சீனா வழங்கியுள்ள தடுப்பூசியை பயன்படுத்தக்கூடாது – மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

சீனா வழங்கிய கொரோனாவைரஸ் தடுப்பூசியை இலங்கைமக்களிற்கு வழங்க கூடாது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிததுள்ளனர்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள 600,000 கொரோனா வைரஸ் தடுப்பூசியை வழங்குவது குறித்து அரசமற்றும் தனியார்துறையை சேர்ந்த சிரேஸ்ட மருத்துவ நிபுணர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை சீனாவின் தடுப்பூசி குறித்தும் அதற்கு அவசர அனுமதியை வழங்கலாமா என்பது குறித்தும் ஆராய்வதற்காக நிபுணர்கள் குழுவை நியமித்தது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும் அந்த குழு சீனாவின் தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் போன்றவை குறித்து உறுதி செய்வதற்கான போதுமான தரவுகள் இல்லை என தெரிவித்துள்ளது என மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் இலங்கையில் சீனாவின் தடுப்பூசியை தற்போதைய சூழ்நிலையில் பயன்படுத்தகூடாது என தீர்மானிக்கப்பட்டது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை சுகாதார கொள்கைகள் குறித்த நிறுவகத்தின் இயக்குநர் வைத்தியர் ரவீந்திர ரனஎலிய சீனாவின் தடுப்பூசி போதுமான தகவல்களை கொண்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார். நான் அதனை உள்நாட்டு பாவனைக்கு அனுமதிக்கமாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

சர்வதேச நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி தடம்புரளாத பயணம்

இன்று பலர் நாட்டிலும் புலத்திலும் எம்மக்களின் பிரச்சனையை தாமேதான் ஐநாவுக்கு அதுவும் 2009 இற்கு பின்னர் எடுத்துச் சென்றதாக அறைகூவல் விடுக்கிறார்கள்.

ஆனால் 1984 ஐப்பசி மாதம் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனவழிப்பு நடைபெறுகிறது என்பதை ஐநா செயலாளர் நாயகத்திற்கு அறிக்கையிட்டதோடு ஆதாரங்களோடு நேரடி சந்திப்புக்கான கோரிக்கையையும் அனுப்பி வைத்தது.

மறைந்த, ஒப்பற்ற தமிழ் தேசியத்தின் தலைவன் சிறிசபாரத்தினம் ஐநா செயலாளர் நாயகத்திடம் முன்வைத்த கோரிக்கை முரசொலி பத்திரிகையில் ஆதாரமாக….

தொடர்ந்தும், இன்றும் ரெலோ அதில் உறுதியாகவே உள்ளது ,

2019 பங்குனியில் சர்வதேச நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் கோரியது

2021 மாசி மாதம் பிரித்தானிய வெளியுறவு செயலகத்திடம் பூச்சிய வரைபை பலப்படுத்திய பிரேரணை ஆக்குமாறு வலியுறுத்தியது

தொடர்ந்தும் எம்மக்களின் நீதி, அரசியல் தீர்வு, மற்றும் நிலையான பொருளாதாரக் கட்டமைப்புக்காய் போராடும்

சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
ஊடக வாரியம்
தமிழ் ஈழ விடுதலை இயக்கம்- ரெலோ
தமிழ் தேசியக் கூட்டமைப்பு

புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னரே மாகாண சபை தேர்தல் – உதய கம்மன்பில

மாகாணசபை தொடர்பான புதிய சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர் தேர்தல் நடத்தப்படும். அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சட்டமூலம் குறித்து அமைச்சர்களால் வேறுபட்ட நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளமையால், கட்சி தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்தாலோசித்து இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை இணை பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை இணையவழியூடாக நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில் ,

மாகாணசபைத் தேர்தல் முறைமையில் திருத்தங்களை முன்னெடுப்பதற்கான சட்டமூலம் நேற்று (திங்கட்கிழமை) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது வரையில் மாகாணத்தில் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொண்ட கட்சிக்கு இரு போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும். எனினும் ஸ்திரமான மாகாணசபைகளை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு , ஒரு மாகாணத்தில் மாவட்டமொன்றுக்கு வழங்கப்படும் போனஸ் ஆசனங்களை இரண்டாக அதிகரிப்பதற்கு புதிய சட்டமூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதற்மைய 3 மாவட்டங்கள் காணப்படுகின்ற மாகாணங்களுக்கு , உதாரணமாக மேல் மாகாணத்தை எடுத்துக் கொண்டால் இரு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 6 ஆசனங்கள் கிடைக்கப் பெறும். அதே போன்று இரு மாவட்டங்களைக் கொண்ட வடமத்திய மாகாணத்திற்கு இரு போனஸ் ஆசனங்களுக்கு பதிலாக 4 ஆசனங்கள் கிடைக்கப் பெறும். இதன் மூலம் ஸ்திரமானதொரு மாகாணசபையை உருவாக்குவதற்கான வாய்ப்பு கிடைக்கப் பெறும்.

