அம்பிகையின் கோரிக்கைக்கு ஓரணியில் வலுச் சேர்ப்போம் – ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் வேண்டுகோள்

இறுதிப் போரில் முள்ளிவாய்க்காலில் சிறிலங்கா அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கு நீதி கிடைக்கு இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பராப்படுத்தும் தீர்மானத்துடன் பிரதான நான்கு கோரிக்கைகளை முன் வைத்து பிரித்தானிய அரசிடம் சாகும் வரை உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை இன்றுடன் 14 வது நாளாக நடாத்திவரும் பிரித்தானிய வாழ் தாயக உறவு அம்பிகை செல்வக்குமார் அம்மையார் அவர்களின் கோரிக்கைக்கு வலுச் சேர்க்கும் முகமாக தாயக, புலம் பெயர் தேசங்களில் வாழும் அனைவரையும் ஓரணியில் குரல் கொடுக்குமாறும்

பிரித்தானியா உள்ளிட்ட கோ குறூப் நாடுகளின் கவனத்திற்கும் அவர்களின் ஆதரவையும் ஏற்புதலையும் பெற்று அம்பிகையின் உயிரை பாதுகாக்க ஒன்றிணையுமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி கேட்டுக் கொள்கின்றது.

ஐெனிவா மனித உரிமைப் பேரவையில் நடைபெறும் 46 வது கூட்டத் தொடரில் வெளியான பூச்சிய அறிக்கைக்கு பின்னர் தமிழர்களின் எதிர் பார்ப்பான சர்வதேச நீதிப் பொறிமுறை தீர்மானத்தில் இடம்பெறவில்லை என்றவுடன் ரெலோ தலைமைக்குழு அதன் ஏமாற்றத்தையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசை பாரப்படுத்தும் தீர்மானத்தை இறுதி வரைபில் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ரெலோவின் பிரித்தானிய கிளை ஊடாக 21/02/2021 பிரித்தானிய வெளியுறவுச் செயலகத்திற்கு அனுப்பி உறுதி செய்துள்ளது.

அந்த வகையில் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கு சர்வதேச நீதிப் பொறிமுறைகள் ஊடாகவே நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியான செயற்பாடுகளை முன்னெடுத்துவரும் போது அம்பிகையின் அகிம்சை வழி போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதுடன் யாழ்ப்பாணம் ,மட்டக்களப்பு,வவுனியா போன்ற மாவட்டங்களில் நடைபெறும் வலுச் சேர்ப்பு உணவுத் தவிர்ப்பு போராட்டங்களுக்கு ரெலோ இளைஞர் அணி முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

அத்துடன் 12/01/2021 வெளியான ஐ நா மனித உரிமைப் பேரவையின் ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்ட விடையங்களை படித்து மனத் தையிரியம் அடைந்த பாதிக்கப்பட்ட எம் இனத்திற்கு பூச்சிய அறிக்கையும் இறுதி வரைபும் பாரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆனால் தொடர்ந்தும் எமக்கான நீதி கிடைக்கும் வரை சர்வதேச நீதிப் பொறிமுறைகளை தீர்மானமாக எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கோ குறூப் நாடுகளிடம் கோரிக்கை முன்வைத்துள்ளோம்.

Posted in Uncategorized

இலங்கை – இந்தியாவுக்கிடையிலான சமகால உறவு குறித்து தெளிவுபடுத்தியது இந்தியா

ஜெனிவா விடயத்தை கூர்மையாக அவதானிக்கின்றோம்

 அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு இலங்கையை பலப்படுத்தும்

 மீனவர்களின் உயிர்கள் கடலில் பலியாவதை அனுமதிக்க இயலாது

இலங்கை இந்திய நட்பிற்கு வானமே எல்லையாகின்றது. எனவே இருதரப்பு நீண்டகால, ஆழமான வேரூன்றிய மற்றும் பன்முக நாகரிக உறவுகளைப் பார்க்கும்போது, இலங்கையுடனான இந்திய உறவுகளை வேறு எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க டெல்லி விரும்பவில்லை என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகர் கோபால் பாக்லே தெரிவித்தார்.

வீரகேசரிக்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே யின் செவ்வி வருமாறு :

கேள்வி – தற்போதைய நிலைமையில் இலங்கை – இந்தியா உறவை எவ்வாறு காண்கிறீர்கள் ?

பதில் – இந்திய-இலங்கை உறவு என்பது நாகரிகத்தின இரட்டையர்களாகவே கருத முடிகிறது. மதங்கள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களின் பன்முகத்தன்மையை இரு தரப்புமே ஒரே மாதிரி கொண்டுள்ளது. மேலும் ஜனநாயகத்தின் மீதான பார்வை, பொருளாதார சூழல் மற்றும் புவிசார் மூலோபாயம் போன்றவற்றிலும் நாம் ஒத்திசைத்து செயற்படுகின்றோம். இரு தேசங்களினது மக்களின் உறவுகளும் வலுவாகவுள்ளது. இந்த பொதுவான பன்முகதன்மைகள் இலங்கை – இந்திய உறவின் உறுதியான அடித்தளத்தை வெளிப்படுத்தாகவே கருதுகிறேன்.

இந்தியாவின் “ அண்டை நாடு முதலிடம்” கொள்கையில் இலங்கை தனிச்சிறப்பிடத்தில் உள்ளது. இவ்வாறானதொரு பின்புலத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள அரசியல் ரீதியான சிறந்த உறவில் இன்னும் அதீத பொருளாதார உள்ளடக்கத்தையும் கைக்கொள்ள வேண்டியது தேவையாகிறது. இது நிச்சயமாக இரு நாட்டு மக்களுக்கும் நன்மையளிக்கும். கொவிட்-19 தொற்று நோயின் போது நம் நெருக்கமான ஒத்துழைப்பின் நன்மைகள் நிரூபமானது. எனவே நம் கூட்டு எதிர்காலம் மிக நம்பிக்கைக்குறியதாகவே உள்ளது. அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த முயற்சிகளால் இரு தரப்பின் உறவில் வானமே எல்லையாக கொள்ளலாம்.

