நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதியில்லை : அவ்வாறு செயற்பட்டால் சட்ட நடவடிக்கை – பொலிஸ் பேச்சாளர்

பன்னிப்பிட்டிய பகுதியில் லொறியில் மோதுண்டு காயமடைந்த மஹரகம பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகர் மைத்திரிபால, கலுபோவில வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

எனினும் , லொறியின் சாரதியை தாக்கியமை சட்டவிரோதமானது. அதனால் , சம்பந்தப்பட்ட பொலிஸ் போக்குவரத்து பிரிவின் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொட்பில் அவர் மேலும் கூறியாவது ,

பன்னிபிட்டிய பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த , போக்குவரத்து பொலிஸ் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் நேற்று திங்கட்கிழமை லொறி சாரதியொருவரை தாக்கும் காட்சி இணையத்தளத்தில் வெளியாகியிருந்தது.

இது தொடர்பில் கவனம் செலுத்திய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரால் சரத்வீரசேகர, இது தொடர்பில் உடனே விசாரணைகளை முன்னெடுத்த , சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கரமரத்னவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் , விசேட பொலிஸ் குழுவொன்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வந்தனர். அதற்கமைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவரது பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் சம்பவத்தின் போது , கடமையில் ஈடுபட்டிருந்த மஹரகம போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரியான உபபொலிஸ் பரிசோதகரை குறித்த லொறி மோதியுள்ளதுடன் , இதன்போது படுகாயமடைந்த அவர் தற்போது கலுபோவிலை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

லொறியின் சாரதியின் கவனக்குறைப்பாடின் காரணமாகவே விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் , சம்பந்தப்பட்ட சாரதியை தாக்கியமை சட்டத்திற்கு புறம்பான செயற்பாடாகும்.

குற்றச் செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களை தாக்குவதற்கு பொலிஸாருக்கு அனுமதிவழங்கப்பட்டில்லை.

அவர் குற்றம் செய்துள்ளதாக தெரியவந்தால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளையே எடுத்திருக்க வேண்டும். அதனால் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பொலிஸ் உத்தியேகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவருக்கு எதிராக பொலிஸ் ஒழுங்காற்று சட்டவிதிகளுக்கமையவும் , குற்றவியல் சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

உள்ளகப் பொறிமுறை தமிழருக்கான நீதியையோ தீர்வையோ பெற்றுத் தராது!ரெலோ ஊடகப் பேச்சாளர்- குருசுவாமி சுரேந்திரன்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சியாகிய தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப் பேச்சாளரும், சர்வதேச விடயங்களுக்கான பொறுப்பாளரும், தேசிய அமைப்பாளருமாகிய குருசுவாமி சுரேந்திரனுடன் ஒரு நேர்காணல்..

கேள்வி: கடந்த மனித உரிமை பேரவையில் நடந்து முடிந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றிய உங்களுடைய கருத்துக்கள்.

பதில்: நடந்து முடிந்த மனித உரிமை பேரவை கூட்டத்தொடரிலே இலங்கைக்கான பொறுப்புக் கூறலை, நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவிக்கு முகமாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த பிரேரணை இருபத்திரெண்டு நாடுகளினுடைய ஆதரவோடு வெற்றி பெற்றது. இது தமிழர்களுக்கான பரிகார நீதியை பெற்றுக் கொள்ளுவதற்கு உறுதியாக வழியமைக்கும் என்ற பாரிய நம்பிக்கை, எதிர்பார்ப்பு எம்மக்களிடம் இருந்தது. ஆனாலும் இப்பிரேரணை தன்னுடைய நோக்கத்தை அல்லது இலக்கை எட்ட தவறி உள்ளது என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு, சர்வதேச குற்றவியல் நீதி பொறிமுறை ஒன்றையும், சர்வதேச சுயாதீன விசாரணை ஒன்றையும் கோரியே, தமிழ் தேசிய கட்சிகள், பொது அமைப்புக்கள், சமய மத அமைப்புக்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழ் மக்கள் சார்பிலே மனித உரிமைப் பேரவையில் உள்ள அங்கத்துவ நாடுகளுக்கும் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கும் கோரிக்கையை முன்வைத்திருந்தோம். எங்களுடைய கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல், மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவர்களுடைய அறிக்கையில், பரிந்துரைக்கப்பட்ட இந்த மேற்கூறிய விடயங்களும், இந்த பிரேரணையில் உள்வாங்கப்படாமை மிகவும் கவலை அளிக்கிறது. ஆகவே, இது தமிழ் மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருக்கும் பரிகார நீதியை பெற்றுத்தரும் ஒரு பிரேரணையாக நாங்கள் பார்க்கவில்லை.

கேள்வி – தாங்கள் அங்கம் வைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தலைமை வகிக்கும் திரு சம்பந்தன் அவர்களும், பாராளு மன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்களும், சர்வதேச விசாரணை ஒருமுறை பூடகமாக உள்ளது என்று தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், நீங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்திருப்பது எதன் அடிப்படையில்.?

