‘ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்’ – நரேந்திர மோதி

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வந்துள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்தார்.

அடுத்ததாக , திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கிறார் நரேந்திர மோதி.

நரேந்திர மோதி தமது பிரசார உரையைத் தொடங்கும் முன் எல். முருகன் அவருக்கு வேல் ஒன்றை வழங்கினார். ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று கூறி தமது பரப்புரையைத் தொடங்கினார் நரேந்திர மோதி.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரம் வந்தது தமக்கு மகிழ்ச்சி என்று மோதி குறிப்பிட்டார்.

உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம், என நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான திமுகவின் திண்டுக்கல் ஐ. லியோனி, ஆ. ராசா ஆகியோரின் பேச்சுகளையும் மோதி தமது உரையில் விமர்சித்தார்.

ஆண்டாள், ஒளவையார் ஆகியோரது கருத்துகளால் ஊக்கம் பெற்ற தாங்கள் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் மோதி கூறினார்.

கொங்கு பகுதியில் உள்ள மக்கள் தொழில் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்; அதேபோல இரக்க குணத்துக்கும் பெயர் பெற்றவர்கள். கடந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்கள் சக்திக்கு மீறி நாட்டுக்கு பங்காற்றின. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.

நரேந்திர மோதியின் ஆங்கில உரையை கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எனது பெயரா?

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் என்னை தொடர்புகொள்ளவில்லை,எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் என்னை விசாரிக்கவில்லை எனவும் அவுஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மாறாக பத்திரிகைகள் மூலம் நான் இதனை அறிந்தேன் என தெரிவித்துள்ள அவர் இது எனக்கான உரிய நடைமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனக்கு முற்றிலும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர் நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை பொதுசுகாதாரம் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளிற்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு நான் எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பேராசிரியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ள எனது உறவினர்கள் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான முக்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நம்பகதன்மையும் பக்கசார்பின்மையும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பாக அது யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நான் கட்டார் பல்கலைகழகத்தில் சிரேஸ் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் நான் ஆறுமாத சித்திரவதையை எதிர்கொண்டுள்ளேன் இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது துயரங்களிற்கு நான் பிறந்த நாடே காரணம் என்பது தெளிவாகின்றது அவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

எந்த வகையிலாவது மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறும். அது எந்த முறையாக இருந்தாலும் தேர்தலை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் கஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு தற்போது 4 ஆண்டுகளாகிறது. சகல மாகாண சபைகளின் உறுப்பினர்களது பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன், மக்கள் பிரதிநிதிகள் இல்லாது இயங்கி வருகிறது. இது இலங்கை அரசியல் வரலாற்றில் ஓர் கறையாகும்.

ஜனாதிபதி, பிரதமர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமைப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய பசில் ராஜபக்ஷ முவருமே மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு கூறியிருந்தனர்.

மாகாண சபை தேர்தலை இரண்டு வழிமுறைகளை கீழ் நடத்துவது குறித்து அமைச்சரவை பத்திரமொன்றை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த பத்திரத்தை ஆராய வேண்டுமென கோரி ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்தனர். எனினும், தற்போது பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதற்கான முடிவு இதுவரையிலும் எடுக்கப்படவில்லை.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான வாத விவாதங்கள் நடத்தாது, அதனை அங்கீகரிக்கப்படாது இந்த அமைச்சரவை பத்திரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

ஆகவே, கடந்த முறை அமைச்சரவை பத்திரத்துக்கு நடந்தது போன்று இம்முறையும் நடத்த வேண்டாமென, சகோதர கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எந்த வகையிலாவது மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துங்கள். அது எந்த முறையாக இருந்தாலும் பிரச்சினையில்லை. தேர்தலை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம். ஆகவே ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துமாறு நாம் சகல தரப்பினரிடமும் கேட்டுகொள்கிறோம்” என்றார்.