அதேபோன்று ஸ்திரமான மாகாணசபையை ஸ்தாபித்தல் , பிரதேசத்திற்கு பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களை நியமித்தல் ஆகிய இரு காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு , 70 வீதம் தொகுதிவாரி முறைமையினடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார முறைமையினடிப்படையிலும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு குறித்த சட்ட மூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஒரு தொகுதியில் ஒரு கட்சியிலிருந்து 3 வேட்பாளர்களை நியமிப்பதற்கும் இந்த சட்ட மூலத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த காரணி தொடர்பில் அமைச்சர்கள் மத்தியில் வெவ்வேறு நிலைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. இவ்வாறு வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையால் இது தொடர்பில் கட்சி தலைவர் கூட்டத்தில் கலந்தாலோசித்து இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவால் தீர்மானிக்கப்பட்டது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படும் பல கட்சிகள் அமைச்சரவையை பிரதிநிதித்துவப்படுத்துபவையல்ல. எனவே தான் கட்சி தலைவர் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி தீர்மானம் எடுப்பதற்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார் என்றார்.

நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்பு; நாட்டின் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுப்பு

நுண்கடன் நிதி நிறுவனங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாட்டின் சில பகுதிகளில் இன்று ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

முல்லைத்தீவு , புதுக்குடியிருப்பில் நுண்கடன் நிதி நிறுவனங்களைக் கண்டித்து கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வட மாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்பாக ஆரம்பமான கவனயீர்ப்புப் பேரணி, புதுக்குடியிருப்பு நகரினை சென்றடைந்ததுடன்,
நுண்கடன் தொடர்பிலான விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பகிரப்பட்டன.

இதேவேளை, நுண்கடன்களால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நுண்கடனுக்கு எதிராக கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

முழங்காவில் சந்தியில் இன்று காலை ஆரம்பமான போராட்டம் ஒரு மணித்தியாலம் வரை முன்னெடுக்கப்பட்டதுடன், முழங்காவில் பாடசாலை வரை பேரணியொன்றும் இடம்பெற்றது.

நுண்கடனால் அல்லலுறும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

நாடளாவிய ரீதியில் நுண்கடன் நெருக்கடிக்குள்ளாகியுள்ள சுமார் 28 இலட்சம் பெண்களை அதிலிருந்து மீட்க வேண்டுமென இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.

மட்டக்களப்பு , செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கித்துள் பகுதியிலும் நுண்கடனுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் அரசசார்பற்ற நுண்கடன் நிதி நிறுவனங்கள் அதிக வட்டியுடன் வழங்கும் நுண்கடன் திட்டங்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதாகவும் இதன்போது கோஷம் எழுப்பப்பட்டது.

Posted in Uncategorized

நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறுத்தும் அளவிற்கு இந்த மண் மாபியாக்கள் செயற்படுகின்றன -ரெலோ செயலாளர் நாயகம் கோ.கருணாகரம்

சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாடுகள் எதிர்காலத்திலும் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கத்தியான நிலைக்குள் தள்ளப்படும் என தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார். கோவிந்தன் கருணாகரம் ஜனா, நாடாளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறுத்தும் வகையில் மண் மாபியாக்கள் நடந்து கொள்கின்றார்கள் என்று தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாங்கள் வேப்பவெட்டுவான் பிரதேசத்தில் மீண்டும் இராஜாங்க அமைச்சருடன் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம். அன்று குளம் போல் காட்சியளித்த பகுதி இன்று நிரப்பப்பட்டிருக்கின்றது.

அதற்கு மண் எங்கிருந்து வந்ததென்றால் அதனைச் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களையே அச்சுறத்தும் முகமாக மீண்டும் மீண்டும் இந்த மண் மாபியாக்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

மேற்படி பிரதேசங்களில் தான் கொடுத்த அனுமதியை மீறி மண் அகழ்வு சட்டத்திற்கு விரோதமாக இடம்பெற்றிருப்பதாக புவிச்சரிதவியல் திணக்கள அதிகாரி கூடச் சொல்லுகிறார். இங்கு களவிஜயம் மேற்கொண்ட எந்த அதிகாரியும் விரும்பத்தக்கதான செயலாக இச்செயல் பார்க்கப்படவில்லை.