பதில்: சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சர்வதேச விசாரணை பொறிமுறைக்கு செல்ல முடியாது. அதை மனித உரிமை பேரவையில் வலியுறுத்த முடியாது என்று பல தடவைகளில் அவர்கள் கூறி வந்த விடயம் தான் இது. ஐநா பாதுகாப்பு சபை இடமளிக்காது என்பது பிரதி வாதமாக இருந்தது. ஆனால் திடீரென்று இன்று அது பூடகமாக இருக்கிறது என்று சொல்வது எதன் அடிப்படையில் என்ற கேள்வி எழுகிறது. பிரேரணையில் புதிய ஆதாரங்களையும் சேகரிப்பதற்கான வசனங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதே போன்று இதில் அனுசரணை வழங்கிய நாடுகள் உள்ளடங்கலாக அவர்களுடைய அதிகார வரம்புகளுக்கமைய அந்த நாட்டிலே இருக்கக்கூடிய நீதிமன்றங்களின் முன்னால், குற்றவாளிகள் மீது வழக்கு தாக்கல் செய்ய முடியும். என்ற ஒரு பரிந்துரை, உள்வாங்கப்பட்டிருக்கிறது. ஆனால், இது நாங்கள் கூறிய சர்வதேச சுயாதீன விசாரணைப் பொறிமுறையை ஒத்தது அல்ல. இதனால் பாரிய ஒரு பயனை அதாவது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் பரிகார நீதியை, பெற்றுக்கொள்வதற்கான அமைப்பாக இருக்க முடியாது என்பதுதான் எமது நிலைப்பாடு. நாம் மட்டுமல்ல பல அரசியல் தலைவர்கள், அவதானிகள், ஆய்வாளர்கள், நாடுகள், சர்வதேச சட்ட வல்லுனர்கள் மற்றும் ஐநா மனித உரிமைக்கான உயர் ஸ்தானிகர் உட்பட இதே கருத்தை வலுயுறுத்துவதை அவதானிக்க முடியும்.

கேள்வி: சர்வதேச குற்றவியல் விசாரணை சாத்தியமில்லை என்று சில தரப்புகள் கூறி வருகிறார்கள். அதற்கான இடைவெளியும் இல்லை. ஆகவே ஏதாவது ஒரு பொறிமுறையை நிறைவேற்றுவதுதான் சரி என்ற நிலைப்பாடு இருக்கிறது, உங்களுடைய கருத்து வித்தியாசமாக இருக்கின்றதே?

பதில்: சர்வதேச குற்றவியல் விசாரணை பொறிமுறை என்பது கோர முடியாது என்ற ஒரு கருத்தை சிலர் முன்வைத்தார்கள், பின்னர் மனித உரிமை பேரவையிலே அது முடியாது என்று கூறினார்கள். இப்போது பூடகமாக உள்ளது, அல்லது அரசு நீதிவழங்காவிடின் சர்வதேச விசாரணையை கோருவோம் என்ற நிலைப்பாடை முன்வைக்கிறார்கள். இப்படி பல்வேறு பட்ட கருத்தை, காலத்திற்கு காலம் முன்வைத்து கொண்டிருக்கிறார்கள். உண்மையிலே இந்த மனித உரிமை பேரபவயிலே பொறுப்புக் கூறல் விடயம் ஐக்கிய நாடுகள் சபையினுடைய செயலாளர் நாயகம் அவர்கள் மனித உரிமை உயர்ஸ்தானிகரிடம் வழங்கிய பணிபுரையால் தான் அல்லது கோரிக்கையின் அடிப்படையில்தான் இந்த பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கின்றன.

பொறுப்புக் கூறலையோ நீதிப் பொறிமுறையையோ வலியுறுத்தாத பிரேரணைகளை தொடர்ந்தும் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றுவதன் மூலம் எங்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியாது. இம்முறை ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகரின் அறிக்கைப்படி ஐநா செயலாளர் நாயகத்திடம் நீதி மற்றும் விசாரணைப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்த கையளிப்பதே எமக்கான கதவுகளை திறக்க வழிகோலும்.

கேள்வி: சர்வதேச நாடுகள் தங்களுடைய பூகோள அரசியல் நலன் சார்ந்த விடயங்களை கொண்டுதான் இதை நோக்குகிறார்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது, அப்படியாயின் எப்படி தமிழ் மக்களுக்கான நீதி பொறிமுறையை அதையும் தாண்டி பெற்று கொள்ள முடியும் எனக் கருதுகிறீர்கள்?

பதில் : மனித உரிமைப் பேரவையில் இருக்கக்கூடிய நாடுகள், தங்களுடைய பூகோள அரசியல் நலன் சார்ந்த விடயங்களையும், தமிழ் மக்களுக்கு, பரிகார நீதியைப் பெற்றுத் தருகிறோம் என்ற போர்வையில், முன்னெடுப்பது, தெள்ளத் தெளிவாக, அவதானிக்கக் கூடியதாகவேதான் இருக்கிறது. சர்வதேச, நாடுகளுடைய பூகோள நலன்களை தாண்டி இதை ஐ.நா செயலாளர் நாயகத்திடம் கையளிப்பதன் மூலம் இந்த பூகோள அரசியல் நலன்களை தாண்டி நாங்கள் நீதிப் பொறிமுறையை உருவாக்க முடியும், எம் மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். ஆகவே மனித உரிமை பேரவையில் இருக்கும் வரைக்கும், இது பூகோள நலன் சார்ந்த விடயங்களை தான் முன்னெடுக்கும் என்பதில், மாற்று கருத்து இல்லை.

கேள்வி : இந்தியா, இதில் நடுநிலைமை வகித்திருப்பது எந்த நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது? தமிழ் மக்களுக்கு சாதகமான நிலைப்பாடுதான் என கருதலாமா?

பதில்: இந்தியா, எங்களுடைய அண்டை நாடு என்ற வகையிலும், தமிழ் மக்களின் நலன் சார்ந்த நாடு என்ற வகையிலும், எங்கள் மீது அக்கறை கொண்ட நாடு என்ற வகையிலும், எங்களுக்கான அரசியல் தீர்வு, சமாதானம், சமத்துவம், நீதி என்பவற்றில் அக்கறை கொண்டுள்ளதாகவும், இந்திய பிரதமருடைய வருகையிலும், இந்திய வெளிநாட்டு அமைச்சருடைய வருகையிலும், வெளிநாட்டு செயலாளருடைய வருகையிலும், இந்தியாவில் பல்வேறு தளங்களிலும், அவர்கள் அதை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆகவே, தமிழ் மக்கள் மனித உரிமை பேரவையிலே கொண்டுவரப்பட்ட பிரேரணையால் எங்களுக்கு நீதி ஒருவகையிலும் கிட்டாதென்று தெரிந்திருந்தாலும் கூட இந்தியா எங்களுடைய ஆதரவு சக்தியாக இருக்கும் என்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்துக்கும் உணர்த்த பெரிய நம்பிக்கையோடு நாங்கள் காத்திருந்தோம். ஆகவே, இந்த நடுநிலைமை போக்கானது, தமிழ் மக்களை பொறுத்தளவிலே, பாரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த நடுநிலைமைப்போக்கு எங்களுக்கு ஒரு சாதகமானதாக நாங்கள் கருத முடியாது. ஆனால் இந்தியாவின் ஆதரவு எம்மக்கள் விடயத்தில் அவசியமானது.

