இலங்கையில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு சர்வதேச விசாரணை! தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை வெளியானது

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை முன்னெடுப்பதற்கும், தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வை வழங்கும்பொருட்டு பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கும் மத்திய அரசை வலியுறுத்தவுள்ளதாக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் திகதி நடைபெறவுள்ள நிலையில், பிரதானமாகப் போட்டியிடும் தி.மு.க. கட்சி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், இந்தத் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர் நல்வாழ்வு என்ற தலைப்பின் கீழ் நான்கு விடயங்களைச் செயற்படுத்துவது தொடர்பாக உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதில், இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை குறித்து சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்திச் செயற்படுத்த வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையின் வடக்கு கிழக்கில் நீர்த்துப் போன அதிகாரப் பங்கீடுகளே அனுமதிக்கப்பட்டுள்ளன. எனவே, அங்குள்ள தமிழர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நிரந்தரமான அரசியல் தீர்வு அமைய ஈழத் தமிழர்கள், புலம்பெயர் தமிழர்கள் இடையே ஐ.நா.வின் மேற்பார்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்புச் சட்டத்தில் முழுமையான அதிகாரங்கள் தமிழர்களுக்குக் கிடைக்கும் வகையில் சட்டப் பிரிவுகளை உருவாக்குவதற்கு இலங்கையை நிர்ப்பந்திக்க வேண்டுமென மத்திய அரசை தி.மு.க. வலியுறுத்தும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கையில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த தமிழர்கள் குறித்தும் கரிசனை காட்டப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கும், இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புபவர்களுக்குத் தேவையானவற்றைச் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தி.மு.க.வின் அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஈழத் தமிழர் விடயம் வருமாறு,

இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் குறித்து ஆராய்வு – ரெலோ தலைவர் செல்வம் எம்.பி.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் இன்று சனிக்கிழமை (13.02.2021)காலை 9.30 முதல் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்ற விசேட சந்திப்பில் பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதாக தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் யாழில் இடம்பெற்ற சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளோம்.

குறிப்பாக பல்வேறுபட்ட அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியுள்ளோம். முக்கியமாக தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமையும் குறிப்பிடதக்கது.

ஏற்கனவே மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கமைவாக அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கைக்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, தலைமன்னார்-இராமேஸ்வரம் கப்பல் சேவை வெகு விரைவில் இடம் பெறும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே தெரிவித்தார்.

குறித்த சந்திப்பு மிக முக்கியமானதாக அமைந்திருந்தது.இந்தியாவை எமது மக்கள் கூடுதலாக பாதுகாப்பின் நிமித்தம் நேசிக்கின்ற ஒரு நிலை உள்ளது.

சுமார் ஒரு மணி நேரம் குறித்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இடம் பெற்றது. குறித்த சந்திப்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சித்தார்த்தன், சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

சபையில் நியமனத்திற்காக பலர் காத்திருக்கையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பினருக்கு பயிற்சியளிக்க முடியாது – ரெலோ வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ் தெரிவிப்பு

தமது சபையில் நிரந்தர நியமனத்திற்காக பலர் காத்திருக்கையில் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழான பயிற்சியாளர்க்கு பிரதேச சபையில் பயிற்சியளிக்க முடியாது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) யாழ் மாவட்ட அமைப்பாளரும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரும் ஆன தியாகராஜா நிரோஷ் மறுத்துள்ளார்.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பின் கீழ் பயிற்சி பெறுவோருக்கான உள்ளகப் பயிற்சியை பிரதேச சபையில் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இராணுவத்தின் பல்நோக்கு அபிவிருத்தி படைப்பிரிவு மற்றும் தேசிய பயிலுநர் கைத்தொழில் அதிகார சபை அதிகாரிகள் வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷைச் நேற்று வெள்ளிக்கிழமை (12) சபையில் சந்தித்து கலந்துரையாடினர்.

அவர்கள் தமது திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவோர் ஏற்கனவே சுகாதாரத் திணைக்களத்தில் பயிற்சி பெற்றதாகவும் தற்போது அவர்களுக்கான தொடர் பயிற்சியினை தமது உள்ளுராட்சி மன்றத்தில் தொடர்வதற்கு ஏற்பாடு செய்ய ஆவண செய்யுமாறு கேட்டுக்கொண்டனர்.