இந்திய சிறைகளில் உள்ள தமிழ் மீனவர்கள் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது போல் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய இலங்கை,இந்திய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் இரண்டு தினங்களில் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மீனவர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தமை பாராட்டத்தக்கது.

ஆனால் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் பிடி பட்டு இந்திய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரும்பான்மை இன மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கமும், இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களையும், அவர்களின் மீன் பிடி உடமைகளையும் இன்று வரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடையம் என்ற வகையில் அசமந்த போக்கை கடைப்பிடிக்க கூடாது. அவர்களும் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் விடுதலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாட அனுமதிக்கக் கூடாது.எனவே தமிழராக உள்ள மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்வதற்கான ஒரு முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் இன ரீதியான ஒடுக்கு முறையை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. குறிப்பாக எல்லை தாண்டி போகின்ற எமது மீனவர்கள் இன்றைக்கும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.அவர்கள் வேண்டும் என்று எல்லை தாண்டிச் செல்வதில்லை.

எனவே அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை யாரும் செய்யவில்லை. நாங்களும், அமைப்புக்களும் மீனவர்களை விடுதலை செய்ய குரல் கொடுக்கின்றோம்.

ஆனால் அரசாங்கம் இவ்விடையத்தில் அக்கறை செலுத்தவில்லை.எனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Posted in Uncategorized

ரெலோ செயலதிபர் தளபதி குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் ஐ.நா ஞானமும்

இன்றைக்கு 38ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் கறைபடிந்த வரலாற்று நிகழ்வுகளும் பலருக்கும் இன்னும் ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான், ‘கறுப்பு ஜூலை’ என அடையாளப்படுத்தப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக, தலைநகரிலும் மலையகத்திலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் ஓர் அங்கமாகவே, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிந்த தமிழ்க் கைதிகளில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)செயலதிபர் தளபதி குட்டிமணி என்றழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரனின்,ரெலோ ஸ்தாபகர் நடராஜா தங்கத்துரை ஆகியோரின் இறப்பு, இன்னும் பேசும்பொருளாகவே இருக்கிறது.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தாமல், எந்தவோர் அரசாங்கமும் இலங்கையில் ஆட்சி நடத்தியதில்லை. 1942 முதல் 2018 வரையிலும் 76 வருடகாலத்தில் இலங்கை மக்கள், அவசரகால, பயங்கரவாத சட்டங்களின் கீழ்தான் அடக்கியாளப்பட்டார்கள்; அழிக்கப்பட்டார்கள். 83இலும் அவசரகாலச் சட்டமே மறைமுகமாக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இலங்கைக்கான புதிய பிரேரணையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகால, பயங்கரவாத சட்டங்கள் தொடர்பில் ஜெனீவாவில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன. அதனடிப்படையிலேயே அவசரகால சட்டம் 2011 நீக்கப்பட்டது. எனினும், அதிலிருந்த அதிகாரங்கள் பல, ஜனாதிபதிக்கு கைமாறின. 2018 மார்ச் 6, கண்டி- திகன சம்பவத்துக்குப் பின்னர், சில நாள்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டம், 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின், மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

அவசரகால, பயங்கரவாத தடைச்சட்டங்களிலான வலிகள், வேதனைகளை நன்கு அனுபவித்தவர்கள் தமிழர்கள். 1983 ஜூலைக் கலவரம், அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோதுதான் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின்போதும் இச்சட்டம் அமுலிலிருந்தது. அவசரகாலச் சட்டத்தின் வலிகளை, சகல இனத்தினரும் அனுபவிக்கின்றனர். இவ்விரு சட்டங்கள் தொடர்பிலும், நீதிமன்றத்தில் வைத்து குட்டிமணி, அன்று கூறியவை, தீர்க்கதரிசனமாக இன்றிருக்கிறது.