கேள்வி: ஆனால், பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின் ஊடாக, ஒரு அரசியல் தீர்வு, தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டும் அல்லது மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, இந்தியாவின் வலியுறுத்தலால்தான், இதில் உள்வாங்கப்பட்டு இருக்கிறது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. ஆகவே, இந்தியா அக்கறை கொண்டுள்ளது தானே?

பதில்:அப்படியாயின் ஏன் பிரேரணை சார்பாக வாக்களிக்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. பதின்மூன்றாவது திருத்தச் சட்டம் என்பது, முப்பத்தி மூன்று வருடங்களுக்கு முன்னர், இலங்கையினுடைய அரசியல் யாப்பிலே உள்வாங்கப்பட்ட ஒரு மாகாண சபை அதிகாரப் பரவலாக்கல் முறையாகும். இதை முற்றும் முழுதாக நடைமுறைப் படுத்துவதற்கு, இந்தியாவினுடைய நேரடித் தலையீடு அல்லது நேரடி அழுத்தங்களே, இலங்கை அரசாங்கத்தை, அதை நிறைவேற்றுவதற்கு, சாதகமாக அமையும். ஆகவே, அந்த அரசியல் விடயத்தை, இந்தியா கையாள முடியாது என கொண்டு போய், நீதி பொறிமுறை, அல்லது பொறுப்பு கூறலுக்கு உருவாக்கப்பட்ட பிரேரணைக்குள்ளே, பதிமூன்றாவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி உள்வாங்கச் சொல்லி இருப்பது, நேரடியாக இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி அதை நடைமுறைப்படுத்த முடியாத நிலைமையில் இந்தியா இருக்கிறதா என்று எங்களை சிந்திக்க தூண்டுகிறது.

கேள்வி: அப்படி என்றால் இந்த பிரேரணையால் எந்தவித நன்மையும் இல்லை என்று கருதுகிறீர்களா?

பதில்: அப்படி நான் சொல்லவில்லை. இந்த பிரேரணை வந்து பல சிறப்பான அம்சங்களை உள்வாங்கி இருக்கிறது, குறிப்பாக இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் மூலம் இலங்கைக்கான பொறுப்பு கூறல் அல்லது குற்றவியல் விசாரணை என்பதை இலங்கையினுடைய அரசின் கரங்களில் இருந்து நகர்த்தி, இலங்கைக்கு வெளியிலே இந்த பிரேரணை கொண்டு செல்ல வைத்திருக்கிறது. ஆனால், அது எங்களுடைய பரிகார நீதியை பெற்றுத்தரக்கூடிய அதிகாரம் மிக்கதாக, அல்லது வலு உள்ளதாக இல்லை என்பதுதான் எங்களுடைய மனக்குறை. உதாரணமாக, இந்த குற்றவியல் விசாரணை பொறிமுறை என்பது, ஐ.நா செயலாளர் நாயகத்தினுடைய நேரடி கண்காணிப்பின் கீழ், அவருடைய பணிப்புரையின் கீழ், அவருடைய கட்டுப்பாட்டின்கீழ் வருகின்ற பொழுதுதான், அது ஒரு வலுவானதாக, பலம் மிக்கதாக அமையும். மனித உரிமைப் பேரவையினால் சட்ட ரீதியான நெருக்கடிகளை உருவாக்கவோ அல்லது நீதிப் பொறிமுறையையோ இப்போது நிறைவேற்றிய பிரேரணை மூலம் பெற்று கொடுக்க முடியாது. இலங்கை அரசை நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களை இணை அனுசரணை வழங்கி, நடைமுறைப்படுத்த தூண்டுகிற அல்லது கட்டுப்படுத்த வல்ல சரத்துக்கள் எதுவும் இப்பிரேரணையில் இல்லை.

கேள்வி: எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் நகர்வு எப்படி இருக்க வேண்டும், உங்களுடைய கருத்தை கூற முடியுமா?

பதில்: உரிமைப் போராட்டத்தை ஆரம்பித்த பொழுது உரிமையைப் பெற்றுக் கொள்ளுகின்ற பிரச்சனை மாத்திரம் அதாவது அதிகார பரவலாக்கள் மூலம் எங்களுக்கான ஒரு சுயாட்சி அலகு முறைய பெற்றுக் கொள்வதற்கான தேவையே எங்கள் மக்களிடம் இருந்தது. ஆனால் இன்று, அது பல பரிமாணங்களை எட்டிய, ஒரு விரிவடைந்த அரசியல் போராட்டமாக காணப்படுகிறது. உள்ளகத்திலேயே தீர்த்துக் கொள்ளக்கூடிய இந்த விடயம், இன்று சர்வதேச நாடுகளுடைய தலையீடு உட்பட பல கோணங்களை நோக்கி, எங்களுடைய அரசியல் நகர்வு அமைந்திருக்கிறது.

முதலாவதாக, எங்களுடைய மக்களினுடைய நீதியை, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட குற்றங்களுக்கான, பரிகார நீதியைப் பெற்றுக் கொள்ளுகின்ற முயற்சி, இரண்டாவதாக, எங்களுடைய நீண்ட கால கோரிக்கையான அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டியது . மூன்றாவதாக எங்களுடைய இனப் பரம்பலை செழுமைப் படுத்த எங்களுடைய மக்களை பொருளாதார ரீதியாக கட்டி வளர்த்தெடுக்க வேண்டிய நகர்வினையும் மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. ஆகவே எங்கள் மக்களுக்கான நீதி, அரசியல் தீர்வு, பொருளாதார கட்டமைப்பு என்ற மூன்று விடயங்களை, இன்று தமிழ் தேசிய அரசியல், முகம் கொடுத்து நிற்கின்றது.