கேள்வி – பாக்கிஸ்தான் பிரதமரின் கொழும்பு விஜயத்தை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் – பிற நாடுகளுடன் இலங்கை கொண்டிருக்க கூடிய இருதரப்பு உறவுகள் என்பது இலங்கையின் தனிப்பட்ட விடயமாகவே கருத முடிகின்றது. ஆனால் சிறந்த நண்பர்கள் மற்றும் அண்டை நாடுகள் என்ற வகையில், இந்தியாவும் இலங்கையும் நம் இருவரின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும், வளர்ச்சி நலன்களையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் குரல்களுக்கு இடமளித்ததில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்த கூட்டாண்மை, இப்பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் காணப்படும் நமது சமூகங்களின் ஜனநாயக விழுமியங்களை பலப்படுத்துவதோடு நமது பரஸ்பர நலன்களையும் குறிப்பாக பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் தீவிரமயமாக்கலுக்கு எதிரான கூட்டுப் போராட்டத்தை பலப்படுத்துகிறது.

கேள்வி – கிழக்கு கொள்கலன் முனைய ஒப்பந்தத்தை ரத்து செய்தமை தொடர்பில் இலங்கை விளக்கியுள்ளதா? இதனால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அல்லது முன்மொழியப்பட்ட பிற இந்திய திட்டங்களின் எதிர்காலம் எவ்வாறாக அமையும்?

பதில் – இலங்கை , இந்தியா மற்றும் ஜப்பான் அரசாங்கங்களின் ஒத்துழைப்பில் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தத்தில் 2019 ஆம் ஆண்டில் கையெழுத்திட்டோம். இந்த ஒப்பந்தம் கொண்டிருக்க கூடிய சர்வதேச உறுதிப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசுக்கு மிக உயர்ந்த மட்டத்தில் தெரியப்படுத்தியுள்ளோம். இலங்கை தலைமை தரப்பிலிருந்து இந்தியா இலங்கையின் நெருங்கிய நண்பன் என்ற வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும் கலந்துரையாடல்கள் மூலம் தீர்க்கப்பட முடியும் என்பதை உறுதியாக நம்புவதாக வந்த அறிக்கையை வரவேற்கிறோம்.

மேலும் துறைமுகம் மற்றும் எரிசக்தி போன்ற துறைகளில் பரஸ்பர நன்மை பயக்கும் திட்டங்களை இலங்கையில் செயல்படுத்த இந்தியா ஈடுபாட்டுடனே உள்ளது.

கொழும்பிலிருந்து மீளேற்றுமதி செய்வதில் பெரும் பகுதி இந்தியாவுடன் நடைபெறுகிறது என்பதும் உண்மையாகும்.

கேள்வி – கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் உண்மை தன்மை என்ன ?

பதில் – மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்ய தனியார் முதலீட்டாளருக்கு இலங்கை அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது, இலங்கை சட்டத்தின்படி பொருத்தமான செயல்முறைகள் முன்னெடுக்கப்படுவதாகவே அறிகிறேன்.

கேள்வி – திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியா இலங்கைக்கு மீள வழங்குமா ?

பதில் – இலங்கை எரிசக்தி அமைச்சரின் அண்மித்த செய்தியாளர் சந்திப்பு குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். அதாவது பரஸ்பர புரிந்துணர்வுக்கு இணங்க ஒரு கூட்டு முயற்சியாக திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை கூட்டாக அபிவிருத்தி செய்வதாக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார். எனவே இந்த கூட்டு முயற்சி ஊடாக இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பு வலுப்பெறும்.

கேள்வி – இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினையை தீரப்பத்தில் இந்தியா கொண்டுள்ள திட்டம் என்ன ?

பதில் – பாக்கு நீரிணை இரு நாட்டிற்கும் பொதுவான கடல் மற்றும் கலாச்சார வளமாகும். பல தசாப்பத காலமாக இரு நாட்டு மீனவர்களும் இங்கு மீன்பிடித்து பயனடைந்துள்ளனர்.

எனவே இங்குள்ள மீனவப் பிரச்சனைகளைக் கையாள்வது தொடர்பாக இரு அரசாங்கங்களுக்கிடையில் புரிதல்கள் உள்ளன. எனவே அதன்ஊடாக பிரச்சினைகளை தவிர்ப்பதை கவனத்தில் கொண்டுள்ளோம். மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை இந்தியா எப்போதும் வலியுறுத்தியுள்ளது.

கடலில் மதிப்புமிக்க மீனவர்களின் உயிர்களுக்கு ஆபத்து வராமல் பார்த்துக் கொள்ள அதிக முயற்சி எடுக்க வேண்டும். இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இந்திய மற்றும் இலங்கை மீனவர்கள் கடலில் இறந்த விசாரணை முடிவுகளை எதிர்பார்த்துள்ளோம். மறுபுறம் மீன்பிடி சமூகங்களின் நலனுக்காக மீன்வள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்றவும் இந்தியா தயாராக உள்ளது.

கேள்வி – காங்கேசன்துறை மற்றும் காரைக்கல் இடையே படகு சேவை எப்போது ஆரம்பிக்கப்படும் ? அதே போன்று பாலாலிக்கான விமான சேவைகளை ஆரம்பித்தல் புதிய இணைப்பு திட்டங்கள் ஏதேனும் உள்ளதா ?