“நாங்கள், சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்கவந்தவர்கள் அல்லர். எங்களுடைய போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை நாடிநிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி, நாளை உங்களுக்கு ஏற்படக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதல்ல; இந்த ஆட்சியில் மீறப்பட்ட மனித உரிமைகள், பொறுப்புகூறல், உள்ளிட்டவையும் உள்ளடங்குகின்றன என எதிரணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் மீளாய்வு செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளமை ரெலோ செயலதிபர் தளபதிகுட்டிமணியின் தீர்க்கதரிசனத்துக்கான காலந்தாழ்த்திய ஞானமாகும் என்பதே எமது அவதானிப்பாகும்.

Posted in Uncategorized

நிலாவரை தொல்லியல் அகழ்வு தடுக்கப்பட்டமை தொடர்பில் ரெலோ தவிசாளருக்கு காவல்துறையினர் அழைப்பு

நிலாவரையில் இராணுவமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பில் தொல்லியல் திணைககளம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தவிசாளர் தியாகராஜா நிரோஷ் இன்று மதியம் 2 மணிக்கு அச்சுவேலி காவல் நிலையம் அழைக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே தை மாத இறுயிலும் கடந்த வெள்ளிக்கிழமை அன்றும் நிலாவரையில் சந்தேகத்திற்கிடமான வகையில் இராணுவத்துடன் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினர் அகழ்வுப் பணிகளில் ஈடுபடமுயற்சித்தனர். இம் முயற்சிகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளார் மற்றும் அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது.

இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ள முயற்சிக்கப்பட்ட அகழ்வுப் பணிகள் தடுக்கப்பட்டமை தொடர்பாக அச்சுவேலி காவல் நிலையத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளால் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.

அம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அச்சுவேலி காவல் நிலையத்தில் இருந்து தொடர்நடவடிக்கைகளுக்காக இன்று மாலை 2 மணிக்கு வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக அச்சுவேலி காவல் நிலையத்திற்கு காவல் மேலதிகாரிகளும் வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Posted in Uncategorized

இந்து மதத்தின் தொன்மையை மாற்றியமைப்தே தொல்லியல் திணைக்களத்தின் இலக்கு-ரெலோ இளைஞர் அணி தலைவர் – சபா குகதாஸ்

இலங்கையில் ஆதி தொன்மைகள் கொண்ட மதமாக விளங்குவது இந்து மதம் என்பதை வரலாற்று ரீதியாக யாரும் இல்லை என்று கூறமுடியாது எனத் தெரிவித்துள்ள ரெலோ இளைஞர் அணி தலைவரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான சபா குகதாஸ், காரணம் தொன்மையான நூல்கள், கல்வெட்டு ஆதாரங்கள் அதனை நிறுவுகின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.

தொல்லியல் ஆய்வு என்ற பெயரில், தமிழர் தாயகப் பிரதேசத்தில் சைவ ஆலயங்கள் மற்றும் தமிழர்களின் வரலாற்றோடு தொடர்புடைய இடங்களில் தொல்லியல் துறையினர் பௌத்த துரவிகள், இராணுவத்தினரின் துணையுடன் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த நடவடிக்கைக்கு தமிழ் அரசியல் தலைவர்கள், பொது மக்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ள சபா குகதாஸ்,
“இலங்கையில் உள்ள ஏனைய மதங்கள் கொண்டுவரப்பட்டமைக்கான முழுமையான வரலாறுகள் காலங்களையும் ஆட்சியாளர்களின் ஆதரிப்பையும் துல்லியமாக எடுத்துக் கூறுகின்றன. அந்த வகையில் இலங்கையை திருமந்திரத்தை அருளிய திருமூலர் சிவபூமி என்றே குறிப்பிட்டுள்ளார் அத்துடன் இராவணன் என்ற சிவ பக்தனின் வரலாறு மேலும் பல ஆதாரங்களை உறுதி செய்துள்ளது.