ஆகவே, மிகவும் காத்திரமான முறையிலே, மிக திட்டமிட்ட வகையிலே, சர்வதேச நாடுகளின் உதவியின் அடிப்படையிலேயும், அவர்களுடைய ஆதரவோடும்தான், இந்த விடயத்தை நாங்கள், வெற்றிகரமாக முன்னெடுத்து, எங்களுடைய இனம் முகம் கொடுத்து கொண்டிருக்கின்ற, மூன்று பிரச்சனைகளுக்கும், முடிவு காண எதிர்காலத்தில் நாங்கள், எதிர்கொள்ள வேண்டிய, அரசியல் நகர்வு.

கேள்வி: இன்று பதவியில் இருக்கும் அரசாங்கம், உள்ளகப் பொறிமுறை ஊடாக, தாங்கள் இந்த விடயங்களை முன்னெடுப்பதாக, கூறியிருக்கிறார்கள். இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.

பதில்: இன்று இந்த அரசு நல்லிணக்கம் பொறுப்பு கூறல் அல்லது அரசியல் தீர்வு, அபிவிருத்தி என்ற பல விடயங்களை தாங்கள் உள்ளகப் பொறி முறைய முலம் முன்னெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் அரசை அரியணையில் ஏற்றிய உடனே சிங்கள பௌத்த பெரும்பான்மை நலன்களைத்தான் முன்னெடுப்போம் என்று அவர்கள் உறுதி பூண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறார்கள். அரசில் நம்பிக்கை வைப்பதற்கு பதிலாக, அதை நீர்த்துப் போகின்ற செயல் திட்டங்களே முன்னெடுக்கப்பட்டிருக்கிறன.

உதாரணமாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட ராணுவ வீரர்களை அல்லது பாதுகாப்பு படையினரை ஜனாதிபதியினுடைய சிறப்பு ஆணையின் கீழ் விடுதலை செய்து நல்லிணக்கத்திற்கான அல்லது பொறுப்பு கூறலுக்கு தாங்கள் தயார் இல்லை என்பதை தெரிவித்திருக்கிறார்கள்.

அதே போன்று தொல்லியலின் ஊடாக எங்களுடைய கலாச்சார மையங்கள், நிலம், காணி அபகரிப்பு என்ற விடயங்களை, வேறு வடிவத்தில், மாற்று வடிவத்தில் முன்னெடுப்பதை, நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது. அதே போன்று, பொருளாதார கட்டமைப்பை, வளர்த்தெடுப்பதற்கான , சர்வதேச முதலீட்டாளர்களையோ அல்லது வேறு வடிவத்திலோ, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வரக்கூடிய சூழ்நிலை இன்று அருகி வருகின்றதை காணுகிறோம். தமிழ் மக்களுடைய பிரச்சனை ஒருபுறமிருக்க, முஸ்லிம் மக்களுடைய பிரச்சனைக்கு உக்கிரமடைந்து இப்பொழுது சிங்கள கிறிஸ்தவர்களுடைய பிரச்சனையும் விசுவரூபம் எடுத்துள்ளது. அவர்களும் சர்வதேச நீதியை கோரும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலைமையிலே இந்த நாட்டிலே பல்வேறுபட்ட இனங்கள், மதங்களுக்கு இடையிலான ஒரு பிரச்சனைய அரசு வளர்த்து இருக்கிறது என்றே கூற வேண்டும். இந்த சூழ்நிலையிலே உள்ளகப் பொறிமுறை என்பது ஒருபோதும் வெற்றி தரக்கூடியதாக அமையாது.

Samugammedia.com

Posted in Uncategorized

மாகாண சபை தேர்தல் தொடர்பான தீர்மானம் ஒத்திவைப்பு

மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவை பத்திரத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நடவடிக்கையை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (29) இரவு இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஜனக பண்டார தென்னகோனால் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்த புதிய சட்டமூலம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அந்த சட்டமூலத்திற்கு அமைய 70 வீதமானோர் தொகுதி வாரியான முறைமைக்கும் 30 வீதமானோர் விகிதாசார முறைமையின் கீழும் உறுப்பினர்களை தெரிவுச் செய்வதற்கு அமைச்சரவையில் தமது இணக்கப்பாட்டை தெரிவித்திருந்தனர்.

ஆனால், தொகுதிவாரி முறைமையின் கீழ் ஒரே கட்சியைச் சேர்ந்த மூவர் தெரிவுச் செய்யப்படுவதற்கு அமைச்சரவையின் சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனவே, குறித்த யோசனை தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி தீர்மானத்தை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதுவரை குறித்த அமைச்சரவை பத்திரத்தை கலந்துரையாடலுக்கு உட்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அழுத்தங்களை எதிர்கொள்ள இலங்கைக்கு ஆதரவு வழங்கும் சீனா!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் நேற்று (29) மாலை ஒரு தொலைபேசி உரையாடலை நடத்தியுள்ளனர்.

இதன்போது அனைத்து துறைகளிலும் பரஸ்பர நன்மை பயக்கும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மேம்படுத்தவும் ஒப்புக் கொண்டதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையின் நிலையான அபிவிருத்திக்கு தாம் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும், பலதரப்பு அரங்கில் எதிர்கொள்ளும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில் இலங்கைக்கு உறுதுணையாக நிற்பதாகவும் சீன ஜனாதிபதி இதன்போது வாக்குறுதியளித்துள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமீபத்தில் முடிவடைந்த 46 ஆவது அமர்வில் இலங்கைக்கு சிறப்பான ஆதரவளித்ததற்காக ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசாங்கத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அதேநேரம் 600,000 சீன கொவிட் தடுப்பூசி டோஸ்களை வழங்கியமைக்காவும் நன்றி தெரிவித்தார்.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த உரையாடலில் இணைந்த சீனத் தலைவர், கொவிட் -19 தொற்றுநோய் ஒரு சக்திவாய்ந்த சவாலாக இருந்தது, இது சீனா-இலங்கை உறவுகளை புதிய நிலைக்கு உயர்த்த உதவியது என்று கூறினார்.