அதுமாத்திரமல்லாமல் இந்தப் பிரசேத்து விவசாயிகள் கூட மிகவும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் இதற்கு ஒரு தீர்க்கமான முடிவு இராஜாங்க அமைச்சரின் தலைமையிலே எடுக்கப்படும் என்று நான் நினைக்கின்றேன்.

அத்துடன் மட்டக்களப்பிற்கு சில அமைச்சர்கள் வருகை தந்து கூட்டம் நடாத்த இருக்கின்றார்கள். அதிலும்கூட நாங்கள் இந்த விடயங்கள் தொடர்பில் பேச இருக்கின்றோம்.

எதிர்காலத்திலே இவ்வாறான வேலைகள் தொடர்ந்து நடக்குமாக இருந்தால் எமது மாவட்டம் நிர்க்கத்தியான நிலைக்குள் தள்ளப்படும் என்பதே உண்மை. எனவே இதனை அனைவரும் இணைந்து இதற்கான நிரந்தர முடிவினை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Posted in Uncategorized

மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

மன்னாரில் வீட்டு திட்டங்களுக்கு வழங்கப்படவேண்டிய நிலுவைப் பணத்தை வழங்குமாறு கண்டன ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவினால் தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வழங்கப்பட்டிருந்த வீட்டு திட்டங்களுக்கு ஆரம்ப கட்ட நிதி மாத்திரம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மக்கள் கடன்பட்டு தங்களுடைய நகைகளை அடகு வைத்தும் வீடுகளை கட்டி முடித்திருந்தார்கள்.

சில வீடுகள் கட்டி முடிக்கப்படாமல் இருக்கின்றது ஆட்சி மாற்றத்தின் பின் அந்த மக்களுக்கான மீதி பணம் வழங்கப்படவில்லை.

அதனால் நிலுவையில் உள்ள பணத்தை வழங்க கோரி பாதிக்கப்பட்ட மக்களால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

நேற்று (30-03-21)காலை 9.30. மணி அளவில் மன்னார் நகர சபை மைதானத்தில் ஆரம்பமாகிய இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது மன்னார் பொது வைத்தியசாலை ஊடாக மன்னார் மாவட்டச் செயலகத்தை வந்தடைந்து.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவபாலன் குணபாலன் அவர்களிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களுக்கான மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ செல்வம் அடைக்கலநாதன் மற்றும் ,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைமை குழு உறுப்பினரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கெளரவ வினோ நோகராதலிங்கம் அவர்களும் , நகரசபை பிரதேச சபை உறுப்பினர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ, மற்றும் பணியாளர்கள் சமூக அமைப்புகள் வீட்டுத் திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் என்று பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

போர்க் குற்றவாளிகள் மீது பயணத் தடை – சர்வதேச விசாரணை! கனடாவின் பிரதான எதிர்க்கட்சி

கனடாவின் உத்தியோகபூர்வ எதிர் கட்சியான கன்சவேட்டிவ் கட்சி சிறீலங்காவில் பாரிய மனித உரிமைக் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனேடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது.

கனடாவில் நடைமுறையில் உள்ள மக்கன்சி சட்டவிதிகளின் பிரகாரம் அதனை உடன் செய்யுமாறு வலியுறுத்துகின்றது.

இச்சட்டவிதிகள் சம்மந்தப்பட்டவர்கள் மீதான மேலும் பல நடவடிக்கைகளுக்கும் வலிகோலும் என்பதுவும், இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

கன்சவேட்டிவ் கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான நிழல் அமைச்சர் மைக்கல் சொங்கும்,சர்வதேச அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளுக்கான நிழல் அமைச்சர் கார்னட் ஜீனியசும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த அறிக்கையில்,

தாம் இனப்படுகொலை குறித்த சுயாதீன சர்வதேச விசாரணையை தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்ந்துள்ள அவர்கள் ரூடோ தலைமையிலான லிபரல் அரசு அது குறித்து அமைதி காப்பது குறித்து தமது விசனத்தையும் வெளியிட்டுள்ளனர்.