இலங்கையில் உள்ள பஞ்ச ஈச்சரங்கள் சிவலிங்க வழிபாட்டின் தொன்மைகளை கூறுவதுடன் அவற்றுள் இரண்டு ஈச்சரங்கள் இயற்கையாக தோன்றிய சிவலிங்கங்களை கொண்ட தான்தோன்றீஸ்வரங்களாக காணப்படுகின்றன.
இலங்கைத் தீவின் அனைத்துப் பாகங்களிலும் இந்து மதத்தின் தொன்மைகள் நிறைந்து காணப்பட்டாலும் தென்னிலங்கையில் அவற்றின் தொன்மைகள் மாற்றியமைக்கப்பட்டு பௌத்தத்தின் சிறப்புக்களே முதன்மை பெற்றுள்ளன.

இந்த நிகழ்ச்சி நிரலே வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழர் பிரதேசங்களிலும் தொல்லியல் திணைக்களத்தின் மூலமாக இந்து மதத்தின் தொன்மைகளை மாற்றி அமைத்து பௌத்த மத விடையங்களை முதன்மைப் படுத்தி இலங்கைத் தீவு முழுவதும் சிங்கள பௌத்தர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நிறுவ திட்டமிட்ட அதிகார சக்தியின் துணையுடன் முன்னெடுத்து வருகின்றனர்.

தென்னிலங்கையில் கதிர்காமம் முருகன் ஆலயம் இன்று பௌத்த விகாரைகளால் சூழப்பட்டிருப்பது , சிவனுடைய பாதம் பதிந்த சிவனெளிபாதமலையின் பெயர் மாற்றப்பட்டமை ,சிவகிரி என அழைக்கப்பட்ட குன்று சிகிரியா பெயர் மாற்றப்பட்டமை அனுராதபுர ,பொலநறுவைக்கால சிவ ஆலயங்கள் சிதைக்கப்பட்டமை அவற்றின் தொன்மையான வரலாறுகள் அழிக்கப்பட்டமை திருக்கோணேஸ்வரர் ஆலய முன் பகுதியில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டமை கன்னியாவில் விகாரை அமைத்தமை போன்ற பல உதாரணங்கள் உள்ளன இவ்வாறான திட்டமிட்ட ஒரு இனத்தின் கலாசார அழிப்பு அரச நிகழ்ச்சி நிரலாக தமிழர் தாயகத்தை குறிவைத்து அரங்கேற்றப்படுகிறது.இதற்கு இலங்கை அரசாங்கம் வைத்த பெயர்தான் தொல்லியலை பாதுகாத்தல்” என்றார்.

Posted in Uncategorized

அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழு நியமிக்கப்படவுள்ளது

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் யாப்பினை பரிசீலிப்பதற்காக குழுவொன்றை நியமிக்க தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இனம் மற்றும் மத அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யாதிருப்பதற்கு ஆணைக்குழு எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் உத்தியோக பெயர்கள், அவ்வாறான இனம் மற்றும் மதத்தை அடிப்படையாகக் கொண்டவையா என்பதை ஆராய்வதற்காகவே குழு நியமிக்கப்படவுள்ளது.

கட்சிகளின் யாப்பின் அவ்வாறான சரத்துகள் காணப்படின், அவை அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராய்வதற்கு குழு நியமிக்கப்படவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், கட்சிகளைத் தௌிவூட்டி, அவ்வாறான கட்சிகளின் பெயர்கள் மற்றும் கட்சிகளின் யாப்பில் திருத்தம் மேற்கொள்வதற்கு கால அவகாசம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழர் அமைப்புகளை தடை செய்தது அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை

சிறிலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புகளையும் பல தனிநபர்களையும் தடை செய்துள்ளதை அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கை என சர்வதேச நெருக்கடி குழுவின் இலங்கைக்கான ஆய்வாளர் அலன் கீனன் விமர்சித்துள்ளார்.

டுவிட்டரில் இதனை பதிவு செய்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது

அசாதாரணமான பிற்போக்கு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகள் என அறிவிக்கும் சட்டத்தை பயன்படுத்தி கடந்த மாதம் அரசியல்ரீதியில் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற புலம்பெயர் அமைப்புகளை தடை செய்துள்ளது.