பதில் – இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இணைப்பினை மேம்படுத்துவதில் நாங்கள் ஆர்வமாக உள்ளோம். பல நூற்றாண்டுகள் பழமையான படகு சேவைகளை மீண்டும் ஆரம்பித்து சுற்றுலா மற்றும் சிறிய அளவிலான வர்த்தகத்தை இரு வழிகளிலும் எளிதாக்குவதற்கும், இரு நாட்டு மக்கள் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு உறுதியான வழியாகவே இந்த திட்டங்கள் அமைந்துள்ளன. மேலும் இது சட்டவிரோத வர்த்தகத்தை தடுக்கவும் உதவும்.

அந்த வகையில் யாழ்ப்பாணத்தின் காங்கேசந்துரை துறைமுகத்தை இந்தியாவின் புதுச்சேரிக்கு அருகிலுள்ள காரைக்கலுடன் இணைக்கும் படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் அண்மையில் இறுதி செய்யப்பட்டது. இதேபோல், கொழும்பு – தூத்துக்குடி இணைப்பிற்கான வாய்ப்பும் உள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தை 45. 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இந்திய உதவியுடன் அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் இந்தியாவுடனான திட்டமிடப்பட்ட விமானங்களுக்காக இலங்கை தனது வான்வெளியை மீண்டும் திறக்கும்போது, பலாலிக்கான விமான சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பிக்கும்.

கேள்வி – கருணா அம்மான் மற்றும் பிள்ளயான் ஆகியோருடனான சந்திப்பு குறித்து கூற இயலுமா ?

பதில் – வழக்கமான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே அந்த சந்திப்புகள் அமைந்தன. இந்திய உயர் ஸ்தானிகராலயம் இலங்கையின் பல்வேறு பங்குதாரர்களுடன் தொடர்பில் உள்ளது.

இந்த வகையில் குறித்த சந்திப்பு கோரப்பட்டமையினால் கவனத்தில் கொள்ளப்பட்டது.

கேள்வி – 13 வது திருத்த அமுலாக்கம் இலங்கைக்கு எவ்வாறு பயனளிக்கும் என இந்தியா கருதுகிறது?

பதில் – தெற்காசியா பிராந்திய அமைதி மற்றும் நல்வாழ்வை இந்தியா என்றும் குறித்து நிற்கும். இலங்கை எங்கள் நெருங்கிய நண்பர் மற்றுமல்ல அண்டை நாடும் கூட. அந்த வகையில் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதியாக இருக்கும். இன நல்லிணக்கத்தை ஊக்குவித்தலை உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் நல்லிணக்க செயல்முறையை நாங்கள் ஆதரிப்போம்.

தமிழர்கள் உட்பட இலங்கையில் அனைத்து சமூக பிரிவினரும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான அபிலாஷைகளை அடைவது இலங்கைக்கு பலம் அளிக்கும். எனவே, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையில் நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டை பலப்படுத்தவும் உதவும் என்றே இந்தியா நம்புகிறது.

கேள்வி – மலையகத்திற்கான இந்தியாவின் அபிவிருத்தி திட்டங்கள் என்ன ?

பதில் – இலங்கைக்கு இந்தியா வழங்கும் மிக விரிவான அபிவிருத்தி கூட்டுத்திட்டத்தில் 50 ஆயிரம் வீட்டுத்திட்டம் முக்கியமானதொன்றாகிறது. அடுத்தடுத்து வந்த ஆட்சி மாற்றங்களில் கூட புதிய அரசாங்கங்கள் இந்த வீட்டுத்திட்டத்தின் மீதான நம்பிக்கையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தியுள்ளன. மலையகத்திற்காக ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 4 ஆயிரம் வீட்டுத்திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளது. பாராத பிரதமர் மோடி அறிவித்ததது போன்று மேலும் 10 ஆயிரம் வீடுகளை மலையகத்தில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

150 வதிவிட சிகிச்சை வசதிகளை கொண்ட டிக்கோயா ஆரம்ப மருத்துவமனையை நிர்மாணிப்பதற்கான ஒத்துழைப்பையும் இந்தியா வழங்கியிருந்தது. இதனோடு 1990 ஆம்புலன்ஸ் சேவையும் இலங்கையில் நெருக்கடி மிக்க பிராந்தியத்தில் மிகவும் தேவையான சுகாதார சேவையை வழங்குகிறது. இவ்வாறான திட்டங்கள், குறித்த மலையக இளைஞர்களின் மருத்துவ திறன் வளர்ச்சியை மேம்படுத்தியுள்ளதாகவே கருதப்படுகின்றது.

கண்டி – புஸ்சல்லாவை சரஸ்வதி கல்லூரியின் மேம்படுத்தல் பணிகளை அண்மையில் முழுமைப்படுத்தினோம். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மையத்தை மேம்படுத்தும் பணியிலும் இந்தியா ஈடுபட்டுள்ளது . 300 மில்லியன் ரூபா நிதி உதவியின் கீழ் ஒன்பது தோட்டப் பாடசாலைகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பை இந்தியா விரிவுபடுத்தியுள்ளது. இவ்வாறு கல்வி மற்றும் கலாசாரத்தை மையப்படுத்தி பல்வேறு திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் இவ்வகையான திட்டங்கள் தொடரும்.

கேள்வி – சுனாமி , எம்.டி நியூ டயமண்ட் கப்பல் தீ விபத்து மற்றும் கொவிட் தடுப்பு போன்ற அனைத்து அவசர தேவைகளின் போதும் இந்தியா உடனடி ஒத்துழைப்புகளை வழங்கியதை அறிவோம். ஆனால் பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கைக்கு மீள பெறக்கூடிய நாணய மாற்றத்தை ஏன் கொடுக்கவில்லை?