2019 இல் இறுதியாக நடைபெற்ற கனேடிய பொதுத்தேர்தலுக்கு முன்னர் கனேடியப் பாராளுமன்றத்தில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் தமிழர் இனப்படுகொலை குறித்து சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்த வேண்டும் என ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட பாராளுமன்ற தீர்மானத்தை சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி, அது குறித்து மேலதிக நடவடிக்கைகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

சமீபத்தில் ஜெனீவாவில் சிறீலங்கா குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கடந்த காலங்களை விட முன்னேற்றகரமாக அமைந்தாலும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் மீதான சுயாதீன சர்வதேச விசாரணையையோ அல்லது ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள பல விடயங்களையோ அது உள்ளடக்கவில்லை எனவும் கனேடிய எதிர்கட்சி கரிசனை வெளியிட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் உள்நாட்டில் பொறுப்புக்கூறல் விடயத்தில் எவ்வித முன்னெடுப்புக்களை செய்வதற்கான முறைமைகளையோ, விருப்பையோ கொண்டிருக்கவில்லை என்ற ஆணையாளரின் கூற்றை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் , கோரிக்கைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகளை கனேடிய அரசு முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

சிறீலங்கா அரசு புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீது சமீபத்தில் விதித்துள்ள தடைகள் குறித்து தமது ஆழ்ந்த கரிசனையை வெளியிட்டுள்ள அறிக்கை மனித உரிமையை முன்னேற்ற தொழிற்படும் கனேடிய தமிழர் அமைப்புக்களின் நியாயபூர்வமான விமர்சனங்களை தடைகள் மூலம் எதிர்கொள்வது முறையல்ல எனவும் கடிந்துள்ளது.

சிறீலங்காவில் தற்போது நிலவும் பல நிலைமைகளை தனது அறிக்கையில் குறிப்பிட்டு அவை குறித்து தனது ஆழ்ந்த கரிசனையையும் கனேடிய எதிர்கட்சி வெளியிட்டுள்ளது.

அதில் சமீபத்தில் இடித்தொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவுத்தூபி விடயத்தையும் நினைவு கூர்ந்து, போரில் கொல்லப்பட்டவர்களுக்கான பொதுமக்கள் நினைவு ஒன்றுகூடல்கள் தடுக்கப்படுவது குறித்த கரிசனையையும் வெளியிட்டுள்ளது.

ஐ.நா தீர்மானத்தை கடந்து கனடா உட்பட சர்வதேச சமூகம் தமது அடுத்த கட்ட நடிவடிக்கைகளை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம் என்பதை வலியுறுத்தும் வகையிலான முதல்க் குரலாக கனேடிய எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்சியின் அறிக்கையை கொள்ளலாம் என்கின்றனர் ஈழத்தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

Posted in Uncategorized

ஐ.நா தீர்மானமும் போக்கிரித்தன கணக்கு வழிகொண்ட அரசாங்கத்தின் போக்கும் – பி.மாணிக்கவாசகம்

பொறுப்பு கூறும் விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46-1 பிரேணை தமிழ் மக்களை ஏமாற்றியிருப்பதாகக் கூறப்படுகின்ற அதேவேளை, அரசாங்கமும் அதனை தேவையற்ற ஒன்று என நிராகரித்திருக்கின்றது.

மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்களுக்குப் பொறுப்புகூற வேண்டும். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உறுதியான கோரிக்கை.

தமிழ் மக்களின் நீதிக்கான இந்த கோரிக்கை – ஏக்கம் – 12 வருடங்களாக தொடர்கின்றது. சிறீலங்காவைப் பொறுப்புகூறச் செய்வதற்காக ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இதுவரை 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. 2012 மார்ச் மாதம் 22 ஆம் திகதிய 19-2 ஆம் இலக்கம் கொண்ட தீர்மானம், 2013 மார்ச் மாதம் 21 ஆம் திகதிய 22-1 ஆம் இலக்கத்தைக் கொண்ட தீர்மானம், 2014 மார்ச் மாதம் 27 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 25-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2015 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி கொண்டு வரப்பட்டட 30-1 ஆம் இலக்கத் தீர்மானம், 2017 மார்ச் மாதம் 23 ஆம் திகதி கொண்டு வரப்பட்ட 34-1 ஆம் இலக்கத் தீர்மானம், அதன் பின்னர் 2019 மார்ச் 21 ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட 40-1 ஆம் இலக்கத் தீர்மானம் ஆகிய இந்த 6 தீர்மானங்களினாலும் சிறீலங்காவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

ஏழாவதாக வந்துள்ள 46-1 பிரேரணை முன்னையவற்றைப் போலவே பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை அரசாங்கத்திடமே விட்டுள்ளது. அதனை நிறைவேற்றுவதற்கு வழமைபோலவே கால அவகாசமும் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு அம்சங்களுமே தமிழ்த்தரப்பினருடைய அதிருப்திக்குக் காரணமானவையாக இருக்கின்றன.