இதன் காரணமாக இலங்கையில் உள்ள எவரும் அந்த அமைப்புகளுடன் தொடர்புகொள்வதை கூட ஆபத்தானதாக மாற்றியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த பட்டியலில் 300க்கும் அதிகமானவர்களின் பெயர்கள் விபரங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும் இந்த பட்டியலில் ஐம்பது முஸ்லீம்களின் பெயர்கள் காணப்படுவதுடன் இவர்கள் தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இலங்கையில் வசிக்கும் 35 தமிழர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன இவர்கள் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இதேசட்டத்தை பயன்படுத்தி மகிந்த ராஜபக்ச அரசாங்கம் 2014 இல் இதே தமிழ் அமைப்புகளையும் தனிநபர்களையும் தடை செய்திருந்தது.

அந்த பட்டியலில் காணப்பட்ட சில பெயர்களும் விபரங்களும் தவறானவையாக காணப்பட்டன.உரிய ஆதாரங்களும் முன்வைக்கப்படவில்லை.

உலகின் ஏனைய அரசாங்கங்களை போல இலங்கை அரசாங்கத்திற்கும் பயங்கரவாதத்தை தடுப்பதற்கான பயங்கரவாதத்தில் ஈடுபட்ட எவரையும் தடுத்து வைத்து தண்டிப்பதற்கான உரிமையுள்ளது.

எனினும் எந்த குழுவிற்கும் தனிநபருக்கும் எதிரான தடைகளும் உரிய ஆதாரங்களினை அடிப்படையாக கொண்டதாக காணப்படவேண்டும்.

துரதிஸ்டவசமாக இலங்கை அரசாங்கம் தனது எதிராளிகளை தன்னை விமர்சிப்பவர்களை உரிய ஆதாரங்கள் இன்றி பயங்கரவாதிகள் என விமர்சிக்கும் வரலாற்றை கொண்டது.

அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சி மீதான சமீபத்தைய தாக்குதல்களும் பொலிஸ் நீதித்துறை அரசியல்மயப்படுத்தப்பட்டமையும் சந்தேகம் மற்றும் எச்சரிக்கைக்கான காரணங்களாக காணப்படுகின்றன.

ஜெனிவா தீர்மானத்தால் உருவாக்கப்படுகிறது உலகளாவிய சட்டவலை – கலாநிதி. தயான் ஜயதிலக்க சுட்டிக்காட்டு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பில் பிரத்தானிய தலைமையிலான ஆறு நாடுகளால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளமையால் உலகளாவி ரீதியிலான சட்டவலையொன்று உருவாக்கப்படவுள்ளது என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

ஐ.நா.தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் சாட்சியங்களை திரட்டுவதற்கும் பாதுகாப்பதற்குமான 12பேர் கொண்ட குழுவானது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் ஒரு நாட்டின் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கான குணாம்சங்களுடனான பத்திரத்தினை வகிக்கவுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையானது, இலங்கையில் மனித உரிமைகள் மனிதாபிமானக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தனிநபர்களை இலக்கு வைத்து வெளிநாடுகளில் வழக்கு தொடுப்பதற்கு வழிசமைப்பதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் கடந்த 23ஆம் திகதி நிறைவுக்கு வந்திருந்தது. இதன்போது இலங்கை தொடர்பிலான தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. எனினும், இலங்கை அரசாங்கம் அத்தீர்மானத்தினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று பகிரங்கமாக அறிவித்து விட்டது.

இவ்வாறான நிலையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் அடுத்தகட்டச் செயற்பாடுகள் எவ்வாறிருக்கப்போகின்ற என்பதுதொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களிலிருந்து வேறுப்பட்டதாக உள்ளது.