பதில் – இலங்கையின் பொருளாதார உந்து சக்திக்காக கடந்த ஆண்டு 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியா வழங்கியிருந்தது. மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதல் தொகையாக இலங்கை தரப்பினால் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலும் பரிசீலனைகள் முன்னெடுக்கப்படுகிறது.

கேள்வி – இருதரப்பு வர்த்தக செயற்பாடுகள் குறைந்து வருவதாக கூறப்படுவது உண்மையா? இலங்கை – இந்திய வர்த்தகத்தை மேம்படுத்த உங்கள் திட்டம் என்ன?

பதில் – இந்தியாவும் இலங்கையும் வர்த்தகத்திலும் வணிகத்திலும் விரிவான உறவுகளைக் கொண்டுள்ளன . பல ஆண்டுகளாக இந்தியாவும், இலங்கையும் தெற்காசியாவில் வலுவான வர்த்தக பங்காளிகளாக உள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும். உண்மையில், இந்தியா 2019 ஆம் ஆண்டில் இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்தது. ஆனால் 2020 ஆம் ஆண்டில் பொருளாதார நடவடிக்கைகளின் வீழ்ச்சியும் இலங்கை அறிமுகப்படுத்திய பல்வேறு இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளும் இரு தரப்பினருக்கும் இடையிலான வர்த்தகத்தில் சரிவுக்கு காரணமாகியது.

2020 ஆம் ஆண்டிற்கான இலங்கை சுங்க தினைக்களத்தின் தரவுகளின் பிரகாரம் , 2020 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு வர்த்தகம் 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இத் தொகையானது 2019 ஆம் ஆண்டிற்கான இருதரப்பு வர்த்தகத்தை விட சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் குறைவாகும். இருந்தும் இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகும்.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கான (எட்கா) பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான் நோக்கம் குறித்து இலங்கையின் வர்த்தக அமைச்சர் அண்மையில் குறிப்பிட்டமை தொடர்பில் கவனத்தில் கொண்டுள்ளோம். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே 11 சுற்று பேச்சுவார்த்கைள் நிறைவடைந்துள்ளதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எவ்வாறாயினும் கொவிட்-19 வைரஸ் புதிய தடைகளை தாண்டி பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் வளர்ச்சியடையும் என்றே நம்புகிறோம் . இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதும் இருதரப்பு வர்த்தகம் மீண்டும் முந்தைய நிலைகளுக்கு முன்னேறி மேலும் வளர உதவும். இரு தரப்பிலும் வணிகத்திற்கும் தொழில் துறைக்கும் இடையில் மேம்பட்ட ஈடுபாட்டுடன் இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த அனைத்து பங்குதாரர்களுடனும் பணியாற்றி வருகிறோம்.

அத்துடன் எரிசக்தி, போக்குவரத்து இணைப்பு, உள்கட்டமைப்பு, பால், மருந்துகள், தகவல் தொழில்நுட்பம், விவசாயம், கிராமப்புற தொழில்கள் மற்றும் கைவினைப்பொருட்கள், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், பாரம்பரிய மருத்துவம் மற்றும் மூலிகை பொருட்கள் போன்ற பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளையும் அடையாளம் கண்டு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் முதலீட்டிற்கு உகந்த கொள்கை சூழலால் இங்கு ஊக்குவிக்கப்படுவார்கள். அத்துடன் இந்தியாவின் பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்கள் மற்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இடையில் பரஸ்பர நன்மை பயக்கும் பொருளாதார மற்றும் வணிக உறவுகளை ஊக்குவிக்கவும் ஆர்வமாக உள்ளோம்.

கேள்வி – இலங்கை அகதிகள் தங்கள் தாயகத்திற்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்ப இந்தியா உதவுமா? இந்த விடயத்தில் இந்தியாவின் திட்டம் என்ன?

பதில் – இது சம்பந்தமாக ஏற்கனவே இருதரப்பு புரிதல்கள் உள்ளன. அதற்கினைய, இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் தானாக முன்வந்து விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் இந்தியா அவர்களை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கும். அத்தகைய நபர்கள் திரும்பும்போது அவர்களுக்கான மீள்குடியேற்றத்திற்கான வாழ்வாதார தொகுப்பு இருந்தால் உதவும்.

கேள்வி – பிரதமர் மோடி சமீபத்தில் சென்னைக்குச் சென்றபோது இலங்கை தமிழ் பிரச்சினைகள் குறித்து பேசினார். தமிழர் பிரச்சினையில் இந்தியா இனி பெரிய பங்கு வகிக்குமா?

பதில் – இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் இந்தியாவின் நிலையான நிலைப்பாடு நன்கு அறியப்பட்டதாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. 2020 செப்டம்பர் 26 திகதி மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டிலும், உச்சிமாநாட்டிற்குப் பிறகு இரு தரப்பினரும் வெளியிட்ட கூட்டு அறிக்கையிலும் பிரதமர் மோடி இலங்கை தமிழ் பிரச்சினைகள் குறித்து பேசியிருந்தார். இலங்கையுடனான பல்வேறு மட்டங்களில் இருதரப்பு தொடர்புகளும் இந்த விடயத்தில் உள்ளன. நல்லிணக்கத்தை அடைவதன் மூலமும், அரசியலமைப்பு விதிகளை அமல்படுத்துவதன் மூலமும் தமிழர்கள் உட்பட அனைத்து இனத்தவர்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்ந்து கொள்ளும் வகையில் நடக்கும் என இலங்கை மீண்டும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

கேள்வி – இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஜெனிவா அறிக்கையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?

பதில் – ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பான விடயங்களிலும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா அக்கறையுடன் அவதானத்தில் கொண்டுள்ளது. ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்றன. இந்திய தூதுக்குழு நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இலங்கை தரப்பும் தங்களது மதிப்பீட்டை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே சரியான முறையில் இந்தியா செயற்படும் என்பதையே கூற விரும்புகின்றேன்.