அதேவேளை தமிழ்த்தரப்பினால் கோரப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை அல்லது சர்வதேச தீர்ப்பாயம் என்ற விசாரணை பொறி முறையின் கீழ் அரசாங்கம் பொறுப்புக் கூறலை நிறைவேற்ற வேண்டும். அதன் ஊடாக போர்க் குற்றங்களை இழைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தங்களுக்கு நியாயமும் நீதியும் வழங்கப்பட வேண்டும் என்பதும் தமிழ்த்தரப்பின் முக்கிய கோரிக்கையாகும்.

ஐ.நாவின் பொறுப்பில் இருந்து அரசாங்கத்தின் பொறுப்பு கூறுகின்ற கடப்பாடு சர்வதேச பொது நிலையில் – பொதுப் பொறிமுறைக்கு மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை பிரேரணையில் உள்ளடக்கப்படவில்லை.

இது தமிழ்த்தரப்பை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கி இருக்கின்றது. அதனால் தமிழ்தரப்பில் சிலர் இந்தப் பிரேரணையை ஏற்க முடியாது என்று நிராகரித்திருப்பதைக் காண முடிகின்றது. அது மட்டுமல்லாமல் ஐ.நா மனித உரிமைப் பேரவையின் தன்னியல்பு சார்ந்த பிரேரணையின் உள்ளடக்கம் குறித்து தமது கண்டனங்களையும் கடுந்தொனியில் வெளியிட்டிருப்பதையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

அரசாங்கமும் இந்தப் பிரேரணை குறித்து கடும் வார்த்தைப் பிரயோகத்தில் தனது அதிருப்தியையும் சீற்றத்தையும் வெளிப்படுத்தி இருக்கின்றது. மனித உரிமைகள் எதுவுமே மீறப்பட வில்லை. போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை. மனிதாபிமான இராணுவ நடவடிக்கையே மேற்கொள்ளப்பட்டது. படைத்தரப்பின் இந்த நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகளே கொல்லப்பட்டனர். பொதுமக்கள் எவரையும் இராணுவத்தினர் கொல்லவில்லை என்று அரசாங்கம் மறுத்துரைத்திருக்கின்றது. அத்துடன் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள் வர முயன்ற பொது மக்களை விடுதலைப்புலிகளே சுட்டுக்கொன்றார்கள் என்றும் அரசு குற்றம் சாட்டியிருக்கின்றது.

அரசாங்கம் மனித உரிமைகளை மீறியிருக்கின்றது என குற்றம் சுமத்துபவர்கள் ஏன் விடுதலப்புலிகளின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து பேசவில்லை? அது விடயத்தில் அவர்கள் ஏன் மௌனம் சாதித்திருக்கின்றார்கள்? என்று எரிச்சலுடன் அரசு கேள்விகளை எழுப்பி இருக்கின்றது.

“சர்வதேச விசாரணைகளுக்கு இடமில்லை. உள்ளகப் பொறிமுறையின் ஊடாகவே விசாரணைகளை மேற்கொள்வோம். விடுதலைப்புலிகளின் பயங்கரவாதப் பிடியில் இருந்து மூன்று லட்சம் பொதுமக்களை மனிதாபிமான ரீதியில் பாதுகாத்து உயிர்வாழச் செய்த இராணுவத்தின் சேவையை மறந்துவிடக் கூடாது” என அரசு கூறியிருக்கின்றது.

“இராணுவ ரீதியாக விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை சிலர் விரும்பவில்லை. அந்த விருப்பமின்னையின் வெளிப்பாடே 2012, 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் மனித உரிமைப் பேரவையின் பிரேரணைகளாக வெளி வந்திருந்தன” என சுட்டிக்காட்டியுள்ள சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, “ரணில் – மைத்திரிபால கூட்டு அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட 2015 ஆம் ஆண்டு பிரேரணையில் இருந்து நாங்கள் விலகிவிட்டோம்” என கூறியுள்ளார்.

“அந்தப் பிரேரணை நாட்டின் இறையாண்மைக்கு முரணானது. நல்லிணக்கத்திற்கு விரோதமானது. அரசியல் அமைப்புக்கு மாறானது. அது பல்வேறு நாடுகளிடமிருந்து சிறீலங்காவை துருவப்படுத்தும் செயற்பாட்டைக் கொண்டது. நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்த வல்லது. இராணுவத்துக்கு எதிரான நகர்வுகளை முன்னெடுக்கக் கூடியது. சிறீலங்காவின் நீதிப்பொறிமுறை சுயாதீனமானது. அதில் தலையிடவல்ல எந்தவொரு வெளிநாட்டு நீதிப்பொறிமுறையையும் அனுமதிக்க முடியாது” என்ற காரணங்களுக்காகவே அந்தப் பிரேரணையை கோத்தாபாய அரசு அந்தப் பிரேரணையின் இணை அனுசரணையில் இருந்து விலகியதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன விளக்கமளித்துள்ளார்.