தீர்மானத்தின் தலைப்பு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனிதஉரிமைகள் ஆகியவற்றை முன்னேற்றுதல் என்றவாறு அமைந்திருக்கின்றது. இதில் ஆறாவது செயற்பாட்டுப்பந்தியில், பொறுப்புக்கூறலை முன்னேற்றும் நோக்கத்துடன் இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் மற்றும் அத்துமீறல்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய குற்றங்கள் தொடர்பாக சான்றுகளை சேகரித்தல், பகுப்பாய்வு செய்து பாதுகாத்தல், செய்து பாதுகாப்பதற்கும், பாரிய மனித உரிமை மீறல்கள், சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் மோசமான மீறல்கள் என்பவற்றின் பொறுப்புக்கூறலுக்கான எதிர்காலத் திட்டங்களுக்கான சாத்தியமான மூலோபாயங்களைத் தயாரிப்பதற்கும் பரிந்துரைத்துள்ளது. இந்தப் பொறிமுறையானது 12 பேர் கொண்ட உலகின் தலைசிறந்த நிபுணர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ளது.

சட்டமா அதிபரின் பாத்திரம்

இலங்கை தொடர்பான கண்காணிப்பு மீளாய்வுக்காலம் ஆறுமாதங்களாக சுருக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகத்தினுள் இந்தப் பொறிமுறையின் செயற்பாடானது ஏறக்குறைய நாடொன்றில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் குணாம்சங்களைக் கொண்ட பாத்திரத்திரமாகவே இருக்கப்போகின்றது.

அதாவது வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி மனித உரிமைகள், மனிதாபிமானச்சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்கள் தொடர்பில் ஏற்கனவே மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் உள்ள விடயங்களை சீர்தூக்கிப் பார்த்து மேலதிக சாட்சியங்கள், விசாரணைகள் ஆகியவற்றை அக்குழு மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், ஐ.நா உயர்ஸ்தானிகரின் அலுவலகத்திற்கு இதுவரையில் உள்ளீர்க்கப்படாத குற்றச்சாட்டுக்கள் உடைய சம்பவங்கள் பற்றியும் இந்தக்குழுவானது சாட்சியங்களை திரட்டுவதற்கு முயற்சிக்கும். மேலதிக ஆய்வுகளையும் தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் வெளிநாட்டு நீதிமன்ற வழக்குகளுக்கு உதவல் ஐ.நா. தீர்மனத்திற்கு அமைவாக, சாட்சியங்களை திரட்டும் இந்தக்குழுவானது வெளிநாடுகளில் குற்றச்சாட்டுக்களை உடையவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பின், அந்த வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கா மேம்பட்ட ரீதியிலான சாட்சியங்களை அளிப்பதற்கான ஒத்துழைப்புக்களை வழங்கவுள்ளது.

குறிப்பாக தமது சாட்சியங்கள், ஆய்வறிக்கைகளை கையளிக்கும். இவ்விதமான செயற்பாடானது குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டவர்கள் வெவ்வேறு நாடுகளில் சிக்குவதற்கான சந்தர்ப்பதினையே ஏற்படுத்துகின்றது.

உதாரணமாக கொள்வதாயின் ஊடகவியலாளர் லசந்தவின் படுகொலை விவகாரத்தில் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கிற்கான சாட்சியங்கள் மற்றும் மேம்பட்ட ஆதாரங்களை வழங்குதோடு நீதிக்காக தொடர்ந்து பணியாற்றவும் உள்ளது.

ஆகவே, நிபுணர்கள் குழுவைக்கொண்ட பொறிமுறையானது, சட்ட வலுவானதாக காணப்படுவதோடு அடுத்து வரும் காலத்தில், இலங்கை தொடர்பில் உலகளாவி ரீதியில் உருவாக்கப்பட்டிருக்கும் ‘சட்டவலையாகவே’ பார்க்கப்பட வேண்டியுள்ளது.