இலங்கை ஜனாதிபதியுடனான தொலைபேசி அழைப்பின் போது, ஜனாதிபதி ஜி, இலங்கைக்கு சீனா தொடர்ந்து தேவையான உதவிகளை வழங்கும், விமான போக்குவரத்து மற்றும் கல்வி உள்ளிட்ட பகுதிகளில் ஒத்துழைப்பை நடத்துகிறது மற்றும் பிற ஒத்துழைப்பு பகுதிகளை ஆராயும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் பட்டுச் சாலை ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில் இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்களிப்பதற்கும் சீனா இலங்கையுடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாக ஜனாதிபதி ஜி குறிப்பிட்டுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் பிற உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் திருப்திகரமாக முன்னேறி வருவதாகக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, இந்தத் திட்டத்தின் மீதமுள்ள பணிகளை விரைவாக முடிக்குமாறு சீன அரசிடம் கேட்டுக்கொண்டார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தனது பதவிக் காலத்தின் மீதமுள்ள நான்கு ஆண்டுகளில் இலங்கையின் செழிப்புக்கும் வளர்ச்சிக்கும் தேவையானதைச் செய்ய விரும்புவதாகக் கூறினார்.

“வறுமை ஒழிப்பு எங்கள் முதன்மை நோக்கம். அதற்காக, சீனாவின் முன்மாதிரியை நாம் பின்பற்றலாம் ”என்றார்.

கடந்த சில ஆண்டுகளில், தனது நாட்டில் 9 மில்லியன் மக்கள் வறுமையிலிருந்து உயர்த்தப்பட்டதாக தெரிவித்த சீனத் தலைவர் இலங்கையில் வறுமையை ஒழிக்க உதவ விருப்பம் தெரிவித்தார்.

ஐ.நாவில் சீனாவின் சட்டபூர்வமான இடத்தை மீட்டெடுப்பதற்கு இலங்கை அளித்த ஆதரவை சீனா ஒருபோதும் மறக்காது என்றும், பரஸ்பர அக்கறை தொடர்பான பிரச்சினைகளில் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பதற்கும், ஒருவருக்கொருவர் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், உலகளாவிய நீதியை ஊக்குவிப்பதற்கும், இலங்கையுடன் தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ஜி கூறினார்.

2014 இல் இலங்கைக்கு விஜயம் செய்ததை நினைவு கூர்ந்த ஜி ஜின்பிங், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ சீனாவுக்கு விரைவில் விஜயம் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இலங்கை மத்திய வங்கிக்கு சீன மக்கள் வங்கி வழங்கிய நாணய இடமாற்று வசதியை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ பாராட்டியதோடு, இது நிச்சயமாக இலங்கையின் நிதி ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த உதவும் என்றும் கூறினார்.

இலங்கை-சீனா நட்பின் அடையாளமாக ஹம்பாந்தோட்டையில் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்படுவதற்கு சீனாவின் தொடர்ச்சியான ஆதரவை நாடிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100 ஆவது ஸ்தாபக ஆண்டு விழாவிற்கு சீனாவை வாழ்த்தினார்.

Posted in Uncategorized

நிலாவரையில் தொல்லியல் திணைக்கள பணிகளை இளைஞர்களைத் திரட்டிவந்து ரெலோ தவிசாளர் தடுத்தார். – பொலிசார் விசாரணை

நிலாவரை பகுதியில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளை இளைஞர்களைத் திரட்டி வந்து தடுத்தார் எனக் குற்றம் சுமத்தப்பட்டு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் தீவிர விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, நிலாவரை பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்க தடை ஏற்படுத்தினார் என தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய பேசவேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டார்.

அங்கு மல்லாகம் பொலிஸ் வலயத்திற்கு பொறுப்பான பொலிஸ் சுப்பிரின்டன் என.;டபிள்யூ.ஜே.சி. ஜெயக்கொடி தலைமையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுமுது பிரசன்ன, தொல்லியல் திணைக்களத்தின் யாழ் – கிளிநொச்சிக்குப் பொறுப்பான பணிப்பாளர் நளின் வீரதுங்க ஆகியோர் இருந்தனர்.

தவிசாளர் பெருமளவானவர்களைத்திரட்டி வந்து தொல்லியல் திணைக்களத்தின் பணிகளை தடைசெய்துள்ளார் என தமக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதனால் அது பற்றி பேசவுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர், தொல்லியல் திணைக்களம் எற்கனவே குறிப்பிட்ட பகுதியை சுத்தம் செய்யப்போவதாக கூறியிருந்தது. ஆனால் அவர்கள் கட்டிட அத்திவாரம் வெட்டுவது போன்று ஆழமாக கிடங்கினை வெட்டினர். ஆந்த இடத்தில் கட்டிடங்கள் ஏதாவது அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகின்றதா என பிரதேச சபைக்குரிய பொறுப்புணர்வு பார்வையிட நான் சென்றேன். அப்போது என்னை இராணுவத்தினர் விசாரணை செய்தார்கள்.

இதனால் அங்கே சுமூகமற்ற நிலைமை ஏற்பட்டது. மக்கள் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளில் சந்தேகம் கொள்வதனால் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறப்பட்டே செயற்பட வேண்டும் என தொல்லியல் திணைக்கள அதிகாரிகளை வலியுறுத்தினேன்.