ஐநா மனித உரிமைப் பேரவையின் பிரேரணைக்கான இணை அனுசரணையில் இருந்து விலகியமைக்காக அவர் வெளியிட்டுள்ள காரணங்கள் உப்புச்சப்பற்றவையாகவே காணப்படுகின்றன. உள்ளக நீதிப்பொறிமுறையின் ஊடாக சர்வதேசமும், தமிழ் மக்களும் நம்பிக்கை கொள்ளத்தக்க வகையிலான விசாரணைகளை நடத்துவதற்கு அரசாங்கம் ஒருபோதும் தயாரில்லை என்பதையே இந்தக் காரணங்கள் துல்லியமாக வெளிப்படுத்தி இருக்கின்றன.

தற்போது ஐநா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள 46-1 பிரேரணைக்கு 22 நாடுகள் ஆதரவளித்திருக்கின்றன. 11 நாடுகள் எதிர்த்திருக்கின்றன. இது பிரேரணைக்குக் கிடைத்துள்ள பெரும்பான்மை ஆதரவு என்பதை வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தினேஷ் குணவர்தன நிராகரித்திருக்கின்றார்.

பேரவையின் மொத்த உறுப்பினர்களாகிய 47 நாடுகளில் பிரேரணைக்கு ஆதரவாகவும் எதிராகவும் வாக்களித்த நாடுகளைவிட 14 நாடுகள் நடுநிலை வகித்திருந்தன. இவ்வாறு வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் விலகியிருந்த நாடுகளும் சிறீலங்காவிற்கு ஆதரவளித்திருப்பதாகவே தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

“ஒட்டுமொத்தமாக இந்தப் பிரேரணைக்கு பெரும்பான்மை ஆதரவில்லை” என்று அவர் அறதியிட்டுக் கூறியிருக்கின்றார். அவருடைய இந்தப் பெரும்பான்மை பற்றிய கணக்கு நாட்டு மக்களை ஏளனச் சிரிப்புக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

“இந்தப் பிரேரணை பக்கச்சார்பானது. இதன் பின்னணியில் அரசியல் நகர்வுகள் இருக்கின்றன. ஆகவே நாங்கள் இந்தப் பிரேரணையை முற்றாக நிராகரிக்கின்றோம்” என்று அவர் அறுதியிட்டுக் கூறியுள்ளார்.

உண்மையில் இந்தப் பிரேரணையின்மூலம் சிறீலங்கா அரசாங்கத்திற்கு நேர்மையான சர்வதேச தரத்துக்கு அமைவான விசாரணைகளை நடத்தி அதன் ஊடாகத் தனது பொறுப்பு கூறுகின்ற கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஐ.நா மனித உரிமைப் பேரவை வழங்கி இருக்கின்றது.

இந்தச் சந்தர்ப்பத்தை அரசு தவறவிடுமேயானால், பொறுப்பு கூறலுக்கான விசாரணைகளும், போர்க்குற்றங்களுக்கான நீதி விசாரணைகளும் சிறீலங்காவிடமிருந்து கைநழுவிப் போய்விடும் என்ற இந்தப் பிரேரணையின் உட்கிடக்கையை – யதார்த்தத்தை அரசு உணர மறுத்திருக்கின்றது. போக்கிரித்தனமான தனது கணக்கு வழியில் இந்தப் பிரேரணைக்குப் பெரும்பான்மை ஆதரவு கிட்டவில்லை எனக் கூறியுள்ள தினேஷ் குணவர்தனவுக்கு வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் நாட்டுக்கு ஏற்படவுள்ள ஆபத்தான நிலைமைகளை உணர முடியாமல் போயிருப்பதில் வியப்பில்லை.

போர்க்குற்றச் செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டி, பாதுகாப்பாகக் களஞ்சியப்படுத்த வேண்டும் என்பது இந்தப் பிரேரணையின் மிக முக்கியமான உள்ளடக்க அம்சமாகும். இந்தப் பொறுப்பை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் பொறுப்பேற்றுச் செயற்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்து, அதற்கான ஆளணி மற்றும் இதர செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடும் வசதிகளும் செய்யப்பட வேண்டும் என இந்தத் தீர்மானம் கூறியிருக்கின்றது.