இந் நிலையில் தவிசாளர் நிரோஷ், தமது சபையில் ஏற்கனவே பலர் வெளிவாரியாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் பலர் நிரந்தர நியமனத்திற்காக நேர்முகத்தேர்வுகளில் தோற்றி அவ் விபரங்கள் அரசதுறை நிறுவனங்களுக்காக அனுமதிக்கப்பட்ட பதவிகளுக்கு ஆட்சேர்ப்புச்செய்தல் விதிமுறைக்கு அமைய, முகாமைத்துவ சேவை திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

எனினும் துரதிஸ்டவசமாக அரசாங்கத்தினால் நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வருடக்கணக்கில் சபைகளில் தொண்டாற்றிய பலர் நியமனம் இன்றித் தவிக்கின்றனர். அவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படாதிருக்க உள்ளுராட்சி மன்றங்களில் பயிற்சிக்காக புதியவர்கள் வருவது பொருத்தமற்றது.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் பயிற்சிக்கு வருபவர்கள் இங்கு நியமனத்தினைக் கோர சட்டரீதியான உரித்தற்றவர்களாகக் காணப்படினும் அரச கொள்கையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டால் தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும். ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் பாதிப்படைவர். எனவே பயிற்சி ஆயினும் புதியவர்களை உள்ளீர்ப்பது எமது தொழிலாளர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும்;.

ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்கள் தெழிற்றுறைத் தொழிலாளர்கள், எமது சபைகளில் சுகாதார மற்றும் வெளிக்களத் தொழிலுக்கான தேவைகளே உள்ளன. அதற்கு எம்மிடம் ஏற்கனவே பணியாற்றிய தொழிலாளர்களே தகுதியானவர்கள். எனவே நாம் ஏற்கனவே உள்ள தொழிலாளர்களை நியமிக்க பலதரப்பட்ட வகையில் நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

இந் நிலையில் புதியவர்களுக்கு சிற்றூழியர் விடயத்தில் தொழிற்பயிற்சியை எமது சபைவழங்க முடியாது என வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

பாரத பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கலந்துரையாடல்

பாரத பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இன்று தொலைபேசியூடாக கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு மற்றும் பல்தரப்பு விடயங்களின் அபிவிருத்தி மற்றும் நடப்பு ஒத்துழைப்பு விவகாரங்கள் தொடர்பில் இருநாட்டு தலைவர்களும் இதன்போது கலந்துரையாடியுள்ளனர்.

அத்துடன், COVID-19 சவால்களை எதிர்கொள்வது உள்ளிட்ட விடயங்களில் உரிய அதிகாரிகளுக்கு இடையிலான தொடர்பை தொடர்ச்சியாகப் பேணுவதற்கு இருநாட்டு தலைவர்களும் இணங்கியுள்ளதாக இந்தியப் பிரதமரின் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயல்நாட்டிற்கு முன்னுரிமை கொள்கையின் முக்கியத்துவம் தொடர்பில்
பாரத பிரதமர் நரேந்திர மோடி இதன்போது மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்து

புர்காவை தடை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளதாக அமைச்சர் ரியர் அத்மிரால் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு அது நேரடியாக தாக்கம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

5 வயது முதல் 16 வயது வரையிலான பின்ளைகள் நாட்டின் தேசிய கல்வி முறையின் அடிப்படையில் கல்வி கற்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு தேசிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பதிவு செய்யப்படாது 1000 இற்கும் மேற்பட்ட மத்ரசா பாடசாலைகளை எதிர்வரும் நாட்களில் தடை செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

ஐநாவுக்கு எதிரான பரப்புரைக்கு “காஸ் தொலையச்சுக்களை” தவறாப் பயன்படுத்தும் இலங்கை அரசு

2009 ஆம் ஆண்டு சிவில் போரின் இறுதிக் கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை திசைதிருப்புவதற்காக இலங்கை அரசானது பிரிட்டனின் இராஜதந்திர தொலை அச்சுக்களை வேண்டுமென்றே திரிவுபடுத்திக் கூறும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளின் இலங்கை பற்றிய பத்து வருடகால அறிக்கைகளை இல்லாமல் செய்யும் தீவிர நடவடிக்கையாக இது உள்ளது என உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச அமைப்பு ( INTERNATIONAL TRUTH AND JUSTICE PROJECT) தெரிவித்துள்ளது.