அதற்கு பொலிஸ் தரப்பில் இருந்தும் தொல்லியல் திணைக்கள தரப்பிடம் இருந்தும் தொல்லியல் திணைக்கள சட்டத்தின் பிரகாரம் யாரிடமும் அனுமதிபெறவேண்டியதில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை எனவே இதில் தவிசாளர் தலையிடுவதை நிறுத்த வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டது.

அதற்கு தவிசாளர் நிலாவரை விடயத்தில் பிரதேச சபை பகிரங்க கேள்விக்கோரலில் கடந்த பலவருடமாக குத்தகைக்கு வழங்கி வருகின்றது. எனவே எமக்கும் அப் பிரதேசத்தில் நிர்வாக ரீதியிலான அதிகாரம் உள்ளது. என தவிசாளர் தெரிவித்தபோது தாம் எமக்கு அதிகாரம் கிடையாது என கடிதம் அனுப்பியுள்ளதாக தொல்லியல் திணைக்கள அதிகாரியிலானால் கூறப்பட்டது. அதற்குத் தவிசாளர் தனிச்சிங்களத்தில் ஒரு கடிதம் கிடைக்கப்பெற்றது.

நான் அதனை அரச கருமமொழிகள் திணைக்களத்திற்கு முறைப்பாடாக அனுப்பியுள்ளேன். வடக்குக் கிழக்கில் அரச கருமமொழி தமிழ் என்பதையும் அதற்கான சட்ட ஏற்பாடுகளையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற போது தொலலியல் திணைக்கள அதிகாரி தாம் அரச அதிபருக்கே சிங்களத்தில் தான் கடிதம் அனுப்புவதாகவும் பெறுபவர்கள் அதனை மொழிபெயர்த்து புரிந்து கொள்வதாகவும் அலட்சியமாக தெரிவித்தார்.

தாம் யாழ் மாவட்டத்தில் சகல இடங்களிலும் பணிகளை செய்கின்றோம் அங்கு எல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. இங்குதான் பிரச்சினை என தொல்லியல் திணைக்களத்தினால் அதிர்ப்தி தெரிவிக்கப்பட்டது.

மக்களிடத்தில் தங்கள் திணைக்களத்தின் பணிகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதனால் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் கட்டிடங்கள் திருத்தம், புதிதாக அமைத்தல் விடயத்தில் சபை அனுமதி பெறப்படவேண்டியது சட்டமாகும் எனவும் தவிசாளரினால் தெரிவிக்கப்பட்டது.

எனினும் பொலிஸ் தரப்பும் தொல்லியல் திணைக்களத்தரப்பும் தொல்லியல் திணைக்களத்தின் பணிகளுக்குள் எவரும் தலையிடக்கூடாது எனவும் தவிசாளர் தான் மக்களை அழைத்து வந்து குழப்புகின்றார் என்றனர். தவிசாளர் ஒதுங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட நிலையில் அதற்கு தவிசாளர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் நீதிமன்றத்திற்கு விடயம்பாரப்படுத்தப்படுவதாக பொலிஸ் தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன் பொலிஸ் தரப்பினால் தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டிற்கான பதில் அறிக்கை தவிசாளரிடம் பெறப்பட்டது. அதன்போது தவிசாளர் யார் கூறி நிலாவரைக்கு வந்தார். நிலவரையில் நின்ற வண்ணம் யார் யாருடன் தொலைபேசியில் பேசினார், என்ன பேசினார் என தனிமனித சுதந்திரத்திற்குப் புறம்பான விசாராணைகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in Uncategorized

‘ஐ.நாவில் தமிழில் பேசியது ஒரு மகிழ்ச்சியான தருணம்’ – நரேந்திர மோதி

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பரப்புரை மேற்கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி வந்துள்ளார்.

இன்று காலை விமானம் மூலம் கோயம்புத்தூர் வந்த நரேந்திர மோதி காலை 11 மணிக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் பரப்புரை செய்தார்.

அடுத்ததாக , திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல். முருகனுக்கு ஆதரவாகப் பரப்புரை செய்கிறார் நரேந்திர மோதி.

நரேந்திர மோதி தமது பிரசார உரையைத் தொடங்கும் முன் எல். முருகன் அவருக்கு வேல் ஒன்றை வழங்கினார். ‘வெற்றி வேல், வீர வேல்’ என்று கூறி தமது பரப்புரையைத் தொடங்கினார் நரேந்திர மோதி.

தமிழகத்தின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றான தாராபுரம் வந்தது தமக்கு மகிழ்ச்சி என்று மோதி குறிப்பிட்டார்.

உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியில், ஐக்கிய நாடுகள் மன்றத்தில் பேச தமக்கு வாய்ப்பு கிடைத்தது என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்று. தமிழ் மொழியையும், பண்பாட்டையும் மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம், என நரேந்திர மோதி குறிப்பிட்டார்.

சமீபத்தில் சர்ச்சைக்கு உள்ளான திமுகவின் திண்டுக்கல் ஐ. லியோனி, ஆ. ராசா ஆகியோரின் பேச்சுகளையும் மோதி தமது உரையில் விமர்சித்தார்.

ஆண்டாள், ஒளவையார் ஆகியோரது கருத்துகளால் ஊக்கம் பெற்ற தாங்கள் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்துகிறோம் என்றும் மோதி கூறினார்.

கொங்கு பகுதியில் உள்ள மக்கள் தொழில் செய்வதற்கு பெயர் பெற்றவர்கள்; அதேபோல இரக்க குணத்துக்கும் பெயர் பெற்றவர்கள். கடந்த ஆண்டு கொங்கு மண்டலத்தில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவங்கள் தங்கள் சக்திக்கு மீறி நாட்டுக்கு பங்காற்றின. அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவோம் என்று நரேந்திர மோதி தெரிவித்தார்.

நரேந்திர மோதியின் ஆங்கில உரையை கோயம்புத்தூர் தெற்கு தொகுதி பாஜக வேட்பாளரும், அந்தக் கட்சியின் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் தமிழில் மொழிபெயர்த்தார்.