இலங்கையினுள் பிரவேசிக்க வேண்டிய அவசியமில்லை

இந்த சாட்சியங்களை திரட்டும் நிபுணர்கள் வடக்கு கிழக்கிற்கோ அல்லது தென்னிலங்கைப் பகுதிகளுக்கோ நேரடியாக வந்து சாட்சியங்களைப் பதிவு செய்யவேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தின் ஊடாக காணொளி காட்டசிகள் உள்ளிட்ட இதர வழிகளைப் பயன் இலங்கைக்கு வெளியில் இருந்தே முன்னெடுக்கவுள்ளனர்.

மேலும் ஐ.நா.தீர்மானத்தினை இலங்கை அரசாங்கம் முழுமையான நிராகரித்துள்ள நிலையில் சாட்சியங்களை திரட்டும் நிபுணர்கள் உள்நாட்டிற்குள் வருகை தருவதற்கு இடமளிக்கப்போதவதில்லை என்பது திடமாக வெளிப்படுத்தப்பட்டு விட்டது. எனவே சாட்சியங்களை திரட்டும் குழுவும் இலங்கை அரசாங்கம் நிச்சயமாக ஒத்துழைப்புக்களை வழங்காது என்று கூறுமளவிற்கு நிலைமைகள் உள்ளன.

ஆகவே ஆட்சியாளர்களிடத்தில் தம்மை உள்நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு இடமளிப்பார்கள் என்றும் அந்த நிபுணர்கள் குழு நம்பவில்லை. ஆகவே அவற்றின் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில் தான் அதிகளவில் ஈடுபடவுள்ளது.

பொதுச்சபை அனுமதி நிதிப்பயன்பாடும்

ஐ.நா.தீர்மானத்திற்கு அமைவாக சாட்சியங்களை திரட்டுதல் உள்ளிட்ட விடயங்களுக்காக 2.8மில்லியன் தொடர்கள் செலவழிக்கப்படவுள்ளது. இந்த நிதியானது பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட வேண்டியுள்ளது. அதன், பின்னரே மேற்படி குழுவானது தனது செயற்றிட்டத்தினை ஆரம்பிக்கவுள்ளது.

உள்ளக பரிந்துரைகள்

போர் நிறைவடைந்ததன் பின்னர் அதில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியவற்றின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களில் ஐந்து மாணவர்கள் உட்பட 11பேரின் கடத்தல் தொண்டு நிறுவன தொழிலாளர்கள் படுகொலை இறுதிப்போரில் பஸ்வண்டிகளில் ஏற்றிச் சென்றவர்கள் இன்மும் காணமலாக்கப்பட்டவர்களாக இருக்கும் நிலைமைகள் இவ்வாறு பல விடயங்கள் கூறப்பட்டுள்ளன. அதேபோன்று தான் மக்ஸ்வெல் பரணகமவின் அறிக்கையிலும் இவ்விதமான விடயங்களை கொண்டிருக்கின்றன.

ஆகவே அந்தப்பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாததன் காரணத்தாலேயே தற்போதைய தீர்மானம் வலுவாக மாறியுள்ளது. இந்நிலையில் சாட்சியங்களை திரட்டும் குழு இந்த விடயங்கள் தொடர்பில் மேலதிக ஆய்வுகளையும் செய்யும் என்று எதிர்பார்க்க முடியும். அவ்விதமான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றபோது அடுத்த அமர்வுகளில் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் மீளாய்வு சமர்ப்பணங்களும் வலுவடையலாம். மேலும் ஆட்சியளர்களுக்கே மேலதிக நெருக்கடிகள் ஏற்படலாம்.

13ஆவது திருத்தம்

மேலும் இந்த தீர்மானத்தில் 13ஆவது திருத்தச்சட்டமும் மாகாண சபைகளுக்கான அதிகாரப்பகிர்வு தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டு விட்டது. சமகாலத்தில் சாத்தியப்படக்கூடிய விடயமொன்றாக இருப்பது 13ஆவது திருத்தச்சட்டமாகும்.ஆகவே முதற்கட்டமாக 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கி அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது பற்றி தமிழ் அரசியல் கட்சிகள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டும் என்றார்.

 

Posted in Uncategorized