இவ்வாறு உரிமை மீறல்கள் போர்க்குற்றச் செயற்பாடுகள் தொடர்பிலான ஆவணங்களை ஐ.நா மன்றத்தின் பிரதான பிரிவுப் பொறிமுறையின் ஊடாகத் திரட்டி பாதுகாத்தல் என்பது சிறீலங்கா அரசாங்கத்தின் கழுத்தைச் சுற்றிய பாம்பாகும்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் திரட்டிப் பாதுகாக்கப்படுகின்ற ஆதாரங்கள், ஆவணங்கள் என்பவற்றை சிறீலங்காவிற்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுக்களை அல்லது மனித உரிமை மீறல்களை முன்வைத்து, பேரவையின் எந்தவொரு உறுப்பு நாடும் வழக்குத் தாக்கல் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் பிரேரணையில் கூறப்பட்டிருக்கின்றது.

இது உடனடியாகவோ அல்லது காலம் கடந்த நிலையிலோ சிறீலங்கா அரசின் தலைமீது தொங்கிக் கொண்டிருக்கின்ற கூரிய கத்தியாகவே அமையும். அந்தக் கத்தியை எந்த வேளையிலும் எத்தகையதொரு தருணத்திலும் மனித உரிமைகள் மீது பற்றுகொண்டுள்ள எந்த நாடும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது இந்தப் பிரேரணையின் அடிநாதமாகும்.

சுருக்கமாகக் கூறுவதானால், சிறீலங்கா அரசு உள்ளக விசாரணைகளையோ, கலப்புப் பொறிமுறை சார்ந்த விசாரணைகளையோ அல்லது ஐ.நாவின் உதவியுடனான சர்வதேச விசாரணைகளையோ – ஏதேனும் விசாரணைகளின் மூலம் பொறுப்பு கூறலுக்கான தனது கடப்பாட்டை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இல்லையேல் விசாரணைப் பொறிமுறையும் விசாரணைகளை நடத்துகின்ற பொறுப்பும் அரசாங்கத்தின் கைகளில் இருந்து சர்வதேச வெளியரங்கில் கைமாறிவிடும்.

அதன் பின்னர் எந்த விசாரணைகளையும் சிறீலங்கா அரசினால் நடத்த முடியாத நிலைமை உருவாகிவிடும். சர்வதேச அரங்கில் பேரவையின் எந்தவோர் உறுப்பு நாடும் தான் விரும்பிய வகையில் தனது உள்ளக விசாரணைகளையோ அல்லது சர்வதேச விசாரணைகளையோ நடத்துவதற்கு அது வழிவகுத்துவிடும்.

இந்த விடயத்தைப் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பிலான தமிழ்த்தரப்பு சரியாகப் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அத்தகைய புரிதலின் அடிப்படையில் உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்டவர்களை சரியாக இனம் கண்டு, அவர்களை சாட்சியங்களாகத் தாயர்ப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தினால் சேகரிக்கப்படுகின்ற ஆதாரங்களைப் பயன்டுத்த வல்ல நாடுகளைக் கண்டறிந்து அவற்றின் ஊடாக உரிமை மீறல்களுக்கு எதிராக வழக்காடுவதற்குத் தூண்ட வேண்டும்.

எனவே 46-1 பிரேரணை தொடர்பில், முரண்பாடானதும், பல்வேறு வகைப்பட்டதாகவும் கிளர்ந்து எழுந்துள்ள கருத்துக்கள் எதிர்வினைகளுக்கு மத்தியில் சிறீலங்காவின் மனித உரிமை மீறல்களினாலும் போர்க்குற்றச் செயல்களினாலும் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழ்த்தரப்பின் அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்களும் சமூக அமைப்புக்களும் இந்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாதகமான அம்சங்களைத் தகுந்த முறையில் பயன்படுத்தி, தமது நீதிக்கான ஏக்கத்தைப் போக்கிக் கொள்ள முன்வர வேண்டும்.

மாகாண சபை அதிகாரங்களை குறைத்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி வழங்கிய யோசனை

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைத்து அவ்வதிகாரங்களை உள்ளூராட்சி மன்றங்களுக்கு வழங்குவது தொடர்பில் புதிய அரசியலமைப்பில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.

சோல்பரி அரசியமைப்பில் சிறுபான்மையின மக்களுக்கு காப்பீடாக அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாம் சபையான செனட் சபையை உத்தேச புதிய அரசியமைப்பில் மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், தொழில் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பு தொடர்பில் சுதந்திர கட்சியின் யோசனைகளை மகாநாயக்க தேரர்களுக்கு நேற்று கையளித்ததன் பின்னர் கண்டியில் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஒரு நாடு – ஒரு சட்டம்

பல்லின சமூகம் வாழும் நாட்டில் பல பிரச்சினைகள் காணப்படுவது இயல்பானதொன்றாகும். ஒரு நாடு- ஒர சட்டம் என்ற கொள்கையினை அனைத்து இன மக்களும் எவ்வித வேறுப்பாடுமின்றி பின்பற்ற வேண்டும்.