கேள்வி – சீனா – இலங்கை உறவுகள் வலுவடைந்துள்ளது. இது எவ்வாறான தாக்கத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தும்?

பதில் – இதனை விரிவாக தெளிவுப்படுத்துகின்றேன். இந்தியா – இலங்கை உறவுகள் பல தசாப்தகால பழைமையான பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தில் வேரூன்றியுள்ளது. இருதரப்பு உறவின் அடித்தளம் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரம் மற்றும் மொழிகளின் பொதுவான தன்மைகளில் தங்கியிருக்கிறது. மேலும் தற்காலத்தில் செழிப்புக்கான ஒத்துழைப்பு மற்றும் அமைதி, திரைப்படங்கள், இசை, கிரிக்கெட், தொழில்நுட்பம் மற்றும் நம் மக்களிடையேயான நெருங்கிய உறவுகள் போன்றவையும் ஆழமாக வேருன்றியுள்ளது.

இந்த பின்னணியைக் கருத்தில் கொண்டு, மூலோபாயம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களுக்கும், இந்தியா மற்றும் இலங்கையின் அபிலாஷைகளுக்கும் இடையில் வலுவான ஒருங்கிணைப்பு உள்ளது. இந்தியா இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாகவும், சுற்றுலாப் பயணிகள் மற்றும் முதலீட்டாளர்களின் மிகப்பெரிய ஆதாரமாகவும் உள்ளது.

எனவே இருதரப்பு நீண்டகால, ஆழமான வேரூன்றிய மற்றும் பன்முக நாகரிக உறவுகளைப் பார்க்கும்போது, இலங்கையுடனான தனது உறவுகளை வேறு எந்த நாடுகளுடனும் ஒப்பிட்டு பார்க்க இந்தியா விரும்பவில்லை. அதே போன்று இலங்கையின் தலைமைத்துவமும் நம் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த அமைதி மற்றும் நல்வாழ்வுக்கு தேவையான சரியான தேர்வுகளை எடுக்க வல்லது என்றே இந்தியா சமமாக நம்புகிறது.

கேள்வி – பிரதமர் மோடி கடந்த ஆண்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் மூன்று அல்லது நான்கு முறை உரையாடியிருந்தார். அதே போன்று பிரதமர் மோடியின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவுடனான தொடர்பு என்ன, குறிப்பாக 2019 ஆண்டு டெல்லி பயணத்திற்கு பின்?

பதில் – 2019 ல் பதவியேற்ற பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இருவரும் இந்தியாவுக்கு முதல் பயணங்களை மேற்கொண்டனர். கொவிட் – 19 சவால்கள் இருந்த போதிலும் இரு நாட்டு தலைவர்ளும் இந்த காலகட்டத்தில் தொடர்ந்தும் சிறந்த வகையில் தொடர்பிலிருந்தனர். இந்த உறவின் சிறப்பம்சமாக 2020 செப்டம்பரில் பிரதமர் மோடியும் பிரதமர் ராஜபக்ஷவும் மெய்நிகர் இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துக்கொண்டனர்.

மேலும் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் தொலைபேசி உரையாடல்களையும் நடத்தியிருந்தனர். கடிதங்கள் பரிமாற்றமும் காணப்பட்டது. கொவிட் காலங்களில் கூட, இந்தியா – இலங்கை உறவுகள் மற்றும் ஒத்துழைப்பின் விரைவான வளர்ச்சிக்கு தலைவர்களிடையே அடிக்கடி தொடர்புகொள்வது விலைமதிப்பற்ற வழிகாட்டுதலுக்கு ஒரு ஆதாரமாக இருந்து வருகிறது.

கேள்வி – இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கரின் விஜயத்தின் முக்கிய பங்களிப்பு என்ன?

பதில் – கொவிட்-19 சவால்கள் மற்றும் இடையூறுகள் இருந்தபோதிலும், 2021 ஜனவரி தொடக்கத்தில் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தனது முதல் வெளிநாட்டு பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டார். இரு நாடுகளின் முன்னுரிமைகள் இரு தரப்பு உறவுகளின் உயர் மட்டத்தை இவ்விஜயம் பிரதிப்பலிக்கின்றது.

மேலும் இருதரப்பு உறவுகளின் முழு வரம்பு மற்றும் பரஸ்பர ஆர்வத்தின் பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் பற்றிய பயனுள்ள விவாதங்களை ஜெய்சங்கர் கொழும்பில் முன்னெடுத்திருந்தார். இந்த விஜயம் அனைத்து துறைகளிலும் இந்தியா-இலங்கை உறவுகளின் நீண்டகால வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கவும் உதவியது.

அத்துடன் அதே மாதத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொவிட் 19 தடுப்பூசிகளை இலங்கை பெற்றது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஜெய்சங்கரின் வருகையின் பின்னரே இலங்கை மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதை இந்தியாவால் தொடங்க முடிந்தது.

யாழ்ப்பாணம் -சென்னை நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை

கொவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் -சென்னைக்கு இடையிலான நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்க அரசாங்கம் தயாராகி வருகிறது.

அதேவேளை இரத்மலானை, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு இடையே உள்நாட்டு விமான சேவையையும் விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறியுள்ளார்.