Posted in Uncategorized

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் எனது பெயரா?

உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் தனது பெயர் இடம்பெற்றுள்ளமைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள அவுஸ்திரேலிய பேராசிரியர் ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த பேராசிரியர் லுக்மன் தலிப்பே இதனை தெரிவித்துள்ளார்.

அவரின் சார்பில் பிரிட்டனை சேர்ந்த பரப்புரை அமைப்பொன்று அறிக்கையொன்றை இலங்கையின் நாளேடுகளிற்கு அனுப்பிவைத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கையில் சமீபத்தில் இடம்பெற்ற விவாதங்களின் போது எதிர்பாராத வகையில் எனது பெயருக்கு களங்கமேற்படுத்தப்பட்டுள்ளது என பேராசிரியர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிகாரிகள் என்னை தொடர்புகொள்ளவில்லை,எனக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அவர்கள் என்னை விசாரிக்கவில்லை எனவும் அவுஸ்திரேலிய பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

மாறாக பத்திரிகைகள் மூலம் நான் இதனை அறிந்தேன் என தெரிவித்துள்ள அவர் இது எனக்கான உரிய நடைமுறைகளை மீறும் செயல் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது எனக்கு முற்றிலும் வெறுப்பை ஏற்படுத்துகின்றது என தெரிவித்துள்ள பேராசிரியர் நான் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை பொதுசுகாதாரம் விஞ்ஞான ஆராய்ச்சிக்காக செலவிட்டுள்ளேன் பொதுமக்களின் உயிர்களின் பாதுகாப்பிற்காக செலவிட்டுள்ளேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த அவதூறு குற்றச்சாட்டுகளிற்காக இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுக்குமாறு நான் எனது சட்டத்தரணிகளை கேட்டுக்கொண்டுள்ளேன் என தெரிவித்துள்ள பேராசிரியர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் இலங்கையில் உள்ள எனது உறவினர்கள் துன்புறுத்தல்களை சந்தித்துள்ளனர் என தெரிவித்துள்ளதுடன் இலங்கை அரசாங்கம் இவ்வாறான முக்கிய விசாரணைகளை மேற்கொள்வதற்கான நம்பகதன்மையும் பக்கசார்பின்மையும் தன்னிடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பாக அது யுத்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள நிலையில் எனவும் தெரிவித்துள்ளார்.

தற்போது நான் கட்டார் பல்கலைகழகத்தில் சிரேஸ் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளேன் என தெரிவித்துள்ள அவர் நான் ஆறுமாத சித்திரவதையை எதிர்கொண்டுள்ளேன் இது உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

எனது துயரங்களிற்கு நான் பிறந்த நாடே காரணம் என்பது தெளிவாகின்றது அவர்கள் இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு பொதுஜன பெரமுன வலியுறுத்தல்

எந்த வகையிலாவது மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறும். அது எந்த முறையாக இருந்தாலும் தேர்தலை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை உறுப்பினர்கள் மன்றத்தின் தலைவர் கஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

“மாகாண சபைத் தேர்தல் பிற்போடப்பட்டு தற்போது 4 ஆண்டுகளாகிறது. சகல மாகாண சபைகளின் உறுப்பினர்களது பதவிக்காலம் முடிவடைந்துள்ளதுடன், மக்கள் பிரதிநிதிகள் இல்லாது இயங்கி வருகிறது. இது இலங்கை அரசியல் வரலாற்றில் ஓர் கறையாகும்.

ஜனாதிபதி, பிரதமர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமைப்பதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய பசில் ராஜபக்ஷ முவருமே மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு கூறியிருந்தனர்.

மாகாண சபை தேர்தலை இரண்டு வழிமுறைகளை கீழ் நடத்துவது குறித்து அமைச்சரவை பத்திரமொன்றை விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன் அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அந்த பத்திரத்தை ஆராய வேண்டுமென கோரி ஒரு வார கால அவகாசம் கேட்டிருந்தனர். எனினும், தற்போது பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் இதற்கான முடிவு இதுவரையிலும் எடுக்கப்படவில்லை.

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது தொடர்பான வாத விவாதங்கள் நடத்தாது, அதனை அங்கீகரிக்கப்படாது இந்த அமைச்சரவை பத்திரத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.

ஆகவே, கடந்த முறை அமைச்சரவை பத்திரத்துக்கு நடந்தது போன்று இம்முறையும் நடத்த வேண்டாமென, சகோதர கட்சிகளின் தலைவர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணாயக்கார ஆகியோரிடம் வேண்டுகோள் விடுக்கிறோம்.

எந்த வகையிலாவது மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துங்கள். அது எந்த முறையாக இருந்தாலும் பிரச்சினையில்லை. தேர்தலை சந்திக்க நாம் தயாராகவே இருக்கிறோம். ஆகவே ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்துமாறு நாம் சகல தரப்பினரிடமும் கேட்டுகொள்கிறோம்” என்றார்.

இந்திய சிறைகளில் உள்ள தமிழ் மீனவர்கள் விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்தவில்லை – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி

இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் இலங்கை அரசினால் உடனடியாக விடுதலை செய்யப்பட்டது போல் இந்தியாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் மீனவர்களையும் உடன் விடுதலை செய்ய இலங்கை,இந்திய அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (29) காலை இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பில் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கடந்த வாரம் 54 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு அவர்கள் இரண்டு தினங்களில் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மீனவர்களின் விடுதலைக்காக இந்திய தூதரகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த மீனவர்களுக்கு விடுதலையை பெற்றுக் கொடுத்தமை பாராட்டத்தக்கது.

ஆனால் இலங்கை மீனவர்கள் எல்லை தாண்டி குற்றச்சாட்டில் பிடி பட்டு இந்திய சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றார்கள்.

பெரும்பான்மை இன மீனவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்வதற்காக இலங்கை அரசாங்கமும், இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு அவர்களை விடுதலை செய்கின்றனர்.