சட்டத்தின் முன் எத்தரப்பினருக்கும் சலுகை வழங்க கூடாது. இனத்தை அடிப்படையாக கொண்டு அரச வரப்பிரசாதங்கள் வழங்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டும்.

பொது சட்டத்தை அனைத்து இன மக்களும் மதித்து ஏற்றுக்கொள்ளும் சூழலை புதிய அரசிலமைப்பின் ஊடாக ஏற்படுத்த வேண்டும்.

சட்டம் சிறந்த முறையில் தெளிவானதாக காணப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் ஆராய நீதிமன்ற கட்டமைப்பிற்குள் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.

செனட் சபை முறைமை

மாகாண சபை முறைமையின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்.

புதிய அரசியலமைப்பில் செனட் சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். பல அடிப்படை பிரச்சினைகளுக்கு செனட் சபை ஊடாக தீர்வை பெற்றுக் கொள்ள முடியும்.

சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையின மக்களின் நல காப்பீடாக பாராளுமன்றின் இரண்டாம் மன்றமாக செனட் சபை அறிமுகப்படுத்தப்பட்டது.

1972 ஆம் ஆண்டு முதலாம் குடியரசு யாப்பில் இம்மன்றம் நீக்கப்பட்டது. ஆகவே மீண்டும் புதிய அரசியலமைப்பில் செனட் சபை முறைமையினை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற யோசகையை முன்வைத்துள்ளோம்.

தேர்தல் முறைமை

தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் முறைமை அரசியல் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் காணப்படுகிறது.

விருப்பு வாக்கு முறைமை அரசிய்ல களத்தில் முரண்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. ஆகவே நாட்டுக்கு பொருந்தும் வகையிலான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

70 வீதம் தொகுதி ரீதியிலான முறைமையும், 30 வீதம் விகிதாசார முறைமையும் புதிய தேர்தல் முறைமை கொண்டிருக்க வேண்டும். தேர்தல் முறைமையில் முழுமையாக மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என்பதை அரனத்து அரசியல் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்த்தில் தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி வழங்கியே அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டடது.

தேர்தல் முறைமை குறித்து வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. ஆகையால் இம்முறையும் ஏமாறா தயாரில்லை. புதிய அரசியலமைப்பில் தேர்தல் முறைமை குறித்து அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

தேவையேற்பட்டால் இலங்கைக்குள் களமிறங்கும் இந்திய இராணுவம்! – கேர்ணல் ஹரிஹரன் விசேட செவ்வி

இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டால், தேவையேற்பட்டால் இலங்கைக்குள் இந்திய இராணுவம் களமிறங்கும் என இந்தியாவில் இருக்கக்கூடிய மூத்த இராணுவ கேர்ணல் தர அதிகாரி, அதனோடு பாதுகாப்புத் துறை தெற்காசிய விவகாரங்கள் தொடர்பில் மிகவும் ஆழமான பார்வையோடு இலங்கை விடயங்களை மிகவும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்க கூடிய மூத்த இராணுவ அதிகாரி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறி செய்தி செவைக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இந்தியாவின் இராணுவ பிரசன்னம் அல்லது இராணுவ ரீதியான ஒரு நிலைப்பாடு இலங்கைக்குள் ஆழமாக இருக்கிறது. அதனால், எந்த நாடு அதற்குள் நுழைந்தாலும் எந்த பாதிப்பும் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

அப்படியில்லை பாதிப்பு இருக்கும். ஆனால் அந்த பாதிப்பை இந்தியா உடனடியாக பதிலடி கொடுத்து தகர்க்க முடியும். இந்தியாவிடம் அத்தகைய வலிமை உள்ளது.

அதனால் தான் இலங்கையை சீனா எவ்வளவு பயமுறுத்தினாலும் இந்தியா அதன் பின்னணியில் எப்போதும் இருக்கும். ஏனெனில் இலங்கையை சீனா தாக்கினால் அது இந்தியாவிற்கு பேராபத்து.

அதேபோல் இந்தியாவின் மீது தாக்குதல் நடந்தால் இலங்கையின் மீதும் ஓரளவு பாதிப்பு இருக்கும் என கூறியுள்ளார்.

அதேவேளை, ஒரு போர் கால சூழ்நிலை அல்லது ஒரு பேராபத்து சூழ்நிலை போன்ற இலங்கைக்கு பாதிப்பான சூழ்நிலைகள் ஏற்பட்டால், இலங்கை கேட்டுக் கொண்டால் கட்டாயம் இந்திய இராணுவத்தை இந்தியா இலங்கைக்கு அனுப்பும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.