பலாலி மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களும் சர்வதேச விமான நிலையங்களாக அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தேசியக் கொடிக்கு வந்த நிலை ! சீனாவுடன் கவலை எழுப்புகிறது இலங்கை

இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட தரைவிரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பொருட்களை இணையத்தளத்தில் விற்பனைசெய்யும் உலகின் முன்னணி இணையத்தள பொருள் விற்பனை தளமான amazon இல் இவ்வாறு இலங்கை கொடியை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தரை விரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த தரைவிரிப்பு 12 டொலருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

இவ்வாறு இலங்கையின் தேசிய கொடியுடனான தரைவிரிப்புக்கள் விற்பனை செய்யப்படுகின்றமைக்கு எதிராக பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக ஊடகங்களில் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் பெய்ஜிங்கில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சீனாவில் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளரை தொடர்பு கொள்ளுமாறு தெரிவித்துள்ளார், மேலும் கொழும்பில் உள்ள சீன தூதரகத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளார்.

சத்தியாக்கிரகத்தில் பொதுபல சேனா, பௌத்த பிக்குகள் சங்கம்

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைக்கும், பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்களை தடை செய்ய முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று பொதுபல சேனா அமைப்பினரும்,பௌத்த பிக்குகள் சங்கத்தினரும் ஒன்றினைந்து சுதந்திர சதுக்கத்தில் சத்தியாக்கிரகத்தில் ஈடுப்பட்டார்கள்.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்கும் கொள்கை திட்டங்களை மார்ச் 11 என பெயர்குறிப்பிட்டு அரசாங்கத்திடம் கையளித்தனர்.

விடுதலை புலிகள் அமைப்பு செயற்பட்ட காலக்கட்டத்தில் இராணுவத்தின் உளவாளிகளாக செயற்பட்ட பயங்கரவாதி சஹ்ரான் உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு யார் ஆயுதம், நிதியுதவி வழங்கியது, வழங்கப்பட்ட ஆயுதங்கள் மீள பெற்றுக் கொள்ளப்பட்டதா, இல்லையாயின் அந்த ஆயுதங்களுக்கு என்னவாயிற்று.

ஏப்ரல் 21 குண்டுத்தாகுதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களுக்கு அரசியல் நோக்கங்களை விடுத்து தண்டனை வழங்கப்பட வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படைவாதம் தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் 2016. நவம்பர் மாதம் 18 ஆம் திகதி பாராளுமன்றில் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதின், அனாஸ் நசீர், முஜ்பூர் ரஹ்மான்,தேசிய சுரா கவுன்சிலின் தலைவர் தரிக் மொஹமட், இலங்கை முஸ்லிம் கவுன்சிலின் தலைவர் எம்.எம் அலிம், ஐக்கிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு, முன்னாள் ஆளுரநர் ஹிஸ்புல்லா, ஆகியோருக்கு எதிராக முறையான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

கட்டுவாப்பிடிய தேவஸ்தானத்தின் குண்டுதாரியின் மனைவியான சாரா உயிருடன் உள்ளாரா என்பது தொடர்பில் முறையான விசாரணை எடுக்கப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கான விசாரணை விசேட மேல்நீதிமன்றம் ஊடாக நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுபல சேனா அமைப்பினை தடை செய்யவும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசாரதேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவும் ஆணைக்குழு முன்வைத்துள்ள யோசனை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும்.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை முன்னெடுக்க தயாரான காரணிகளை பயங்கரவாதி சஹ்ரான் குறிப்பிட்டுள்ளதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அக்காரணிளாவன,

அல்லாஹ் கடவுளுக்கான கடமைகளில் ஒன்றாக,கடவுளால் படைக்கப்பட்ட இஸ்லாமிய இராஜ்ஜியத்தில் சிரியாவில் முஸ்லிம் சமூகத்தினர் படுகொலை செய்யப்பட்டைக்கு பழிவாங்கும் வகையில்,நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் முஸ்லிம் பள்ளியில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பழிவாங்கும் வகையில்,என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இதற்கும் இலங்கைக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.

இனம் ,மத கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகள் செயற்படுகின்றமையினால் தேசிய நல்லிணக்கம் பாதிக்கப்படுகிறது. ஆகவே இவ்வாறான அரசியல் கட்சிகளை முழுமையாக தடை செய்ய வேண்டும்.

ஆகவே மேற்குறிப்படப்பட்டுள்ள அனைத்து யோசனை குறித்தும் அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

Posted in Uncategorized

பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக பஸில் ராஜபக்சவே களமிறங்குவார்

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அடுத்த ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கட்சியின் ஸ்தாபகரும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவின் சகோதரருமான பஸில் ராஜபக்சவே களமிறங்குவார் என பொதுஜன முன்னணி பகிரங்கமாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிராகவே விமல் வீரவன்ச உள்ளிட்டவர்கள் சூழ்ச்சி செய்து வருவதாக கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஹான் பிரதீப் வித்தாரண குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட சஹான் பிரதீப் வித்தாரண,

கொவிட் நெருக்கடியை எமது நாடு வேறு நாடுகளை விட சிறப்பாக கையாண்டதன் பின்னணியில் மீண்டும் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடப்போவதில்லை என நினைத்தாலும் மக்கள் இறுதியாக அவரை கைவிடமாட்டார்கள்.

மீண்டும் போட்டியிடச் செய்யும் வகையிலான கோரிக்கைகளையே முன்வைப்பார்கள் என நினைக்கின்றேன்.

ஒரு வருடத்திற்குள் கொரோனா தொற்றுடன் மோதி, ஊழல் மோசடி, போதைப்பொருளை அழித்து இளைஞர்களை வழிநடத்தியவர் ஜனாதிபதியே.

சிலர் இதனை மாற்றியமைக்க பொதுஜன முன்னணியை களங்கப்படுத்தி அழிக்க கனவு காண்கிறார்கள். அந்த கனவு நனவாகாது. அப்படியொரு சந்தர்ப்பத்தை அவர்களுக்கு மக்கள் வழங்கமாட்டார்கள். சில கட்சிகள் அரசாங்கத்தை அமைக்க உதவினார்கள்.

