப்பட்டவரின் மகன் தவிசாளரிடம் தனது தந்தையின் ஞாபகமாகவே அமைக்கப்பட்டதாகவும் தன் இவ்வாறான நடைமுறைகளை அறிந்திருக்கவில்லை எனவும் தனது இறந்த தந்தை தொடர்பான தமது குடும்பத்தின் மனிதாபிமானக் காரணத்தினை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை ஒத்திவைக்கக்கோரினார். மேலும் தாம் உடனடியாக அனுமதித்தேவையினை முறைப்படி பூர்த்திசெய்யும் வரையில் அவகாசம் அளிக்கக் கோரியதுடன் அதற்காக கடிதம் வழங்க சம்மதிக்கப்பட்டதனையடுத்து பிரதேச சபையின் அனுமதியற்ற கட்டிடத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன.

இவ்விடத்தில் நாட்டில் அதிகாரத்தில் உள்ளவர்கள் உள்ள10ராட்சி மன்றங்களின் சட்டம் ஒழுங்குகளை மீறிவிட அனுமதிக்கமுடியாது. அவர்களுக்கு உள்ளுராட்சி மன்றவிடயங்களில் புரிதல் கிடையாது ஆயின் அதற்கு ஆலோசகர்களை நியமித்து செயற்பட முடியும். நாட்டில் ஆட்சியில் உள்ளனர் என்பதற்காக சட்டம் ஒழுங்கை யாரும் வளைத்துப்போடக்கூடாது. எவருக்கும் மனிதாபிமானக்காரணங்களைத் தவிர எமதுசபையின் சட்டம் ஒழுங்கு ஒரே விதமாகவே காணப்படும் என தவிசாளர் தியாகராஜா நிரோஷ; தெரிவித்தார்.

தமிழர்க்கு எதிரான இனப்படுகொலையை எடுத்தியம்பும் ஆதாரங்களை நாம் இனமாகப் பாதுகாக்கவேண்டும் – தவிசாளர் நிரோஷ் கோரிக்கை

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாரதுரமான இனப்படுகொலைக்கான சாட்சியங்களை வரலாற்றாக்கும் வகையில் அமையப்பெற்ற நினைவு இடங்களை நாம் பாதுகாப்பது அவசியம். அவற்றை பாதுகாப்பதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

செம்மணியில் அமையப் பெற்ற அணையா விளக்கு நினைவு தூபி உடைக்கப்பட்ட நிலையில் அதனை மீளமைக்கும் முயற்சிகளில் ஒத்துழைப்பு நல்கிய நிலையில் ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும், செம்மணி என்பது தமிழ் மக்களுக்கு எதிராக எவ்வளவு தூரம் உள்நாட்டில் இனப்படுகொலை நடைபெற்றது என்பதை சர்வதேச அளவில் ஆதாரப்படுத்தி நிற்கின்றது. அணையா விளக்கு போராட்டம் இடம்பெற்ற இடம் மற்றும் இவ் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ள பகுதி என்பன யாழ் குடாநாட்டை இலங்கை அரச படைகள் கைப்பற்றிய பின்னர் அரச படைகளால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிரிசாந்தி குமாரசுவாமியின் உடலம் மற்றும் பிள்ளையை தேடிச்சென்ற பெற்றோர் அயலவர் என நீதி கேட்ட பலரும் படுகொலை செய்யப்பட்டு மீட்கப்பட்ட பகுதி ஆகும். இவ்விடத்திலேயே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையர் வேல்கர் அவர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் மீது வடக்குக் கிழக்கில் அரசினால் கட்டவீழ்த்து விடப்பட்ட அரச பயங்கரவாதத்தின் சாட்சியங்கள் அபிவிருத்தி என்ற போர்வையில் பல இடங்களில் திட்டமிட்டு மாற்றியமைக்கப்பட்டுவிட்டன. மேலும் சில இடங்கள் தனிநபர்களாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. இப்போது தமிழ் மக்களுக்கு அரச பயங்கரவாதத்தினால் எதுவுமே நடக்கவில்லை என சொல்வதற்கான உத்திகளே நடைபெறுகின்றன. இவற்றில் தமிழ் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்க வேண்டும. எமக்கெதிரான அடக்குமுறைகளை ஆவணப்படுத்துவதிலும் பாதுகாப்பதிலும் நாம் அவதானமாக இருக்கவேண்டும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொண்டமானாறு உவர்நீர்த் தடுப்பணையால் வெள்ளப்பாதிப்பனை எதிர்கொள்வோருக்கு தீர்வு முன்வைக்கப்படவேண்டும் – ஆளுநரிடம் தவிசாளர் நிரோஷ் கோரிக்கை