ஆனால் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களையும், அவர்களின் மீன் பிடி உடமைகளையும் இன்று வரை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்கள் எல்லை தாண்டி பிடிபடும் பட்சத்தில் அவர்களை விடுவிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

இலங்கை அரசாங்கம் தமிழர்களின் விடையம் என்ற வகையில் அசமந்த போக்கை கடைப்பிடிக்க கூடாது. அவர்களும் மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களின் விடுதலைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்கள் என்ற காரணத்தினால் அவர்கள் தொடர்ந்தும் சிறையில் வாட அனுமதிக்கக் கூடாது.எனவே தமிழராக உள்ள மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்விடையத்தில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் இருக்கின்ற இலங்கை தூதரகமும் இலங்கை அரசாங்கமும் தமிழ் மீனவர்களை விடுதலை செய்வதற்கான ஒரு முயற்சியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

எங்கு பார்த்தாலும் இன ரீதியான ஒடுக்கு முறையை இலங்கை அரசாங்கம் செய்து வருகின்றது. குறிப்பாக எல்லை தாண்டி போகின்ற எமது மீனவர்கள் இன்றைக்கும் சிறைகளில் வாடிக்கொண்டு இருக்கின்றார்கள்.அவர்கள் வேண்டும் என்று எல்லை தாண்டிச் செல்வதில்லை.

எனவே அவர்களை விடுதலை செய்வதற்கான முயற்சிகளை யாரும் செய்யவில்லை. நாங்களும், அமைப்புக்களும் மீனவர்களை விடுதலை செய்ய குரல் கொடுக்கின்றோம்.

ஆனால் அரசாங்கம் இவ்விடையத்தில் அக்கறை செலுத்தவில்லை.எனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எமது மீனவர்கள் மீது கவனம் செலுத்தி அவர்களை விடுதலை செய்து நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ரெலோ செயலதிபர் தளபதி குட்டிமணியின் தீர்க்கதரிசனமும் ஐ.நா ஞானமும்

இன்றைக்கு 38ஆண்டுகளுக்கு முன்னர், ஜூலை மாதத்தில் கட்டவிழ்த்துவிடப்பட்ட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளும் கறைபடிந்த வரலாற்று நிகழ்வுகளும் பலருக்கும் இன்னும் ஞாபகத்தில் இருக்கும். அதனால்தான், ‘கறுப்பு ஜூலை’ என அடையாளப்படுத்தப்பட்டது.

தமிழர்களுக்கு எதிராக, தலைநகரிலும் மலையகத்திலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையின் ஓர் அங்கமாகவே, வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிந்த தமிழ்க் கைதிகளில் 51 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அதில்,தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ)செயலதிபர் தளபதி குட்டிமணி என்றழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரனின்,ரெலோ ஸ்தாபகர் நடராஜா தங்கத்துரை ஆகியோரின் இறப்பு, இன்னும் பேசும்பொருளாகவே இருக்கிறது.

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தாமல், எந்தவோர் அரசாங்கமும் இலங்கையில் ஆட்சி நடத்தியதில்லை. 1942 முதல் 2018 வரையிலும் 76 வருடகாலத்தில் இலங்கை மக்கள், அவசரகால, பயங்கரவாத சட்டங்களின் கீழ்தான் அடக்கியாளப்பட்டார்கள்; அழிக்கப்பட்டார்கள். 83இலும் அவசரகாலச் சட்டமே மறைமுகமாக ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டது.

ஜெனீவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில், இலங்கைக்கான புதிய பிரேரணையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அவசரகால, பயங்கரவாத சட்டங்கள் தொடர்பில் ஜெனீவாவில் பல தடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டன. அதனடிப்படையிலேயே அவசரகால சட்டம் 2011 நீக்கப்பட்டது. எனினும், அதிலிருந்த அதிகாரங்கள் பல, ஜனாதிபதிக்கு கைமாறின. 2018 மார்ச் 6, கண்டி- திகன சம்பவத்துக்குப் பின்னர், சில நாள்கள் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசரகாலச்சட்டம், 2019 உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்குப் பின், மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது.

அவசரகால, பயங்கரவாத தடைச்சட்டங்களிலான வலிகள், வேதனைகளை நன்கு அனுபவித்தவர்கள் தமிழர்கள். 1983 ஜூலைக் கலவரம், அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்தபோதுதான் மிகக் கச்சிதமாக அரங்கேற்றப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின்போதும் இச்சட்டம் அமுலிலிருந்தது. அவசரகாலச் சட்டத்தின் வலிகளை, சகல இனத்தினரும் அனுபவிக்கின்றனர். இவ்விரு சட்டங்கள் தொடர்பிலும், நீதிமன்றத்தில் வைத்து குட்டிமணி, அன்று கூறியவை, தீர்க்கதரிசனமாக இன்றிருக்கிறது.

“நாங்கள், சிங்களவர்களின் உரிமைகளைப் பறிக்கவந்தவர்கள் அல்லர். எங்களுடைய போராட்டத்துக்கு உங்களுடைய ஆதரவை நாடிநிற்கின்றோம். இன்று எங்களுக்கு ஏற்பட்டுள்ள கதி, நாளை உங்களுக்கு ஏற்படக்கூடும்” எனத் தெரிவித்திருந்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் பிரேரணை, இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டதல்ல; இந்த ஆட்சியில் மீறப்பட்ட மனித உரிமைகள், பொறுப்புகூறல், உள்ளிட்டவையும் உள்ளடங்குகின்றன என எதிரணியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் மீளாய்வு செய்யுமாறு ஐ.நா வலியுறுத்தியுள்ளமை ரெலோ செயலதிபர் தளபதிகுட்டிமணியின் தீர்க்கதரிசனத்துக்கான காலந்தாழ்த்திய ஞானமாகும் என்பதே எமது அவதானிப்பாகும்.

Posted in Uncategorized