சில வருடங்கள் சென்று அரசாங்கத்தின் உறுதியைப் பேணாமல் பிரிந்து சென்று தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிக்கின்றார்கள். எமது அரசாங்கத்திற்குள்ளேயே இருந்துகொண்டு பொதுஜன முன்னணிக்குள் தலைவர் ஒருவர் வருவார் என்கிற அச்சம் சிலருக்கு உள்ளது.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த தேர்தலில் போட்டியிடாவிட்டால் அடுத்தகட்டமாக பஸில் ராஜபக்ஷவே தெரிவுக்கு இருக்கின்றார்.

அவர் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு தகுதியானவர். அவர் போட்டியிடுவதை எதிர்ப்பவர்களும் கட்சிக்குள் இருக்கின்றார்கள். அதனால்தான் சேறுபூசுகின்றார்கள். பொதுஜன முன்னணியையும், பஸில் ராஜபக்ஷவையும் வீழ்த்த எவருக்கும் முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Posted in Uncategorized

வீட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகையை வழங்குங்கள்!ரெலோ தலைவர்செல்வம் பிரதமரிடம் கோரிக்கை!

வடக்கில், தொடங்கப்பட்டு நிறைவுக்கு எட்டாத வீட்டுத் திட்ட நிலுவைத் தொகையை வழங்குமாறு தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் பிரதமருக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (வியாழக்கிழமை) அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “முன்னாள் வீடமைப்பு மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் காலப்பகுதியில் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை ஊடாக ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டமானது இற்றைவரைக்கும் பூர்த்தி செய்யப்படவில்லை.

அத்துடன், பயனாளிகளுக்கான மீதமுள்ள கொடுப்பனவும் வழங்கப்படவில்லை. ஏழை மக்கள் தங்கள் சொத்துக்களையும் கையில் வைத்திருந்த சிறிய தொகைப் பணத்தையும் வைத்துத்தான் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட நிதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் இந்த வேலையை ஆரம்பித்தார்கள்.

ஆனால், ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்ட வேலை நிறைவுக்கு வரவில்லை. ஏழை மக்கள் கடந்த உள்நாட்டுப் போரில் அனைத்தையும் இழந்தவர்கள். இப்பொழுது மிகவும் அவதிப்படுகிறார்கள்.

குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் சமூகத்தின் பல நிலைகளிலும் வாழும் இந்த மக்கள் தங்களுக்கென ஓர் நிரந்தரவீடு இன்மையால் இன்னும் சிறிய குடிசைகளில் தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். வீட்டு வசதி என்பது ஒருநாட்டுக் குடிமகனின் அடிப்படைத் தேவை.

ஆனால், இந்த மக்கள் அதைப்பார்க்கவும் அனுபவிக்கவும் கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்கள்.

எனவே, இந்த மக்களுக்கு சுதந்திரமாக வாழவும் பாதிப்புக்களில் இருந்து விடுபடவும் ஒரு வீடு தேவை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீட்டுத்திட்ட குறைகளை நிறைவுக்குக் கொண்டுவருவதற்கும் அவர்களின் அன்றாட வாழ்வினை சுமூகமாக நகர்த்திச் செல்வதற்கும் வழிவகுக்க ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என அவர் கோரியுள்ளார்.

இலங்கை குறித்த ஜெனிவா நகர்வுகளை உன்னிப்பாக அவதானிக்கிறோம் – இந்தியா உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையின் இன நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டையும் பலப்படுத்தும் என தெரிவித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே , ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்திய தூதுக்குழு அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ஜெனிவா விவகாரம் மற்றும் தமிழ் மக்களின் தீர்வு திட்டங்கள் தொடர்பில் புதன்கிழமை வீரகேசரிக்கு தெளிவுபடுத்துகையிலேயே இந்திய உயர்ஸ்தாணிகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இலங்கை விவகாரம் தொடர்பான விடயங்களிலும் அதன் முன்னேற்றங்கள் குறித்தும் இந்தியா அக்கறையுடன் அவதானத்தில் கொண்டுள்ளது.

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்த விவாதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்திய தூதுக்குழு அங்குள்ள நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

இலங்கை பிரதிநிகளும் தங்களது மதிப்பீட்டை எங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். எனவே இந்திய இந்த விடயத்தில சரியான முறையில செயற்படும் .

எவ்வாறாயினும் தெற்காசியா பிராந்திய அமைதி மற்றும் நல்வாழ்வை இந்தியா என்றும் குறித்து நிற்கும். இலங்கை எங்கள் நெருங்கிய நண்பர் மற்றுமல்ல அண்டை நாடும் கூட. அந்த வகையில் இலங்கையின் ஒற்றுமை, ஸ்திரத்தன்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு இந்தியா எப்போதும் உறுதியாக நிற்கும்.

இன நல்லிணக்கத்தை ஊக்குவித்தலை உள்ளடக்கிய அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையில் இலங்கையின் நல்லிணக்க செயல்முறையை பரந்;த உள்ளத்துடன் ஆதரிப்போம்.

தமிழர்கள் உட்பட இலங்கையில் அனைத்து சமூக பிரிவினரும் சமத்துவம், நீதி, அமைதி மற்றும் கௌரவத்திற்கான அபிலாஷைகளை அடைவது இலங்கைக்கு பலம் அளிக்கும்.

எனவே, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ், அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை செயல்படுத்துவது இலங்கையின் நல்லிணக்கம், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு உதவுவதோடு நாட்டை பலப்படுத்தவும் உதவும் என தெரிவித்தார்.