தொண்டமனாறு உவர்நீர்த் தடுப்பணைத் திட்டத்தினை நாம் வரவேற்கின்றோம். அதேயிடத்தில் இத் திட்டத்தினால் வருடாவருடம் வெள்ளப் பாதிப்பை எதிர்கொள்ளும் மக்களை காப்பாற்றுவதற்கான நிலைத்தகு திட்டத்தினை மாகாண நிதி ஒதுக்கீடுகளுக்குள்ளாகவோ அல்லது சர்வதேச தாபனங்களின் ஒத்துழைப்புடனோ நிறைவேற்றமாறு என வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகத்திடம் ரெலோ வின் தலைமை குழு உறுப்பினரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளருமான தியாகராஜா நிரோஷ் கோரிக்கை விடுத்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த உள்ளுராட்சி மன்றத் தலைவர்களுக்கம் ஆளுநர் நா. வேதநாயகம் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பிலேயே வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மேற்படி கோரிக்கையினை முன்வைத்தார்.

அவர் மேலும் யாழ். மாவட்டத்தில் நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கான பெரும் அர்ப்பணிப்பினை வலிகாமம் கிழக்குப் பிரதேசமே மேற்கொள்கின்றது. தொண்டமானாறு மற்றும் செம்மணி நீரேரிகள் எமது ஆட்சிப் பகுதிக்கு உட்பட்டவை. நிலத்தடி நீரைப்பாதுகாப்பதற்கான உவர் நீர்த்தடுப்புத் திட்டம் இங்கு செயற்படுத்தப்படுவதனால் எமது மக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வெள்ளப்பாதிப்பினை எதிர்கொள்கின்றார்கள். அவ்வாறாக மக்கள் பாதிக்கப்படும் போதும் மக்களை நாம் நிலத்தடி நீர்ப்பாதுகாப்புத் திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக பாதிப்புக்களை சகித்துவாழ பல அரச கட்டமைப்பு கோருகின்றது.

நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டத்துடன் இணைந்த உப திட்டங்கள் வகுக்கப்பட்டு அதன்வாயிலாக மக்களை வெள்ளப்பாதிப்பில் இருந்து நாம் பாதுகாக்கவேண்டும். அவ்வாறான திட்டங்கள் நிலைத்தகு சிந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்படும் போது மக்கள் எதிர்கொண்டுள்ள வெள்ளப்பாதிப்பிற்கு தீர்வு காணலாம். ஒவ்வொரு வருடமும் அச்சுவேலி வடக்கு, அச்சுவேலி தெற்கு, ஆவரங்காலின் ஒருபகுதி, வாதரவத்தை, புத்தூர் கிழக்கு என வலிகாமம் கிழக்குப் பிரதேசத்தின் பல பகுதி வெள்ளப்பாதிப்பிற்கு உள்ளாகின்றது. இதில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடர் நிலையை எதிர்கொள்கின்றனர்.

இவ்வாறான நிலையில் மாகாண சபை கூட தனது குறித்தொதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் கீழ் மேற்படி மக்களுக்கு சிறந்த திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தி மக்களின் பாதிப்புக்களைக் குறைக்கலாம். அதற்கு ஏனைய உள்ளுராட்சி மன்றங்களும் தமது பகுதிக்கும் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் திட்டம் நன்மையளிக்கின்றது என்ற அடிப்படையில் நிதிகள் மாகாண மட்டத்தில் பகிரப்படும் போது விட்டுக்கொடுப்புக்களைச் செய்யமுடியும். மேலும் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச கொடையாளர்களிடம் மேற்படி உவர் நீர்த் தடுப்பணை நன்னீர்த்திட்டத்தினை பேணுவதனால் பாதிக்கப்படும் மக்களுக்கான பாதிப்பை நிவர்த்தி செய்யத்தக்க திட்டத்தினை மேற்கொள்ள நிதி கோரிக்கையினை ஆளுநர் அவர்கள் முன்வைக்க வேண்டும் என தவிசாளர் நிரோஷ் கோரிக்கை விடுத்தார்.

இதனைத்தொடர்ந்து கருத்தரைத்த ஆளுநர் நா.வேதநாயகம் அவர்கள் சர்வதேசத்திட்டங்களில் வாயிலாக பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பதற்கான உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.