குறித்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம்,

Posted in Uncategorized

சீனா- இலங்கைக்கு இடையிலான நாணய மாற்றம் உன்னிப்பாக கவனிக்கப்படுகின்றது- சர்வதேச நாணய நிதியம்

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட நாணய இடமாற்று ஒப்பந்தத்தை, உன்னிப்பாக அவதானித்து வருவதாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எஃப்) தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் 10 பில்லியன் யுவான் (1.54 பில்லியன் டொலர்) நாணய மாற்றத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

குறித்த ஒப்பந்தம், இலங்கையின் தற்போதைய சிரமங்களை எதிர்கொள்ள ஏற்புடையதாக அமையும் என எதிர்ப்பார்ப்பதாக நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் ஜெர்ரி ரைஸ் (Gerry Rice) ஊடகவியலாளரிடம் கூறியுள்ளதாவது, சீனாவின் மக்கள் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்ட இலங்கையின் பொருளாதார கொள்கை நிதி முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட நிதி திட்டம், கடந்த ஆண்டு ஜூன் 2020 இல் காலாவதியானது.

இதேவேளை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடன் அவசர நிதி உதவி கோரியுள்ளது.

அத்துடன் பொருளாதார சவால்கள் மற்றும் அதிகளவான பொது கடன்கள் காரணமாக குறித்த நிதியினை வழங்குவது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே அதனை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Posted in Uncategorized

இந்திய தூதூவர் யாழ் விஜயம் – சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் முதல்வருடன் கலந்துரையாடல்

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டார்.

யாழ்ப்பாணத்திற்கான இந்த விஜயத்தின் போது இந்திய பல இடங்களிற்கும் சென்று பலரையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்குச் சென்று விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டார். இதன் பின்னர் நல்லை ஆதீனத்திற்கு சென்று ஆதீன குருமுதல்வரைச் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் ஒரு அங்கமாக இந்திய உதவியில் அமைக்கப்படும் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்திற்கும் சென்று புனரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து யாழ் பொது நூலகத்திற்கு சென்று நூலகத்தை பார்வையிட்டதுடன் மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனையும், ரெலோ யாழ் மாவட்ட உப தலைவரும்,யாழ் மாநகரசபை துணை முதல்வர் ஈசன்னையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இன் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர்,ரெலோ யாழ் மாநகரசபை துணை முதல்வர், யாழ் இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் மாநகரசபை உறுப்பினர்கள் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Posted in Uncategorized

இலங்கை விவகாரம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் விவாதம்!

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றிற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு குறித்த பொது விவாதத்தை நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் அர்ப்பணிப்பு குறித்த இந்த பொதுவான விவாதம் 2021 மார்ச் 18 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் – சியோபேன் மெக்டோனாக், எலியட் கோல்பேர்ன் மற்றும் சேர் எட்வர்ட் டேவி ஆகியோர் இந்த விவாத யோசனையை முன்வைத்துள்ளனர்.

மன்னார் பொது வைத்தியசாலையின் பிரச்சினைகள் தொடர்பாக ரெலோ தலைவர் செல்வம் எம்.பி வடக்கு ஆளுநருக்கு அவசர கடிதம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டுள்ள பிரச்சினைகளை நிவர்த்தி செய்யக் கோரி தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்றைய தினம் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ்சிற்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில்,

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் உங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

மன்னார் மாவட்ட பொது வைத்திய சாலையில் குறிப்பாக வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வருகின்ற நோயாளிகள் கோடைக் காலத்தில் வெயிலிலும், மழைக்காலங்களில் மழையிலும் நின்று மருத்துவ உதவியை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த சிரமத்தைத் தனிக்க நடவடிக்கை எடுக்கவும் அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவும் ஒரு மில்லியன் ரூபாய் நிதி தேவை என்றும் ஏகமனதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவை மீண்டும் மறுசீரமைத்து அங்கத்தவர்களை இணைத்து செயல்பாடுகளையும் செயல்படுத்த வேண்டும்.

எனவே குறித்த பிரச்சினைகள் உடனடியாக நிவர்த்தி செய்யத் துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.