மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் இறுதி அடக்க நாளான எதிர்வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், மன்னார் நகர முதல்வருமான ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன் கோரியுள்ளார்.
அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்,
மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் மேதகு கலாநிதி இராயப்பு யோசேப்பு ஆண்டகை அவர்கள் இனம், மதம், மொழி கடந்து மக்களுக்காகக் குரல் கொடுத்தவர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீதியைப் பெற்றுக் கொடுக்கத் தொடர்ந்தும் குரல்கொடுத்தார்.
தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரையும் நேசிக்கும் ஒருமனிதர். ஆன்மீகத்திற்கு அப்பால் மனித நேயத்தை நேசித்தவர். காணாமல் ஆக்கப்பட்டவர், கடத்தப்பட்டவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலைக்காக இறுதி மூச்சுள்ள வரை குரல் கொடுத்தவர்.
இவரது இழப்பு ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் பாரிய இழப்பு. தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமையுடன் துக்க தினத்தை நினைவு கூற வேண்டிய கடற்பாட்டில் உள்ளோம்.
எனவே ஆயர் அவர்களின் இறுதி அடக்க நாளான எதிர் வரும் திங்கட்கிழமை மன்னார் வர்த்தகர்கள் கமது வர்த்தக நிலையங்களை மூடி துக்க தினத்தை அனுஷ்டிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
“அகில உலகமே போற்றுகின்றி வணங்குகின்ற ஓர் ஒப்பற்ற ஆன்மீக தந்தையை நம் நாடு இன்று இழந்திருக்கின்றது. அதிவந்தனைக்குரிய ஆயர் இராயப்புயோசப் ஆண்டகையின் உடலும் உருவமும் பௌதீக இழப்புக்குள் செல்வது இறைவிதி ஆகும். மனிதகுலத்தின் குறிப்பாக தமிழ்தேசிய நெஞ்சங்களில் வியாபித்து நிற்கும் உயிரும் உணர்வும் மௌனிக்க முடியாதது.
போரின் போதும் போருக்குப் பின்பாகவும் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடக்குமுறைகளை நியாயமாக வெளிப்படுத்தும் நடுநிலையாளராக மறைந்த ஆயார் அதிமேதகு இராஜப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் செயற்பட்டார்.