பழைய முறைமையில் ஜூலையில் மாகாணசபைத் தேர்தல் – பொதுஜன பெரமுனவின் மாகாணசபை ஒன்றியம்

மாகாணசபை தேர்தலை பழைய முறைமையில் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. இத்தீர்மானத்துக்கு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளமை தவறான செயற்பாடாகும். இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கவுள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாகாண சபை ஒன்றியத்தின் தலைவர் காஞ்சன ஜயரத்ன தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் மாகாணசபை ஒன்றியத்தின் உறுப்பினர்களுடன் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இடம் பெற்ற பேச்சுவார்த்தை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை திட்டமிட்ட வகையில் பிற்போட்டது. மக்களின் பிரதிநிதிகள் இல்லாமல் நிறைவேற்று துறையின் பிரதிநிதியால் மாகாண சபைகளின் நிர்வாகம் நிர்வகிக்கப்படுகின்றனமை ஜனநாயக கொள்கைக்கு முரணானது. மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம் பெற்றிருந்தால் பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றிருக்கும்.

மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு சட்ட சிக்கல் ஒருபுறம் காணப்படுகின்ற பட்சத்தில் பிறிதொரு புறம் பொதுகாரணிகளும் செல்வாக்கு செலுத்தின. இம்மாதம் முதல் வாரத்தில் மாகாண சபை தேர்தலை நடத்த எதிர்பார்க்கப்பட்டது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. மாகாண சபை தேர்தலை பழைய முறைமையின் கீழ் எதிர்வரும் ஜூலை மாதம் நடத்த அரசாங்கம் உத்தேசித்துள்ளது. ஆளும் தரப்பின் ஒரு சில உறுப்பினர்கள் மாகாண சபைக்கு எதிரான தங்களின் தனிப்பட்ட நிலைப்பாட்டை அரசாங்கத்தின் நிலைப்பாடாகக் கூறுகின்றனர்.

மாகாணசபை தேர்தலை தொடர்ந்து பிற்போட்டு மாகாணசபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் சிலரால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் கவலைக்குரியவை. இவ்விடயம் குறித்து பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம் என்றார்.

Posted in Uncategorized

அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது – கபீர் ஹாசிம்

அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது.சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அத்துடன் இந்த தாக்குதலால் நன்மை அடைந்தவர்களே இதன் உண்மை நிலைமைகளை மறைக்க முயற்சிக்கின்றனர்.

இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம்கள் இருக்கின்றனர் என எதிர்க்கட்சி உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

மாவனெல்லை புத்தர் சிலை தகர்ப்பு தொடர்பாக தகவல் வழங்கிய காரணத்துக்காக சஹ்ரானின் குண்டர்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகிய எனது இணைப்புச்செயலாளர் படுகாயமடைந்து சுயநினைவு இழந்திருக்கின்றார்.

அவருக்கு எனது சொந்த செலவில் மருத்துவம் செய்துவந்தேன். தற்போதும் அவர் நாட்டு வைத்தியம் செய்துவருகின்றார். அவரின் செயலை மதித்து சிங்கள இளைஞர்கள் அவருக்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுத்துள்ளனர்.

அவரின் மருத்துவ செலவுக்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும் என நான் அரசாங்கத்திடம் கேட்டிருந்தேன். எந்த பதிலும் வழங்கவில்லை.

ஆனால் அவரை குணப்படுத்த வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கு அரசாங்கம் நிதி உதவி செய்யவேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமை தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன்.

மேலும் உயிருத்த ஞாயிறு தாக்குதல் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டது கத்தோலிக்க மக்களாகும். அதேபோன்று பாரிய நெருக்கடிகளுக்கு ஆளாகியது முஸ்லிம் மக்களாகும்.

சஹ்ரானின் நடவடிக்கைக்கும் இஸ்லாம் மார்க்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இஸ்லாம் ஒருபோதும் இவ்வாறான செயல்களை மனுமதித்ததில்லை.

மேலும் எனது இணைப்புச்செயலாளரின் மருத்துவ செலவுக்கு பணம் வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்டபோது அதற்கு செலவிடவில்லை.

ஆனால் அரசாங்கம் சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கி வழிநடத்தி இருக்கின்றது.சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கியதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்தார். அப்படியென்றால் அப்போதை பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ்வுக்கு அறிவுறுத்தியே வழங்கியிருக்கவேண்டும்.

அதேபோன்று 2011ஆம் ஆண்டில் இருந்து சஹ்ரானின் நடவடிக்கை தொடர்பாக முஸ்லிம் அமைப்புகள் முறைப்பாடு செய்திருக்கின்றன.

ஆனால் அப்போதை அரசாங்கத்தினால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்தது கோத்தாபய ராஜபக்ஷ் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.

மேலும் மைத்திரிபால சிறிசேன மற்றும் ஜனாதிபதி காேத்தாபய ராஜபக்ஷ்வை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக நாமல் குமார செய்த முறைப்பாடு தொடர்பாக இன்று எந்த விசாரணையும் இடம்பெறுவதில்லை.

நாமல் குமாரவின் இந்த முறைப்பாடு காரணமாகத்தான் சஹ்ரான் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவந்த பொலிஸ் அதிகாரி நாலக்கசில்வா கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். நாமல் குமாரவின் அந்த முறைப்பாடு இல்லாமல் இருந்திருந்தால் சஹ்ரான் கைதுசெய்யப்பட்டிருப்பார்.

எனவே இந்த தாக்குதலின் பின்னால் யார் இருக்கின்றார் என்பதை கண்டறியவேண்டும் என்ற நிலைப்பாட்டிலே முஸ்லிம் மக்களும் இருக்கின்றனர். அதனால் இந்த விசாரணை அறிக்கை தொடர்பாக கர்தினால் மெல்கம் ரன்ஜித்தின் நிலைப்பாட்டுக்கு நாங்களும் ஆதரவளிக்கின்றோம்.